திருக்குறள் செய்திகள்/54

விக்கிமூலம் இலிருந்து

54. பொச்சாவாமை
(மறதி இன்மை)

களிப்புக்கடலில் கடமையை மறந்துவிடுவர். கடுஞ் சினம் தீது; அதுபோல் மிக்க மகிழ்ச்சியும் தீயது ஆகும். எதிலும் அளவு இருக்கவேண்டும்.

அறிவு மிக்கவன் என்று சொல்லிக்கொள்வான்; படிப்பாளிதான்; எனினும் அவன் எதனையும் செய்து வெற்றி காண்பது இல்லை; காரணம் பொருள் இல்லாமை; வறுமையில் அறிவு மங்கிவிடும். அதே போல எல்லா வசதிகளும் ஒருவன் பெற்று இருப்பான்; மறதி ஒன்று அனைத்தையும் செயலிழக்கச் செய்துவிடும்.

மறதி உடையவர் புகழ் தரக்கூடிய செயல்களைச் செய்ய முடிவது இல்லை; அவர்களுக்குப் புகழ் உண்டாவது இல்லை.

அச்சம் உடையவர்க்கு அரண்கள் இருந்தும் பயனில்லை; அதே போல மறதி உடையவர்க்கு எதுவும் கைகொடுக்காது.

வருமுன் காப்பவன் அறிவாளி; வந்தபின் சிந்திப்பவன் ஏமாளி; முன்கூட்டித் தடுக்காமல் போய்விட்டோமே என்று பின்னர் வருந்துவான்.

எங்கும் எவரிடத்தும் மறதி கூடாது; எப்பொழுதும் விழிப்புடன் செயல்படுதல் அவசியம் ஆகும்.

தக்க கருவிகளோடு மறதி இல்லாமல் செயல்பட்டால் செய்து முடிக்க முடியாத வேலை எதுவும் இருக்க முடியாது.

எடுக்கும் பணி மிக உயர்ந்ததாக இருப்பது நல்லது. அதனைச் செய்யாமல் விட்டால் பிறகு எந்தக் காலத்திலும் வருந்திக் கொண்டே இருப்பர். நல்ல காரியங்களை உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும்.

மகிழ்ச்சியால் மயங்கிக்கிடந்து செய்ய வேண்டியவற்றை உரிய காலத்தில் செய்யாமல் புறக்கணித்துவிடுவர். இதனைப் போல் எதனையும் உதாசீனப்படுத்திக் கெட்டவரை நினைத்துப் பார்த்தால் அவர்கள் வாழ்க்கை ஒரு படிப்பினையாக இருக்கும்

நினைத்ததை முடிப்பது எளிது; எப்பொழுதும் அதனைப்பற்றியே இடைவிடாது எண்ணிச் செயல்பட வேண்டும். மறதியே கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/54&oldid=1106385" இலிருந்து மீள்விக்கப்பட்டது