திருக்குறள் புதைபொருள் 1/011-013

விக்கிமூலம் இலிருந்து

11. தினற்பொருட்டாற் கொல்லாது!

      தினற்பொருட்டாற் கொல்லாது உலகுனனின் யாரும்
      விலைப்பொருட்டால் ஊன்தருவா ரில்

என்பது ஒரு குறள். இதன் பொருள்—

தின்பது காரணமாக உலக மக்கள் கொல்லவில்லையானால் பொருள் காரணமாக ஊனை விற்பவர் எவரும் இல்லை என்பது பரிமேலழகரின் கருத்து. மகாவித்துவான் மு. அருணாசலக் கவிராயர் அவர்களும், பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்களும், பிறரும் தாங்கள் பதிப்பித்த பதிப்புகளில் இவ்வுரையை அப்படியே பொழிப் புரையாக்கிப் பதிப்பித்திருக்கிறார்கள்.

மூலத்திற்கும் உரைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்பதைத் தயவுசெய்து அமைதியாக இருந்து எண்ணிப் பார்ப்பது நல்லது.

தின்பதற்காக என்று உலக மக்கள் கொல்லாதிருந்தால் என்று மூலத்தில் இருக்கும்போது, பரிமேலழகரும் பிறரும் தின்பதற்காக உலக மக்கள் வாங்காதிருந்தால் என்று கருதும்படி உரை எழுதுவானேன் என்பது நமது ஐயப்பாடு.

குறளுக்கு உள்ள சரியான உரை இது:-தின்பதற்காக என்று உலக மக்கள் கொல்லுவதில்லையானால், விலை பெற்று ஊன் தருபவர் எவரும் இருக்கமாட்டார்கள்" என்பதே.

இவ்வுரை சரியானதே எனினும், கருத்தில் பெரும் பிழை காணப்படுகிறது. அதாவது, தின்பதற்காகக் கொல்லு கிற எவனும் வேறு எவனுக்கும் விலை கொடுக்க வேண்டியிராது. அவனே கொன்று தின்பான். கொன்று தின்பவனிடம் சும்மாவிருப்பவன் விலை கேட்கமுடியாது. கொடுப்பதற்கும் அவனிடம் ஊனும் இராது. ஆகவே இவ்வுரையும், குறளும் பெருங் குழப்பத்தை விளைவிக்கின்றன. ஆகவே ‘உண்மை எது?’ என ஆராய வேண்டியிருக்கிறது.

முதன் முதலில் ஏடு எழுதியவரோ, அச்சுக் கோர்த்த வரோ, பதிப்பித்தவரோ செய்த சிறு பிழையே இக் குழப்பத்திற்கெல்லாம் காரணமாயிற்று. ‘கொல்லா’ என்பது தவறு. ‘கொள்ளா’ என்பதே சரியான பாடம் ஆகும். இப்போது கொல்லா என்பதைக் கொள்ளா எனத் திருத்தி மூலத்தைப் படித்துப் பாருங்கள். இக் குழப்பங்கள் அனைத்தும் ஒழிந்து வெளிப்படையாகப் பொருளைக் காண்பீர்கள்.

தின்பதற்காக வாங்குபவர்கள் இல்லையானால் பொருளுக்காக கொன்று விற்பவர் எவரும் இரார் என்பதே வள்ளுவரின் குறளும், அவரது கருத்துமாகும். “கொல்வது தான் பாவம், கொன்றதைத் தின்பது பாவமில்லை” என் பாரது கூற்றை வள்ளுவர் இக்குறளின் மூலம் மறுத்திருப்பதைக் கண்டும் மகிழுங்கள்.

       தினற்பொருட்டாற் கொள்ளாது உலகெனின் யாரும்
       விலைப்பொருட்டால் ஊன்தருவா ரில்