திருக்குறள் புதைபொருள் 1/012-013

விக்கிமூலம் இலிருந்து

12. செயற்கரிய செய்வார் பெரியர்

        செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
        செயற்கரிய செய்கலா தார்

என்பது ஒரு குறள்.

பெரியவர்கள் பிறரால் செய்தற்கு அரிய காரியங்களைச் செய்வார்கள்; சிறியவர்கள் அத்தகைய அரிய காரியங்களைச் செய்யமாட்டார்கள் என்பது இதன் பொருளாம்.

இதுவரை எல்லோராலும் இவ்வாறே பொருள் கூறப் பெற்று வந்துள்ளது. அவ்விதமாயின் இது மிகைபடக் கூறியதாக முடியும்.

‘செய்வதற்கு அருமையான காரியங்களைச் செய்பவர்களே பெரியவர்கள்’ என்று கூறிவிட்டபொழுதே, சிறியவர்கள் அவ்வாறு செய்ய முடியாதவர்கள் என்று தோன்றுகிறது. மறுபடியும் “சிறியர் செயற்கரிய செய்யார்” என்று கூறியிருக்க வேண்டியதில்லை அல்லவா?

வள்ளுவர் அதனை மறுபடியும் வற்புறுத்திக் கூறவே அவ்வாறு கூறியுள்ளார் என்று கருதுவதும், கூறுவதும் வள்ளுவருக்குப் பெருமை அளிப்பதாக இல்லை. ஆகவே, அதன் உண்மைப் பொருளை அறியவேண்டியிருக்கிறது. 

ஏடு எடுத்து எழுதியவர்களின் அவசரப் புத்தியும், கறையான்களின் வயிற்றுப்பசியும் ஒன்றாய்க் கலந்து தமிழ்ச் கவடிகளில் பல பிழைகளை உண்டாக்கியிருக்கின்றன. அவற்றுள் ஒன்றே இதுவும் எனலாம்.

இக் குறளில் “கு” என்ற எழுத்தை “க” என்று அச்சிட்டதே உண்மையை உணரவெட்டாமல் செய்து விட்டது.

ஈற்றடியில் உள்ள க-வை “கு” என்று திருத்தினால் சரியாகக் காணப்படும். அப்போது—

“பெரியவர்கள் பிறரால் செய்தற்கு முடியாத அரும் பெருங்காரியங்களைச் செய்வார்கள். ஆனால், சிறியவர்களோ எளிதிற் செய்யக்கூடிய சிறிய காரியங்களைக்கூடச் செய்யமாட்டார்கள்” என்பதாகும்.

“கு” என்ற எழுத்து உடைந்து “க” வாகத்தோன்றியதன் விளைவே மேலே கண்ட பிழைக்குக் காரணமாயிற்று.

இதுவரை பதிப்பித்த குறள்களை அடுத்த பதிப்பாகப் பதிப்பிக்கும் பொழுது, தமிழகப் பேரறிஞர்கள் ஒப்பினால், இப்பிழைகளைத் திருத்தலாம். திருக்குறளைப் படிக்கும் பொழுது கருத்துான்றிப் படித்தால் அதன் புதை பொருள்களை எளிதில் அறியலாம்!

        செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர்
        செயற்குரிய செய்கலா தார்.

வாழ்க தமிழகம்!
வளர்க குறள் நெறி!