திருக்குறள் மெய்ப்பொருளுரை 1

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

வெளியீட்டுரை

துரை மா. பூங்குன்றன். அறி.இ. க.மு., மெய்.மு.


நம் பாவலரேறு ஐயா அவர்கள் இயற்கையின் இயக்கங்கள் அமைப்புகள், போக்குகள் அனைத்தையும் மெய்ப்பொருளறிவோடு பொருத்தி இவை ஒரு நெறியோடுதான் இயங்க வல்லன எனக் கூர்ந்தாயும் பழக்கம் உள்ளவர்கள். அனைத்து வாழ்வியல், அறிவியல் அறிவும் உள்ளடக்கியதுதான் மெய்ப்பொருளறிவு என முறைப்படுத்திக் கொண்டவர்கள்.

எனவே, திருக்குறளின் கருத்துகள் மெய்யறிவுப் பார்வையில் பார்க்கத் தக்கன எனப் பார்வையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அப்பார்வையில் மிகவும் புதுமையான பொருள்களை ஆங்காங்குத் திருக்குறளைப் பற்றிய சொற்பொழிவுகளில் வெளிப்படுத்துவார்கள் அரசியல் நெருக்கடிக் காலமான 1975-76 ஆம் ஆண்டுகளில், அற்றை அரசு இவ்வுலக நடைமுறை வாழ்வினின்று பிரித்து ஓராண்டுக் காலம் ஐயா அவர்களைத் கொடுஞ்சிறையில் வைத்திருந்த காலத்தில்தான் திருக்குறளை மெய்ப்பொருள் நோக்கில் நோக்கி, அதைச் சார்ந்தே உரையெழுத அவர்களுக்கு எண்ணம் எழுந்தது.

இயல்பாகவே ஐயா அவர்களின் மெய்ப்பொருள் நோக்குக்குத் திருக்குறள் மிகவும் பொருந்தி வந்ததை உணர்ந்தார்கள். தாம் உணர்ந்த மெய்ப்பொருள் உணர்வை வெளிப்படுத்தத் திருக்குறளை ஒரு களமாக எடுத்துக்கொண்டதாகவும் கூறினார்கள்.

நெருக்கடிக் காலச் சிறையின்று வெளிப்பட்டபின், தாம் எழுதிய உரைக் குறிப்புகளைப் படியெடுக்கவும் பிரிக்கவும் துணையாளர்கள் தேவைப்பட்டனர். அப்போது அப்பணிச் சுமை பற்றி அனைவரி டமும் விளக்கினார்கள். அக்கால் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வந்த திரு வடிவேல் இராவணன், மந்தைவெளிப் பள்ளித் தமிழாசிரியர் திரு. தமிழ்நாவன் போன்றோர் ஒரிரு திங்கள் தொடர்ந்து மாலை நேரங்களில் படியெடுத்தும் வகைப்படுத்தியும் உதவி செய்தனர்.

நாள் எந்நேரமும் உரையைப் பற்றிய எண்ணமும் பேச்சுமாகவே ஐயா இயங்கி வந்தார்கள். இதற்கிடையில் 1982 இறுதியில் திரு. இளமாறன் அவர்கள் பவானியில் திருக்குறள் தொடர்சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று அமைத்தார். இச்சொற்பொழிவின் பின் இந்நூல் விரைவில் அமைவதற்கான சூழல் அமைந்ததெனினும் நடைமுறை போக்கில் அச்சூழல் நில்லாமற்போனது.

இதற்கிடையில் ஐயாவின் மகளான தங்கை செந்தாழை பட்டம் முடித்து வீட்டில் இருந்த காலத்தில் இப்பணிக்குத் துணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர்க்கும் மணவாழ்க்கை அமைக்கப்பட்டது.

அதன்பின் சரியான துணைச் சூழல்கள் வாய்க்காமலும் இல்லத்தில் ஏற்பட்ட சிற்சில சிக்கல்களாலும் உரை செய்யும் பணி தடைப்பட்டது. அதன்பிறகு அரசியலிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. ஐயாவின் பணி இதழ் வெளியீடுகளிலேயே தொடர்ந்து இருந்தது. இதற்கிடையில் 1991 சூன் மாதம் செயலலிதா ஆட்சியின் கொடுமையான சூழல் தமிழகத்தில் தொடங்கியது. ஐயா அவர்கள் மிகவும் இச்சூழலால் தமிழினத்தை எண்ணி வருந்தியிருந்தார்கள். அத்துடன் ஐயாவின் கண்களில் கதிர்முறையில் அறுவை செய்ய நேர்ந்தது.

இவ்விரண்டு அழுத்தமான நிகழ்வு எண்ணங்களோடு தென்மொழி அச்சகம் சென்றிருந்தபோது தென்மொழி அச்சகப் பெயர்ப்பலகை வேறு காற்றினால் வீழ்ந்திருந்தது கண்டு திடுக்குற்றார். இவைபோன்ற மனச்சுமையான எண்ணங்களோடு ஒருநாள் இரவு உறக்கத்தினிடையில் திடீரென்று விழிப்பு வந்தபோது திருக்குறள் உரையை முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பு பீறிட்டு எழுந்தது.

இதன்படி முதலில் உரைச் சுருக்கத்தை வெளியிட்டு விட வேண்டும் என்ற உந்துதலில் அதற்கானப் பணிகளை மும்முரமாகத் தொடங்கினார். தென்மொழியில் முன் வெளியீட்டுத் திட்ட அறிக்கைகள் வெளிவந்தன. அச்சிடுவதற்காகப் பெருந்தொகை வேண்டியிருந்ததாகையால் அத்தொகையில் தென்மொழி நெஞ்சங்களான திருவாளர்கள் ஈரோடை அரசமாணிக்கனார், மா.செ.தமிழ்மணியார், நிலா.வேங்கடவனார் முதலியோர் ஐயா அவர்களிடம் நூல் வெளியீட் டிற்குத் துணையாகத் தொகை விடுத்திருந்தனர். மேலும் முன் வெளியீட்டுத் திட்டத்தின்படி தென்மொழி அன்புள்ளத்தினர் சிலரும் தொகை விடுத்திருந்தனர்.

கதிரச்சுக்கோப்பில் பணி விரைவுபடுத்தப் பெற்று 10.3.93 அன்று வெளியிட்டுவிடத் திட்டமிடப்பெற்றது. இவ்வாறு மும்முரமாகத் திட்டமிட்டுப் பணி முனைப்பில் இருந்தபோது 1993 சனவரி 26-ஆம் பக்கலில் 'தாடா'வில் ஐயா சிறைப்படுத்தப்பட்டார்கள். இந்த முறை சிறை ஐயாவிற்கு மன நைவையும், உடல் நலிவையும் ஏற்படுத்தியது. ஏழு திங்கள் சிறை வாழ்விற்குப் பின் வெளிவந்த பிறகு மீண்டும் திருக்குறளை வெளியிடும் பணியில் முனைந்தார். திருத்தத்திற்குப் பின் உரை நீண்டது.

இல்லறவியல் பகுதி வரை (240 குறள்களுக்கு மட்டும் முழு நிறைவுபடுத்திவிட்டு முடிக்கும்போது அதைப் பற்றி ஐயா அவர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுப் பேசுகையில், "இல்லறவியல் வரையில் முடித்துவிட்டேன். இனி, துறவறவியல்தான் போக வேண்டும்" என்று கூறினார்கள். ஆனால் வாழ்க்கையையே துறப்பார் என்று அப்போது யாரும் எண்ணிப் பார்க்கவில்லை.

ஐயா அவர்களின் மறைவிற்குப் பின்னர், உயிர் முயற்சியான இந்நூலை வெளியிட வேண்டும் என்ற துடிப்பு அனைவரிடமும் இருந்தது. ஆனால் குறிப்புகள் ஒன்றும் விடுபடாமல் தொகுத்து வருவதற்குக் காலம் எடுத்துக்கொண்டது. முதல் நூறு திருக்குறளுக்கான உரை முதல் பகுதியை தி.பி.2028 (10-03-1997)-இல் முதல் பதிப்பாக வெளிக்கொணர்ந்தோம். அதன்பின் ஐயா அவர்களின் 73-ஆம் ஆண்டு நிறைவையொட்டி 2006இல் இந்த முதல் பகுதியின் இரண்டாம் பதிப்பை வாங்குவோரின் சுமையைக் கருதி, பொதுமுன்னுரை, முதல்தொகுதி எனப்பிரித்துத் தனித்தனியாகவும் வெளிக்கொணர்ந்துள்ளோம்.

ஐயா அவர்கள் இவ் வடிவங்களைப் பார்க்காமல் சென்றிருந்தாலும் அவர்கள் குறித்திருந்தபடியே பதிப்புரையைத் திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்களும் வெளியீட்டுரையை நானும், தகவுரையைச் சொல்லாய்வு அறிஞர் ப. அருளியார் அவர்களும் எழுத அவை இணைக்கப்பட்டுள்ளன. திரு. அருளியார் எழுதிய தகவுரையை ஐயா அவர்களே பார்க்க நேர்ந்தது.

முகப்பு அட்டைவடிவத்தை உருவாக்கிய எம் மகன் செல்வன் மா.பூ தமிழ்மொய்ம்பனுக்கும் மற்றும் இந்த நூல்கள் உருவாகத் துணைநின்ற அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பதிப்புரை


திருக்குறள்மணி
புலவர் இறைக்குருவனார்



திருக்குறள், தான் தோன்றிய காலத்துக்கு முந்தைய நூல்களினின்றும் பெரிதும் வேறுபட்டு விளங்கி நிற்கின்றது. அதற்குப் பின்னெழுந்த நூல்களிலெல்லாம் அதன் தாக்கம் தட்டுப்படுகின்றது. திருவள்ளுவரால் ஈர்க்கப்பெறாத அறிஞர்கள் எவரும் இருக்க முடியாது. குறட்பாவை மேற்கோள் காட்டுவதன் மூலம் தம் கருத்துக்கு வலிமை சேர்க்கவும் அதனைச் செல்லுபடியாக்வும் முற்படுபவர்கள் எண்ணறோர்!

திருக்குறளை வாழ்வியல் நூலாகக் கொண்டு! அதன்வழி வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பதைவிட, இப்பெருநெறிக்குரியதான அதனை, முன்னரே கட்டமைக்கப்பட்டுத் தாம் சார்ந்திருக்கும். ஏதேனும் ஒரு நெறிக்கு உரியதாக ஆக்கிவிடவும், காட்டிக்கொள்ளவும் முயன்றவர்கள் மிகப்பலர். இம்முயற்சி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தொடர்ந்து, இன்றளவும் நீடிப்பதால், ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் திருக்குறளுக்குப் புதுப்புது விளக்கங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆயினும் அதன் மெய்ப்பொருள் இதுவெனத் தெளிவுப்டுத்தப்படாத நிலையே நீடிக்கிறது.

பல்துறை சார்ந்த சீரிய அறிவாற்றலாலும், பல்வேறு ஆய்வுகளாலும் பாவலரேறு ஐயா அவர்கள் திருக்குறள் தொடர்பாக மேற்கொண்ட அருமுயற்சியின் வெளிப்பாடே திருக்குறள் மெய்ப்பொருளுரை!

திருக்குறளுக்குப் பாவேந்தர் பாரதிதாசனார் உரை (வள்ளுவர் உள்ளம்) எழுதத் தொடங்கிய போது, பரிமேலழகர் உரையில் ஆங்காங் குள்ள சிலசில நச்சுக் கருத்துகளை நீக்கிவிட்டால், அவ்வுரையே போதும்; நூல் முழுமைக்கும் புத்துரை எழுதத் தேவையில்லை என்றும், மொழி ஞாயிறு பாவாணர் அவர்களின் உரை (தமிழ் மரபுரை) வெளிவந்தபோது பாவாணரின் தமிழ் மரபுரையே நிறைவானது; வேறு எவரும் திருக்குறளுக்கு உரைஎழுதத் தேவையில்லை, என்றும் கருத்துத் தெரிவித்த பாவலரேறு அவர்கள், உள்நாட்டுப் பாதுகாப்பு என்னும் கொடிய அடக்குமுறைக் கடுஞ்சட்டத்தின்கீழ்(MISA)ச்சிறைப்படுத்தப்பட்டிருந்தபோது, உடனிருந்த சிறையாளிகளின் வேண்டுகோட்கிணங்கி, அங்கு, வகுப்பு நடத்தும் பொருட்டுத் திருக்குறளை துணுகி நோக்க முற்பட்டு, அதன் கருத்தாழத்தையும் பிற சிறப்பு நலங்களையும் கண்டு வியந்து, இதுகாறும் வெளிவந்த எவ்வுரையானும் பொந்திகையுறாத மனநிலைக்கு ஆளாகித் திருக்குறளுக்குத் தாமே ஒரு புத்துரை காணவும், அதன்வழித் தாங்கண்ட மெய்ப்பொருளை விரித்து விளக்கிக் காட்டவும் வேண்டும் என்று உள்ளங்கொண்டு முனைந்தார்கள்.

தொடர்ந்து கோனேரிப்பட்டி, அணைப்பட்டி, பவானி என்னும் இடங்களில் திருக்குறள் தொடர்பாக நடைபெற்ற கட்டூர்(Camp)நிகழ்ச்சிகளும் பிறவும் உரைகாணும் முயற்சிக்கு உரஞ்சேர்த்தன.

அடுத்து ஒடுக்குமுறைக் கொடுஞ்சட்டத்தின்கீழ் (TADA)ஐயா அவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் உரையெழுதும் பணி தொடர்ந்தது; மேலும் தொடரமுடியாத நிலைக்கும் அச் சிறைவாழ்வு அடிகோலியது.

பாவலரேறு அவர்கள் தம் வாழ்நாளில் இம் மெய்ப்பொருளுரைக்காக மேற்கொண்ட முயற்சியைப் போல் வேறு எதன் பொருட்டும், எந்நூலுக்கும் எடுத்துக்கொண்டதில்லை. இதனைத் தம் வாழ்நாட் பெரும்பணியாகவே கொண்டிருந்தார்கள். அவர்கள் இதற்காகச் செலவிட்ட நேரத்தில் நூறாசிரியமும், பாவியக்கொத்தும், ஐயையும் போல் எத்தனையோ இலக்கியங்களைப் படைத்திருக்கலாம்; கணிச்சாறும் பள்ளிப் பறவைகளும் போலும் பலப்பல பாடற்றொகுதிகளை வெளியிட்டிருக்கலாம். கற்பனை யூற்றுகளைப் பெருக்கியிருக்கலாம். உரைநடை ஆக்கங்களின் எண்ணிக்கையை உயர்த்தியிருக்கலாம்.

ஆனால், திருக்குறளின் அரும்பெருஞ் சிறப்புகளை ஆய்ந்துகண்டு அதிலேயே தோய்ந்துவிட்ட அவரது உள்ளம், பொய்யாமொழியின் மெய்ந் நெறியே தமிழினத்தை உய்விக்கும் தக்க பெருவழி என உறுதியாகக் கொண்டமையால் அதன் மெய்ப்பொருளுரை ஆக்கத்திலேயே இறுதிவரை முயன்றார்கள். அவர்கள்தம் இறுதிக் காலத்து உரைப் பொழிவுகளிலும் உரையாடல்களிலும் திருக்குறளும் மெய்ப்பொரு ளுரையுமே மேலோங்கி நின்றன.

இனி, வந்தேறிகளான ஆரியச் சிற்றினத்தவரால், செந்தமிழ் மக்களின் பண்பட்ட வாழ்வியல் நிலைகள் பாழ்படத் தொடங்கிய நிலையில், அவ்விழிநிலையைத் தடுத்து நிறுத்தித் தமிழினத்தை உய்விக்கவே வாழ்வியல் நூலான திருக்குறளைத் திருவள்ளுவர் படைத்தார் என்னுங் கருத்தை இவ்வுரையின் முன்னுரையுள் பாவலரேறு ஐயா அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

திருவள்ளுவப் பெருந்தகை, அற்றைக் கழகப் புலவர்கள் போல் அரசர்களை நாடியும் பாடியும் பரிசில் வாழ்க்கை மேற்கொள்ளாமல் தன்மானத்துடன் வாழ்ந்து, மக்களுக்கான பொதுநிலையறம் உணர்த்தியுள்ள சிறப்பைப் பெரிதும் பாராட்டியிருப்பது, திருவள்ளுவரின் பெருமையை மட்டுமன்றிப் பாவலரேற்றின் பெருமித உள்ளத்தையும் புலப்படுத்துகின்றது.

திருக்குறளுக்கு உரைவகுத்த முற்கால பிற்கால உரையாசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களுமான பலர் வெளிப்படுத்தியுள்ள பொருந்தாக் கருத்துகளைச் சுட்டிக் காட்டிக் கண்டித்திருப்பதுடன், பாவலரேறு அவர்கள் அவற்றுக்குத் தாங்கண்ட மெய்ப்பொருளையும் தெளிவுபடுத்தியுள்ளார். அன்றியும் ஆரிய நச்சுக் கருத்துகள் இவை அருந்தமிழ் நற்கருத்துகள் இவையென வேறுபடுத்தி விளக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண்பாலார்க்கு மட்டுமே கற்பை வலியுறுத்தி ஆண்பாலார்க்கு அதனை வலியுறுத்தாதது மட்டுமன்றி, அவர்தம் பரத்தமை வாழ்வையேகூடப் பாராட்டிப் பாடும் முன்னை நிலைக்கு மாறாக, ஆண்பாலார்க்கும் திருவள்ளுவர் கற்பு நிலையை வலியுறுத்துகிறார் என்பதினை

ஒருமை மகளிரே போலப் பெருமையுந்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு

என்னுங் குறட்பாவின்வழிப் புலப்படுத்தியிருப்பதோடு, அதனை அறத்துப்பால்-இல்லறவியலில் எடுத்துரையாது, பொருட்பால்குடியியலில் கூறியதேன் என்பார்க்கு, உரையாசிரியர் பாவலரேறு தரும் விளக்கம் இம்மெய்ப்பொருளுரையின் சிறப்புக்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

உரனென்னுந் தோட்டி, வரனென்னும் வைப்பு, வழியடைக்குங்கல், இயல்புடைய மூவர், எழுபிறப்பு என்பனவும் இன்ன பிறவுமான பலப்பல தொடர்கள் இம்மெய்ப்பொருளுரையில் புதுப்புது விளக்கங்