திருவாசகத்தேன்/அக்காரம் தீற்றிய அதிசயம்

விக்கிமூலம் இலிருந்து



அக்காரம் தீற்றிய அதிசயம்


வாழ்வு சிறக்க சுய விமர்சனம் தேவை. விமர்சனம் என்பதைத் தூய்மை செய்தல் என்று கொள்ளலாம். ஒரு நாளில் எத்தனை தடவை கண்ணாடி முன் நின்று முகம் பார்த்துத் துடைத்துத் திருத்தம் செய்து கொள்கின்றோம்! அழகு செய்து கொள்கின்றோம்! அது போல நம் ஆன்மாவை- நாம் இயற்றிய செயல்களின் பயன்பாடு முதலியனவற்றை ஆய்வு செய்துகொண்டு பயனற்றவைகளைத் தவிர்த்துக் கொண்டு பயன் பாடுடைய பணிகளைச் செய்வது சுய விமர்சனம், எங்கே சுய விமர்சனம் புறக்கணிக்கப்படுகிறதோ அல்லது தரமாக அமையவில்லையோ அங்கே பிறர் விமர்சனம் வரும். ஆனால், விமர்சனம் விமர்சனம்தான்! விமர்சனம் ஆக்கத்தின்பாற்பட்டதே குற்றங் கண்டுரைத்தால் ஆக்கம் இல்லை; இருக்காது. விமர்சனம், எரியும் விளக்கில் சுடர் தட்டி விட்டு, எரிய விடுதல் போன்றது! அல்லது சுய விமர்சனம் பரிபூரண ஆக்கம்!

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் பெரும் பான்மையானவை சுய விமர்சனப் பாடல்கள். தன்னைத் தானே ஆய்ந்து தமது குற்றங்களை உணர்ந்து திருத்தம் காணும் வேட்கையில் பாடுகின்றார்! அழுது அழுது பாடுகின்றார்! அதனாலேயே திருவாசகத்தை ஓதினால் உருக்கம் ஏற்படுகிறது. “நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து” என்றும்,

யானே பொய், என் கெஞ்சும்
பொய்; என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனை வந்துறு மாறே !

(திருச்சதகம்- 9.0)

என்றும் பாடுகின்றார்.

அறிவ னே! அமு தேlஅடி நாயினேன்
அறிவ னாகக் கொன் டேன்,எனை ஆண்டது
அறிவி லாமையன் றே கண்டது ஆண்ட நாள்
அறிவ னோ வல்ல னோ அரு ரீசனே!

(திருச்சதகம்-50)

என்றும் அருளிச் செய்துள்ளார்.

மாணிக்கவாசகர் அறிவால் சிவமே என்று போற்றப் பெறும் அளவுக்கு உயர்ந்ததற்குக் காரணம் தம்மை உணர்ந்து தமது பழக்கங்களைத் தவிர்த்துப் பழகி சிவன் கழலே சார்பென்று உணர்ந்து சிவத்தினைச் சார்ந்து ஒழுகியதேயாம். மாணிக்கவாசகரிடம் ‘நான்’ கெட்டுப் போய்விட்டது; சிவமாம் தன்மை மேவிட்டது. ஆதலால், உலகியல் முன்னேற்றமானாலும் சரி, ஆன்மிக முன்னேற்ற மானாலும் சரி சுய விமர்சனம் தேவை. சுய விமர்சனம் செய்து கொள்ளவில்லையெனில் வளர்ச்சியில்லை; பிறர் விமர்சனத்தைத் தாங்கி மாற்றிக் கொள்பவர்கள் உய்ர்வார்கள்!

மாயம்! உண்மையைப் போல் தோற்றுவது மாயம்! இந்த மாயம் நச்சுத் தன்மையுடையது! இது கடித்தவுடன் மனிதன் “நான்” ஆகின்றான். ‘நான்’ என்பது அகந்தையின் பரிணாமம். பற்றற்ற துறவி ஒருவர் பலகாலும் உண்ணாது, உறங்காது யாதொரு தீங்கும் செய்யாது நோன்பிருந்தார். அவர் இறந்து போன பிறகு சொர்க்கத்தில் இடம் கிடைக்கவில்லை! மீண்டும் பிறக்க ஆணையிட்டான் இறைவன். துறவி, “ஏன்?’’ “எதற்காக?” என்று இறைணிடம் கேட்க “நான்”. என்பது இழக்கப் பெறவில்லை என்றான் இறைவன். கொங்கண முனிவர் கதை நாடறிந்த ஒன்றுதானே! ‘நான்’ என்பது செருக்கினைத் தரும். செருக்கு, அன்பிற்குப் பகை; அருளுக்குப் பகை; மனித உறவுகளுக்குப் பகை; ஏன் அறிவுக்கும் ஞானத்திற்கும் கூடப் பகை. இந்த ‘நான்-ஐ’ ஒழித்தல் தவத்தில் சிறந்த தவம்.

“நான் கெட்ட வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ?”

“................................. நாம் ஒழிந்து
சிவமான வாபாடித் தெள்ளேனம் கொட்டாமோ?"

என்றும் மாணிக்கவாசகர் பேசுவார், இந்த நான் கெடுதலை குமரகுருபரர் “பின்னும் ஒர் மாத்திரை குறுகினன்” என்பார். அதாவது சீவன் சிவனாயிற்று. “நான்” பரந்த வெளியில் ஒற்றை மரம்! ‘நாம்’ அடர்ந்த தோப்புக்குள் ஒரு மரம்! பரந்த வெளியில் உள்ள ஒற்றை மரத்திற்கு சூறைக் காற்றடிக்கும் போது பாதுகாப்பில்லை. தோப்புக்குள் உள்ள மரத்துக்குப் பாதுகாப்பு உண்டு. “நான்” மனித குலத்தின் தீமைகளுக்கெல்லாம் மூலகாரணம். இதுதான் அப்பரடிகள் கூறிய மூலநோய் போலும்! “நான்” உடன் பிறந்தது.

“எனது” என்பது தீமை, “என்னுடையது” என்ற தீமையே அழுக்காற்றின் தாய்! வீட்டுக்கும் வீட்டுக்கும் இடையேயுள்ள சுவர்களும் வேலிகளும் தோன்றியது “எனது” என்பதிலிருந்து தான்! வளம்- வறுமை, களவு- காவல் பிறந்து வளர்ந்ததும் ‘என்து’ என்ற செருக்கினால் தான். பகைமைக்கும் கூடக் காரணம் ‘எனது’ தான். இந்த ‘எனது’ நீக்குதல் ‘நான்’ அகற்றுதலைவிடக் கடினம். எனது சொத்து என்பது பற்றிப் பிடித்துக்கொண்டு வளர்கிறது. ‘எனது’க்குத் தலைசிறந்த பரிவாரம் அரசு. “என’’தின் ஏவல் கேட்போர் ஆட்சியாளர்; காவல்துறையினர்; பதிவாளர் துறையினர். எனது என்ற தீமை ஆட்சிக் கட்டிலிலேயே ஏறிவிட்டது. ‘நான்’ ‘எனது’ என்பதை செருக்கு என்றது. வள்ளுவம். ‘நான்’ ‘எனது’ என்ற மாயம் மனிதனைக் கெடுத்து விடுகிறது. ஏன்? மனிதனாக வாழ அவை அனுமதிப்பதில்லை,

‘நான் என்னும் செருக்குடையவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்வான்; தான் செய்யா ததைச் செய்ததாகக் கூறுவான்; பெருமையைத் தேடுவான். உரிய விலையின்றிச் செல்வத்தைத் தேடுவான். காரண காரியமின்றி, ‘நான்’ மட்டுமே கருவியாகக் கொண்டு மிரட்டி, பயமுறுத்திப் பணம் கேட்பான். “நான் ஆணையிட்டால்!” என்பான். இந்த ‘நான்’ காரணமாகப் பொய் கூறுவான். ‘எனது’ என்பது, பொய். என்ற உரத்திலேயே வளரும். பொய்யும் வளரும் தன்மையது. விளையாட்டாக அல்லது அவசியத் தேவையாக ஒரு பொய் வாழ்க்கையில் தோன்றிவிட்டால் பொய் நாளும் வளரும். ‘எனது’ உரிமைச் செல்வம் அடுக்கிய பலவாக ஆக வேண்டுமானால் பொய் தேவைப்படும். ஒரு சில நல்லவர்கள் ‘பொய்யைப்’ பாதுகாப்புக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். சிறுமதியினர் பொய்யையே கருவியாகப் பயன்படுத்துவர். அடுத்தவர் செல்வத்தைப். பறிப்பர். ‘எனது’ உடன்பிறப்புக்களைக் கூடப் பிரிக்கும். கைகேயியின் மனத்தை திரித்ததுகூட “எனது” தானே! மழலைக் குழந்தையாக இருக்கும் பொழுது ‘நான்’ இல்லை; ‘எனது’ இல்லை; ‘எனது’ என்ற உணர்வு வந்தவுடன் பொய்யும் உடன் வந்து விடுகிறது. விளையாட்டுப் பொம்மையில் தொடங்கும் ‘எனது’, சொத்து வரையில் வளர்கிறது. பகையை மூட்டுகிறது. கலகத்தை வளர்க்கிறது; மனிதரைப் பிரிக்கிறது. நட்பு, காதல் உறவு எல்லாம் ‘நான்’ ‘எனது’க்கு முன் நிற்க முடியாமல் தோற்றுப் போயின. ‘எனது’ அற்றால் ‘நான்’ அறும். ‘நான்’ ‘எனது’ அற்றால் பொய் அகலும்; ‘பொய்யினைப் பல செய்து’ என்கிறார் மாணிக்கவாசகர். “பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்” என்பார் பிறிதொரு பாடலில். உண்மையல்லாதனவெல்லாம் பொய்! உரியதல்லாதது- செல்வமாயினும், புகழாயினும் அது பொய்தான்! இன்றைய சமுதாயம் இவர் அவர் என்றில்லாமல் அவரவர் தகுதிக்கு ஏற்றாற்போலப் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே புரள்கிறது. பொய் கலந்த மெய்கூட இல்லை. உண்மையைச் சொன்னால் இந்தச் சமுதாயத்தில்- ஆட்சியமைப் பில் வாழ இயலாத நிலை இன்று! இன்று உண்மையைச் சொல்வி வாழ விரும்புபவர்கள் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியதுதான்!

பொய், ‘நான்’ என்னும் செருக்கு, ‘எனது’ என்னும் செருக்கு ஆகியவை மனிதனை ஆட்கொண்ட பிறகு அவன் வாழ ஆசைப்படுகிறான்! ‘நான்’, ‘எனது’, ‘பொய்’ ஆகியன வாழ்வதற்குரிய இயல்புகள் அல்ல! ஆயினும் வாழும் ஆசை யாரை விட்டது? ஆதலால், நடிப்பர்! நடிப்பு பலவகை வாழும் களங்கள் தோறும் நடிப்பு மாறும் வீட்டில் நடிக்கும் நடிப்பு வேறு! நாட்டில் நடிக்கும் நடிப்பு வேறு சமூக நடிப்பு வேறு! நாட்டிற்குரிய நடிப்பு வேறு! வேலையிலும் நடிப்பு உண்டு! சமூக சேவையில் தொண்டும் உண்டு; நடிப்பும் உண்டு! நடிப்பை எளிதில் கண்டுணர முடியாது. நம்பிக்கைகளை வளர்த்து அதன் பிறகுதான் நடிப்பு தோன்றும்! கடின உழைப்பாளி போல நடிப்பர். ஆனால், அவர் செய்யும் வேலைகள் ஊர்ந்து செல்லுமே தவிர, நகர்ந்துகூடச் செல்லா. அன்பிலும் விசுவாசத்திலும் முதிர்ந்தவர் போலக் கண்ணிர் சிந்துவார். ஆயினும் அன்பு என்பது மருந்துக்குக்கூட கிடைக்காது. நடிகர்கள் நாடகம் முடிந்தவுடன் நாடக மேடையைவிட்டு இறங்கி விடுவது போல, நடிக்கும் நண்பர்கள் அவரவர் காரியம் முடிந்தவுடன் அகன்றுவிடுவர்; அந்நியராகி விடுவர். பின் அழைத்துத்தான் ஆகவேண்டும்! வாங்கினதை மறந்தே விடுவர். மனித குலத்தில் மட்டும் நட்பும் உறவும் சீராக அமைந்துவிட்டால் வறுமை ஏது? ஏழ்மை ஏது? பகை ஏது? கலகம் ஏது? எல்லா நடிப்பிலும் “தலைமை” நடிப்பு அலாதியானது; சுவை மிக்கது. இன்று தலைவராக ஆசைகொண்டு திரிவோருக்கு தகுதியே இல்லை! ஆனால், எல்லோருக்கும் தலைவராக வேண்டும் என்று ஆசை.

வேள்வியில் இடம்பெறும் அவியுணவு சிவனுக்கே உரியது. அவனே சாவாதவன்! மூவாதவன்! பிறவா யாக்கைப் பெரியோன்! ஆனால், மற்றைத் தேவர்களுக்குத் தாங்களும் தலைவர்களாக ஆசை தக்கன் வேள்வியில் தலைவர்கள் ஆனார்கள்! அவியுணவை உண்டார்கள்! பின் பாற்கடல் கடைந்தபொழுது முதலில் ஆலகால நஞ்சு எழுந்தது! தேவர்கள் அலறி ஓடினார்கள்! எம்பெருமான் நஞ்சை உண்டு அமரர்களைக் காப்பாற்றினான்! தேவர்களுக்கு அமுதைக் கொடுத்தான்!

“விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்வான் !”

என்பார் இளங்கோவடிகள். தலைமை என்றால் மற்றவர்களைத் துன்பத்திலிருந்து காப்பாற்ற வேண்டும். மற்றவர்களைத் துன்பத்திலிருந்து காப்பாற்றாதவர்கள்காப்பாற்ற முடியாதவர்கள் எங்ஙணம் தலைவராக முடியும்? ஆனால் இன்று தலைவருக்குரிய இலக்கணங்கள் மாறி வருகின்றன. துண்டுகள், (பொருளற்ற- பயனற்ற) பேச்சுத் திறன் இருந்தால் தலைவராகி விடலாம். இந்த இலக்கணங்கள் ‘தலைமை’த் தகுதியாக எண்ணி நடித்தல்! “மண்ணிடை நடித்து” என்பார் . மாணிக்கவாசகர். மண்ணிடை நடித்தல் ஏன்? சில நாள்களாவது உண்மை வாழ்வு வாழக் கூடாதா? இதற்கெல்லாம் காரணம் கேட்டால் “முன் வினையின்” மீது பழிபோட்டுத் திரிவது இயற்கையாகி விட்டது. உலா வருதல், பயணம் செல்லுதல் என்பன வேறு. இவற்றிற்கு நோக்கம் உண்டு. ‘திரிதல்’- பயனற்றது; உழைப்பில்லாமல் யாதொரு பயனுமின்றி ஊரைச் சுற்றுவர்; பிழைப்புக்கு இலவசத் தேநீர்-சோறு எதிர்பார்ப்பர்; காரணம் கேட்டால் “வினைப்பயன்” என்பர். “கெட்ட காலம்” என்பர். “நல்லகாலம் பிறக்கவில்லை” என்பர். “ஆறு மாத காலம் கழியவேண்டும்” என்பர். முன் வினையின்மீது பழி போட்டுவிட்டுச் செயலற்றிருப்பவர்களின்- தூர்த்தர்களாக நடப்பவர்களின் நடிப்பு பயன்தராது. நீண்ட நாள்களுக்குச் செலாவணியாகாது.

“நாடகத்தால் உன்னடியார் போல் கடித்து
நான் நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும்
விரைகின்றேன்.”


என்றும் திருவாசகம் பேசுகிறது. நடிப்பும் விரைவும் இணைந்தவை போலும்! உண்மை, “உள்ளது போகாது” என்று அமைதியாக நடக்கும்; செய்யும் மண்ணிடையில் தான் நடிக்க இயலும். ஏனெனில் ஏமாறுபவர்கள் மண்ணில்தான் அதிகம். பொருள் செய்தல், அரசியல், மதம், மந்திர தந்திரங்கள் முதலிய அனைத்துத் துறைகளிலும் இன்று நடிப்பு புகுந்து விளையாடுகிறது. இன்று நமது நாட்டில் சோஷலிசம் என்பதே நடிப்பாளர்கனின் மந்திர மொழிபோல் விளங்குகிறது. நடிப்பு, போலியானது; பொய்ம்மையானது. நிர்வாணமான சுயநலத் தன்மையுடையது. நடிப்பின் விளைவு துன்பம்; துயரம், எதிர் விளைவு, சமுதாயச் சீரழிவு. குற்றங்கள், குறைகள் உடையதாக இருப்பது பாபமல்ல. இவற்றை நடித்து மறைப்பதுதான் குற்றம். நியாயப்ப்டுத்துவது தான் குற்றம். தவறுகள் செய்துவிடுவது பாபம் அல்ல. ஆனால் தவறுகளே செய்யவில்லை என்று நடிப்பது- உண்மைக்குப் புறம்பாக பேசுவது- நடப்பது இவைதான் பெருந் திங்கு செய்யும். ஆதலால், மண்மீது பொய்யினை மறைத்துக் கொள்ளும் தடிப்பு வேண்டாம். ஆனால், மாணிக்கவாசகர் “நடிக்கவும் வேண்டும்” என்கிறார். பொய்யை மறைக்கும் நடிப்பு அல்ல.. உண்மையை அடைய ஆர்வம் கொள்ளும் பத்திமை நடிப்புத் தேவை. “தடிக்கின்றிலை” என்பார்.

இங்ஙனம் மண்ணிடை நடித்தும்; வினை விளைவின் பயன் என்றும் திரிகின்ற ஆன்மாவை என்ன செய்வது? ஒருஆன்மா பைத்தியம்போலத் திரிந்தால் தாயிற் சிறந்த தயாவுடைய சிவத்துக்கு இழுக்கல்லவா? சிவத்தின் படைப்பில் ஆன்மாக்கள் இப்படித் திரிந்தால் உலகம் பழி தூற்றாதா? சந்தி சிரிக்க வைக்காதா? ஆத்லால், சிவம் திரியும் ஆன்மாவைப் பிடிக்கிறான், பிடித்து நிறுத்துகிறான். திரியும் ஆன்மாலைத் தடுத்து நிறுத்துகிறான். தன்னுடன் வினைத்துக் கொள்கிறான். சிவத்துக்கு ‘நடுதறி’ என்று ஒரு பெயர் உண்டு. அப்பரடிகள் திருத் தாண்டகத்தி கப்பூர் நடுதறியைக் காணலாமே” என்றார். ஆன்மாவைச் சிவத்துடன் இணைத்துப் பிரியாமல் கட்டிப்போடுவது கட்டுத் தறி! பாரதம், சகாதேவன் கண்ணனைக் கட்டினான் என்று கூறுவதை ஓர்க.

நிலை தடுமாறி திரியும் ஆன்மான் நம் தலைவன் சிவம் தாமே எளிமையாகப் புகுந்து, நிறுத்தி ஆட்கொன் கிறான். நாளும் சின்னஞ்சிறு செயல்கள் செய்தும் வினைகள் பல செய்தும் திரியும் ஆன்மாவை, நான்மறை நாயகன் நயந்து வந்து ஆட்கொண்டருள்கிறான். நான்முகனும் திருமாலும் தேடியும் காணப்பெறாத சிவம், நான்மறைகள் ஐயனே என்று தேடியும் காணப்பெறாத விழுப்பொருள் வலியவந்து ஆட்கொண்டருளிய போதும் அருமை உணர்ந்தபாடில்லை; திருவருள் நாட்டம் வரவில்லை; ஆணவத்தின் சேட்டை இம்மியும் குறைய வில்லை. வேப்பஇலை தின்னும் புழுவுைக் கரும்பில் இட்ட கதையாகவே அமைகிறது. ஆயினும் தென்னன் பெருந் துறையுறை சிவன் வள்ளல், ஆன்மாவை விடமாட்டான்! சில பொருள்கள் ஒரு கொதியிலேயே பக்குவமாகிவிடும்; பதப்படும். சில பொருள்களுக்குப் பல கொதி தேவைப்படும். நல்லான்மாக்கள் ஒரு சொல்லில் பெருமானுக்கு ஆட்படும்; முத்தி நெறியில் நிற்கும் புறத்தே போகா! பெருமானே பார்த்துத் துடைத்தெறிய முற்பட்டாலும் போகா! இறுக்கி வளாறினால் அடித்தாலும் போகாது! பக்குவம் குறைந்த ஆன்மாக்களைப் பலதடவை அடித்து அடித்துத் தான் அற்புதம் செய்கிறான் சிவம்! ஆனாலும் ஒர் ஆன்மா வினையினின்று விடுதலை பெற்றுத் திருவருளின்பத்தில் திளைக்கச் செய்யும் வரையில் சிவம் ஓயாது, அவன்தன் ஐந்தொழிலும் நிற்காது! வேண்டியது நமது விழிப்புணர்வே!

கடித்து மன்னிடைப் பொய்யினைப் பல செய்து
கானென தெனு மாயக்
கடித்த வாயிலே கின்று முன் வினைமிகக்
கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்ற பெருமறை தேடிய
அருட் பொருள் அடியேனை
அடித்த டித்துவக் காரமுன் தீற்றிய
அற்புதம் அறியேளே !

(அற்புதப் பத்து- 3)