திருவிளையாடற் புராணம்/31

விக்கிமூலம் இலிருந்து

அவரும் தன் குதிரையைத் தூண்டி நடையை நடத்திக் காட்டச் செய்து சேனை வெள்ளத்தில் மறைந்து சென்றார். அப்பொழுது வேடுவர் தலைவனான சேதி ராயன் புலி வேட்டைக்குச் சென்று உயிர் துறந்தான் என்ற செய்தியை ஒற்றர்கள் வந்து செப்பினர். பகை நீங்கியது: படைகள் கொட்டிலில் அடங்கச் சென்றன; அவை இருந்த சுவடு இன்றி அனைத்தும் மறைந்து விட்டன. இவ்வளவும் சிவன் காட்டியதே என்றும் அவர் திருவிளையாடலே என்றும் அரசன் அறிந்து அகமகிழ்வு கொண்டான்.

மெய்யன்பன் ஒருவனுக்காகத் தெய்வமே வீரனாக வந்து நின்றதும் சேனை வெள்ளத்தைக் காட்டியதும் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் ஆயின. சுந்தரசாமந்தனுக்கும் பாண்டியன் குண பூடணனுக்கும் நெருங்கிய உறவு மேலும் வளர்ந்தது. பொய்யை மெய்யாகக் காட்டிய இறைவன் திருவிளையாடல் அதனை நினைத்து இறைவன் பெருமையைப் பேசி மகிழ்ந்தனர். 

31. உலவாக்கிழி அருளிய படலம்

குணவீர பாண்டியன் தனமெல்லாம் தரும நெறியில் செலவழிக்கப்பட்டது. வளம் குன்றிவிட்டது. எனினும் அவன் இறைவனையே நம்பி விரதங்களைச் செய்து நியம நிட்டைகள் தவறாமல் வழிபட்டு வந்தான். தவவலியால் அந்தணர்களையும் வேத வித்தகரையும் அவன் மதிக்கவில்லை. அதனால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

வேதம் ஓதாமையாலும் வேள்விகள் நடத்தாமையாலும் மழை வளம் குன்றியது.

"மழை வளம் கரப்பின் வான் பேரச்சம் பிழையுயிர் எய்தின் பெரும் பேர் அச்சம்" என்று சிலப்பதிகாரம்கூறும்.

மகளிர் கற்பாலும், வேதியர் நல்லொழுக்கத்தாலும், அரசரின் நெறி முறையாலும் மழை பொழியும் என்று கூறுவர். வேதியர்கள் தம்முடைய கடமைகளைச் செய்யாததால் மழை பிழைத்துவிட்டது. கோயில் நற்பணிகளுக்கும் அரசன் அரண்மனையில் பொருள் வளம் இல்லை; இப்படித் தேய்ந்துவிட்ட நிலையில் வறுமையும் பஞ்சமும் தலைவிரித்து ஆடின; வேறு வழியில்லை.

வழிபடும் தெய்வமே அவனுக்கு வாழ்வு அளிக்க வேண்டி இருந்தது. இறைவன் அவன் கனவில் வந்து "அழியாத பொன் முடிப்பு" ஒன்று தந்து விட்டு மறைந்தார். கனவு மறைந்தாலும் முடிப்பு மறையவில்லை. "எடுக்க எடுக்கக் குறையாத அட்சய பாத்திரம் போன்று இந்த முடிப்பு உன்னிடம் தரப்பட்டுள்ளது. இதை வைத்து வேதியருக்கும் வேத நூல் கல்விக்கும் பயன் படுத்துக" என்று சொல்லி மறைந்தார்.

உலவாக்கிழியாகிய பொன்முடிப்பை எடுத்து தெய்வப்பணிகள் செய்தான்; வேதம் ஓதும் வேதியர்களை வாழ வைத்தான்; மறுபடியும் சோறும் சுகமும் மட்டும் அன்றி அறிவும் ஞானமும் பெருகி நாடு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்தது.

மனிதர் சோறு மட்டும் தின்று வாழ்வதில்லை; தெய்வ வழிபாடு மட்டும் போதாது, கல்வியும் ஞானமும் பெருக வேண்டும். அவற்றை வளர்க்க வேண்டும். அதுவே நாட்டுக்குப் பெருமை தருவதாகும். தமிழருக்கு வள்ளுவர் குறள் அழியாச் செல்வம்; வடமொழியாளருக்கு வேதம் அழியாத செல்வம்; இத்தகைய உயர்ந்த நூல்கள் மாந்தரிடைப் பரவினால் அவர்கள் நன்னெறியோடு வாழ்வர். ஒழுக்கம் குறையாது; மழையும் பெய்யும் என்பதை இறைவன் இத்திருவிளையாடல் கொண்டு உணர்த்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/31&oldid=1111741" இலிருந்து மீள்விக்கப்பட்டது