திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சாலமோனின் ஞானம் (ஞானாகமம்)/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இலிருந்து


"உமது மாபெரும் ஆற்றலை எப்போதுமே நீர் காட்ட இயலும். உமது கைவன்மையை எதிர்த்து நிற்க எவரால் இயலும்? தராசில் மிக நுண்ணிய எடை வேறுபாடு காட்டும் தூசிபோலவும் நிலத்தின் மீது விழும் காலைப்பனியின் ஒரு சிறு துளி போலவும் உலகம் முழுவதும் உம் கண்முன் உள்ளது." - சாலமோனின் ஞானம் 11:22-23.

சாலமோனின் ஞானம் (The Book of Wisdom)[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11[தொகு]


1 தூய இறைவாக்கினர் ஒருவரின் வாயிலாக
இஸ்ரயேலர்களுடைய செயல்களை ஞானம் சிறப்புறச் செய்தது.


2 குடியிருப்பாரற்ற பாழ்வெளி வழியாக அவர்கள் பயணம் செய்தார்கள்;
மனித நடமாட்டமற்ற இடங்களில் தங்கள் கூடாரங்களை அமைத்தார்கள்.


3 தங்கள் பகைவர்களை எதிர்த்து நின்றார்கள்;
போரிட்டு எதிரிகளைத் துரத்தினார்கள்.

தண்ணீரால் அழிவும் விடுதலையும்[தொகு]


4 இஸ்ரயேலர்களுக்குத் தாகம் எடுத்தபோது உம்மை மன்றாடினார்கள்.
உடனே செங்குத்தான பாறைகளிலிருந்து தண்ணீர் வழிந்தோடியது.
கடினமான பாறையிலிருந்து அவர்கள் தாகத்தைத் தணித்துக் கொண்டார்கள்.


5 எவற்றால் பகைவர்கள் தண்டிக்கப்பட்டார்களோ
அவற்றாலேயே சிக்கலான நேரங்களில்
இஸ்ரயேலர் நன்மை அடைந்தார்கள். [1]


6-7 குழந்தைகளைக் கொல்லவேண்டும் என்று
எதிரிகள் பிறப்பித்திருந்த ஆணையைக் கண்டிக்க,
வற்றாத ஊற்றிலிருந்து ஓடும் ஆற்று நீருக்கு மாறாக,
குருதியால் கலங்கி மாசுபட்ட நீரை அவர்களுக்குக் கொடுத்தீர்;
இஸ்ரயேலருக்கோ எதிர்பாரா வகையில்
மிகுதியான தண்ணீர் வழங்கினீர். [2]


8 அவர்களுடைய பகைவரை எவ்வாறு தண்டித்தீர் என்பதை
அவ்வேளையில் அவர்களை வாட்டிய தாகத்தால் காட்டினீர்.


9 இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட பொழுது
இரக்கத்தால் பயிற்றுவிக்கப்பட்டனர் என்றும்,
கடவுள் சினம்கொண்டு தீர்ப்பளிக்கும்பொழுது
இறைப்பற்றில்லாதவர்கள் எவ்வாறு வதைக்கப்படுவார்கள் என்றும்
இதன் வாயிலாக அவர்கள் புரிந்துகொண்டார்கள்.


10 ஏனெனில் ஒரு தந்தை எச்சரிப்பதுபோல,
நீர் இஸ்ரயேலரைச் சோதித்தீர்.
ஆனால் இரக்கமற்ற மன்னர் தீர்ப்பு அளிப்பதுபோல,
நீர் எதிரிகளைக் கூர்ந்து சோதித்துப் பார்த்தீர்.


11 இஸ்ரயேலர்களுக்கு அருகில் இருந்தபோதும்,
தொலையில் இருந்தபோதும்,
எகிப்தியர்கள் பெருந்துயருற்றார்கள்.


12 இருமடங்கு துயரம் அவர்களை ஆட்கொண்டது.
கடந்த கால நிகழ்ச்சிகளை நினைத்து,
ஏங்கிப் பெருமூச்சு விட்டார்கள்.


13 தங்களுக்கு வந்துற்ற தண்டனைகளால்
நீதிமான்கள் நன்மை அடைந்தார்கள் என்று
எகிப்தியர்கள் கேள்வியுற்றபோது,
அது ஆண்டவரின் செயல் என்று உணர்ந்து கொண்டார்கள்.


14 எவரை முன்னொரு காலத்தில் குழந்தையாக இருந்தபோது
அவர்கள் வெளியே எறிந்தார்களோ,
எவரை நகைத்துப் புறக்கணித்தார்களோ,
அவரைக் குறித்தே நிகழ்சிகளின் முடிவில் வியப்புற்றார்கள்.
ஏனெனில், நீதிமான்கள் கண்டிராத தாகத்தை
எதிரிகள் கொண்டிருந்தார்கள். [3]

கடவுளின் அருளிரக்கம்[தொகு]


15 எகிப்தியர்கள் பகுத்தறிவற்ற பாம்புகளையும்
பயனற்ற விலங்குகளையும் வணங்கினார்கள்.
இவ்வாறு நெறி தவறத் தூண்டிய
அவர்களுடைய அறிவற்ற தீய எண்ணங்களுக்காக
அவர்களைப் பழிவாங்கும் பொருட்டு,
பகுத்தறிவில்லா உயிரினங்களின் கூட்டத்தை
அவர்கள்மீது நீர் ஏவி விட்டீர். [4]


16 ஒருவர் எதனால் பாவம் செய்கிறாரோ
அதனாலேயே அழிந்து போவார் என்பதை
இதனால் அவர்களுக்கு அறிவுறுத்தினீர்.


17 ஏனெனில் உருவமற்ற பருப்பொருளைக் கொண்டு
உலகைப் படைத்த எல்லாம் வல்ல உமது கைவன்மைக்கு
கரடிகளின் கூட்டத்தையோ துணிவுள்ள சிங்கங்களையோ
அவர்கள்மீது அனுப்பி வைப்பது முடியாததன்று.


18 புதிதாகப் படைக்கப்பட்ட,
முன்பின் பார்த்திராத,
சீற்றம் நிறைந்த காட்டு விலங்குகளையோ,
வெப்ப மூச்சுவிடும் விலங்குகளையோ,
ஏப்பமாக அடர்ந்த புகைப்படலத்தை வெளியிடும் விலங்குகளையோ,
கண்களில் தீப்பொறி பறக்கும் விலங்குகளையோ,
அவர்கள்மீது அனுப்பி வைப்பது உம் கைவன்மைக்கு இயலாததன்று.


19 அவை மனிதர்களைத் தாக்கி
முற்றிலும் அழித்துவிடக் கூடியவை மட்டுமல்ல,
தங்கள் தோற்றத்தாலேயே அவர்களை அச்சுறுத்திக் கொன்றுவிடக்கூடியவை.


20 இவை இன்றியே மனிதர்கள்
ஒரே மூச்சினால் விழ்த்தப்பட்டிருப்பார்கள்.
நீதியால் துரத்தப்பட்டு,
உமது ஆற்றலின் மூச்சினால் சிதறடிக்கப்பட்டிருப்பார்கள்.
ஆயினும் நீர் அனைத்தையும் அளவோடும் கணக்கோடும்
நிறையோடும் ஏற்பாடு செய்தீர்.


21 உமது மாபெரும் ஆற்றலை எப்போதுமே நீர் காட்ட இயலும்.
உமது கைவன்மையை எதிர்த்து நிற்க எவரால் இயலும்? [5]


22 தராசில் மிக நுண்ணிய எடை வேறுபாடு காட்டும் தூசிபோலவும்
நிலத்தின் மீது விழும் காலைப்பனியின் ஒரு சிறு துளி போலவும்
உலகம் முழுவதும் உம் கண்முன் உள்ளது.


23 நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால்
எல்லார்மீதும் இரங்குகின்றீர்;
மனிதர்கள் தங்களுடைய பாவங்களைவிட்டு
மனந்திரும்பும் பொருட்டே
நீர் அவற்றைப் பார்த்ததும் பாராமல் இருக்கின்றீர். [6]


24 படைப்புகள் அனைத்தின்மீதும் நீர் அன்புகூர்கிறீர்.
நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை.
ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்!


25 உமது திருவுளமின்றி எதுதான் நீடித்திருக்க முடியும்?
அல்லது, உம்மால் உண்டாக்கப்படாதிருந்தால்
எதுதான் காப்பாற்றப்படக்கூடும்?


26 ஆண்டவரே, உயிர்கள்மிது அன்புகூர்கின்றவரே,
நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்;
ஏனெனில் அவை யாவும் உம்முடையன.


குறிப்புகள்

[1] 11:1-5 = விப 15:22-27:16.
[2] 11:6-7 = விப 1:9-19; 7:19-20.
[3] 11:8-14 = எண் 20:7-13.
[4] 11:15 = விப 8:1-24; 10:12-15.
[5] 11:21 = 2 குறி 20:6.
[6] 11:23 = சீஞா 18:13; 1 பேது 3:9.


அதிகாரம் 12[தொகு]


1 உம்முடைய அழியா ஆவி எல்லாவற்றிலும் உள்ளது.


2 ஆகையால் தவறு செய்பவர்களைச்
சிறிது சிறிதாய்த் திருத்துகின்றீர்;
அவர்கள் எவற்றால் பாவம் செய்கிறார்களோ
அவற்றை நினைவுபடுத்தி அவர்களை எச்சரிக்கின்றீர்;
ஆண்டவரே, அவர்கள் தீமையிலிருந்து விடுபடவும்
உம்மேல் நம்பிக்கை கொள்ளவுமே இவ்வாறு செய்கின்றீர்.


3 உமது திருநாட்டில் பண்டுதொட்டே வாழ்ந்து வந்தோரின்


4 அருவருப்புக்குரிய நடத்தை, மந்திரவாதச் செயல்கள்,
நெறிகெட்ட வழிபாட்டுமுறைகள் ஆகியவற்றுக்காக அவர்களை வெறுத்தீர்.


5 இரக்கமின்றிக் குழந்தைகளைக் கொலைசெய்தோர்,
மனித சதையையும் குருதியையும் பலிவிருந்தாக உண்டோர்,
வேற்றின வழிபாட்டுச் சடங்குகளில் புகுமுகம் செய்யப்பட்டோர்,


6 தற்காப்பற்ற தங்கள் பிள்ளைகளைக் கொலைசெய்த பெற்றோர்
ஆகியோரை எங்கள் மூதாதையரின் கைகளால் அழிக்கத் திருவுளங்கொண்டீர்.


7 நாடுகளிலெல்லாம் நீர் மிகுதியாக மதிக்கின்ற நாடு
கடவுளின் மக்கள் குடியேறுவதற்குத் தகுதியாகும்படி இவ்வாறு செய்தீர். [1]


8 இருப்பினும், அவர்களும் மனிதர்களே என்பதால்
அவர்களை விட்டு வைத்தீர்;
உம் படைகளின் முன்னோடிகளாக
மலைக்குளவிகளை அனுப்பி வைத்தீர்;
இவ்வாறு அவர்களைச் சிறிது சிறிதாக அழித்தீர். [2]


9 ஏனெனில் இறைப்பற்றில்லாதவர்களைப்
போர்க்களத்தில் நீதிமான்களின் கையில் ஒப்படைப்பதும்,
கொடிய காட்டு விலங்குகளாலோ,
ஒரு கடுஞ்சொல்லாலோ
ஒரே நொடியில் அழிப்பதும் உம்மால் இயலாத செயலன்று.


10 அவர்கள் தீய தலைமுறையினர் என்பதும்,
தீமை அவர்களது இயல்போடு இணைந்துவிட்டது என்பதும்,
அவர்களது சிந்தனை முறை ஒருபோதும் மாறாது என்பதும்
உமக்குத் தெரியாதனவல்ல.
இருப்பினும் நீர் அவர்களைச் சிறிதுசிறிதாய்த் தண்டித்து,
மனந்திரும்ப அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தீர்.


11 அவர்கள் ஆதிமுதலே சாபத்துக்கு உட்பட்ட வழிமரபினர்.
அவர்களுடைய பாவங்களை நீர் தண்டியாமல் விட்டீர்.
எவருக்கும் அஞ்சி நீர் அவ்வாறு செயல்படவில்லை.


12 "நீர் என்ன செய்தீர்?" என்று கேட்பவர் யார்?
உமது நீதித்தீர்ப்பை எதிர்ப்பவர் யார்?
நீர் உண்டாக்கிய மக்களினத்தாரின் அழிவுபற்றி
உம்மீது குற்றம் சுமத்துபவர் யார்?
நீதியற்றோரை நீர் பழிவாங்கும்போது,
அவர்கள் சார்பாக உம் திருமுன் பரிந்துரைப்பவர் யார்?


13 ஏனெனில் உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை.
எல்லாவற்றின்மீதும் நீர் கருத்தாய் இருக்கிறீர்.
முறைகேடாக நீர் தீர்ப்பு வழங்குவதில்லை என்பதை
யாரிடம் காட்டவேண்டும்?


14 நீர் தண்டித்தவர்கள் சார்பாக உம்மை எதிர்த்து நிற்க
எந்த மன்னராலும் தலைவராலும் முடியாது.


15 நீர் நேர்மையுள்ளவர்;
அனைத்தையம் நீதியோடு ஆண்டுவருகின்றீர்.
தண்டிக்கத்தகாதவர்களைத் தண்டிப்பது
உமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என நீர் அறிவீர்.


16 உமது ஆற்றலே நீதியின் ஊற்று.
அனைத்தின்மீதும் உமக்குள்ள ஆட்சியுரிமை
அனைத்தையம் வாழும்படி விட்டு வைக்கிறது.


17 மனிதர்கள் உமது வலிமையின் நிறைவை ஐயுறும்போது
நீர் உம்முடைய ஆற்றலைக் காட்டுகிறீர்;
அதை அறிந்திருந்தும் செருக்குற்றிருப்போரை அடக்குகிறீர்.


18 நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால்
கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்;
மிகுந்த பொறுமையோடு எங்களை ஆள்கிறீர்.
ஏனெனில் நீர் விரும்பும்போதெல்லாம் செயல்புரிய
உமக்கு வலிமை உண்டு.


19 நீதிமான்கள் மனிதநேயம் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பதை
இச்செயல்கள் வாயிலாக உம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்;
உம் மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்;
ஏனெனில் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.


20 உம் ஊழியர்களின் பகைவர்கள் சாவுக்குரியவர்களாய் இருந்தும்,
மிகுந்த கனிவோடும் இரக்கத்தோடும் அவர்களைத் தண்டித்தீர்;
அவர்கள் தங்கள் தீச்செயல்களை விட்டுவிடும் பொருட்டு,
காலமும் வாய்ப்பும் அவர்களுக்குக் கொடுத்தீர்.


21 உம் மக்களுக்கு நீர் எவ்வளவோ கண்டிப்போடு தீர்ப்பு வழங்கினீர்!
அவர்களுடைய மூதாதையர்களுக்கு
நல்ல வாக்குறுதிகள் நிறைந்த ஆணைகளையும்
உடன்படிக்கைகளையும் அளித்தீரன்றோ!

கனிவுக்குப்பின் கண்டிப்பு[தொகு]


22 நீர் எங்களை நல்வழிப்படுத்தக் கண்டிக்கிறீர்;
எங்கள் பகைவர்களையோ பத்தாயிரம் மடங்கு மிகுதியாகத் தண்டிக்கிறீர்.
நாங்கள் தீர்ப்பு வழங்கும்போது உமது நன்மையை நினைவுகூரவும்,
நாங்களே தீர்ப்புக் உள்ளாகும்போது
உமது இரக்கத்தை எதிர் பார்க்கவும் இவ்வாறு செய்கிறீர்.


23 அறிவின்மையிலும் நீதியின்மையிலும்
வாழ்க்கை நடத்தியவர்களை

அவர்களுடைய அருவருக்கத்தக்க செயல்களாலேயே தண்டீத்தீர்.


24 அவர்கள் தவறான வழியில் நெடுந்தொலை சென்றுவிட்டார்கள்;
விலங்குகளுக்குள்ளேயே மிகவும் அருவருக்கத்தக்கவற்றைத்
தெய்வங்களாகக் கொண்டார்கள்;
அறிவில்லாக் குழந்தைகள்போல் ஏமாந்து போனார்கள்.


25 எனவே அறிவுத்தெளிவு பெறாத குழந்தைகளை
ஏளனம் செய்வதுபோல்
அவர்களை ஏளனம் செய்ய உமது தீர்ப்பை அனுப்பினீர்.


26 இத்தகைய சிறு கண்டிப்புகளினின்று வரும்
எச்சரிக்கைகளுக்குச் செவிசாய்க்காதவர்கள்
கடவுளின் தக்க தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக நேரிடும்.


27 அவர்கள் எந்தப் படைப்புகளைத் தெய்வங்களாகக் கருதினார்களோ
அவற்றாலேயே தண்டிக்கப்பட்டார்கள்;
ஆகையால் துன்புற்று எரிச்சலுற்றார்கள்;
தாங்கள் ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்தவரையே
இப்பொழுது உண்மையான கடவுள் என்று அறிந்து
ஏற்றுக்கொண்டார்கள்.
எனவே மிகக் கடுந்தண்டனை அவர்கள்மேல் வந்து விழுந்தது.


குறிப்புகள்

[1] 12:3-7 = இச 12:31; 18:9-13.
[2] 12:8 = விப 23:28.


(தொடர்ச்சி): சாலமோனின் ஞானம்: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை