திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 47 முதல் 48 வரை

விக்கிமூலம் இலிருந்து
"பெருமை பாராட்டிய கோலியாத்தை நோக்கி இளைஞர் தாவீது
தம் கைகளை ஓங்கிக் கவண்கல்லை வீசியபோது
ஓர் அரக்கனைக் கொல்லவில்லையா? " - சீராக்கின் ஞானம் 47:4

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]

அதிகாரங்கள் 47 முதல் 48 வரை

அதிகாரம் 47[தொகு]

நாத்தான், தாவீது[தொகு]


1 அவருக்குப் பின் நாத்தான் தோன்றினார்;
தாவீதின் காலத்தில் இறைவாக்கு உரைத்தார். [1]


2 நல்லுறவுப் பலியிலிருந்து கொழுப்பு பிரிக்கப்படுவதுபோல்,
இஸ்ரயேல் மக்களிடமிருந்து தாவீது தெரிந்துகொள்ளப்பெற்றார்.


3 வெள்ளாடுகளுடன் விளையாடுவதுபோலச்
சிங்கங்களுடன் விளையாடினார்;
செம்மறியாடுகளுடன் விளையாடுவதுபோலக்
கரடிகளுடன் விளையாடினார்.


4 பெருமை பாராட்டிய கோலியாத்தை நோக்கி இளைஞர் தாவீது
தம் கைகளை ஓங்கிக் கவண்கல்லை வீசியபோது
ஓர் அரக்கனைக் கொல்லவில்லையா?
அதனால் மக்களது இழிநிலையை அகற்றவில்லையா?


5 வலிமைமிக்க மனிதனைப் போரில் கொன்று
தம் மக்களின் வலிமையை உயர்த்த
உன்னத இறைவனாகிய ஆண்டவரை அவர் துணைக்கு அழைத்தார்;
ஆண்டவரும் அவருடைய வலக்கைக்கு வலிமையூட்டினார்.


6 இவ்வாறு அவர் முறியடித்த பத்தாயிரம் பேருக்காக
மக்கள் அவரை மாட்சிமைப்படுத்தினர்;
ஆண்டவருடைய ஆசிகளுக்காக அவரைப் புகழ்ந்தனர்;
மாட்சியின் மணிமுடியை அவருக்குச் சூட்டினர்.


7 எப்புறமும் அவர் பகைவர்களைத் துடைத்தழித்தார்;
எதிரிகளான பெலிஸ்தியரை அடக்கி ஒழித்தார்;
அவர்களுடைய வலிமையை அறவே நசுக்கினார்.


8 தம் எல்லாச் செயல்களிலும் மாட்சியைச் சாற்றும் சொற்களால்
உன்னத இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்;
தம் முழு உள்ளத்தோடும் புகழ்ப்பா இசைத்தார்;
தம்மைப் படைத்தவர்மீது அன்பு செலுத்தினார்.


9 தங்களுடைய குரலால் இன்னிசை எழுப்பப் பாடகர்களைப்
பலிபீடத்திற்குமுன் நிற்கச் செய்தார்.


10 திருவிழாக்களைச் சீரோடும் சிறப்போடும் கொண்டாடச் செய்தார்;
ஆண்டவருடைய திருப்பெயரை அவர்கள் புகழ்ந்து பாடுவதால்
திருவிடம் வைகறையிலிருந்து எதிரொலிக்கும்படி
ஆண்டு முழுவதும் காலங்களைக் குறித்தார்.


11 ஆண்டவர் அவருடைய பாவங்களை நீக்கினார்;
அவருடைய வலிமையை என்றென்றைக்கும் உயர்த்தினார்;
மன்னர்களின் உடன்படிக்கையையும்
இஸ்ரயேலில் மாட்சியின் அரியணையையும் அவருக்குக் கொடுத்தார். [2]

சாலமோன்[தொகு]


12 தாவீதுக்குப்பின் அறிவாற்றல் கொண்ட அவருடைய மகன்
சாலமோன் தோன்றினார்;
தாவீதின் பொருட்டு அவர் பாதுகாப்புடன் வாழ்ந்தார்.


13 சாலமோன் அமைதியான காலத்தில் அரசாண்டார்;
கடவுள் பெயருக்கு ஓர் இல்லம் எழுப்பவும்
ஒரு திரு இடத்தை என்றென்றைக்கும் ஏற்பாடு செய்யவும்
எல்லைகளெங்கும் அவருக்கு அமைதி அளித்தார்.


14 நீர் உம் இளமையில் எவ்வளவோ ஞானியாய் இருந்தீர்!
ஆற்றைப்போல் அறிவுக்கூர்மையால் நிரம்பி வழிந்தீர்!


15 உமது செல்வாக்கு மண்ணுலகெங்கும் பரவியது.
உவமைகளாலும் விடுகதைகளாலும் அதை நிரப்பினீர்.


16 உமது பெயர் தொலைவில் இருந்த தீவுகளையும் எட்டியது;
உம் அமைதியின் பொருட்டு நீர் அன்பு பாராட்டப்பட்டீர்.


17 உம் பாடல்கள், நீதிமொழிகள், உவமைகள், விளக்கங்கள்
ஆகியவற்றைக் கேட்டு நாடுகள் வியப்படைந்தன.


18 இஸ்ரயேலின் கடவுள் என அழைக்கப்பெறும் கடவுளாம் ஆண்டவர் பெயரால்
பொன்னை வெள்ளீயத்தைப் போலவும் வெள்ளியை ஈயத்தைப் போலவும் குவித்தீர்.


19 ஆனால் பெண்களோடு புணர்ச்சியால் ஈடுபட்டீர்;
உம் உடல்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தீர்.


20 உமது மாட்சிக்கு மாசு வருவித்தீர்;
உமது வழிமரபைக் கறைப்படுத்தினீர்;
உம் பிள்ளைகள்மீது சினத்தை வருவித்தீர்;
உம் அறிவின்மைக்காக அவர்கள் வருந்தினார்கள்.


21 இதனால் அரசு இரண்டாக உடைந்தது;
அடங்காத அரசு ஒன்று எப்ராயிமிலிருந்து தோன்றியது.


22 ஆண்டவர் இரக்கங் காட்ட மறுக்கமாட்டார்;
சொன்ன சொல் தவறமாட்டார்.
தாம் தெரிந்து கொண்டோரின் வழிமரபினரைத் துடைத்தழிக்கமாட்டார்;
தம்மிடம் அன்பு பாராட்டுவோரின் வழித் தோன்றல்களை அழித்தொழிக்க மாட்டார்;
எஞ்சியோரை யாக்கோபுக்குக் கொடுத்தார்;
தாவீதின் குடும்பத்திலும் ஒரு வேரை விட்டுவைத்தார். [3]

ரெகபெயாம் எரோபவாம்[தொகு]


23 சாலமோன் தம் முன்னோரோடு துயில்கொண்டார்;
மக்களுக்குள்ளேயே அறிவிலியும் மதி குறைந்தவனுமான ரெகபெயாமைத்
தமக்குப்பின் தம் வழிமரபில் விட்டுச் சென்றார்.
அந்த ரெகபெயாம் தன் அறிவுரையால் மக்கள் கிளர்ச்சி செய்யத் தூண்டிவிட்டான். [4]


24 அப்போது நெபாத்து மகன் எரொபவாம் தோன்றினான்;
இஸ்ரயேலைப் பாவம் செய்யத் தூண்டினான்;
எபிராயிமுக்குப் பாவ வழியைக் காட்டினான்.
அவர்களுடைய பாவங்கள் மேன்மேலும் பெருகின.
அவர்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.


25 ஆண்டவர் அவர்களைப் பழிவாங்கும்வரை
அவர்கள் எல்லா வகைத் தீமைகளையும் தேடி அலைந்தார்கள். [5]


குறிப்புகள்

[1] 47:1 = 2 சாமு 7:1-17; 12:1-15.
[2] 47:2-11 = 1 சாமு 16:1-18:9; 2 சாமு 5:1-24:25.
[3] 47:12-22 = 1 அர 1:5-43; 2 சாமு 7:15-16.
[4] 47:23 = 1 அர 11:43-12:19; 14:21-31.
[5] 47:24-25 = 1 அர 11:26-40; 12:20-14:20.


அதிகாரம் 48[தொகு]

எலியா[தொகு]


1 இறைவாக்கினர் எலியா நெருப்புபோல் எழுந்தார்;
தீவட்டிபோல் அவருடைய சொல் பற்றியெரிந்தது.


2 மக்கள் மீது பஞ்சம் வரச் செய்தார்;
தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார்.


3 ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்;
மும்முறை நெருப்பு விழச் செய்தார்.


4 எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்!
உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்?


5 இறந்தவரை உன்னத இறைவனின் சொல்லால்
இறப்பினின்றும் பாதாளத்தினின்றும் எழச்செய்தீர்.


6 மன்னர்களை அழிவுக்கு உட்படுத்தினீர்;
மேன்மைமிக்கவர்களைப் படுத்த படுக்கையாக்கி வீழ்த்தினீர்.


7 கடுஞ் சொல்லைச் சீனாய் மலைமீதும்
பழி வாங்கும் தீர்ப்பை ஓரேபு மலைமீதும் கேட்டீர்.


8 பழிதீர்க்கும்படி மன்னர்களைத் திருப்பொழிவு செய்தீர்;
உம் வழித்தோன்றல்களாக இறைவாக்கினர்களை ஏற்படுத்தினீர்.


9 தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில்
நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர்.


10 ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும்
தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும்
யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும்
குறித்த காலங்களில் நீர் கடிந்து கொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது.


11 உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர்.
நாமும் வாழ்வது உறுதி. [1]

எலிசா[தொகு]


12 எலியா சூறாவளி சூழ மறைந்தார்;
எலிசா அவருடைய ஆவியால் நிறைவுபெற்றார்;
எலிசா தம் வாழ்நாளில் எந்தத் தலைவருக்கும் அஞ்சவில்லை;
அவரை அடிபணிய வைக்க எவராலும் முடியவில்லை.


13 அவரால் முடியாதது ஒன்றுமில்லை;
இறந்த பிறகும் அவரது உடல் இறைவாக்கு உரைத்தது.


14 அவர் தம் வாழ்நாளில் அரியன செய்தார்;
இறப்பில் அவருடைய செயல்கள் வியப்புக்குரியனவாய் இருந்தன.


15 இவை யாவும் கண்டும் மக்கள் மனம் மாறவில்லை.
அவர்கள் கைதிகளாக நாடு கடத்தப்பட்டு,
மண்ணுலகெங்கும் சிதறடிக்கப்பட்டவரையிலும்
தங்கள் பாவங்களை விட்டு விலகவில்லை. [2]


16 மக்களுள் சிலரும் தாவீதின் வீட்டைச் சேர்ந்த தலைவர்களும் காப்பாற்றப்பட்டனர்;
அவர்களுள் சிலர் கடவுளுக்கு விருப்பமானதைச் செய்தனர்;
வேறு சிலர் மேன்மேலும் பாவம் செய்தனர்.

எசேக்கியா[தொகு]


17 எசேக்கியா தம் நகரை அரண் செய்து வலிமைப்படுத்தினார்;
அதன் நடுவே தண்ணீர் கொண்டுவந்தார்;
இரும்புக் கருவிகளைக் கொண்டு பாறையில் சுரங்க வழி அமைத்தார்;
தண்ணீர்த் தொட்டிகளை அமைத்தார். [3]


18 அவருடைய ஆட்சிக் காலத்தில் சனகெரிபு படையெடுத்து வந்தான்;
இரபிசாகேயை அனுப்பிவிட்டுப் பிரிந்து சென்றான்.
சீயோனை ஒரு கை பார்த்துவிடுவதாக அவன் சவால்விட்டான்;
இறுமாப்பினால் பெருமை பாராட்டலானான். [4]


19 இஸ்ரயேலருடைய உள்ளங்களும் கைகளும் நடுங்கின.
பேறுகாலப் பெண்களைப்போல் அவர்கள் துன்பம் அடைந்தார்கள்.


20 அவர்கள் இரக்கமுள்ள ஆண்டவரை நோக்கித் தங்கள் கைகளை விரித்து
அவரைத் துணைக்கு அழைத்தார்கள்.
தூய இறைவன் விண்ணகத்திலிருந்து அவர்களுக்கு உடனே செவிசாய்த்தார்;
எசாயா வழியாய் அவர்களை விடுவித்தார்.


21 அசீரியர்களுடைய பாசறையைத் தாக்கினார்;
வானதூதர் அவர்களைத் துடைத்தழித்தார். [5]

எசாயா[தொகு]


22 ஆண்டவருக்கு விருப்பமானதை எசேக்கியா செய்தார்;
பெரியவரும் காட்சிகளைக் கண்டவருமான
நம்பிக்கைக்குரிய இறைவாக்கினர் எசாயா கட்டளையிட்டபடி
எசேக்கியா தம் மூதாதையாகிய தாவீதின் நெறிகளில் உறுதியாக நின்றார். [6]


23 எசாயா காலத்தில் கதிரவன் பின் நோக்கிச் சென்றான்.
அவர் மன்னருடைய வாழ்வை நீடிக்கச் செய்தார். [7]


24 ஆவியின் ஏவதலால் இறுதியில் நிகழவிருப்பதைக் கண்டார்;
சீயோனில் புலம்பியழுதவர்களைத் தேற்றினார்.


25 இறுதிக் காலம் வரை நிகழவிருப்பனவற்றையும் மறைந்திருப்பனவற்றையும்
அவை நடப்பதற்குமுன்னரே வெளிப்படுத்தினார்.


குறிப்புகள்

[1] 48:1-11 = 1 அர 17:1- 2 அர 2:1-11; மலா 4:5-6.
[2] 48:15 = 2 அர 18:11-12.
[3] 48:17 = 2 அர 20:20; 2 குறி 32:5.
[4] 48:18 = 2 அர 18:13-17.
[5] 48:20-21 = 2 அர 19:15-37.
[6] 48:22 = 2 அர 18:3.
[7] 48:23 = 2 அர 20:10-11; எசா 38:8.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 49 முதல் 51 வரை