திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

விக்கிமூலம் இலிருந்து
யூதா அரசர்கள் உசியா, யோத்தாம், ஆகாசு. ஓவியர்: மைக்கலாஞ்சலோ. காப்பிடம்: சிஸ்டைன் சிறுகோவில், வத்திக்கான்.

2 அரசர்கள் (The Second Book of Kings)[தொகு]

அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

அதிகாரம் 15[தொகு]

யூதா அரசன் அசரியா[தொகு]

(2 குறி 26:1-23)


1 இஸ்ரயேலின் அரசன் எரொபவாம் ஆட்சியேற்ற இருபத்தேழாம் ஆண்டில், யூதா அரசனும் அமட்சியாவின் மகனுமான அசரியா அரசனானான்.
2 அவன் ஆட்சியேற்ற பொழுது அவனக்கு வயது பதினாறு. அவன் எருசலேமில் ஐம்பத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். எருசலேம் நகரைச் சார்ந்த எக்கொலியா என்பவளே அவன் தாய்.
3 அவன் தன் தந்தை அமட்சியா செய்ததுபோலவே, எல்லாவற்றிலும் ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்தான்.
4 ஆயினும், அவன் தொழுகை மேடுகளை அழிக்கவில்லை. மக்கள் இன்னும் அம்மேடுகளில் பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர்.
5 எனவே, ஆண்டவர் அவ்வரசனைத் தண்டித்து அவன் இறக்குமட்டும் அவனைத் தொழுநோயாளன் ஆக்கினார். அவனும் ஒரு ஒதுக்குப் புறமான வீட்டில் வாழ்ந்து வந்தான். எனவே அரசனின் மகன் யோத்தாம் அரண்மனைப் பொறுப்பேற்று நாட்டு மக்களை ஆண்டு வந்தான்.


6 அசரியாவின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும் 'யூதாவின் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
7 அசரியா தன் மூதாதையரோடு துயில்கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் யோத்தாம் அரசன் ஆனான்.

இஸ்ரயேல் அரசன் செக்கரியா[தொகு]


8 யூதா அரசன் அசரியா ஆட்சி ஏற்ற முப்பத்தெட்டாம் ஆண்டில் எரொபவாமின் மகன் செக்கரியா சமாரியாவிலிருந்துகொண்டு இஸ்ரயேலை ஆறு மாதம் ஆண்டான்.
9 அவனும் தன் மூதாதையர் செய்தது போல் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியை விட்டு அவன் விலகவில்லை.
10 யாபேசின் மகன் சல்லூம், அவனுக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்து அவனை இப்லயாமில் வெட்டிக் கொன்றுவிட்டு அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.
11 செக்கரியாவின் பிற செயல்கள் 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
12 "உன் மைந்தர் நான்கு தலைமுறைகளுக்கு இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருப்பர்" என்று ஏகூவுக்கு ஆண்டவர் கூறிய வாக்கு இவ்வாறு நிறைவேறிற்று. [1]

இஸ்ரயேல் அரசன் சல்லூம்[தொகு]


13 யூதா அரசன் அசரியா ஆட்சியேற்ற முப்பத்தொன்பதாம் ஆண்டில், யாபேசின் மகன் சல்லூம் அரசனானான்; சமாரியாவில் அவன் ஒரு மாதமே ஆட்சி செய்தான்.
14 காதி என்பவனின் மகனான மெனகேம், திர்சாவிலிருந்து புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்து, சல்லூமை வெட்டிக் கொன்றுவிட்டு, அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.
15 சல்லூமின் பிற செயல்களும் அவன் செய்த சதியும் 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
16 பிறகு மெனகேம் திப்சாவையும் திர்சா முதல் அதன் எல்லைகள் அனைத்தையும் அதில் இருந்த அனைவரையும் அழித்தான். அவர்கள் தங்கள் நகர் வாயில்களைத் திறக்கவில்லையாதலின், அவன் அவர்களை வெட்டி வீழ்த்தியதோடு, கருவுற்றிருந்த எல்லாப் பெண்களையும் வயிற்றைக் கிழித்துக் கொன்றான்.

இஸ்ரயேல் அரசன் மெனகேம்[தொகு]


17 யூதாவின் அரசன் அசரியா ஆட்சியேற்ற முப்பத்தொன்பதாம் ஆண்டில், காதியின் மகன் மெனகேம் இஸ்ரயேலின் அரசனாகி, சமாரியாவில் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
18 அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். மேலும் அவன், தன் வாழ்நாள் முழுவதும், இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியைவிட்டு விலகவில்லை.
19 அசீரியா மன்னனான பூல் [2] நாட்டின்மீது படையெடுத்து வந்தான். அப்பொழுது மெனகேம், பூலுக்கு, அவன் ஆற்றலினால் தன் அரசை உறுதியாக்கிக் கொள்ளும் பொருட்டு, நாற்பதாயிரம் வெள்ளி கொடுத்தான்.
20 மெனகேம் இஸ்ரயேலில் இருந்த செல்வர்களிடமிருந்து இப்பணத்தை, ஆள் ஒன்றுக்கு ஐம்பது வெள்ளிக் காசுகள் வீதம், அசீரியா மன்னனுக்குக் கொடுக்கும்படியாக வசூலித்தான். அசீரியா மன்னனும் அங்கே தங்காது நாட்டை விட்டு வெளியேறினான்.
21 மெனகேமின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
22 மெனகேம் தன் மூதாதையரோடு துயில் கொண்டான். அவனுக்குப்பின் அவன் மகன் பெக்ககியா அரசன் ஆனான்.

இஸ்ரயேல் அரசன் பெக்ககியா[தொகு]


23 யூதாவின் அரசன் அசரியா ஆட்சியேற்ற ஐம்பதாம் ஆண்டில், மெனகேமின் மகன் பெக்ககியா இஸ்ரயேலின் அரசனாகிச் சமாரியாவில் ஈராண்டுகள் ஆட்சி செய்தான்.
24 அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியைவிட்டு அவன் விலகவில்லை.
25 இரமலியாவின் மகனும் படைத் தலைவனுமான பெக்கா அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து தன்னோடு இருந்த ஐம்பது கிலயாதியரோடு சமாரியாவிலுள்ள அரண்மனைக் கோட்டைக்குள் புகுந்து அரசனையும், அர்கோபு, அரியே என்பவர்களையும் கொன்று அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.
26 பெக்ககியாவின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?

இஸ்ரயேல் அரசன் பெக்கா[தொகு]


27 யூதாவின் அரசன் அசரியா ஆட்சியேற்ற ஐம்பத்திரண்டாம் ஆண்டில், இரமலியாவின் மகன் பெக்கா இஸ்ரயேலின் அரசனாகி சமாரியாவில் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
28 அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவவழியை விட்டு அவன் விலகவில்லை.
29 இஸ்ரயேல் அரசன் பெக்காவின் ஆட்சிக் காலத்தில், அசீரியா மன்னன் திக்லத்-பிலேசர் படையெடுத்து வந்து, ஈயோன் ஆபல்பெத்மாக்கா, யானோவாக்கு, கெதேசு, ஆட்சோர் ஆகிய நகர்களையும் கிலயாது, கலிலேயா, நப்தலி ஆகிய நிலப்பகுதிகளையும் கைப்பற்றினான்; மேலும் மக்களை அசீரியாவுக்கு நாடு கடத்தினான்.


30 ஏலாவின் மகன் ஓசேயா, இரமலியாவின் மகன் பெக்காவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து, அவனை வெட்டிக் கொன்றுவிட்டு, அசரியாவின் மகன் யோத்தாம் ஆட்சியேற்ற இருபதாம் ஆண்டில், பெக்காவுக்குப் பின் அரசன் ஆனான்.
31 பெக்காவின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும் 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?

யூதா அரசன் யோத்தாம்[தொகு]

(2 குறி 27:1-9)


32 இஸ்ரயேலின் அரசனும் இரமலியாவின் மகனுமான பெக்கா ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசனும் அசரியாவின் மகனுமான யோத்தாம் அரசன் ஆனான்.
33 அவன் அரசனான போது, அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். சாதோக்கின் மகளான எருசா என்பவளே அவனுடைய தாய்.
34 அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து, அவன் தந்தை அசரியா செய்தது போலவே, அனைத்தையும் செய்தான்.
35 ஆயினும் அவன் தொழுகை மேடுகளை அழிக்கவில்லை. இன்னும் மக்கள் அம்மேடுகளில் பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர். கோவிலின் உயர்வாயிலைக் கட்டியவன் இவனே.


36 யோத்தாமின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும், 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
37 அந்நாள்களில் ஆண்டவர் சிரியாவின் மன்னன் ரெட்சீனையும் இரமலியாவின் மகன் பெக்காவையும் யூதாவுக்கு எதிராய் அனுப்பத் தொடங்கினார்.
38 யோத்தாம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு, தன் தந்தையாகிய தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் ஆகாசு அரசனானான்.

குறிப்புகள்

[1] 15:12 = 2 அர 10:30.
[2] 15:19 'திக்லத்பிலேசர்' என்பது மறுபெயர்.

அதிகாரம் 16[தொகு]

யூதா அரசன் ஆகாசு[தொகு]

(2 குறி 28:1-27)

1 இரமலியாவின் மகன் பெக்கா ஆட்சியேற்ற பதினேழாம் ஆண்டில் யூதா அரசன் யோத்தாமின் மகன் ஆகாசு அரசனானான்.
2 ஆகாசு அரசனானபோது அவனுக்கு வயது இருபது. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் தன் மூதாதையான தாவீதைப் போல் தன் கடவுளான ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை.
3 இஸ்ரயேல் அரசர்களின் வழியிலேயே தானும் நடந்து, இஸ்ரயேலரின் பார்வையில் ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் அருவருப்பான வழக்கத்தின்படியே தன் மகனைத் தீயிலிட்டுப் பலியாக்கினான். [1]
4 மேலும் தொழுகை மேடுகளிலும், குன்றுகளிலும், செழித்த மரங்களின் அடியிலும் பலியிட்டுத் தூப வழிபாடு நடத்தி வந்தான்.


5 அப்பொழுது சிரியாவின் மன்னன் ரேட்சீனும் இஸ்ரயேலின் அரசனும் இரமலியாவின் மகனுமான பெக்காவும் எருசலேமுக்கு எதிராய்ப் படையெடுத்து வந்து, ஆகாசுக்கு எதிராக முற்றுகையிட்டனர். ஆனால் அவர்களால் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை. [2]
6 அவ்வேளையில், ஏதோம் மன்னன் [3] தன் நாட்டிற்காக [4] ஏலாத்தைக் கைப்பற்றி அங்கிருந்து யூதா மக்களை விரட்டியடித்தான். ஏதோமியர் ஏலாத்திற்குள் நுழைந்து இன்றுவரை அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
7 எனவே, ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரிடம் தூதனுப்பி "நான் உம் பணியாளன்; உம் மகன். நீர் புறப்பட்டு வந்து என்னை முற்றுகையிட்டிருக்கும் சிரியா மன்னன் கையினின்றும் இஸ்ரயேல் அரசன் கையினின்றும் விடுவிப்பீர்" என்று சொன்னான்.
8 மேலும் ஆகாசு ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனைக் கருவூலங்களிலும் இருந்த பொன்னையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய மன்னனுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தான்.
9 அசீரிய மன்னன் அதற்கு இணங்கி, தமஸ்குவைக் கைப்பற்றி அதன் குடிமக்களைக் கீருக்கு நாடு கடத்தினான்.


10 எனவே, அரசன் ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரைச் சந்திக்கத் தமஸ்குக்குச் சென்றான். அப்பொழுது, அவன் அந்நகரிலுள்ள பலிபீடத்தைக் கண்டு அதன் வரைபடத்தையும், அதன் கட்டமைப்பின் எல்லாக் குறிப்புகளையும் குரு உரியாவுக்கு அனுப்பி வைத்தான்.
11 அரசன் ஆகாசு தமஸ்குவிலிருந்து அனுப்பிய பலிபீடக் கட்டமைப்பின் எல்லாக் குறிப்புகளுக்கும் ஏற்ப, குரு உரியா அவன் திரும்பி வருவதற்குள் கட்டி முடித்தார்.
12 அரசன் தமஸ்குவிலிருந்து திரும்பி வந்தான். அவன் பலிபீடத்தைக் கண்டு, நெருங்கிச் சென்றான்.
13 அவன் எரிபலியும் உணவுப் படையலும் அதில் செலுத்தி, நீர்மப் படையலை வார்த்தான்; தனக்கென்று நல்லுறவுப் பலியின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மீது தெளித்தான்.
14 மேலும், அவன் ஆண்டவர் திருமுன் இருந்த வெண்கலப் பலிபீடத்தைக் கோவிலின் முன்புறமிருந்து அகற்றித் தன் பலிபீடத்திற்கும் ஆண்டவரின் இல்லத்திற்கும் இடையே வடபுறத்தில் வைத்தான். [5]
15 பிறகு அரசன் ஆகாசு குரு உரியாவை நோக்கி. "பெரிய பலிபீடத்தின்மேல் காலை எரிபலியையும், மாலை உணவுப்படையலையும், அரசனின் எரிபலியையும், உணவுப் படையலையும், நாட்டு மக்கள் அனைவரின் எரிபலியையும் உணவுப் படையலையும் நீர்மப் படையலையும் செலுத்தி எரிபலிகளின் எல்லா இரத்தத்தையும் மற்றப் பலிகளின் எல்லா இரத்தத்தையும் அதன்மேல் தெளிப்பீர். வெண்கலப் பலிபீடம் திருவுளத்தை நான் அறிவதற்கென்று இருக்கட்டும்" என்றான்.
16 அரசன் ஆகாசு கட்டளையிட்டபடியே, அனைத்தையும் குரு உரியா செய்தார்.
17 அப்பொழுது, அரசன் ஆகாசு சக்கரத் தாங்கிகளைப் பிரித்துக் கொப்பரைகளை அவற்றினின்று அகற்றினான். வெண்கல நீர்த் தொட்டியைக் காளைகளினின்று அகற்றி, அதனைக் கல்தளத்தின்மீது வைத்தான். [6]
18 மேலும் அசீரிய மன்னனின் விருப்பத்திற்கிணங்க, ஆண்டவரின் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த அரியணை மேடையையும் வெளியிலிருந்த அரச நுழைவாயிலையும் அவன் அகற்றினான்.


19 ஆகாசு செய்த பிற செயல்கள், 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
20 ஆகாசு தன் மூதாதையரோடு துயில்கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் எசேக்கியா அரசர் ஆனார். [7]

குறிப்புகள்

[1]16:3 = இச 12:31.
[2]16:5 = எசா 7:1.
[3] 16:6 'சிரியாவின் மன்னன் ரேட்சீன்' என்பது எபிரேய பாடம்.
[4] 16:6 'சிரியாவுக்காக' என்பது எபிரேய பாடம்.
[5] 16:14 = விப 27:1-2; 2 குறி 4:1.
[6] 16:17 = 1 அர 7:23-29; 2 குறி 4:2-6.
[7] 16:20 = எசா 14:28.


(தொடர்ச்சி): அரசர்கள் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 17 முதல் 18 வரை