திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/ஆமோஸ்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து

[[|thumb|"என் முன்னிலையில் நீங்கள் இரைச்சலிட்டுப் பாடும் பாடல்களை நிறுத்துங்கள், உங்கள் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன். மாறாக, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!" - ஆமோஸ் 5:23-24]]

ஆமோஸ் (The Book of Amos)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

மனம் மாறிட அழைப்பு[தொகு]


1 இஸ்ரயேல் வீட்டாரே,
உங்களைப் பற்றி நான் புலம்பிக் கூறும் இந்த வாக்கைக் கேளுங்கள்:


2 "இஸ்ரயேல் என்னும் கன்னிப் பெண் விழுந்துகிடக்கிறாள்,
இனி எழவேமாட்டாள்;
தரையில் தன்னந்தனியளாய்க் கிடக்கின்றாள்;
அவளைத் தூக்கிவிடுவார் யாருமில்லை."


3 ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
"ஆயிரம் பேரை அனுப்பிய நகரில் நூறு பேரே எஞ்சியிருப்பர்;
நூறு பேரை அனுப்பிய நகரில், பத்துப் பேரே எஞ்சியிருப்பர்;
இஸ்ரயேல் வீட்டாரின் கதி இதுவே."


4 இஸ்ரயேல் வீட்டாருக்கு ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
என்னைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்;


5 ஆனால் பெத்தேலைத் தேடாதீர்கள்,
கில்காலில் காலெடுத்து வைக்காதீர்கள்;
பெயேர்செபாவுக்குக் கடந்து போகவேண்டாம்;
ஏனெனில் கில்கால் உண்மையாகவே நாடுகடத்தப்படும்;
பெத்தேல் பாழாக்கப்படும்.


6 ஆண்டவரைத் தேடுங்கள்; நீங்கள் வாழ்வீர்கள்;
இல்லையேல் அவர் யோசேப்பின் வீட்டின்மேல் தீ மூளச் செய்வார்.
அந்நெருப்பு அதை விழுங்கிவிடும்,
பெத்தேலில் அந்நெருப்பை அணைக்கக்கூடியவர் எவருமிரார்.


7 அவர்கள் நீதியை எட்டிக்காயாய் மாற்றுகின்றார்கள்;
நேர்மையை மண்ணில் எறிகின்றார்கள்.


8 ஆனால், அவரே கார்த்திகை, மிருகசீரிடம் ஆகிய
விண்மீன்களை உண்டாக்கியவர்;
காரிருளைக் காலைப்பொழுது ஆகச் செய்பவர்;
பகற்பொழுதை இரவு வேளையாய் மாற்றுபவர்;
கடல் நீரை அழைத்து நிலத்தின்மேல் பொழியச் செய்பவர்;
அவரது பெயர் 'ஆண்டவர்'. [1]


9 வலிமை மிக்க தளங்கள்மேல் அவர் அழிவை அனுப்புவதால்
அவை அழிவைக் காண்கின்றன.


10 அவர்கள் நகர் வாயிலில் நின்றுகொண்டு
தங்களைக் கண்டிப்பவனைப் பகைக்கிறார்கள்;
உண்மை பேசுபவனை வெறுத்து ஒதுக்குகின்றார்கள்.


11 நீங்கள் ஏழைகளை நசுக்கி,
அவர்களிடம் தானிய வரியாக வாங்கியதைக் கொண்டு
நன்கு செதுக்கிய கற்களால் வீடு கட்டினீர்கள்;
அந்த வீடுகளில் நீங்கள் வாழப் போவதில்லை;
அருமையான திராட்சைத் தோட்டங்களை அமைத்தீர்கள்;
அவை தரும் திராட்சை இரசத்தை நீங்கள் குடிக்கப் போவதில்லை.


12 உங்கள் குற்றங்கள் எவ்வளவு மிகுதியானவை என்றும்
உங்கள் பாவங்கள் எத்துணைக் கொடியவை என்றும் நான் அறிவேன்;
நல்லாரைத் துன்புறுத்துகிறீர்கள், கையூட்டு வாங்குகிறீர்கள்,
நகர் வாயிலில் வறியோருக்கு நீதி வழங்க மறுக்கிறீர்கள்.


13 அது கெட்ட காலம் என்பதால்,
அப்போது விவேகமுள்ளவன் வாய் திறக்கமாட்டான்.


14 நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்;
அப்பொழுது நீங்கள் சொல்வதுபோல
படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.


15 தீமையை வெறுத்து நன்மையை நாடுங்கள்;
நகர் வாயிலில் நீதியை நிலைநாட்டுங்கள்;
அப்பொழுது ஒருவேளை படைகளின் கடவுளாகிய ஆண்டவர்
யோசேப்பின் வீட்டாரில் எஞ்சியிருப்போர்க்கு இரக்கம் காட்டுவார்.


16 ஆகையால், படைகளின் கடவுளும் தலைவருமாகிய ஆண்டவர்
இவ்வாறு கூறுகிறார்:
"பொதுவிடங்கள் எங்கும் அழுகுரல் கேட்கும்,
எல்லா வீதிகளிலும், 'ஐயோ! ஐயோ!' என்ற புலம்பல் எழும்பும்;
வயலில் வேலை செய்வாரை அழுவதற்குக் கூப்பிடுவர்;
ஒப்பாரி பாடத் தெரிந்தவர்களை ஓலமிட்டுப் புலம்ப அழைப்பர்.


17 திராட்சைத் தோட்டம் எங்கணும் ஒரே அழுகையாய் இருக்கும்;
ஏனெனில், உங்கள் நடுவே நான் கடந்து செல்வேன்",
என்கிறார் ஆண்டவர்.


18 ஆண்டவரின் நாளைப் பார்க்க விரும்புவோரே,
உங்களுக்கு ஐயோ கேடு!
ஆண்டவரின் நாளுக்காக நீங்கள் ஏங்குவது ஏன்?
அது ஒளிமிக்க நாளன்று; இருள் சூழ்ந்த நாளாகத் தான் இருக்கும்.


19 அந்த நாள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடிய ஒருவனைக்
கரடி ஒன்று எதிர்கொண்டாற்போலும்,
அவன் தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து,
சுவரில் கைவைத்துச் சாய்ந்த போது,
பாம்பு ஒன்று கடித்தாற்போலும் இருக்கும்!


20 ஆண்டவரின் நாள் ஒளியின் நாள் அன்று;
அது இருள் கவிந்தது அல்லவா?
வெளிச்சமில்லாத காரிருள் அல்லவா?


21 "உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்;
உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை.


22 எரிபலிகளையும் தானியப் படையல்களையும்
எனக்கு நீங்கள் செலுத்தினாலும் நான் ஏற்க மாட்டேன்;
கொழுத்த விலங்குகளை நல்லுறவுப் பலிகளாகச் செலுத்தும்போது
நான் ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன். [2]


23 என் முன்னிலையில் நீங்கள் இரைச்சலிட்டுப்
பாடும் பாடல்களை நிறுத்துங்கள்,
உங்கள் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன்.


24 மாறாக, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக!
நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!


25 "இஸ்ரயேல் வீட்டாரே, பாலை நிலத்தில் இருந்த
அந்த நாற்பது ஆண்டுகளில் பலிகளும் காணிக்கைகளும்
எனக்குக் கொடுத்தீர்களோ?
26 நீங்கள் சிக்கூத்தை மன்னனாகவும்
கிய்யோனை விண்மீன் தெய்வமாகவும் ஏற்றுக் கொண்டீர்கள்;
அவற்றின் வடிவில் உங்களுக்கெனச் சிலைகளும் செய்து கொண்டீர்கள்;
அந்தச் சிலைகளை நீங்கள் தூக்கிக்கொண்டு போகும் நாள் வரும்.
27 உங்களை நாள் தமஸ்குவுக்கும் அப்பால் நாடுகடத்தப்போகிறேன்",
என்கிறார் ஆண்டவர்; அவரது பெயர் 'படைகளின் கடவுள்.'


குறிப்புகள்

[1] 5:8 = யோபு 9:1; 38:31.
[2] 5:21-22 = எசா 1:11-14.


அதிகாரம் 6[தொகு]

இஸ்ரயேலின் அழிவு[தொகு]


1 "சீயோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே!
சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே!
மக்களினங்களுள் சிறந்த இனத்தின் உயர்குடி மக்களே!
இஸ்ரயேலின் மக்கள் தேடி வருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே!
உங்களுக்கு ஐயோ கேடு!


2 கல்னேக்குப் போய்ப் பாருங்கள்;
அங்கிருந்து சிறந்த நகரமாகிய ஆமாத்துக்குப் போங்கள்;
பிறகு பெலிஸ்தியரின் நகரான காத்துக்குச் செல்லுங்கள்;
அந்த அரசுகள் உங்கள் அரசுகளை விடச் சிறந்தவையோ?
உங்கள் நாடுகள் அவர்களுடைய நாடுகளைவிடப் பரப்பளவில் பெரியவையோ?


3 தீய நாளை இன்னும் தள்ளிவைப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்;
ஆனால் வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள்.


4 தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணைமீது சாய்ந்து கிடப்போருக்கும்
கிடையிலிருந்து வரும் ஆட்டுக் குட்டிகளையும்
மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஐயோ கேடு!


5 அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள்,
தாவீதைப்போல புதிய இசைக்கருவிகளைக் கண்டுபிடிக்கின்றார்கள்.


6 கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்;
உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக்கொள்கின்றார்கள்.


7 ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்;
அவர்களது இன்பக் களிப்பும் இல்லாதொழியும்.


8 தலைவராகிய ஆண்டவர் தம்மீது ஆணையிட்டுக் கூறுகிறார்;
படைகளின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு சொல்கிறார்:
யாக்கோபின் செருக்கை நான் வெறுக்கிறேன்;
அவனுடைய கோட்டைகளை அருவருக்கிறேன்.
நகரையும் அதிலுள்ள யாவரையும் நான் கைவிட்டு விடுவேன்.


9 ஒரு வீட்டில் பத்துப்பேரே இருந்தாலும்
அவர்களும் மாண்டு போவார்கள்.


10 வீட்டிலிருந்து எலும்புகளை எடுத்துச் செல்ல
மிகச் சிலரே தப்பிப் பிழைப்பார்கள்;
ஒருவன், வீட்டில் மூலையிலிருக்கும் இன்னொருவனிடம்,
'உன்னுடன் வேறு யாரேனும் உளரோ?' என்று கேட்க,
அவன், 'இல்லை' என்று பதில் சொல்லி
'பேசாதே, ஆண்டவரின் பெயரைச் சொல்லக் கூடாது' என்பான்.


11 ஆண்டவர்தாமே ஆணையிடுகின்றார்;
பெரிய மாளிகைகளைத் தரைமட்டமாக்குவார்;
சிறிய வீடுகளைத் தவிடுபொடியாக்குவார்.


12 பாறைகள்மேல் குதிரைகள் ஓடுமோ?
எருதுகளைக் கட்டிக் கடலை உழுவதுண்டோ?
நீங்கள் நீதியை நஞ்சாக மாற்றினீர்கள்,
நேர்மையின் கனியை எட்டிக்காயாய் ஆக்கினீர்கள்.


13 லோதபார் ஊரைப் பிடித்தது குறித்துப் பூரிப்பு அடைகிறீர்கள்;
'நம் சொந்த வலிமையால் கர்னாயிமைப் பிடித்து
நமதாக்கிக் கொள்ளவில்லையா?' என்கிறீர்கள்.


14 இஸ்ரயேல் வீட்டாரே!
உங்களுக்கு எதிராக வேற்றினம் ஒன்றைத் தூண்டிவிடுவேன்.
அவர்கள் ஆமாத்து வாயிலில் இருந்து அராபா நீரோடை வரையில்
உங்களை ஒடுக்கித் துன்புறுத்துவார்கள்',
என்கிறார் படைகளின் கடவுளாகிய ஆண்டவர்.


(தொடர்ச்சி): ஆமோஸ்:அதிகாரங்கள் 7 முதல் 9 வரை