திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம் - பாட்டு)/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து
"யாரிவள்! வைகறைபோல் தோற்றம்;... ஞாயிறுபோல் ஒளி;... யாரிவள்!" - இனிமைமிகு பாடல் 6:10.

இனிமைமிகு பாடல் (Song of Songs)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை


அதிகாரம் 5[தொகு]


1 என் தோட்டத்திற்கு நான் வந்துள்ளேன்;
என் தங்காய், மணமகளே,
என் வெள்ளைப் போளத்தையும்
நறுமணப் பொருளையும் சேகரிக்கின்றேன்;
என் தேனையும் தேனடைகளையும் உண்கின்றேன்;
என் திராட்சை இரசத்தையும் பாலையும் பருகுகின்றேன்;
தோழர்களே, உண்ணுங்கள்;
அன்பர்களே, போதையேறப் பருகுங்கள்.


பாடல் 17: தலைவி கூற்று[தொகு]


2 நான் உறங்கினேன்;
என் நெஞ்சமோ விழித்திருந்தது;
இதோ, என் காதலர் கதவைத் தட்டுகின்றார்;
"கதவைத் திற, என் தங்காய்,
என் அன்பே, என் வெண்புறாவே,
நிறை அழகே,
என் தலை பனியால் நனைந்துள்ளது;
என் தலைமயிர்ச் சுருள் இரவுத் தூறலால் ஈரமானது."


3 "என் ஆடையைக் களைந்து விட்டேன்;
மீண்டும் அதனை நான் உடுத்த வேண்டுமோ?
என் கால்களைக் கழுவியுள்ளேன்;
மீண்டும் அவற்றை அழுக்குப்படுத்தவோ?"


4 என் காதலர் கதவுத் துளை வழியாகக் கையைவிட்டார்;
என் நெஞ்சம் அவருக்காகத் துள்ளிற்று.


5 எழுந்தேன் நான், காதலர்க்குக் கதவு திறக்க;
என் கையில் வெள்ளைப்போளம் வடிந்தது;
என் விரல்களில் வெள்ளைப்போளம் சிந்திற்று;
தாழ்ப்பாள் பிடிகளில் சிதறிற்று.


6 கதவைத் திறந்தேன் நான் என் காதலர்க்கு;
அந்தோ! என் காதலர் காணவில்லை, போய்விட்டார்;
என் நெஞ்சம் அவர் குரலைத் தொடர்ந்து போனது;
அவரைத் தேடினேன்; அவரைக் கண்டேன் அல்லேன்;
அவரை அழைத்தேன்; பதிலே இல்லை!


7 ஆனால் என்னைக் கண்டனர் சாமக் காவலர்;
நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள்;
அவர்கள் என்னை அடித்தனர்; காயப்படுத்தினர்;
என் மேலாடையைப் பறித்துக் கொண்டனர்;
கோட்டைச் சுவரின் காவலர்கள் அவர்கள்!


8 எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுச் சொல்கிறேன்;
என் காதலரைக் காண்பீர்களாயின்
அவரிடம் என்ன சொல்வீர்கள்?
'காதல் நோயுற்றேன் நான்' எனச் சொல்லுங்கள்.


9 "பெண்களுக்குள் பேரழகியே,
மற்றக் காதலரினும் உன் காதலர் எவ்வகையில் சிறந்தவர்?
இவ்வாறு எங்களிடம் ஆணையிட்டுக் கூறுகின்றாயே;
மற்றக் காதலரினும் உன்காதலர் எவ்வகையில் சிறந்தவர்?"


10 "என் காதலர் ஒளிமிகு சிவந்த மேனியர்;
பல்லாயிரம் பேர்களிலும் தனித்துத் தோன்றுவார்!


11 அவரது தலை பசும்பொன்;
தலைமுடி சுருள்சுருளாய் உள்ளது;
காகம்போல் கருமை மிக்கது.


12 அவர் கண்கள் வெண்புறாக்கள் போன்றவை;
பாலில் குளித்து, நீரோடைகளின் அருகில்
கரையோரங்களில் தங்கும் வெண்புறாக்கள் அவை.


13 அவர் கன்னங்கள் நறுமண நாற்றங்கால்கள் போல்வன;
நறுமணம் ஆங்கே கமழ்கின்றது;
அவருடைய இதழ்கள் லீலிமலர்கள்;
அவற்றினின்று வெள்ளைப்போளம்
சொட்டுச்சொட்டாய் வடிகின்றது.


14 அவருடைய கைகள் உருண்ட பொன் தண்டுகள்;
அவற்றில் மாணிக்கக் கற்கள் பதிந்துள்ளன;
அவரது வயிறு யானைத் தந்தத்தின் வேலைப்பாடு;
அதில் நீலமணிகள் பொதியப் பெற்றுள்ளன.


15 அவருடைய கால்கள் பளிங்குத் தூண்கள்;
தங்கத் தளத்திலே அவை பொருந்தியுள்ளன;
அவரது தோற்றம் லெபனோனுக்கு இணையானது;
கேதுரு மரங்கள்போல் தலைசிறந்தது.


16 அவரது வாய் இணையற்ற இனிமை;
அவர் முழுமையும் பேருவகையே;
எருசலேம் மங்கையரே, இவரே என் காதலர்,
இவரே என் நண்பர்."

அதிகாரம் 6[தொகு]


1 "பெண்களுக்குள் பேரழகியே,
உன் காதலர் எங்கே போனார்?
உன் காதலர் எப்பக்கம் திரும்பினார்?
உன்னோடு நாங்களும் அவரைத் தேடுவோம்."


2 "என் காதலர் தம் தோட்டத்திற்கும்
நறுமண நாற்றங்கால்களுக்கும் போனார்;
தோட்டங்களில் மேய்க்கவும்
லீலி மலர்களைக் கொய்யவும் சென்றுள்ளார்".


3 நான் என் காதலர்க்குரியள்; என் காதலர் எனக்குரியர்;
லீலிகள் நடுவில் அவர் மேய்க்கின்றார்.


பாடல் 18: தலைவன் கூற்று[தொகு]


4 என் அன்பே, நீ திரட்சாவைப்போல் அழகுள்ளவள்;
எருசலேமைப்போல் எழில் நிறைந்தவள்;
போரணிபோல் வியப்பார்வம் ஊட்டுகின்றாய்!


5 என்னிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக்கொள்;
அவை என்னை மயக்குகின்றன;
கிலயாதிலிருந்து இறங்கிவரும்
வெள்ளாட்டு மந்தை போன்றது உன் கூந்தல்.


6 உன் பற்களோ, குளித்துக்கரையேறும்
பெண் ஆடுகளின் மந்தைபோல்வன;
அவை யாவும் இரட்டைக்குட்டி போட்டவை;
அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.


7 முகத்திரையின் பின்னிருக்கும் உன் கன்னங்கள்
பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.


பாடல் 19: தலைவன் கூற்று[தொகு]


8 அரசியர் அறுபது பேர்;
வைப்பாட்டியர் எண்பது பேர்;
இளம்பெண்கள் எண்ணிறந்தவர்.


9 என் வெண்புறா,
அழகின் வடிவம் அவள் ஒருத்தியே!
அவள் தாய்க்கும் அவள் ஒருத்தியே;
அவளைப் பெற்றவளுக்கு அவள் அருமையானவள்;
மங்கையர் அவளைக் கண்டனர்; வாழ்த்தினர்;
அரசியரும் வைப்பாட்டியரும் அவளைப் புகழ்ந்தனர்:


10 "யாரிவள்! வைகறைபோல் தோற்றம்;
திங்களைப் போல் அழகு;
ஞாயிறுபோல் ஒளி;
போரணிபோல் வியப்பார்வம்; யாரிவள்!"


பாடல் 20: தலைவன் கூற்று[தொகு]


11 வாதுமைச் சோலைக்குள் சென்றேன்;
பள்ளத்தாக்கில் துளிர்த்தவற்றைப் பார்க்கப் போனேன்;
திராட்சை பூத்துவிட்டதா என்றும்
மாதுளைகள் மலர்ந்தனவா என்றும் காணச் சென்றேன்.


12 என்னவென்றே எனக்குத் தெரியவில்லை!
மகிழ்ச்சியில் மயங்கினேன்;
இளவரசனுடன் தேரில் செல்வது போல் நான் உணர்ந்தேன்.


பாடல் 21: கண்டோர் கூற்று: உரையாடல்[தொகு]


13 திரும்பி வா! திரும்பி வா! சூலாமியளே!
திரும்பி வா! திரும்பி வா!
நாங்கள் உன்னைப் பார்க்க வேண்டும்!
இரண்டு பாசறைகள் நடுவில் ஆடுபவளைப்போல்
சூலாமியளை நீங்கள் ஏன் நோக்க வேண்டும்?


(தொடர்ச்சி): இனிமைமிகு பாடல்:அதிகாரங்கள் 7 முதல் 8 வரை