திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம் - பாட்டு)/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
"முகத்திரையின் பின்னிருக்கும் உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை" - இனிமைமிகு பாடல் 4:3.

இனிமைமிகு பாடல் (Song of Songs)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை


அதிகாரம் 3[தொகு]

பாடல் 12: தலைவி கூற்று[தொகு]


1 இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்;
என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடினேன்;
தேடியும் அவரை நான் கண்டேன் அல்லேன்!
2 "எழுந்திடுவேன்; நகரத்தில் சுற்றிவருவேன்;
தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி
என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்."
தேடினேன்; தேடியும் அவரைக் கண்டேன் அல்லேன்!
3 ஆனால் என்னைக் கண்டனர் சாமக்காவலர்;
நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள்.
"என் உயிர்க்குயிரான அன்பரை
நீங்களேனும் கண்டீர்களோ?" என்றேன்.
4 அவர்களைவிட்டுச் சற்று அப்பால் சென்றதுமே
கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை.
அவரைச் சிக்கெனப் பிடித்தேன்; விடவே இல்லை;
என் தாய்வீட்டுக்கு அவரைக் கூட்டி வந்தேன்;
என்னைக் கருத்தாங்கியவளின் அறைக்குள்
அழைத்து வந்தேன்.
5 எருசலேம் மங்கையரே,
கலைமான்கள் மேல் ஆணை!
வயல்வெளி மரைகள்மேல் ஆணை!
உங்களுக்கு நான் கூறுகிறேன்:
காதலைத் தட்டி எழுப்பாதீர்;
தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர்.


பாடல் 13: கண்டோர் கூற்று[தொகு]


6 என்ன அது?
பாலைவெளியிலிருந்து புகைத்தூண்போல், எழுந்துவருகிறதே!
வெள்ளைப்போளம் மணக்க,
சாம்பிராணி புகைய,
வணிகர்கொணர் பல்வகைப் பொடிகள் யாவும்
மணங்கமழ வருகிறதே! அது என்ன?
7 அதுதான் சாலமோனின் பஞ்சணை!
இஸ்ரயேலின் வளமையுள்ள வீரர்களுள்
அறுபதுபேர் அதனைச் சூழ்ந்துள்ளனர்.
8 அனைவரும் வாளேந்திய வீரர்!
அவர்கள் போர்புரிவதில் வல்லவர்கள்!
இராக்காலத் தாக்குதல்களைத் தடுக்கத்
தம் இடைகளில் வாள் கொண்டுள்ளவர்கள்!
9 மன்னர் தமக்கொரு பல்லக்கு செய்தார்;
சாலமோன் லெபனோனின் மரத்தால் செய்தார்.
10 அதன் தூண்களை வெள்ளியால் இழைத்தார்;
மேற்கவிகை பொன்; இருக்கை செம்பட்டு;
உட்புறம் மெல்லிய தோல்மெத்தை;
எருசலேம் மங்கையரே, வாருங்கள்!
11 சீயோன் மங்கையரே, பாருங்கள்!
மன்னர் சாலமோனையும்
அவர் அன்னை அவருக்கு அணிவித்த
மணிமுடியையும் காணுங்கள்!
அவரது திருமண நாளினிலே,
அவருள்ளம் மகிழ்ந்த நாளினிலே,
அவருக்கு அணிவித்த முடியதுவே!

அதிகாரம் 4[தொகு]

பாடல் 14:தலைவன் கூற்று[தொகு]


1 என்னே உன் அழகு! என் அன்பே, என்னே என் அழகு!
முகத்திரைக்குப் பின்னுள்ள உன் கண்கள் வெண்புறாக்கள்!
கிலயாதின் மலைச்சரிவில் இறங்கி வரும்
வெள்ளாட்டு மந்தை போன்றது உன் கூந்தல்.
2 உன் பற்களோ மயிர் கத்தரிப்பதற்கெனக்
குளித்துக் கரையேறும் பெண் ஆடுகளின் மந்தை போல்வன;
அவையாவும் இரட்டைக் குட்டி போட்டவை;
அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.
3 செம்பட்டு இழைபோன்றன உன்னிதழ்கள்;
உன் வாய் எழில் மிக்கது;
முகத்திரையின் பின்னிருக்கும் உன் கன்னங்கள்
பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.
4 தாவீதின் கொத்தளம்போல் அமைந்துள்ளது உன் கழுத்து;
வரிவரியாய் ஆயிரம் கேடயங்கள் ஆங்கே தொங்குகின்றன;
அவையெலாம் வீரர்தம் படைக்கலன்களே.
5 உன் முலைகள் இரண்டும் லீலிகள் நடுவில் மேயும்
இருமான் குட்டிகளை ஒக்கும்;
கலைமானின் இரட்டைக் குட்டிகளைக் ஒக்கும்.
6 பொழுது புலர்வதற்குள், நிழல்கள் மறைவதற்குள்,
வெள்ளைப்போள மலையினுக்கு விரைந்திடுவேன்;
சாம்பிராணிக் குன்றுக்குச் சென்றிடுவேன்;
7 என் அன்பே, நீ முழுவதும் அழகே!
மறுவோ உன்னில் சிறிதும் இலதே!


பாடல் 15: தலைவன் கூற்று[தொகு]


8 லெபனோனிலிருந்து வந்திடு மணமகளே;
லெபலோனிலிருந்து வந்திடு, புறப்படு;
அமானா மலையுச்சியினின்று -
செனீர் மற்றும் எர்மோன் மலையுச்சியினின்று -
சிங்கங்களின் குகைளினின்று -
புலிகளின் குன்றுகளினின்று இறங்கிவா!
9 என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்;
என் தங்காய், மணமகளே,
உன் விழிவீச்சு ஒன்றினாலே,
உன் ஆரத்தின் முத்து ஒன்றினாலே,
என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்.
10 உன் காதல் எத்துணை நேர்த்தியானது;
என் தங்காய், மணமகளே,
உன் காதல் திராட்சை இரசத்தினும் இனிது!
உனது பரிமளத்தின் நறுமணமோ எவ்வகைத்
தைலத்தின் நறுமணத்தினும் சிறந்தது.
11 மணமகளே, உன் இதழ்கள் அமிழ்தம் பொழிகின்றன;
உன் நாவின்கீழ்த் தேனும் பாலும் சுரக்கின்றன;
உன் ஆடைகளின் நறுமணம்
லெபனோனின் நறுமணத்திற்கு இணையானது.


பாடல் 16: தலைவன் - தலைவி உரையாடல்[தொகு]


12 பூட்டியுள்ள தோட்டம் நீ;
என் தங்காய், மணமகளே,
பூட்டியுள்ள தோட்டம் நீ;
முத்திரையிட்ட கிணறு நீ!
13 மாதுளைச் சோலையாய்த் தளிர்த்துள்ளாய்;
ஆங்கே தித்திக்கும் கனிகள் உண்டு;
மருதோன்றியும் நரந்தமும் உண்டு.
14 நரந்தம், மஞ்சள், வசம்பு, இலவங்கம்,
எல்லாவகை நறுமண மரங்களும்,
வெள்ளைப்போளமும் அகிலும்,
தலைசிறந்த நறுமணப் பொருள்கள் யாவுமுண்டு.
15 நீ தோட்டங்களின் நீரூற்று;
வற்றாது நீர்சுரக்கும் கிணறு;
லெபலோனினின்று வரும் நீரோடை!
16 வாடையே, எழு!
தென்றலே, வா!
என் தோட்டத்தின்மேல் வீசு!
அதன் நறுமணம் பரவட்டும்!
என் காதலர் தம் தோட்டத்திற்கு வரட்டும்!
அதன் தித்திக்கும் கனிகளை உண்ணட்டும்!


(தொடர்ச்சி): இனிமைமிகு பாடல்:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை