திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஊளையிடும் குள்ளநரிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும்" - எசாயா 13:21

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

அதிகாரம் 13[தொகு]

பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு[தொகு]


1 ஆமோட்சின் மகன் எசாயா
பாபிலோனைக் குறித்துக் கண்ட
காட்சியில் அருளப்பட்ட திருவாக்கு: [1]


2 வறண்ட மலை ஒன்றில் போர்க்கொடி ஏற்றுங்கள்;
போர்வீரர்களை உரக்கக் கூவி அழையுங்கள்;
உயர்குடி மக்கள் வாழும் நகர வாயில்களுக்குள் நுழையும்படி,
அவர்களுக்குக் கையசைத்துச் சைகை காட்டுங்கள்.


3 போருக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள என் வீரர்களுக்கு,
நானே ஆணை பிறப்பித்துள்ளேன்;
நான் சினமடைந்து பிறப்பித்துள்ள என் கட்டளையை நிறைவேற்றிட,
தங்கள் வலிமையில் பெருமிதம் கொள்ளும் என் வீரர்களை அழைத்துள்ளேன்.


4 மலைகளின் மேல் எழும் பேரிரைச்சலைக் கேளுங்கள்;
அது பெருங்கூட்டமாய் வரும் மக்களின் ஆரவாரம்;
அரசுகளின் ஆர்ப்பாட்டக் குரலைக் கேளுங்கள்,
பிற இனத்தார் ஒருங்கே திரண்டு விட்டனர்;


5 தொலைநாட்டிலிருந்தும் தொடுவானத்து எல்லைகளிலிருந்தும்
அவர்கள் வருகின்றார்கள்;
ஆண்டவர் தம் கடும்சினத்தின் போர்க் கலன்களோடு
உலகம் முழுவதையும் அழிக்க வருகின்றார்.


6 அழுது புலம்புங்கள், ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது;
எல்லாம் வல்லவரிடமிருந்து அழிவு வடிவத்தில் அது வருகின்றது. [2]


7 ஆதலால், கைகள் யாவும் தளர்ந்து விடும்;
மானிட நெஞ்சம் அனைத்தும் உருகி நிற்கும்.


8 அவர்கள் திகிலடைவார்கள்;
துன்ப துயரங்கள் அவர்களைக் கவ்விக்கொள்ளும்;
பேறுகாலப் பெண்ணைப்போல வேதனையடைவார்கள்;
ஒருவர் மற்றவரைப் பார்த்துத் திகைத்து நிற்பர்;
கோபத் தீயால் அவர்கள் முகம் கனன்று கொண்டிருக்கும்.


9 இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது,
கொடுமையும் கோபமும் கடும் சீற்றமும் நிறைந்த நாள் அது;
மண்ணுலகைப் பாழ்நிலமாக்கும் நாள் அது;
அதிலிருக்கும் பாவிகளை முற்றிலும் அழித்துவிடும் நாள் அது.


10 வானத்து விண்மீன்களும் இராசிக் கூட்டங்களும் ஒளி வீசமாட்டா;
தோன்றும்போதே கதிரவன் இருண்டு போவான்;
வெண்ணிலாவும் தண்ணொளியைத் தந்திடாது. [3]


11 உலகை அதன் தீச்செயலுக்காகவும்
தீயோரை அவர்தம் கொடுஞ் செயலுக்காகவும் நான் தண்டிப்பேன்;
ஆணவக்காரரின் அகந்தையை அழிப்பேன்;
அச்சுறுத்துவோரின் இறுமாப்பை அடக்குவேன்.


12 மானிடரைப் பசும் பொன்னைவிடவும்
மனிதர்களை ஓபீரின் தங்கத்தைவிடவும் அரிதாக்குவேன்.


13 ஆதலால், வானத்தை நடுங்கச் செய்வேன்;
மண்ணுலகம் தன் இருப்பிடத்திலிருந்து ஆட்டங் கொடுக்கும்;
படைகளின் ஆண்டவரது கோபத்தால்
அவரது கடும்சினத்தின் நாளில் இது நடக்கும்.


14 துரத்தப்பட்ட புள்ளிமான் போலவும்,
ஒன்று சேர்ப்பாரின்றிச் சிதறுண்டு ஆடுகளைப் போலவும்,
எல்லாரும் தம் மக்களிடம் திரும்பிச் செல்வர்;
எல்லாரும் தம் சொந்த நாட்டுக்குத் தப்பியோடுவர்.


15 அகப்பட்ட ஒவ்வொருவரும்
பிடிபட்ட ஒவ்வொருவரும் வாளால் மடிவர்.


16 அவர்கள் பச்சிளம் குழந்தைகள்
அவர்கள் கண்ணெதிரே மோதியடிக்கப்படுவர்.
அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்,
அவர்கள் துணைவியர் மானபங்கப்படுத்தப்படுவர்.


17 இதோ, அவர்களுக்கு எதிராக நான்
மேதியரைக் கிளர்ந்தெழச் செய்கின்றேன்,
அவர்கள் வெள்ளியைப் பெரிதாக எண்ணாதவர்கள்;
பொன்னை அடைவதற்கு ஆவல் கொள்ளாதவர்கள்.


18 அவர்கள் வில்வீரர் இளைஞரை மோதியடிப்பார்கள்,
பச்சிளங் குழந்தைகளுக்கு அவர்கள் கருணை காட்டமாட்டார்கள்;
சிறுவர்களுக்கு அவர்கள் கண்களில் இரக்கம் இராது.


19 அரசுகளில் சிறப்புமிகு கல்தேயரின்
மேன்மையும் பெருமையுமான பாபிலோன்
கடவுள் அழித்த சோதோம் கொமோராவைப்போல ஆகிவிடும். [4]


20 இனி எவரும் அதில் ஒருபோதும் குடியிருக்க மாட்டார்;
அதுவும் தலைமுறை தலைமுறையாகக் குடியற்று இருக்கும்;
அரேபியர் அங்கே கூடாரம் அமைக்கமாட்டார்;
ஆயர்கள் தம் மந்தையை அங்கே இளைப்பாற விடுவதில்லை.


21 ஆனால், காட்டு விலங்குகள் அங்கே படுத்துக் கிடக்கும்;
ஊளையிடும் குள்ளநரிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும்;
தீக்கோழிகள் அங்கே தங்கியிருக்கும்;
வெள்ளாட்டுக் கிடாய்கள் அங்கே துள்ளித் திரியும். [5]


22 அவர்கள் கோட்டைகளில் ஓநாய்கள் அலறும்;
அரண்மனைகளில் குள்ளநரிகள் ஊளையிடும்;
அதற்குரிய நேரம் நெருங்கிவிட்டது;
அதற்குரிய நாள்கள் அண்மையில் உள்ளன.


குறிப்புகள்

[1] 13:1-14:23 = எசா 47:1-15; எரே 50:1-51:64.
[2] 13:6 = யோவே 1:15.
[3] 13:10 = எசே 32:7; மத் 24:29;
மாற் 13:24-25; லூக் 21:25; திவெ 6:12-13.
[4] 13:19 = தொநூ 19:24.
[5] 13:21 = எசா 34:14; செப் 2:14; திவெ 18:2.


அதிகாரம் 14[தொகு]

அடிமைத்தனத்தினின்று திரும்புதல்[தொகு]


1 ஆண்டவர் யாக்கோபின் மீது இரக்கம் காட்டி
இஸ்ரயேலை மீண்டும் தேர்ந்துகொள்வார்;
அவர்களை அவர்களுடைய நாட்டில் அமைதியுடன் வாழச் செய்வார்.
வேற்று நாட்டவரும் அவர்களை நாடி வந்து
யாக்கோபின் குடும்பத்தாரோடு சேர்ந்து கொள்வார்கள்.
2 மக்களினங்கள் அவர்களை அழைத்து வந்து,
அவர்களது சொந்த இடத்திற்கு அவர்களை இட்டுச் செல்வார்கள்.
அவ் வேற்றுநாட்டாரை ஆண்டவரின் நாட்டில்
இஸ்ரயேல் குடும்பத்தார் அடிமைகளாகவும்,
அடிமைப் பெண்களாகவும் உரிமையாக்கிக் கொள்வர்;
தங்களை அடிமைப்படுத்தியவர்களை அடிமையாக்குவார்கள்;
அவர்களை ஒடுக்கியவர்கள் மேல் ஆட்சி செலுத்துவார்கள்.

பாபிலோனிய அரசன்மீது வசைப்பாடல்[தொகு]


3 ஆண்டவர் உன்மேல் சுமத்திய துயரையும் இடரையும்
கடுமையான அடிமை வாழ்வையும் அகற்றி,
அமைதி வாழ்வை உனக்குத் தரும் நாளில்,


4 பாபிலோன் மன்னனுக்கு எதிராக
இந்த ஏளனப் பாடலை எடுத்துக் கூறு:


"ஒடுக்கியவன் ஒழிந்தானே!
அவன் ஆணவமும் ஓய்ந்ததே!


5 தீயோரின் கோலையும் ஆட்சியாளரின் செங்கோலையும்
ஆண்டவர் முறித்துப் போட்டார்.


6 அவர்கள் கோபத்தால் வெகுண்டு
அடிமேல் அடியாக மக்களினங்களை அடித்து நொறுக்கினார்கள்;
பிற நாட்டினரைத் தொடர்ந்து கொடுமைப்படுத்திக்
கடுமையாய் ஆண்டார்கள்.


7 மண்ணுலகம் முழுவதும் இளைப்பாறி
அமைதியில் மூழ்கியிருக்கின்றது;
மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்கின்றது.


8 தேவதாரு மரங்களும் லெபனோனின் கேதுரு மரங்களும்
உன் வீழ்ச்சியால் களிப்படைகின்றன;
'நீ வீழ்ந்து கிடக்கும் இந்நேரமுதல்
எமை வெட்டி வீழ்த்த எமக்கெதிராய் எழுபவர் எவருமில்லை'
எனப் பாடுகின்றன.


9 நீ வரும்போது உன்னை எதிர்கொள்ளக்
கீழுள்ள பாதாளம் மகிழ்ச்சியால் பரபரக்கின்றது;
உலகின் இறந்த தலைவர்கள் அனைவரும்
உன்னை வரவேற்குமாறு அவர்களை எழுப்புகிறது.
வேற்றினத்தாரின் அரசர்கள் அனைவரையும்
அவர்தம் அரியணையை விட்டு எழச் செய்கிறது."


10 அவர்கள் அனைவரும் உன்னை நோக்கி,
"நீயும் எங்களைப்போல் வலுவிழந்து போனாயே!
எங்களின் கதியை நீயும் அடைந்தாயே!


11 உன் இறுமாப்பும் உன் வீணைகளின் இசையொலியும்
பாதாளம்வரை தாழ்த்தப்பட்டன;
புழுக்கள் உனக்குக் கீழ்ப் படுக்கையாகும்!
பூச்சிகள் உன் போர்வையாகும்!


12 வைகறைப் புதல்வனாகிய விடி வெள்ளியே!
வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே!
மக்களினங்களை வலிமை குன்றச் செய்தவனே,
வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே! [1]


13 'நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்;
இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக
உயரத்தில் என் அரியணையை ஏற்படுத்துவேன்;
வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ள
பேரவை மலைமேல் வீற்றிருப்பேன்.


14 மேகத்திரள்மேல் ஏறி, உன்னதருக்கு ஒப்பாவேன்'
என்று உன் உள்ளத்தில் உரைத்தாயே!


15 ஆனால் நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய்;
படுகுழியின் அடிமட்டத்திற்குள் தள்ளப்பட்டாயே! [2]


16 உன்னைக் காண்போர், உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்து,
'மண்ணுலகை நடுநடுங்கச் செய்தவனும்,
அரசுகளை நிலைகுலையச் செய்தவனும்,


17 பூவுலகைப் பாலைநிலமாய் ஆக்கி,
அதன் நகரங்களை அழித்தவனும்,
தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்ப
விடுதலை அளிக்காதிருப்பவனும் இவன்தானோ?' என்பர்.


18 மக்களின மன்னர்கள் அனைவரும் அவரவர் உறைவிடங்களில்
மாட்சியுடன் படுத்திருக்கின்றனர்.


19 நீயோ, அருவருப்பான அழுகிய இலைபோல,
உன் கல்லறையிலிருந்து வெளியே வீசப்பட்டிருக்கிறாய்;
வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டு,
நாற்றமெடுத்த பிணம்போலக் கிடக்கின்றாய்.


20 கல்லறையில் அவர்களோடு நீ இடம் பெறமாட்டாய்;
ஏனெனில், உன் நாட்டை நீ அழித்து விட்டாய்;
உன் மக்களைக் கொன்று போட்டாய்;
தீங்கிழைப்போரின் வழிமரபு என்றுமே பெயரற்றுப் போகும்.


21 மூதாதையரின் தீச்செயல்களை முன்னிட்டு
அவர்கள் புதல்வர்களுக்குக் கொலைக் களத்தைத் தயார்ப்படுத்துங்கள்;
நாட்டை உரிமையாக்க இனி அவர்கள் தலையெடுக்கக்கூடாது;
பூவுலகின் பரப்பை அவர்கள் நகரங்களால் நிரப்பக்கூடாது."

பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு[தொகு]


22 "அவர்களுக்கு எதிராக நான் கிளர்ந்தெழுவேன்"
என்கிறார் படைகளின் ஆண்டவர்.
"பாபிலோனின் பெயரையும் அங்கே எஞ்சியிருப்போரையும்,
வழி மரபினரையும் வழித்தோன்றல்களையும்
இல்லாதொழிப்பேன்," என்கிறார் ஆண்டவர்.


23 "அந்நாட்டை முள்ளம்பன்றிகளின் இடமாக்குவேன்;
சேறும் சகதியும் நிறைந்த நீர்நிலையாக்குவேன்;
அழிவு என்னும் துடைப்பத்தால் முற்றிலும் துடைத்துவிடுவேன்"
என்கிறார் படைகளின் ஆண்டவர்.


24 படைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறுகின்றார்:
"நான் எண்ணியவாறு யாவும் நடந்தேறும்;
நான் தீட்டிய திட்டமே நிலைத்து நிற்கும்.


25 என் நாட்டில் அசீரியனை முறியடிப்பேன்;
என் மலைகளின் மேல் அவனை மிதித்துப் போடுவேன்;
அப்பொழுது அவனது நுகத்தடி அவர்களைவிட்டு அகலும்;
அவன் வைத்த சுமை அவர்கள் தோளிலிருந்து இறங்கும்.


26 மண்ணுலகம் முழுவதையும்பற்றி நான் தீட்டிய திட்டம் இதுவே;
பிறஇனத்தார் அனைவருக்கும் எதிராக நான் ஓங்கியுள்ள கையும் இதுவே.


27 படைகளின் ஆண்டவர் தீட்டிய திட்டத்தைச்
சீர்குலைக்க வல்லவன் எவன்?
அவர் தம் கையை ஓங்கியிருக்க
அதை மடக்கக்கூடியவன் எவன்?" [3]

பெலிஸ்தியருக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு[தொகு]


28 ஆகாசு அரசன் இறந்த ஆண்டில்
இந்தத் திருவாக்கு அருளப்பட்டது. [4]


29 பெலிஸ்திய நாட்டின் அனைத்து மக்களே,
உங்களை அடித்த கோல் முறிந்து விட்டதற்காக அக்களிக்காதீர்;
ஏனெனில் பாம்பின் வேரினின்று கட்டுவிரியன் புறப்பட்டு வரும்;
அதன் கனியாகப் பறவைநாகம் வெளிப்படும்.


30 ஏழைகளின் தலைப்பிள்ளைகள் உணவு பெறுவார்கள்;
வறியவர்கள் அச்சமின்றி இளைப்பாறுவார்கள்;
உன் வழிமரபைப் பஞ்சத்தால் நான் மடியச் செய்வேன்,
உன்னில் எஞ்சியிருப்போரை நான் கொன்றொழிப்பேன்.


31 வாயிலே, வீறிட்டு அழு;
நகரே, கதறியழு;
எல்லாப் பெலிஸ்திய மக்களே, மனம் பதறுங்கள்;
ஏனெனில் வடபுறத்திலிருந்து புகையெனப் படை வருகின்றது.
அதன் போர்வீரருள் கோழை எவனும் இல்லை. [5]


32 அந்த நாட்டுத் தூதருக்கு என்ன மறுமொழி கூறப்படும்?
"சீயோனுக்கு அடித்தளமிட்டவர் ஆண்டவர்;
அவர்தம் மக்களுள் துயருறுவோர் அங்கேயே புகலிடம் பெறுவர் என்பதே."


குறிப்புகள்

[1] 14:12 = திவெ 8:10; 9:1.
[2] 14:13-15 = மத் 11:23; லூக் 10:15.
[3] 14:24-27 = எசா 10:5-34; நாகூ 1:1-3:19; செப் 2:13-15.
[4] 14:28 = 2 அர 16:20; 2 குறி 28:27.
[5] 14:29-31 = எரே 47:1-7; எசே 25:15-17;
யோவே 3:4-8; ஆமோ 1:6-8;
செப் 2:4-7; செக் 9:5-7.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 15 முதல் 16 வரை