திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஒலிவ மரத்தை உலுக்கும்போது அதன் உச்சிக்கிளை நுனியில் இரண்டு மூன்று காய்களும், பழமிருக்கும் கிளைகளில் நாலைந்து பழங்களும் விடப்பட்டிருப்பதுபோல், அவர்களிடையேயும் பின்னால் பறிக்கப்படுவதற்கெனச் சிலர் விடப்பட்டிருப்பர்." - எசாயா 17:6

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

அதிகாரம் 17[தொகு]

சிரியா, இஸ்ரயேலுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு[தொகு]


1 தமஸ்கு நகரைப் பற்றிய திருவாக்கு:
"நகர் என்ற பெயரை தமஸ்கு இழந்துவிடும்;
அது பாழடைந்த மண்மேடாக மாறிவிடும்.


2 அதன் அருகிலுள்ள நகரங்கள் பாழடைந்து
ஆடுமாடுகள் திரியும் இடமாகும்;
அவை அங்கே படுத்துக் கிடக்கும்;
அவற்றை அச்சுறுத்த எவருமே இரார்.


3 எப்ராயிம் நாட்டின் அரண் தரைமட்டமாகும்;
தமஸ்கின் அரசு இல்லாதொழியும்;
இஸ்ரயேல் மக்களின் மேன்மைக்கு நேர்ந்தது
சிரியாவில் எஞ்சியிருப்போரின் நிலைமையாகும்,
என்கிறார் படைகளின் ஆண்டவர். [*]


4 அந்நாளில், யாக்கோபின் மேன்மை தாழ்வடையும்;
அவனது கொழுத்த உடல் மெலிந்து போகும்.


5 அறுவடைசெய்வோன் நிமிர்ந்து நிற்கும் கதிர்களைச் சேர்த்த பின்னும்
அவனது கை அவற்றை அறுவடை செய்தபின்னும்
சிந்திய கதிர்களைப் பொறுக்கி எடுக்கும் பொழுதும்
இரபாயிம் பள்ளத்தாக்கு இருப்பது போல
யாக்கோபின் நிலைமை இருக்கும்.


6 ஒலிவ மரத்தை உலுக்கும்போது
அதன் உச்சிக்கிளை நுனியில் இரண்டு மூன்று காய்களும்,
பழமிருக்கும் கிளைகளில்
நாலைந்து பழங்களும் விடப்பட்டிருப்பதுபோல்,
அவர்களிடையேயும் பின்னால் பறிக்கப்படுவதற்கெனச்
சிலர் விடப்பட்டிருப்பர்,"
என்கிறார் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்.


7 அன்றுதான், மனிதர் தம்மைப் படைத்தவரை நோக்குவர்;
இஸ்ரயேலின் தூயவரைக் காண அவர்கள் கண்கள் விழையும்;
8 தங்கள் கைவேலைப்பாடுகளான பலிபீடங்களை
ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்;
தாங்கள் கைப்படச் செய்த அசேராக் கம்பங்களையும்
மரச் சிலைகளையும் நோக்கமாட்டார்கள்.
9 இவ்வியர், எமோரியர் என்பவர்களின் நகரங்கள்
இஸ்ரயேல் மக்கள் வந்தபோது பாழடைந்ததுபோல,
அந்நாளில் உன் வலிமைமிகு நகர்களும் கைவிடப்பட்டுப்
பாழ்வெளி ஆகி விடும்.


10 இஸ்ரயேலே, உனக்கு விடுதலை அளித்த கடவுளை
நீ மறந்துவிட்டாய்;
உன் அடைக்கலமான கற்பாறையை நீ நினைவு கூரவில்லை;
ஆதலால், கண்ணுக்கினிய நாற்றுகளை நீ நட்டுவைத்தாலும்,
வேற்றுத் தெய்வத்திற்கு இளம் கன்றுகளை நாட்டினாலும்,


11 நீ அவற்றை நட்ட நாளிலேயே பெரிதாக வளரச் செய்தாலும்,
விதைத்த காலையிலேயே மலரச் செய்தாலும்,
துயரத்தின் நாளில் தீராத வேதனையும்
நோயுமே உன் விளைச்சலாய் இருக்கும்.

பகைவர் தோல்வியுறல்[தொகு]


12 ஐயோ! மக்களினங்கள் பலவற்றின் ஆரவாரம் கேட்கிறது;
கடல் கொந்தளிப்பதுபோல் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்;
இதோ, மக்கள் கூட்டத்தின் கர்ச்சனைக்குரல் கேட்கிறது;
வெள்ளப்பெருக்கின் இரைச்சலைப் போல் அவர்கள் முழங்குகிறார்கள்.


13 பெருவெள்ளம்போல் மக்கள் கூட்டத்தினர் கர்ச்சிக்கிறார்கள்;
அவர்களை ஆண்டவர் அதட்டுவார்;
அவர்களும் வெகுதொலைவிற்கு ஓடிப் போவார்கள்;
மலைகளில் காற்றின் முன் அகப்பட்ட பதர் போன்றும்,
புயல்காற்று முன் சிக்குண்ட புழுதி போன்றும் துரத்தப்படுவார்கள்.


14 மாலைவேளையில், இதோ! எங்கும் திகில்;
விடிவதற்குள் அவர்கள் இல்லாதொழிவார்கள்;
இதுவன்றோ நம்மைக் கொள்ளையடிப்பவர்கள் பங்கு!
இதுவன்றோ நம்மைச் சூறையாடுவோரின் நிலைமை.


குறிப்பு

[*] 17:1-3 = எரே 49:23-27; ஆமோ 1:3-5; செக் 9:1.


அதிகாரம் 18[தொகு]

சூடானுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு[தொகு]


1 எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கு அப்பால்
சிறகடித்து ஒலியெழுப்பும் உயிரினங்கள் உடையதோர் நாடு உள்ளது.


2 அது நாணல் படகுகளில் நீரின்மேலே
கடல் வழியாகத் தூதரை அனுப்புகிறது;
விரைவாய்ச் செல்லும் தூதர்களே,
உயர்ந்து வளர்ந்து, பளபளப்பான தோலுடைய
இனத்தாரிடம் செல்லுங்கள்;
அருகிலும் தொலைவிலும் உள்ளோரை
அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள்;
ஆற்றல் வாய்ந்தவர்கள்,
பகைவரை மிதித்து வெற்றிகொள்பவர்கள் அந்த நாட்டினர்;
ஆறுகள் குறுக்காகப் பாய்ந்தோடும் நாடும் அது.


3 உலகில் குடியிருக்கும் அனைத்து மக்களே,
மண்ணுலகில் வாழ்வோரே,
மலைகளின்மேல் கொடியேற்றும்போது உற்று நோக்குங்கள்;
எக்காளம் ஊதும்போது செவி கொடுங்கள்;


4 ஏனெனில், ஆண்டவர் என்னிடம் இவ்வாறு சொன்னார்:
"பகலில் அடிக்கும் வெப்பம் குறைந்த வெயில் போலும்,
அறுவடைக்கால வெயிலால் உண்டாகும் பனிமேகம் போன்றும்
என் இருப்பிடத்தில் அமைதியாய் இருந்து நான் கவனித்துப் பார்ப்பேன்."


5 ஏனெனில், அறுவடைக்கு முன் பூக்கள் பூத்துக் காய்த்து,
கனிதரும் பருவம் எய்தும்போது,
தழைகளை எதிரி அரிவாள்களால் அறுத்தெறிவான்;
படரும் கொடிகளை அரிந்து அகற்றிவிடுவான்.


6 அவை அனைத்தும், மலைகளில் பிணந்தின்னும் பறவைகளுக்கும்
தரையில் வாழுகின்ற விலங்குகளுக்கும் விடப்படும்.
பிணந்தின்னும் பறவைகள் கோடைக் காலத்திலும்
தரை வாழும் விலங்குகள் குளிர்காலத்திலும் அவற்றின் மேல் தங்கியிருக்கும்.


7 உயர்ந்து வளர்ந்து பளபளப்பான தோலுடைய இனத்தாரின் நாட்டிலிருந்து
அந்நேரத்தில் படைகளின் ஆண்டவருக்குக்
காணிக்கைப் பொருள்கள் கொண்டு வரப்படும்.
அருகிலும் தொலையிலும் உள்ளோரை அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள்.
அந்நாட்டினர் ஆற்றல் வாய்ந்தோர்;
பகைவர்மீது வெற்றிகொள்வோர்.
ஆறுகள் குறுக்காகப் பாய்ந்தோடும் அந்த நாட்டிலிருந்து
படைகளின் ஆண்டவரது பெயர் தங்கியுள்ள சீயோன் மலைக்கு
அக்காணிக்கைகள் கொண்டு வரப்படும். [*]


குறிப்பு

[*] 18:1-7 = செப் 1:12.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 19 முதல் 20 வரை