திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 41 முதல் 42 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்; அது கிடைக்கவில்லை... இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன்." - எசாயா 41:17.

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 41 முதல் 42 வரை

அதிகாரம் 41[தொகு]

இஸ்ரயேலுக்கு ஆண்டவரின் உறுதிமொழி[தொகு]


1 தீவுகளே, என் திருமுன்னே மௌனமாயிருங்கள்;
மக்களினங்கள் தம் ஆற்றலைப் புதுப்பிப்பார்களாக!
அருகில் வந்து பேசுவார்களாக!
நீதித்தீர்ப்புக்காக நாம் ஒருங்கே கூடிவருவோமாக! [1]


2 சென்றவிடமெல்லாம் சிறப்புறும் நேர்மையாளனைக்
கிழக்கிலிருந்து எழும்பச் செய்தவர் யார்?
மக்களினங்களை அவனிடம் கையளித்து
அரசர்களை அவனுக்குக் கீழ்ப்படுத்தியவர் யார்?
அவன் வாள் அவர்களைப் புழுதியாக்குகிறது;
அவன் வில் அவர்களைப் பதர்போல் பறக்கச் செய்கிறது.


3 அவன் அவர்களைத் துரத்திச் செல்கின்றான்;
எதிர்ப்பு எதுவுமின்றி முன்னேறுகின்றான்;
பாதை வழியே காலடி படாது செல்கின்றான்.


4 இவற்றைச்செய்து முடித்தவர் யார்?
தொடக்கத்திலிருந்தே தலைமுறைகளை அழைத்தவரன்றோ!
ஆண்டவராகிய நானே முதலானவர்!
முடிவானவற்றுடன் இருக்கப் போவதும் நானே! [2]


5 தீவு நாட்டினர் அதைப் பார்த்து அஞ்சினர்;
உலகின் எல்லைகளில் வாழ்வோர் நடுநடுங்கினர்;
எனவே அவர்கள் ஒருங்கே கூடி வந்தனர். [3]


6 ஒவ்வொருவரும் தம் அடுத்தவருக்கு உதவி செய்கின்றார்;
தம் அடுத்தவரிடம், 'திடன்கொள்' என்கின்றார். [4]


7 கைவினைஞர் பொற்கொல்லருக்கு ஊக்கமூட்டுகின்றார்;
சுத்தியலால் தட்டுபவர் சம்மட்டியால் அடிப்பவரிடம்,
பற்றவைப்பதுபற்றி, 'நன்று' என்று சொல்லி உற்சாகப்படுத்துகின்றார்;
அசையாதபடி ஆணிகளால் அதை இறுக்குகின்றார்.


8 நீயோ, இஸ்ரயேலே! என் அடியவனே!
நான் தெரிந்தெடுத்த யாக்கோபே!
என் அன்பன் ஆபிரகாமின் வழிமரபே! [*]


9 உலகின் எல்லைகளினின்று உன்னை அழைத்து வந்தேன்;
தொலைநாடுகளினின்று உன்னை அழைத்தேன்;
'நீ என் அடியவன்; நான் உன்னைத் தெரிந்தெடுத்தேன்;
உன்னை நான் தள்ளிவிடவில்லை' என்று சொன்னேன்.


10 அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்;
கலங்காதே, நான் உன் கடவுள்,
நான் உனக்கு வலிமை அளிப்பேன்;
உதவி செய்வேன்;
என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்.


11 உனக்கெதிராய் வெகுண்டெழுவோர் அனைவரும்
மானக்கேடுற்று இழிநிலை அடைவர்;
உன்னை எதிர்த்து வழக்காடுவோர் இல்லாதொழிவர்.


12 உன்னை எதிர்த்துப் போராடியோரை நீ தேடுவாய்;
ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாய்;
உன்னை எதிர்த்துப் போரிட்டோர் ஒழிந்து போவர்.


13 ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்;
உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து,
"அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்"
என்று உன்னிடம் சொல்பவரும் நானே.


14 "யாக்கோபு என்னும் புழுவே,
இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு;
நான் உனக்குத் துணையாய் இருப்பேன்," என்கிறார் ஆண்டவர்.
இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.


15 இதோ, நான் உன்னைப் புதிய
கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன்.
நீ மலைகளைப் போரடித்து நொறுக்குவாய்;
குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய்.


16 அவற்றைத் தூற்றுவாய்,
காற்று அவற்றை வாரிக்கொண்டுபோம்;
புயல் அவற்றைச் சிதறடிக்கும்;
ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்;
இஸ்ரயேலின் தூயவரில் மேன்மை அடைவாய்.


17 ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்;
அது கிடைக்கவில்லை.
அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர்;
ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்;
இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன்.


18 பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன்;
பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்;
பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும்
வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன்.


19 பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன்;
சித்திம் மரம், மிருதுச் செடி, ஒலிவ மரம்
ஆகியன தோன்றச் செய்வேன்;
பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும்,
புன்னை மரங்களையும்,
ஊசியிலை மரங்களையும் வைப்பேன்.


20 அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால் இதைச்செய்தார் என்றும்
இஸ்ரயேலின் தூயவர் அதைப் படைத்தார் என்றும்
மக்கள் கண்டு உணர்ந்து கொள்வர்;
ஒருங்கே சிந்தித்துப் புரிந்து கொள்வர்.

பொய்த் தெய்வங்களுக்கு ஆண்டவரின் அறைகூவல்[தொகு]


21 'உங்கள் வழக்கைக் கொண்டு வாருங்கள்' என்கிறார் ஆண்டவர்.
'உங்கள் ஆதாரங்களை எடுத்துரையுங்கள்', என்கிறார் யாக்கோபின் அரசர்.


22 அத்தெய்வங்கள் அருகில் வந்து,
நிகழப்போவதை நமக்கு அறிவிக்கட்டும்;
முன்னே நடந்தவற்றை எடுத்துரைக்கட்டும்;
நாம் சிந்தித்து அவற்றின் இறுதி விளைவை அறிந்து கொள்வோம்;
இல்லாவிடில் வரவிருப்பவற்றை நமக்கு எடுத்துக்கூறட்டும்.


23 "நீங்கள் தெய்வங்கள் என நாங்கள் உணரும்பொருட்டு
வருங்காலத்தில் நடப்பனவற்றை எங்களுக்குக் கூறுங்கள்;
நன்மையாவது தீமையாவது செய்யுங்கள்;
நாங்கள் யாவரும் ஒன்றாகக்கண்டு திகைத்து நிற்போம்.


24 இதோ, நீங்கள் ஒன்றுமில்லாமை!
உங்கள் செயலும் ஒன்றுமில்லாமையே!
உங்களைத் தேர்ந்துகொள்பவன் வெறுக்கத்தக்கவன்".


25 நான் வடக்கிலிருந்து ஒருவனை எழும்பச் செய்தேன்;
அவன் கதிரவன் உதிக்கும் திசையிலிருந்து வந்துவிட்டான்;
அவன் என் பெயரைப் போற்றுவான்;
ஒருவன் சேற்றைக் குழைப்பதுபோலும்
குயவன் களிமண்ணை மிதிப்பது போலும்
அவன் ஆளுநர்களை நடத்துவான்.


26 நாங்கள் அறியும்படி தொடக்கத்திலிருந்தே
இதை அறிவித்தவர் யார்?
'அது சரி' என்று நாங்கள் சொல்லும்முன்னரே
உரைத்தவர் யார்?
அப்படி எதுவும் அறிவிக்கவில்லை;
முன்னுரைக்கவில்லை;
நீங்கள் பேசியதை யாரும் கேட்டதுமில்லை.


27 "இதோ வருகிறார்கள்" என்று
முதன்முதலில் சீயோனுக்கு அறிவித்தது நானே!
நற்செய்தியாளரை எருசலேமுக்கு அனுப்பியதும் நானே!


28 நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்;
எதையும் காணவில்லை;
அவற்றுள் அறிவுரை வழங்கவோ
என் வினாவுக்கு மறுமொழி தரவோ
எத்தெய்வமும் இல்லை.


29 இதோ அவை அனைத்தும் ஒன்றுமில்லாமையே!
அவற்றின் செயல்களும் ஒன்றுமில்லாமையே!
அவற்றின் படிமங்களோ வெறும் காற்றும் வெறுமையுமே!


குறிப்பு

[*] 41:8 = 2 குறி 20:7; யாக் 2:23.


அதிகாரம் 42[தொகு]

ஆண்டவரின் ஊழியர்[தொகு]


1 இதோ! என் ஊழியர்!
அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்;
நான் தேர்ந்துகொண்டவர் அவர்;
அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது;
அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்;
அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்.


2 அவர் கூக்குரலிடமாட்டார்;
தம் குரலை உயர்த்தமாட்டார்;
தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார்.


3 நெரிந்த நாணலை முறியார்;
மங்கி எரியும் திரியை அணையார்;
உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார்.


4 உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்;
மனம் தளரமாட்டார்;
அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.


5 விண்ணுலகைப் படைத்து விரித்து,
மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து,
அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து,
அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான
இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:


6 ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்;
உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்;
மக்களுக்கு உடன்படிக்கையாகவும்
பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன்.


7 பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும்,
கைதிகளின் தளைகளை அறுக்கவும்,
இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும்
உம்மை அழைத்தேன்.


8 நானே ஆண்டவர்; அதுவே என் பெயர்;
என் மாட்சியைப் பிறருக்கோ,
என் புகழைச் சிலைகளுக்கோ விட்டுக்கொடேன்.


9 முன்னர் நான் அறிவித்தவை நிகழ்ந்துவிட்டன;
புதியனவற்றை நான் அறிவிக்கிறேன்;
அவை தோன்றுமுன்னே உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

புகழ்ச்சிப் பா[தொகு]


10 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
உலகின் எல்லையெங்கும் அவர் புகழ் பாடுங்கள்;
கடலில் பயணம் செய்வோரே,
கடல்வாழ் உயிரினங்களே,
தீவு நாடுகளே, அவற்றில் குடியிருப்போரே,
அவரைப் போற்றுங்கள்.


11 பாலைநிலமும் அதன் நகர்களும்
கேதாரியர் வாழ் ஊர்களும் பேரொலி எழுப்பட்டும்;
சேலா வாழ் மக்களும் மகிழ்ந்து பாடட்டும்;
மலைகளின் உச்சியிலிருந்து அவர்கள் ஆர்ப்பரிக்கட்டும்.


12 அவர்கள் ஆண்டவருக்கு மாட்சி அளிப்பார்கள்;
அவர் புகழைத் தீவு நாட்டினரிடையே அறிவிப்பார்கள்.


13 ஆண்டவர் வலியோன் எனப் புறப்பட்டுச் செல்வார்;
போர்வீரரைப்போல் தீராச் சினம் கொண்டு எழுவார்;
உரத்தக்குரல் எழுப்பி, முழக்கமிடுவார்;
தம் பகைவருக்கு எதிராக வீரத்துடன் செயல்படுவார்.

தம் மக்களுக்கு ஆண்டவரின் உதவி[தொகு]


14 "வெகுகாலமாய் நான் மௌனம் காத்துவந்தேன்;
அமைதியாய் இருந்து என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்,
இப்பொழுதோ, பேறுகாலப் பெண்போல்
வேதனைக்குரல் எழுப்புகின்றேன்;
பெருமூச்சு விட்டுத் திணறுகின்றேன்.


15 மலைகளையும் குன்றுகளையும் பாழாக்குவேன்;
அவற்றின் புல்பூண்டுகளை உலர்ந்து போகச் செய்வேன்;
ஆறுகளைத் திட்டுகளாக மாற்றுவேன்;
ஏரிகளை வற்றிப்போகச் செய்வேன்.


16 பார்வையற்றோரை அவர்கள் அறியாத பாதையில்
நடத்திச் செல்வேன்;
அவர்கள் பழகாத சாலைகளில் வழிநடத்துவேன்;
அவர்கள்முன் இருளை ஒளியாக்குவேன்;
கரடுமுரடான இடங்களைச் சமதளமாக்குவேன்;
இவை நான் அவர்களுக்காகச் செய்யவிருப்பன;
நான் அவர்களைக் கைநெகிழ மாட்டேன்.


17 சிலைகள்மேல் நம்பிக்கை வைப்போரும்,
படிமங்களிடம், 'நீங்கள் எங்கள் தெய்வங்கள்' என்போரும்
இழிநிலையடைந்து, மானக்கேடுறுவர்.

கற்றுக் கொள்ளாத இஸ்ரயேல்[தொகு]


18 செவிடரே, கேளுங்கள்;
குருடரே, கவனமாய்ப் பாருங்கள்.


19 குருடாய் இருப்பவன் எவன்? என் ஊழியன்தான்!
செவிடாய் இருப்பவன் எவன்? நான் அனுப்பும் தூதன் தான்!
எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவன் போல் குருடன் யார்?
ஆண்டவரின் ஊழியன்போல் பார்வையற்றவன் யார்?


20 பலவற்றை நீ பார்த்தும், கவனம் செலுத்தவில்லை;
உன் செவிகள் திறந்திருந்தும் எதுவும் உன் காதில் விழவில்லை.


21 ஆண்டவர் தம் நீதியின் பொருட்டுத்
தம் திருச்சட்டத்தைச் சிறப்பித்து மேன்மைப்படுத்த ஆர்வமுற்றார்.


22 ஆனால் இந்த மக்களினம் கொள்ளையடிக்கப்பட்டுச் சூறையாடப்பட்டது;
அவர்கள் அனைவரும் குழிகளில் சிக்கினர்;
சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர்;
விடுவிப்பார் எவருமிலர்;
கவர்ந்து செல்லப்பட்டனர்;
கொள்ளைப் பொருளாயினர்;
'திருப்பி அனுப்பு' என்று சொல்வாரில்லை.


23 உங்களுள் எவன் இதற்குச் செவி கொடுப்பான்?
எவன் வருங்காலத்திற்காகக் கவனித்துக் கேட்பான்?


24 யாக்கோபைக் கொள்ளைக்காரரிடமும்
இஸ்ரயேலைக் கள்வரிடமும் ஒப்புவித்தவர் யார்?
ஆண்டவரன்றோ?
அவருக்கு எதிராக அன்றோ நாம் பாவம் செய்தோம்!
மக்கள் அவருடைய நெறிகளைப் பின்பற்ற விரும்பவில்லை;
அவரது திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியவில்லை.


25 ஆகவே அவர் அவர்கள்மேல் தம் கோபக்கனலைக் கொட்டினார்;
கடும் போர் மூண்டது;
அவரது சினம் அவர்களைச் சூழ்ந்து பற்றி எரிந்தது;
ஆயினும் அவர்கள் உணரவில்லை;
அவர்களை நெருப்பு சுட்டெரித்தது;
ஆயினும் அவர்கள் சிந்தையில் கொள்ளவில்லை.


குறிப்புகள்

[1] 42:1 = மத் 3:17; 17:5; மாற் 1:11; லூக் 3:22; 9:35.
[2] 42:1-4 = மத் 12:18-21.
[3] 42:3 = திப 17:24-25.
[4] 42:6 = எசா 49:6; லூக் 2:32; திப 13:47; 26:23.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 43 முதல் 44 வரை