திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

விக்கிமூலம் இலிருந்து
"அவளின் தலைவர்கள் இரையைக் கிழிக்கும் ஓநாய்கள்போல் உள்ளனர்." - எசேக்கியேல் 22:27

எசேக்கியேல் (The Book of Ezekiel)[தொகு]

அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

அதிகாரம் 21[தொகு]

ஆண்டவரின் வாள்[தொகு]


1 அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மானிடா! உன் முகத்தை எருசலேம் நோக்கித் திருப்பி,
திருத்தலங்களுக்கு எதிராக அரளுரையாற்றி,
இஸ்ரயேல் மண்ணுக்கு எதிராக இறைவாக்குரை.
3 இஸ்ரயேல் மண்ணுக்குச் சொல்:
ஆண்டவர் கூறுவது இதுவே.
இதோ, நான் உனக்கு எதிராக எழுந்து,
என் வாளை உறையினின்று உருவி,
உன்னிலிருக்கும் நேரியவர்களையும், தீயவர்களையும் வெட்டி வீழ்த்துவேன்.
4 உன்னிலிருக்கும் நேரியவரையும் தீயவரையும்
நான் வெட்டி வீழ்த்தப் போவதால்,
தென்திசைமுதல் வடதிசை வரையுள்ள அனைவருக்கும் எதிராக
என் வாள் உறையினின்று உருவப்படும்.
5 ஆண்டவராகிய நானே என் வாளை
உறையினின்று உருவியுள்ளேன்.
இனி அது மீண்டும் உறைக்குள் இடப்படாது என்பதை
அனைவரும் அப்போது அறிந்து கொள்வர்.
6 மானிடா! நீயோ பெருமூச்சுவிட்டு அழு;
உடைந்த உள்ளத்தோடும் மனக்கசப்போடும்
அவர்கள் கண்முன் பெருமூச்செறிந்து அழு!
7 'ஏன் பெருமூச்செறிந்து அழுகிறாய்?' என்று
அவர்கள் உன்னைக் கேட்பார்கள்.
அப்போது நீ சொல்:
வரப்போவதை நான் கேள்விப்பட்டிருப்பதால்தான்.
அது வரும்போது இதயமெல்லாம் உருகும்;
கைகளெல்லாம் தளரும்; மனமெல்லாம் மயங்கும்;
முழங்கால்களெல்லாம் நீரைப்போல் அலம்பும்.
இதோ அது வருகிறது. அது வந்தே தீரும்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

பாபிலோன் மன்னனின் வாள்[தொகு]


8 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.


9 மானிடா! இறைவாக்காகச் சொல்;
தலைவர் கூறுவது இதுவே;
ஒரு வாள்! கூர்மையாக்கப்பட்டதும் துலக்கப்பட்டதுமான வாள்!


10 படுகொலை செய்வதற்கென அது கூர்மையாக்கப்பட்டுள்ளது!
மின்னலென ஒளிர்வதற்கென அது துலக்கப்பட்டுள்ளது!
நாம் மகிழ்ச்சி கொள்வோமா?
ஏனெனில், என் மக்கள் எல்லா எச்சரிக்கைகளையும்
தண்டனைகளையும் புறக்கணித்து விட்டனர்.


11 கையில் பிடிப்பதற்காகவே அவ்வாள்
துலக்கி வைக்கப்பட்டுள்ளது;
கொலைஞனின் கரத்தில் கொடுப்பதற்காகவே
அவ்வாள் கூர்மையாக்கப்பட்டுத் துலக்கப்பட்டுள்ளது.


12 மானிடா! நீ ஓலமிட்டு அலறு;
ஏனெனில், அது என் மக்களை நோக்கியும்
இஸ்ரயேலின் தலைவர்கள் அனைவரை நோக்கியும் வீசப்படும்;
என் மக்களுடன் அவர்கள் அனைவரும் அவ்வாளுக்கு இரையாவர்.
ஆகையால் உன் மார்பிலே அறைந்து கொள்.


13 உண்மையாகவே இது ஒரு சோதனை;
அவர்கள் மனமாற மறுத்தால்,
இவை அனைத்தும் அவர்களுக்கு நிகழும்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.


14 மானிடா! நீயோ இறைவாக்குரை; கை கொட்டு;
இருமுறை, மும்முறை வாள் வீசப்படட்டும்;
கொலைக்கான வாள் அது;
அவர்களைச் சூழ்ந்து வரும் படுகொலைக்கான வாள் அது.


15 அது இதயங்களைக் கலங்கச் செய்யும்;
நான் வைத்துள்ள அவ்வாள்
ஒவ்வொரு நகர் வாயிலிலும் பலரை வீழ்த்தும்.
ஆம், அது மின்னுவதற்காகச் செய்யப்பட்டது;
கொலைக்காகக் கூர்மையாக்கப்பட்டது.


16 'வலப்புறமும், இடப்புறமும் உன் கூர்மையைக் காட்டு;
எத்திசையெல்லாம் உன் முகம் திருப்பப்படுகிறதோ
அங்கெல்லாம் காட்டு;


17 நானும் கை கொட்டிச் சினம் தீர்த்துக்கொள்வேன்.
இதை உரைப்பவர் ஆண்டவராகிய நானே.


18 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.
19 மானிடா! பாபிலோன் மன்னனின் வாள் வருவதற்கென்று
நீ இரண்டு சாலைகள் அமை.
அவ்விரண்டும் ஒரே நாட்டினின்று புறப்படவேண்டும்.
ஒரு கைகாட்டியைச் செய்து
நகருக்குச் செல்லும் சாலையின் தொடக்கத்தில் நாட்டிவை.
20 அம்மோனியரின் இராபாவுக்கும்,
யூதாவின் அரண்சூழ் எருசலேமுக்கும்
வாள் செல்லும் வகையில் சாலை அமை.
21 ஏனெனில் பாபிலோன் மன்னன்
இரு சாலைகளும் பிரியும் சந்தியில்
நிமித்தம் பார்ப்பதற்காக நிற்கிறான்.
அம்புகளை உலுக்கிப் போடுகிறான்.
குலதெய்வச் சிலைகளிடம் திருவுளம் கேட்கிறான்;
ஈரலால் நிமித்தம் பார்க்கிறான்.
22 அவனது வலக்கையில் எருசலேமுக்குப்
போகும்படியான குறி விழுந்தது.
அரண் தகர்ப்புப் பொறிகளை அமைப்பதற்கும்,
கொலைக்கான ஓலத்தை எழுப்புவதற்கும்,
குரலை உயர்த்திப் போர்க் கூச்சலிடுவதற்கும்,
வாயில்களுக்கு நேராக அரண் தகர்ப்புப் பொறிகளை அமைப்பதற்கும்,
மண்மேடு எழுப்பி முற்றுகை அரணைக்
கட்டுவதற்குமான குறி விழுந்தது.
23 ஆனால், ஏற்கெனவே, ஒப்பந்தம் செய்துகொண்டர்களின்
பார்வையில் இதெல்லாம் பொய்க்குறியாகத் தோன்றுகிறது.
ஆனால் அவர்களது குற்றம் மறக்கப்படாமல்
அவர்கள் சிறைப்பிடிக்கப்படுவர்.
24 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்;
உங்கள் குற்றம் மறக்கப்படவில்லை.
நீங்கள் இழைத்த தவறுகள் வெளியாக்கப்பட்டுள்ளன.
உங்கள் செயல்கள் எல்லாவற்றிலும்
உங்கள் பாவங்கள் காணப்படுகின்றன.
இங்ஙனமே நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதால்
கைதிகளாய்ப் பிடிக்கப்படுவீர்கள்.


25 இஸ்ரயேலின் தீட்டுப்பட்ட தீய தலைவனே,
உனக்கு இறுதித் தண்டனைக்கெனக்
குறிக்கப்பட்ட நாள் இதோ வந்துவிட்டது.
26 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
உன் தலைப்பாகையை எடுத்துவிடு,
மகுடத்தை அகற்றி விடு.
இப்போதைய நிலை இனி தொடராது.
தாழ்ந்தோர் உயர்வர். உயர்ந்தோர் தாழ்வர்.
27 நான் தரவிருப்பது அழிவு, அழிவு, அழிவு.
தண்டனைத் தீர்ப்பு வழங்குபவர் எவரோ
அவர் வரும்வரை அது நடவாது.
அவருக்கே அப்பொறுப்பை அளிப்பேன்.

ஒரு வாளும் அம்மோனியரும்[தொகு]


28 நீயோ, மானிடா! இறைவாக்குரை.
அம்மோனியரையும் அவர்களின் பழிப்புரையையும் குறித்துத்
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
இதோ வாள்! கொலை செய்வதற்காக வாள் உருவப்பட்டுள்ளது.
மின்னலைப் போல் ஒளிர்ந்து,
வெட்டி வீழ்த்துவதற்காக அது கூர்மையாக்கப்பட்டுள்ளது.
29 உன்னைக் குறித்து வீணான காட்சிகள் கண்டு,
பொய்யான குறிகள் சொன்னாலும்,
வெட்டப்படவிருக்கும் தீயோரின் பிடரியில் வாள் விழும்.
அந்த வாள் வந்து விட்டது.
தண்டனை உச்ச நேரத்தை எட்டிவிட்டது.
30 நீ, வாளைத் திரும்ப உறையிலே போடு.
நீ படைக்கப்பட்ட ஊரில்,
நீ பிறந்த மண்ணில் நான் உன்னைத் தீர்ப்பிடுவேன்.
31 என் ஆத்திரத்தை உன்மேல் கொட்டுவேன்.
என் சினத்தீயை உன்மேல் பொழிவேன்.
அழிப்பதில் வல்லவர்களான கொடியோரின் கையில் உன்னை ஒப்புவிப்பேன்.
32 நீ தீக்கிரையாவாய்.
உன் இரத்தம் நாட்டினுள் சிந்திக் கிடக்கும்.
ஏனெனில் நீ நினைக்கப்படமாட்டாய்.
ஆண்டவராகிய நானே இதை உரைத்துள்ளேன். [*]


குறிப்பு

[*] 21:28-32 = எரே 49:1-6; எசே 25:1-7;
ஆமோ 1:3-15; செப் 2:8-11.


அதிகாரம் 22[தொகு]

எருசலேமின் குற்றங்கள்[தொகு]


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 'மானிடா! அவளுக்குத் தீர்ப்பிட மாட்டாயா?
குருதியைச் சிந்திய இந்நகருக்கு நீ தீர்ப்பிட மாட்டாயா?
அவ்வாறெனில், அவளின் எல்லா அருவருப்புகளையும் எடுத்துக்கூறு.'
3 நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
தனக்குத் தண்டனை நாள் வரும்படித்
தன் நடுவில் குருதியைச் சிந்தித்
தனக்கெனச் சிலைகளைச் செய்து
தீட்டுப்படுத்திக் கொண்ட நகர் இதுவே!
4 நீ சிந்திய குருதியினால் குற்றப்பழிக்கு ஆளானாய்.
நீ வடித்த தெய்வச் சிலைகளால் தீட்டுப்பட்டவளானாய்.
நீ உன் நாள்களை முடித்து விட்டாய்.
உன் ஆண்டுகளை முடிவுக்குக் கொணர்ந்து விட்டாய்.
ஆகவே உன்னை வேற்றினத்தாருக்கு இழி பொருளாகவும்,
எல்லா நாட்டினருக்கும் ஏளனப் பொருளாகவும் ஆக்குவேன்.
5 உன் அருகில் உள்ளோரும் தொலைவில் உள்ளோரும்
உன்னைப் பேர்கெட்ட நகர் எனவும்
அமளி நிறைந்தவள் எனவும் இகழ்வர்.
6 உன்னிடத்திலுள்ள இஸ்ரயேலின் தலைவர்கள்
தங்கள் வலிமையால் குருதி சிந்துகிறார்கள்;
7 உன்னிடையே தாய் தந்தையரை அவமதித்தார்கள்;
அன்னியரைத் துன்புறுத்தித்
தந்தையற்றோரையும் கைம்பெண்களையும்
இழிவாய் நடத்தினார்கள். [1]
8 நீயோ எனக்குரிய தூய்மையானவற்றை அவமதித்து,
ஓய்வுநாள்களைத் தீட்டுப்படுத்தினாய். [2]
9 புறங்கூறிக் கொலை செய்வோர் உன்னிடம் உள்ளனர்.
அவர்கள் மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்கின்றனர்.
உன்னிடையே முறைகேடானதைச் செய்கின்றனர்.
10 தங்கள் தந்தையின் திறந்த மேனியை
வெளிப்படுத்துகிறவர்களும்
தீட்டான காலத்தில் பெண்களைப் பலவந்தப் படுத்துகிறவர்களும்
உன்னிடையே உள்ளனர்.
11 ஒருவன் அடுத்திருப்பவன் மனைவியுடன் முறைதவறி நடக்கிறான்.
இன்னொருவன் வெட்கமின்றித் தன் மருமகளைக் கெடுக்கிறான்.
வேறொருவன் தன் தந்தைக்குப் பிறந்த
தன் சகோதரியையே பலவந்தப்படுத்துகிறான். [3]
12 உன்னிடையே பலர் குருதி சிந்தக் கையூட்டுப் பெறுகின்றனர்.
நீ வட்டி வாங்குகிறாய்,
கொடுத்ததற்கு மேலாய்ப் பிடுங்கி,
அடுத்திருப்பவனை ஒடுக்குகிறாய்.
நீ என்னை மறந்துவிட்டாய்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர். [4]
13 உன் நீதியற்ற வருமானத்தை முன்னிட்டும்
நீ உன்னிடையே சிந்திய இரத்தத்தை முன்னிட்டும்
நான் என் கைகளைத் தட்டுவேன்.
14 நான் உன்னைத் தண்டிக்கும் நாளில்
உன் மனவுறுதி நிலைத்திருக்குமா?
அல்லது உன் கைகள் வலிமையுடன் விளங்கிடுமா?
ஆண்டவராகிய நானே இதைச் சொல்கிறேன்.
நான் இதைச் செய்தே தீர்வேன்.
15 உன்னை வேற்றினத்தாரிடையே சிதறடிப்பேன்;
நாடுகளிடையே கலந்தொழியச் செய்வேன்;
உன் அருவருப்புக்கு ஒரு முடிவு கட்டுவேன்.
16 வேற்றினத்தாரிடையே தீட்டுப்பட்டவளாய் நீ நிற்கையில்,
நானே ஆண்டவர் என அறிந்து கொள்வாய்.

கடவுளின் புடமிடும் சூளை[தொகு]


17 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
18 'மானிடா! இஸ்ரயேல் வீட்டார் எனக்குக் களிம்பாகிவிட்டனர்.
அவர்கள் எல்லாரும் எரி நெருப்பில் கிடக்கும் வெள்ளி,
வெண்கலம், வெள்ளீயம், இரும்பு,
ஈயம் ஆகியன போலாயினர்;
அவர்கள் களிம்பாகி விட்டார்கள்'.
19 ஆகவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
நீங்கள் யாவரும் களிம்பாகி விட்டதால்
உங்கள் எல்லாரையும் எருசலேமில் ஒன்று சேர்ப்பேன்.
20 வெள்ளி, வெண்கலம், இரும்பு, ஈயம்
ஆகியவற்றை நெருப்பிலிட்டு உருக்குவது போல்
நானும் என் சினத்திலும் சீற்றத்திலும்
நகரின் நடுவில் இட்டு உருக்குவேன்.
21 நான் உங்களை ஒன்றாய்ச் சேர்த்து,
உங்கள் மீது என் சினத்தின் கனலை ஊதுவேன்.
நீங்களும் நகரின் நடுவில் உருக்கப்படுவீர்கள்.
22 வெள்ளி சூளையில் உருக்கப்படுவது போல்
நீங்களும் அதன் நடுவில் உருக்கப்படுவீர்கள்.
அதன் மூலம் ஆண்டவராகிய நான்
என் சினத்தை உங்கள் மீது கொட்டியுள்ளேன்
என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

இஸ்ரயேல் தலைவர்களின் பாவங்கள்[தொகு]


23 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
24 'மானிடா! அந்த நாட்டுக்குச் சொல்:
நீ தூய்மைப்படுத்தப் பெறாத நாடு.
ஏனெனில் என் சினத்தின் நாள்களில் உன்னில் மழை பெய்யவில்லை.
25 அவளின் போலி இறைவாக்கினர் சதித்திட்டம் தீட்டி
இரையைக் கிழிக்கும் கர்ச்சிக்கின்ற சிங்கம் போல்
மக்களை விழுங்குகிறார்கள்.
அவர்கள் விலையுயர்ந்த கருவூலத்தையும்
பொருள்களையும் எடுத்துச் செல்கின்றனர்.
கைம்பெண்களை நகரிடையே மிகுதியாக்குகின்றனர்.
26 அவளின் குருக்கள் என் திருச்சட்டத்தை மீறுகின்றனர்.
எனக்குரிய தூய்மையானவற்றைத் தீட்டுப்படுத்துகின்றனர்.
தூய்மையானவற்றிற்கும் பொதுவானவற்றிற்கும் வேற்றுமைபாராமலும்,
தீட்டானவற்றையும் தீட்டற்றவற்றையும் பிரித்துணராமலும் இருக்கின்றனர்.
ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பது பற்றிக் கவலையற்றிருந்தனர்.
நானோ அவர்களால் அவமதிப்புக்குள்ளானேன். [5]
27 அவளின் தலைவர்கள் இரையைக் கிழிக்கும் ஓநாய்கள்போல் உள்ளனர்.
அநீதியாய்ச் செல்வம் ஈட்ட மக்களை கொலை செய்து குருதி சிந்துகின்றனர்.
28 அவளின் போலி இறைவாக்கினர் இச்செயல்களைப்
பொய்க்காட்சிகள் மூலமும்,
பொய்க்குறிகள் மூலமும் வெள்ளையடித்து மூடி மறைக்கிறார்கள்.
ஆண்டவர் சொல்லாதபோதே
'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே' என்கிறார்கள்.
29 நாட்டின் பொதுமக்கள் பிறர்பொருளைப் பறிக்கின்றனர்;
கொள்ளையடிக்கின்றனர்.
ஏழைகளையும் எளியவர்களையும் துன்புறுத்தி,
அன்னியரை இழிவாய் நடத்தி, நீதி வழங்க மறுக்கின்றனர்.
30 எனக்கும் இந்நாட்டு மக்களுக்குமிடையே
ஒரு சுவரை எழுப்பி,
அதன் மூலம் நான் இந்த நாட்டு மக்களை அழிக்காதபடி
தடுப்பவன் ஒருவனை அவர்களிடையே தேடினேன்.
ஆயினும் யாரும் கிட்டவில்லை.
31 எனவே நான் அவர்கள்மேல்
என் சினத்தைக் கொட்டி
என் எரிசினத்தால் அவர்களை விழுங்குவேன்.
அவர்கள் செய்த எல்லாவற்றையும் அவர்கள் தலைமீதே சுமத்துவேன்'
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.


குறிப்புகள்

[1] 22:7 = விப 20:12; 22:21-22; இச 5:16; 24:17.
[2] 22:8 = லேவி 19:30; 26:2.
[3] 22:10-11 = லேவி 18:17-20.
[4] 22:12 = விப 22:25; 23:8; லேவி 25:36-37;
இச 16:19; 23:19.
[5] 22:26 = லேவி 10:10.


(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 23 முதல் 24 வரை