திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

விக்கிமூலம் இலிருந்து
கோராகு, தாத்தான், அபிராம் தண்டிக்கப்படுதல் (எண் 16). ஓவியர்: சான்ட்ரோ பொட்டிச்செல்லி (1445-1510). வரையப்பட்ட ஆண்டு: 1481-1482. காப்பிடம்: வத்திக்கான் நகர்.

எண்ணிக்கை[தொகு]

அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

அதிகாரம் 15[தொகு]

பலி பற்றிய சட்டங்கள்[தொகு]


1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 நீ இஸ்ரயேல் மக்களிடம் இவ்வாறு சொல்: நீங்கள் குடியிருக்க நான் உங்களுக்குத் தரும் நாட்டினுள் வரும்போது மாட்டு மந்தையிலிருந்து அல்லது ஆட்டு மந்தையிலிருந்து நெருப்புப் பலியொன்றை ஆண்டவருக்குப் படைப்பாய்;
3 அது எரிபலியாகவோ வேறு பலியாகவோ இருக்கும்; அது பொருத்தனையை நிறைவேற்றுவதாகவோ, தன்னார்வப் படையலாகவோ, குறிக்கப்பட்ட திருநாளில் செய்வதாகவோ இருக்கும்; அது ஆண்டவர் விரும்பத்தக்க நறுமணத்தை ஏற்படுத்தும்.
4 அப்போது ஆண்டவருக்குப் படையல் கொண்டு வருபவன் உணவுப் படையலாகப் பத்திலொரு மரக்கால் மெல்லிய மாவைக் கால்படி எண்ணெயில் பிசைந்து படைக்க வேண்டும்.
5 எரிபலியோ வேறு பலியோ செலுத்துகையில் ஆட்டுக்குட்டி ஒவ்வொன்றுக்கும் கால்படி திராட்சைரசம் என நீர்மப்படையல் ஆயத்தப்படுத்தி வைக்க வேண்டும்.
6 ஆட்டுக் கிடாயாக இருந்தால், உணவுப் படையலாகப் பத்தில் இரண்டு பங்கு மரக்கால் மிருதுவான மாவை மூன்றிலொருபடி எண்ணெயில் பிசைந்து ஆயத்தப்படுத்துவீர்கள்.
7 நீர்மப்படையலாக நீங்கள் மூன்றிலொருபடி திராட்சை ரசம் படைப்பீர்கள்; இது ஆண்டவர் விரும்பும் நறுமணமாயிருக்கும்.
8 ஒரு பொருத்தனையை நிறைவேற்ற அல்லது ஆண்டவருக்கு நல்லுறவுப் பலியாக ஒரு காளையை எரிபலியாகவோ வேறுபலியாகவோ நீங்கள் ஆயத்தப்படுத்தும்போது,
9 அந்தக் காளையுடன் உணவுப் படையலாக பத்தில் மூன்று பங்கு மரக்கால் மெல்லிய மாவை அரைப்படி எண்ணெயில் பிசைந்து படைக்க வேண்டும்.
10 நீர்மப் படையலாக அரைப்படித் திராட்சை ரசத்தைக் கொண்டுவர வேண்டும். அது நெருப்புப் பலியாகி ஆண்டவர் விரும்பும் நறுமணமாக விளங்கும்.


11 காளை, ஆட்டுக்கிடாய், செம்மறிக் குட்டி அல்லது வெள்ளாட்டு க்குட்டி ஒவ்வொன்றுக்கும் இவ்வாறே செய்யவேண்டும்.
12 நீங்கள் ஆயத்தம் செய்யும் எண்ணிக்கைப்படி அவற்றின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொன்றிற்கும் நீங்கள் இப்படியே செய்வீர்கள்.
13 உள்நாட்டவர் அனைவரும் ஆண்டவர் விரும்பும் நறுமணமான நெருப்புப் பலியாக இவற்றை இம்முறையில் செலுத்த வேண்டும்.
14 உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவரோ தலைமுறைதோறும் உங்களோடிருப்பவரோ ஆண்டவர் விரும்பும் நறுமணமாக நெருப்புப் பலி செலுத்த விரும்பினால் அவரும் நீங்கள் செய்கிறபடியே செய்ய வேண்டும்.


15 சபையில், உங்களுக்கும் உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவருக்கும் ஒரே விதிமுறையே; உங்கள் தலைமுறைதோறும் என்றுமுள்ள விதிமுறை இதுவே; உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவர் ஆண்டவர் திருமுன் உங்களைப் போன்றே இருப்பார்.
16 உங்களுக்கும் உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவருக்கும் ஒரே சட்டம், ஒரே நீதித் தீர்ப்பு. [1]


17 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
18 நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்ல வேண்டியது: "நான் உங்களை அழைத்துச் செல்லும் நாட்டுக்குள் நீங்கள் வந்து,
19 அந்நாட்டின் உணவை நீங்கள் உண்ணும்போது ஆண்டவருக்கென உயர்த்திப் படைக்கும் படையலொன்றை அர்ப்பணிப்பீர்கள்.
20 முதல் மாவிலிருந்து பிசைந்து செய்த ஓர் அடையை நீங்கள் உயர்த்திப் படைக்கும் படையலாக அர்ப்பணிக்க வேண்டும்; போரடிக்கும் களத்திலிருந்து வரும் படையல் போன்றே அதை நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும்.
21 முதல் மாவிலிருந்து பிசைந்து செய்ததை ஆண்டவருக்கு ஒரு உயர்த்திப் படைக்கும் படையலாக உங்கள் தலைமுறை தோறும் கொடுப்பீர்கள்.


22 ஆயினும் நீங்கள் ஆண்டவர் மோசேக்கு இட்ட இந்தக் கட்டளைகளை மீறினால்,
23 ஆண்டவர் கட்டளை கொடுத்தநாள் முதல் தலைமுறைதோறும் மோசே வழியாக அவர் கட்டளையிட்ட எல்லாவற்றிலும்
24 மக்கள் கூட்டமைப்புக்கு அறியாப் பிழையேதும் செய்தால், முறைப்படி மக்கள் கூட்டமைப்பு முழுவதும் ஆண்டவர் விரும்பும் நறுமணமாக, அதன் உணவுப் படையலோடும் நீர்மப் படையலோடும் சேர்த்து ஓர் இளங்காளையை எரிபலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாயைப் பாவம் போக்கும் பலியாகவும் செலுத்த வேண்டும்.
25 குரு இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதுக்குமாக பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்; அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்; ஏனெனில் அது ஓர் அறியாப்பிழை; அவர்கள் தங்கள் படையலை ஆண்டவருக்கு ஒரு நெருப்புப் பலியாகவும் தங்கள் அறியாப் பிழைக்காக ஆண்டவர் முன் பாவம்போக்கும் பலியாகவும் கொண்டுவந்து விட்டார்கள்.
26 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும், அவர்களிடையே தங்கியிருக்கும் அயல் நாட்டவரும் மன்னிக்கப்படுவார்கள்; ஏனெனில் மக்கள் அனைவருமே இந்த அறியாப் பிழையில் பங்கு கொண்டவர்கள்.


27 அறியாமல் ஓர் ஆள் பாவம் செய்தால் அவன் பாவ நீக்கப்பலியாக ஒரு வயது வெள்ளாடு ஒன்றைப் படைக்க வேண்டும். 28 ஒருவன் அறியாப் பிழை செய்தால் அவனுக்காகக் குரு ஆண்டவர்முன் கறைநீக்கம் செய்வார்; அவனது அறியாப் பிழைக்காக அவனுக்குக் கறை நீக்கம் செய்யப்படும்; அவன் மன்னிக்கப்படுவான். [2]
29 ஒருவன் அறியாமல் செய்யும் எதற்கும், அவன் இஸ்ரயேல் மக்களைச் சார்ந்த உள்நாட்டவனாயினும் அவர்களிடையே தங்கியிருக்கும் அயல் நாட்டவனாயினும் உங்களிடம் இருக்க வேண்டியது ஒரே சட்டமே.
30 ஆனால் ஒருவன் வேண்டுமென்றே எதையும் துணிந்து செய்தால் அவன் உள்நாட்டவனாயினும் உங்களிடையே இருக்கும் அயல்நாட்டவனாயினும் அவன் ஆண்டவரை ஏளனம் செய்கிறான்; அந்த ஆள் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்படவேண்டும்.
31 ஏனெனில் அவன் ஆண்டவரின் வாக்கை இகழ்ந்துவிட்டான், அவர்தம் கட்டளையை மீறிவிட்டான்; அந்த ஆள் முற்றிலும் விலக்கிவைக்கப்படவேண்டும்; அவன் குற்றம் அவன் மேலேயே இருக்கும்."

ஓய்வுநாளை மீறிய மனிதன்[தொகு]


32 இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் இருக்கையில் ஓய்வுநாளில் ஒரு மனிதன் விறகு பொறுக்கிக் கொண்டிருந்ததைக் கண்டனர்.
33 அவன் விறகு பொறுக்கியதைக் கண்டவர்கள் அவனை மோசேயிடமும் ஆரோனிடமும் மக்கள் கூட்டமைப்பு அனைத்திடமும் கூட்டி வந்தனர்.
34 அவர்கள் அவனைக் காவலில் வைத்தனர்; ஏனெனில் அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்பது தெளிவாக இல்லை.
35 ஆண்டவர் மோசேயிடமும், "இந்த மனிதன் கொல்லப்படவேண்டும்; மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் பாளையத்துக்கு வெளியே அவனைக் கல்லால் எறிய வேண்டும்" என்றார்.
36 மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் அவனைப் பாளையத்துக்கு வெளியே கொண்டுவந்து ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவனைக் கல்லால் எறிந்தனர்; அவனும் செத்தான்.

தொங்கல்கள் பற்றிய விதிகள்[தொகு]


37 மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
38 இஸ்ரயேல் மக்களிடம் நீ பேசு; அவர்கள் தலைமுறைதோறும் தங்கள் உடைகளின் முனைகளில் குஞ்சங்கள் செய்து ஒவ்வொரு குஞ்சத்திலும் ஒரு நீல நாடாவைக் கட்டச் செய்; [3]
39 நீங்கள் ஒழுக்கம் கெட்டு நடப்பதற்கு ஏதுவாய் உங்கள் இதயங்களும் உங்கள் கண்களும் விரும்புவதைப் பின்பற்றாமல் நீங்கள் அவற்றைப் பார்த்து ஆண்டவர் கட்டளைகள் அனைத்தையும் நீங்கள் நினைவுகூர்ந்து அவற்றைச் செய்திடவே இக்குஞ்சம்.
40 அதனால் நீங்கள் என் கட்டளைகளையெல்லாம் நினைவில் கொண்டு அவற்றை நிறைவேற்றுவீர்கள், உங்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாயிருப்பீர்கள்.
41 உங்களுக்குக் கடவுளாயிருக்கும்படி உங்களை எகிப்து நாட்டிலிருந்து கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே; நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.


குறிப்புகள்

[1]15:16 = லேவி 24:22.
[2] 15:27-28 = லேவி 4:27-31.
[3] 15:38 = இச 22:12.


அதிகாரம் 16[தொகு]

கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் புரட்சி[தொகு]


1 லேவியின் மகன் கோகாத்துக்குப் பிறந்த இட்சகாரின் புதல்வன் கோராகும், ரூபன் வழிவந்த எலியாபு புதல்வர்கள் தாத்தான், அபிராமும், பெலேத்தின் மகன் ஓனும், [*]
2 இஸ்ரயேல் மக்களில் சிலரைச் சேர்த்துக்கொண்டு மோசேக்கு எதிராக எழும்பினர். இவர்கள் மக்கள் கூட்டமைப்பிலிருந்து சபையில் தெரிந்தெடுக்கப்பட்ட பேர்பெற்ற இருநூற்றைம்பது தலைவர்கள் ஆவர்.
3 அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கூடி வந்து அவர்களிடம், "நீங்கள் மிதமிஞ்சிப் போய்வீட்டீர்கள்; மக்கள் கூட்டமைப்பு முழுவதிலுமுள்ள ஒவ்வொருவரும் தூயவர்தாம்; ஆண்டவரும் அவர்களோடு இருக்கிறார்; அப்படியிருக்க ஏன் ஆண்டவரின் சபைக்கு மேலாக உங்களை உயர்த்திக் கொள்கிறீர்கள்?" என்று கேட்டனர்.
4 மோசே இதைக் கேட்டு முகங்குப்புற விழுந்தார்.
5 அவர் கோராகிடமும் அவன் கூட்டத்தவரிடமும் கூறியது: காலையில் ஆண்டவர் தம்முடையவன் யார், தூய்மையானவன் யார் என்று காட்டி அவனைத் தம்மருகே வரச் செய்வார்; தாம் தெரிந்துகொண்டவனையே அவர் தம்மருகே வரச் செய்வார்;
6 செய்யவேண்டியது இதுவே; கோராகே! அவன் கூட்டத்தவரே! தூப கலசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்;
7 நாளை ஆண்டவர் திருமுன் அவற்றில் நெருப்பையும் தூபத்தையும் போடுங்கள்; ஆண்டவர் தெரிந்து கொள்ளுகிற மனிதனே தூயவனாயிருப்பான்; லேவியின் புதல்வரே! நீங்கள்தாம் மிதமிஞ்சிப் போய் விட்டீர்கள்.
8 மேலும் மோசே கோராகிடம் கூறியது: லேவியின் புதல்வரே! இப்போதும் கேளுங்கள்;
9 இஸ்ரயேலின் கடவுள் உங்களைத் தம்மருகில் வரச்செய்து, ஆண்டவரின் திருவுறைவிடத்தல் நீங்கள் பணி செய்யவும் மக்கள் கூட்டமைப்பின்முன் நின்று அவர்களுக்குச் சேவை செய்யவும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்தது அற்பமான காரியமா?
10 அவர் உன்னையும் லேவியின் புதல்வரின் உன் சகோதரர் அனைவரையும் தம்மருகில் வரச் செய்தாரே! இதனோடு குருத்துவத்தையும் நாடுவீர்களோ?
11 ஆதலால் நீயும் உன் கூட்டத்தவரும் ஆண்டவருக்கு எதிராகவே இருக்கிறீர்கள்; ஆரோனுக்கு எதிராக நீங்கள் முறுமுறுப்பதற்கு அவர் யார்?


12 பின் மோசே ஆளனுப்பி எலியாபின் புதல்வர் தாத்தானையும் அபிராமையும் அழைத்தார். அவர்களோ, "நாங்கள் வர மாட்டோம்;
13 இப்பாலை நிலத்தில் எங்களைக் கொல்லும்படி, பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிலிருந்து எங்களைக் கொண்டு வந்து, இப்போது எங்கள்மேல் நீர் உம்மை அதிகாரியாக்கிக் கொள்வது அற்பமான காரியமா?
14 மேலும் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிற்கு நீர் எங்களைக் கொண்டு வரவுமில்லை; திராட்சைத் தோட்டங்களை எங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கவுமில்லை; இம்மனிதர்களின் கண்களைப் பிடுங்கி விடுவீரோ? நாங்கள் வரவே மாட்டோம்" என்றனர்.


15 மோசே கடுஞ்சினம் கொண்டார். அவர் ஆண்டவரிடம், "இவர்கள் படையலை ஏற்க வேண்டாம்; இவர்களிடமிருந்து ஒரு கழுதையைக் கூட நான் வாங்கியதில்லை; இவர்களில் ஒருவனுக்கும் நான் தீங்கிழைத்ததில்லை" என்றார்.
16 பின் மோசே கோராகிடம், "நீயும் உன் கூட்டத்தார் எல்லாரும் - நீயும் அவர்களும் ஆரோனும் நாளை ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்;
17 உங்களுள் ஒவ்வொருவனும் தன் தூப கலசத்தை எடுத்து, அதில் தூபமிட்டு, ஆளுக்கு ஒன்றாக மொத்தம் இருநூற்றைம்பது தூப கலசங்களை, ஆண்டவர் திருமுன் கொண்டு வரட்டும். நீயும் ஆரோனும் உங்கள் தூப கலசங்களைக் கொண்டு வாருங்கள்" என்றார்.
18 அவ்வாறே ஒவ்வொருவனும் தன் தூப கலசத்தை எடுத்துக்கொண்டான்; அவர்கள் அவற்றில் நெருப்பையும் தூபத்தையும் போட்டார்கள்; அவர்கள் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் மோசேயுடனும் ஆரோனுடனும் நின்றார்கள்.
19 பின் கோராகு மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் அவர்களுக்கெதிரே சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் ஒன்று கூட்டினான். ஆண்டவரின் மாட்சி மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் தோன்றியது.


20 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும்,
21 "ஒரு நொடியில் நான் இவர்களை எரித்து விடும்படி இந்த மக்கள் கூட்டமைப்பிலிருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளுங்கள்" என்றார்.
22 அவர்களோ முகங்குப்புறவிழுந்து, "கடவுளே! உடல் பூண்ட உயிர்கள் அனைத்துக்கும் கடவுளே! ஒரேயொருவன் பாவம் செய்திருக்க மக்கள் கூட்டமைப்பு முழுவதன் மீதும் நீர் சினங்கொள்வது ஏன்?" என்றனர்.
23 உடனே ஆண்டவர் மோசேயிடம்,
24 "கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அகன்று போகும்படி மக்கள் கூட்டமைப்பிடம் சொல்" என்றார்.


25 மோசே எழுந்து தாத்தானிடமும் அபிராமிடமும் போனார்; இஸ்ரயேல் மூப்பர் அவருக்குப் பின்னால் சென்றனர்.
26 அவர் மக்கள் கூட்டமைப்பிடம், "இந்தப் பொல்லாத மனிதரின் பாவங்களோடு சேர்ந்து நீங்கள் அழிக்கப்படாதபடி அவர்கள் கூடாரங்களை விட்டு அகன்று போகும்படி உங்களை வேண்டுகிறேன்; அவர்களுக்குரிய எதையும் தொட வேண்டாம்" என்றார்.
27 அவ்வாறே கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அவர்கள் அகன்றனர்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து தங்கள் மனைவியர், புதல்வர், குழந்தைகளோடு தங்கள் கூடாரங்களின் வாயிலருகில் நின்றனர்.
28 மோசே கூறியது: இப்பணிகளையெல்லாம் செய்யும்படி ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கிறார், இது என் சொந்த விருப்பம் அல்ல என்பதை இதன்மூலம் அறிந்து கொள்வீர்கள்.
29 எல்லா மனிதரும் சாவதுபோல் இம்மனிதரும் செத்தால் அல்லது எல்லா மனிதருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை அடைந்தால் ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கவில்லை என்பது பொருள்.
30 ஆனால் ஆண்டவர் புதுமையான ஒன்றைச் செய்தால் - நிலம் தன் வாயைத் திறந்து அவர்களையும் அவர்களுக்குரிய அனைத்தையும் விழுங்கிவிட, அவர்கள் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினால் - அப்போது, இம்மனிதர் ஆண்டவரை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதை நீங்களும் அறிந்துகொள்வீர்கள்.


31 இவ்வார்த்தைகளையெல்லாம் அவர் பேசி முடிந்ததும் அவர்கள் அடியிலிருந்த தரை பிளந்தது;
32 தரை தன் வாயைத் திறந்து, அவர்களை அவர்கள் வீட்டாரோடும் கோராகைச் சேர்ந்த மனிதர்களோடும் அவர்கள் உடைமைகளோடும் விழுங்கிவிட்டது.
33 இவ்வாறு, அவர்களும் அவர்களைச் சேர்ந்த அனைவரும் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினர்; தரை தன் வாயை மூடிக்கொண்டது; சபையிலிருந்து அவர்கள் அழிந்து போயினர். V34 அவர்களின் கூக்குரல் கேட்டு அவர்களைச் சுற்றியிருந்த இஸ்ரயேலர் அனைவரும், 'நம்மையும் தரை விழுங்கி விடக்கூடாதே' என்று அஞ்சியோடினர்.
35 பின்பு, ஆண்டவரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து தூபம் காட்டிய இரு நூற்றைம்பது மனிதரையும் விழுங்கிவிட்டது.

தூப கலசங்கள்[தொகு]


36 பின்னர் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
37 எரிநெருப்பிலிருந்து தூப கலசங்களை எடுத்து நெருப்பை அப்பால் கொட்டிவிடும்படி குருவாகிய ஆரோன் மகன் எலயாசரிடம் சொல்.
38 ஏனெனில் அவை புனிதமானவை; பாவம் செய்த இந்த மனிதர்களின் தூபகலசங்கள், அவர்களது உயிர் பறிக்கப்பட்டுவிட்டதால், தூய்மையாக்கப்பட்டுவிட்டன; அவை பீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பு வேலையால் செய்யப்படட்டும்; அவற்றை அவர்கள் ஆண்டவர் திருமுன் கொண்டு வந்தார்கள்; ஆகவேதான் அவை புனிதமானவை; இங்ஙனம் அவை இஸ்ரயேல் மக்களுக்கு ஓர் அடையாளமாக இருக்கும்.
39 அதன்படியே குரு எலயாசர் எரிக்கப்பட்டவர்கள் கொண்டு வந்திருந்த வெண்கலத் தூப கலசங்களை எடுத்தார்; பீடத்தை மூடுவதற்கு அவை அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டன.
40 இது இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நினைவுச் சின்னம்; இதனால் ஆரோன் வழித் தோன்றியிராத எவனும் கோராகையும் அவன் கூட்டத்தவரையும் போன்று ஆகிவிடாதபடி ஆண்டவர் திருமுன் தூபங்காட்டுவதற்கு நெருங்கி வரத் துணியான்; மோசே மூலம் ஆண்டவர் எலயாசருக்குச் சொன்னதும் அதுவே.

ஆரோன் மக்களை மீட்டல்[தொகு]


41 ஆயினும் மறுநாளில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுதும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்து, "ஆண்டவரின் மக்களை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்" என்றனர்.
42 மக்கள் கூட்டமைப்பு மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கூடி வந்தபோது அவர்கள் சந்திப்புக் கூடாரத்தை நோக்கித் திரும்பினர்; உடனே மேகம் அதை மூடியது, ஆண்டவரின் மாட்சி தோன்றியது.
43 மோசேயும் ஆரோனும் சந்திப்புக்கூடாரத்தின் முன் பக்கத்திற்கு வந்தார்கள்.
44 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
45 நான் இந்த மக்கள் கூட்டமைப்பை ஒரு நொடியில் எரித்து விடும்படி அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்." மோசேயும் ஆரோனும் முகங்குப்புற விழுந்தனர்.
46 மோசே ஆரோனிடம், "உன் தூபகலசத்தைப் பலிபீடத்திலிருந்து எடுத்து அதில் நெருப்பையும் தூபத்தையும் போட்டு விரைவாக அதனை மக்கள் கூட்டமைப்பினரிடம் கொண்டு போய் அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்; ஆண்டவரிடமிருந்து கடுஞ்சினம் புறப்பட்டுவிட்டது கொள்ளைநோய் தொடங்கிவிட்டது" என்றார்.


47 மோசே சொன்னபடியே ஆரோன் தூப கலசத்தை எடுத்துக் கொண்டு சபை நடுவே ஓடினார்; அந்தோ, மக்களிடையே கொள்ளை நோய் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அவர் தூபம் போட்டு மக்களுக்காகக் கறை நீக்கம் செய்தார்.
48 அவர் இறந்தோர்க்கும் வாழ்ந்தோர்க்கும் இடையே நின்றார்; கொள்ளைநோய் நின்றது.
49 அப்போது கோராகின் செயல்முன்னிட்டு இறந்தோர் தவிர அக்கொள்ளைநோயால் இறந்தோர் பதினாலியிரத்து எழுநூறு பேர்.
50 கொள்ளைநோய் நின்றதும் ஆரோன் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலருகில் மோசேயிடம் திரும்பி வந்தார்.


குறிப்பு

[*] 16:1 = யூதா 11. (தொடர்ச்சி): எண்ணிக்கை: அதிகாரங்கள் 17 முதல் 18 வரை