திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

விக்கிமூலம் இலிருந்து
பிலயாமும் அவர் கழுதையும் ஆண்டவரின் தூதரைச் சந்தித்தல் (எண் 22:22-35). ஓவியர்: குஸ்தாவ் யேகர் (1808-1871).

எண்ணிக்கை[தொகு]

அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

அதிகாரம் 23[தொகு]


1 பிலயாம் பாலாக்கிடம், "எனக்காக இங்கு ஏழு பலி பீடங்களை எழுப்பும்; எனக்காக இங்கு ஏழு காளைகளையும் ஏழு கிடாய்களையும் தாரும்" என்றார்.
2 பிலயாம் சொன்னபடியே பாலாக்கு செய்தான்; பிலயாமும் பாலாக்கும் ஒவ்வொரு பலி பீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டனர்.
3 பிலயாம், பாலாக்கைப் பார்த்து, "உம் எரிபலியருகே நின்று கொள்ளும்; நான் போகிறேன்; அவர் எதையெல்லாம் எனக்குக் காண்பிக்கிறாரோ அதை உமக்கு அறிவிப்பேன்" என்றார். பின் அவர் மொட்டை மேடு நோக்கிப் போனார்.
4 கடவுள் பிலயாமைச் சந்தித்தார். பிலயாம் அவரிடம், "நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம் செய்து ஒவ்வொரு பலிபீடத்தின் மேலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டுள்ளேன்" என்றார்.
5 ஆண்டவர் ஒரு வார்த்தையை பிலயாமின் வாயில் வைத்து அவரிடம், "பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு" என்றார்.
6 அவர் அவனிடம் திரும்பிப் போகையில் அவன் மோவாபின் எல்லாத் தலைவர்களோடும் தன் எரிபலியருகில் நின்று கொண்டிருந்தான்.
7 பிலயாம் திருஉரையாகக் கூறியது:


"ஆராமிலிருந்து பாலாக்கு, கீழை மலைகளிலிருந்து மோவாபின் மன்னன், என்னைக் கொண்டு வந்துள்ளான்.
'வா, எனக்காக யாக்கோபைச் சபி! வா, இஸ்ரயேலைப் பழித்துரை!' என்கிறான்.
8 கடவுள் சபிக்காதவனை நான் எப்படிச் சபிப்பேன்?
கடவுள் பழித்துரைக்காதவனை நான் எப்படிப் பழித்துரைப்பேன்?
9 மலைகளின் உச்சியிலிருந்து நான் அவனை நோக்குகிறேன்;
குன்றுகளிலிருந்து நான் அவனைப் பார்க்கிறேன்;
இதோ! தனியாக வாழ்கின்றதொரு மக்கள் கூட்டம்.
இது வேற்றினத்தாரோடு தன்னையும் ஓர் இனமாய்க் கொள்ளவில்லை;
10 யாக்கோபின் தூசியை எண்ணிக்கையிடவோ இஸ்ரயேலின் கால் பங்கைக் கணக்கெடுக்கவோ யாரால் இயலும்?
நான் நேர்மையாளர் இறப்பை அடைவேனாக! என் முடிவும் அவர் போன்று இருப்பதாக!"


11 பின்னர் பாலாக்கு பிலயாமிடம், "நீர் என்ன எனக்கு இப்படிச் செய்துவிட்டீர்! என் எதிரிகளைச் சபிக்கும்படி நான் உம்மைக்
கொண்டுவந்தேன்; ஆனால் இதோ! நீர் அவர்களுக்கு ஆசிமேல் ஆசி வழங்குகிறீர்!" என்றான்.
12 அதற்கு மறுமொழியாக அவர், "ஆண்டவர் என் வாயில் வைத்ததைப் பேசுவது என் கடமையன்றோ?" என்றார்.

பிலயாமின் இரண்டாம் உரை[தொகு]


13 பாலாக்கு அவரிடம், "வேறோர் இடத்திற்கு என்னோடு வாரும்; அங்கிருந்து நீர் அவர்களில் எல்லாரையும் பார்க்காமல், அண்மையிலிருப்போரையே பார்ப்பீர்; பின்பு எனக்காக அவர்களை அங்கிருந்து சபியும்" என்றான்;
14 அவ்வாறே பாலாக்கு அவரைப் பிஸ்காவின் கொடுமுடிவில் சோபிம் வயல்வெளிக்குக் கொண்டு போனான்; அங்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டான்.
15 பிலயாம் பாலாக்கிடம், "நான் அப்பால் ஆண்டவரைச் சந்திக்கையில் நீர் உம் எரிபலியருகில் நின்றுகொள்ளும்" என்றார்.
16 ஆண்டவர் பிலயாமைச் சந்தித்தார்; அவர் அவரது வாயில் ஒரு வார்த்தையை வைத்து, "பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு" என்று சொன்னார்.
17 அவர் அவனிடம் வந்தபொழுது, அவன் தன் எரிபலியருகில் நின்றுகொண்டிருந்தான்; மோவாபின் தலைவர்களும் அவனோடிருந்தார்கள். பாலாக்கு அவரிடம், "ஆண்டவர் என்ன உரைத்துள்ளார்?" என்று கேட்டான்.
18 பிலயாம் திருஉரையாகக் கூறியது:


"பாலாக்கு, எழுந்து கேள்; கிப்போர் மகனே, எனக்குச் செவிகொடு.
19 பொய் சொல்வதற்குக் கடவுள் மனிதன் அல்லர்;
மனத்தை மாற்றிக்கொள்ள ஒரு மனிதப் பிறவியும் அல்லர்.
அவர் சொல்லியதைச் செய்யாமலிருப்பாரா?
அல்லது உரைத்ததை நிறைவேற்றாமலிருப்பாரா?
20 இதோ, நான் ஆசி கூறவே ஒரு கட்டளை பெற்றேன்;
அவர் ஆசி பொழிந்துள்ளார்; அதை என்னால் மாற்றியமைக்க இயலாது.
21 யாக்கோபில் தீங்கினை அவர் கண்டதில்லை!
இஸ்ரயேலில் துயரத்தை அவர் பார்த்ததுமில்லை!
ஆண்டவராம் கடவுள் அவர்களோடிருக்கிறார்;
ஓர் அரசனின் பெருமுழக்கம் அவர்களிடையே உண்டு.
22 எகிப்திலிருந்து இறைவன் அவர்களை வெளிக்கொணர்கின்றார்;
காண்டாமிருகத்தின் கொம்புகள் அவர்களுக்கு உண்டு.
23 யாக்கோபுக்கு எதிரான மந்திர மாயம் ஏதுமில்லை.
இஸ்ரயேலுக்கு எதிரான குறி கூறல் யாதுமில்லை;
யாக்கோபையும் இஸ்ரயேலையும் பற்றி இப்போது சொல்லப்படுவது:
'எத்துணை அரியன ஆற்றியுள்ளார் கடவுள்!'
24 இதோ ஒரு மக்களினம்;
அது ஒரு பெண் சிங்கம் போன்று எழும்புகிறது;
ஒரு சிங்கம் போன்று அது தன்னை உயர்த்துகிறது.
இரையை விழுங்கி, கொலையுண்டதின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் அது படுப்பதில்லை."


25 பாலாக்கு பிலாயாமிடம், "ஒருபோதும் நீர் அவர்களைச் சபிக்க வேண்டாம். ஒருபோதும் அவர்களுக்கு ஆசி கூறவும் வேண்டாம்" என்றான்.
26 ஆனால் பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாக, "ஆண்டவர் சொல்கிறபடியெல்லாம் செய்வேனென்று நான் உம்மிடம் சொல்லவில்லையோ?" என்றார்.

பிலயாமின் மூன்றாம் உரை[தொகு]


27 பின்னர் பாலாக்கு பிலயாமிடம், "மீண்டும் வாரும், நான் உம்மை வேறோர் இடத்துக்குக் கொண்டு செல்வேன். ஒருவேளை நீர் எனக்காக அங்கிருந்து அவர்களைச் சபிப்பது கடவுளுக்கு உகந்ததாயிருக்கும்" என்றான்.
28 அங்ஙனமே பாலாக்கு பிலயாமைப் பெகோரின் கொடுமுடிக்குக் கொண்டு போனான்; அது பாலை நிலத்தை நோக்கியவாறு அமைந்திருந்தது.
29 பிலயாம் பாலாக்கிடம், "எனக்காக இங்கு ஏழு பலிபீடங்களைக் கட்டும்; எனக்கு இங்கு ஏழு காளைகளையும் ஏழு கிடாய்களையும் ஏற்பாடு செய்யும்" என்றார்.
30 பிலயாம் சொன்னபடியே பாலாக்கு செய்து ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டான்.

அதிகாரம் 24[தொகு]


1 இஸ்ரயேலுக்கு ஆசி கூறுவதே ஆண்டவருக்கு விருப்பம் என்று பிலயாம் கண்டபோது, முன்பு செய்தது போன்று அவர் சகுனம் பார்க்கச் செல்லாமல், தம் முகத்தைப் பாலைநிலத்துக்கு நேரே திருப்பினார்.
2 பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே குலம் குலமாகப் பாளையமிறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர் மேல் இறங்கியது.
3 அவர் திருஉரையாகக் கூறியது:


"பெகோர் புதல்வன் பிலயாமின் திருமொழி!
கண் திறக்கப்பட்டவனின் திருமொழி!
4 கடவுளின் வார்த்தைகளைக் கேட்கிறவனின்,
பேராற்றல் வாய்ந்தவரின் காட்சியைக் கண்டு கீழே விழுந்தும் கண் மூடாதவனின் திருமொழி!
5 யாக்கோபே! உன் கூடாரங்களும் இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும்
எத்துணை அழகு வாய்ந்தவை!
6 அவை விரிந்து கடக்கும் பள்ளத்தாக்குகள் போன்றவை;
ஆண்டவர் நட்ட அகில் மரங்கள் போன்றவை;
நீர் அருகிலுள்ள கேதுரு மரங்கள் போன்றவை.
7 அவனுடைய நீர்க்கால்களிலிருந்து தண்ணீர் ஓடும்;
அவனது விதை நீர்த்திரளின்மேல் இருக்கும்;
அவனுடைய அரசன் ஆகாகைவிடப் பெரியவன்;
அவனது அரசு உயர்த்தப்படும்.
8 கடவுள் அவனை எகிப்திலிருந்து கொண்டு வருகிறார்;
காண்டா மிருகத்தின் கொம்புகள் அவனுக்குண்டு;
அவன் தன் எதிரிகளாகிய வேற்று இனத்தவரை விழுங்கிவிடுவான்;
அவர்கள் எலும்புகளைத் தூள் தூள்களாக நொறுக்குவான்;
அவர்களைத் தன் அம்புகளால் ஊடுருவக் குத்துவான்; 9
அவன் துயில் கொண்டான்;
சிங்கம் போன்றும் பெண் சிங்கம் போன்றும் படுத்துக்கொண்டான்;
அவனை எழுப்பி விடுவோன் யார்?
உனக்கு ஆசி கூறுவோன் ஆசி பெறுவான்;
எனவே உன்னைச் சபிப்போன் சாபமடைவான்!" [*]


10 எனவே பிலயாம் மீது பாலாக்கு கடும் சினம் கொண்டு தன் கைகளைத் தட்டி பிலயாமிடம், "என் எதிரிகளைச் சபிக்கவே நான் உம்மை அழைத்தேன்; ஆனால் நீர் இம்மூன்று முறையும் அவர்களுக்கு ஆசி கூறியுள்ளீர்;
11 எனவே உடனே உம் இடத்துக்கு ஓடிவிடும்; 'உமக்கு உறுதியாக மரியாதை செய்வேன்' என்று சொல்லியிருந்தேன்; ஆண்டவரோ நீர் மரியாதை பெறாதபடி தடுத்துவிட்டார்" என்றான்.
12 பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாகக் கூறியது: "நீர் என்னிடம் அனுப்பிய உம் தூதரிடம் நான் சொல்லவில்லையா?
13 பாலாக்கு வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும் ஆண்டவரின் வார்த்தையை மீறிச் சென்று என் விருப்பப்படி நன்மையோ தீமையோ செய்ய இயலாது; ஆண்டவர் பேசுவதையே நான் பேசுவேன் என்று சொல்லவில்லையா?"
14 இப்போது நான் என் மக்களிடம் போகிறேன்; வாரும், பிற்காலத்தில் இம்மக்கள் உம் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்று உமக்குத் தெரிவிப்பேன்" என்றார்.

பிலயாமின் இறுதி உரைகள்[தொகு]


15 அவர் திரு உரையாகக் கூறியது:


"பெகோரின் புதல்வன் பிலயாமின் திருமொழி!
கண் திறக்கப்பட்டவனின் திருமொழி!
16 கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு,
உன்னதர் அளித்த அறிவைப் பெற்று
பேராற்றலுடையவரின் காட்சி கண்டு
கீழே வீழ்ந்தும் கண் மூடப்படாதவனின் திருமொழி!
17 நான் அவரைக் காண்பேன்; ஆனால் இப்போதன்று;
நான் அவரைப் பார்ப்பேன்; ஆனால் அண்மையிலன்று;
யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்!
இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்!
அது மோவாபின் நெற்றிப் பிறையை நசுக்கும்;
சேத்தின் புதல்வர் அனைவரையும் அழித்துவிடும்.
18 அவன் எதிரியான ஏதோம் பாழாகிவிடும்; சேயிரும் கைப்பற்றப்படும்;
இஸ்ரயேலோ வலிமையுடன் செயல்படும்.
19 யாக்கோபு ஆளுகை செய்வான்; நகர்களில் எஞ்சியிருப்போர் அழிக்கப்படுவர்."


20 பின் அவர் அமலேக்கைப் பார்த்துத் திருவுரையாகக் கூறியது:
"வேற்றினங்களில் முதன்மையானவன் அமலேக்கு; இறுதியில் அவன் அழிந்துபோவான்."


21 அடுத்துக் கேனியனை நோக்கித் திருவுரையாகக் கூறியது:
"உன் வாழ்விடம் உறுதியானது; உன் கூடு பாறையில் அமைந்துள்ளது;
22 ஆயினும் கேனியன் பாழாய்ப் போவான்; அசீரியர் உன்னைச் சிறைப் பிடித்துச் செல்ல எவ்வளவு காலந்தான் ஆகும்?"


23 பின்னும் அவர் திருவுரையாகக் கூறியது:
அந்தோ, கடவுள் இதனைச் செய்யும்போது எவன்தான் பிழைப்பான்?
24 கித்திம் தன் கப்பல்களால் அசீரியாவையும் ஏபேரையும் துன்புறுத்துவான்."
25 பின்பு பிலயாம் எழுந்து தம் இடத்துக்குத் திரும்பினார்; பாலாக்கும் தன்வழியே சென்றான்!


குறிப்பு

[*] 24:9 = தொநூ 12:3; 49:9.


(தொடர்ச்சி): எண்ணிக்கை: அதிகாரங்கள் 25 முதல் 26 வரை