திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

விக்கிமூலம் இலிருந்து
" எனக்கு ஏன் தீராத வேதனை? குணமாகாக் கொடிய காயம்? நீர் எனக்குக் கானல் நீரென, ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ!" - எரேமியா 15:18.

எரேமியா (The Book of Jeremiah)[தொகு]

அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

அதிகாரம் 15[தொகு]

யூதாவின் அழிவு[தொகு]


1 ஆண்டவர் என்னிடம் கூறியது:
மோசேயும் சாமுவேலும் என்முன் வந்து நின்றாலும்
என் உள்ளம் இந்த மக்கள்பால் திரும்பாது.
என் முன்னிலையிலிருந்து அவர்களை விரட்டிவிடு.
அவர்கள் அகன்று போகட்டும். [1]
2 'நாங்கள் எங்கே போவோம்?' என்று அவர்கள் கேட்கக்கூடும்.
அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது:


"ஆண்டவர் கூறுவது இதுவே:
சாவுக்குரியோர் சாவர்;
வாளுக்குரியோர் வாளால் மாள்வர்;
பஞ்சத்துக்குரியோர் பஞ்சத்தால் மடிவர்;
நாடு கடத்தலுக்குரியோர் நாடு கடத்தப்படுவர்." [2]


3 ஆண்டவர் கூறுவது:
நான்கு வகையான அழிவின் சக்திகளை
அவர்களுக்கு எதிராக அனுப்பப் போகிறேன்;
கொல்வதற்கு வாளையும்
இழுத்துச் செல்வதற்கு நாய்களையும்
விழுங்கி அழிப்பதற்கு வானத்துப் பறவைகளையும்
நிலத்து விலங்குகளையும் அனுப்பப் போகிறேன்.
4 அவர்களைக் கண்டு
உலகின் அரசுகள் யாவும் திகில் அடையும்.
எசேக்கியா மகனும் யூதா அரசனுமான மனாசே
எருசலேமில் செய்தவையே அதற்குக் காரணம். [3]


5 எருசலேமே!
யாராவது உனக்கு இரக்கம் காட்டுவார்களா?
உன் நிலைபற்றி வருந்துவார்களா?
திரும்பிப் பார்த்து நலம் விசாரிப்பார்களா?


6 ஆண்டவர் கூறுவது:
"நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்;
என்னைக் கைவிட்டு ஓடிவிட்டாய்;
எனவே, உன்னை அழிப்பதற்கு
என் கையை உனக்கு எதிராய் நீட்டினேன்;
இரக்கம் காட்டிச் சலித்துப் போனேன்.


7 நாட்டின் வாயில்களில் நான் அவர்களை
முறத்தால் தூற்றிச் சிதறடித்தேன்;
அவர்களைத் தனியாகத் தவிக்க விட்டேன்;
என் மக்களை அழித்துவிட்டேன்;
ஏனெனில் அவர்கள் தங்கள்
தீயவழியிலிருந்து திரும்பவில்லை.


8 கடற்கரை மணலைவிட அவர்களின்
கைம்பெண்களின் எண்ணிக்கையை மிகுதியாக்கினேன்;
இளைஞர்களின் அன்னையருக்கு எதிராகக்
கொலைஞனைப் பட்டப்பகலில் கூட்டி வந்தேன்;
திடீரென அவள் துயரும் திகிலும் அடையச் செய்தேன்;


9 எழுவரைப் பெற்றவள் சோர்வுற்றாள்;
மூச்சுத் திணறினாள்;
அவள் வாழ்வில் கதிரவன் மறைந்து விட்டான்;
அவள் வெட்கி நாணமுற்றாள்;
எஞ்சியிருப்போரை அவர்களுடைய
எதிரிகளின்முன் வாளுக்கு இரையாக்குவேன்,"
என்கிறார் ஆண்டவர்.

எரேமியாவின் அழைப்பு புதுப்பிக்கப்படுதல்[தொகு]


10 நாடெங்கும் சண்டை சச்சரவுக்குக் காரணமான
என்னைப் பெற்றெடுத்த என் தாயே,
எனக்கு ஐயோ கேடு!
நான் கடன் கொடுக்கவும் இல்லை;
கடன் வாங்கியதுமில்லை.
எனினும் எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.
11 ஆண்டவரே,
நான் உமக்கு நன்கு பணி செய்யாதிருந்தால்,
எதிரிகள் இடையூறும் துன்பமும் அடைந்த நேரத்தில்
நான் அவர்களுக்காக உம்மிடம் மன்றாடாதிருந்தால்,
அவர்களின் சாபத்திற்கு நான் ஆளாகட்டும்.
12 வடக்கிலிருந்து வந்த இரும்பையும்
வெண்கலத்தையும் யாரால் உடைக்க முடியும்?


13 "நாடெங்கும் செய்யப்படும் அனைத்துப் பாவங்களுக்கும் ஈடாக
உன் செல்வங்களையும் கருவூலங்களையும்
இலவசக் கொள்ளைப் பொருள் ஆக்குவேன்.
14 முன்பின் தெரியாத ஒரு நாட்டில்
எதிரிகளுக்கு உங்களை அடிபணியச் செய்வேன்;
ஏனெனில் என்னில் கோபக் கனல் மூண்டுள்ளது.
அது உங்களுக்கு எதிராகக் கொழுந்து விட்டு எரியும்."


15 ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும்;
நீர் என்னை அறிவீர்;
என்னை நினைவுகூரும்;
எனக்கு உதவியருளும்;
என்னைத் துன்புறுத்துவோரை
என் பொருட்டுப் பழிவாங்கும்;
நீர் பொறுமையுள்ளவர்;
என்னைத் தள்ளிவிடாதேயும்;
உம்பொருட்டு நான் வசைமொழிகளுக்கு ஆளாகிறேன்
என்பதை நினைவில் கொள்ளும்.


16 நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன்;
அவற்றை உட்கொண்டேன்;
உம் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன;
என் உள்ளத்திற்கு உவகை அளித்தன.
ஏனெனில் படைகளின் ஆண்டவரே,
உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று.


17 களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து
நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை.
உம் கை என்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன்.
சினத்தால் நீர் என்னை நிரப்பியிருந்தீர்.


18 எனக்கு ஏன் தீராத வேதனை?
குணமாகாக் கொடிய காயம்?
நீர் எனக்குக் கானல் நீரென,
ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ!


19 எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே:
"நீ திரும்பி வந்தால் நான் உன்னை
முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன்.
என்முன் வந்து நிற்பாய்;
பயனில நீக்கிப் பயனுள பேசின்,
நீ என் இறைவாக்கினனாக இருப்பாய்.
அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்;
நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம்.


20 நான் உன்னை அவர்கள்முன்
வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவேன்;
அவர்கள் உனக்கு எதிராய்ப் போராடுவார்கள்;
ஆனால், உன்மேல் வெற்றி கொள்ள மாட்டார்கள்;
ஏனெனில் உன்னை விடுவிக்கவும் காக்கவும்
நான் உன்னோடு இருக்கிறேன்,
என்கிறார் ஆண்டவர்.


21 தீயோரின் கையினின்று நான் உன்னைக் காப்பேன்;
முரடரின் பிடியினின்று உன்னை மீட்பேன்."


குறிப்புகள்

[1] 15:1 = விப 32:11-14; எண் 14:13-19; 1 சாமு 7:5-9.
[2] 15:2 = திவெ 13:10.
[3] 15:4 = 2 அர 21:1-16; 2 குறி 33:1-9.

அதிகாரம் 16[தொகு]

எரேமியாவின் வாழ்வு ஓர் அடையாளம்[தொகு]


1 ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு:
2 "நீ திருமணம் செய்யாதே;
இந்த இடத்தில் உனக்குப் புதல்வரோ புதல்வியரோ இருக்கவேண்டாம்.
3 இந்த இடத்தில் பிறந்துள்ள புதல்வர், புதல்வியரைப் பற்றியும்
அவர்களைப் பெற்றெடுத்த தாய், தந்தையரைப் பற்றியும்
ஆண்டவர் கூறுவது இதுவே:
4 அவர்கள் கொடும் நோய்களால் மடிவார்கள்.
அவர்களுக்காக யாரும் அழமாட்டார்கள்;
அவர்களை அடக்கம் செய்யவும் மாட்டார்கள்.
அவர்கள் சாணம்போல் தரையில் கிடப்பார்கள்.
வாளாலும் பஞ்சத்தாலும் அழிந்து போவார்கள்.
அவர்களின் பிணங்கள் வானத்துப் பறவைகளுக்கும்
நிலத்து விலங்குகளுக்கும் இரையாகும்.


5 ஆண்டவர் கூறுவது இதுவே:
"நீ இழவு வீட்டுக்குப் போக வேண்டாம்;
அவர்களுக்காக அழுவதற்கோ
துக்கம் கொண்டாடுவதற்கோ
நீ செல்ல வேண்டாம்;
ஏனெனில் நான் என் அமைதியையும் பேரன்பையும்
இரக்கத்தையும் இந்த மக்களிடமிருந்து எடுத்துவிட்டேன்.
6 இந்நாட்டிலுள்ள பெரியோரும் சிறியோரும் இறந்து போவர்.
அவர்களை யாரும் அடக்கம் செய்யமாட்டார்கள்;
அவர்களுக்காக அழவும் மாட்டார்கள்.
அவர்களை முன்னிட்டு யாரும் தங்களைக்
காயப்படுத்திக்கொள்ளவோ
மொட்டையடித்துக் கொள்ளவோ மாட்டார்கள்.
7 இறந்தோரை எண்ணித் துக்கம் கொண்டாடுகிறவனுக்கு
ஆறுதல் அளிக்க, அப்பம் தருவார் யாருமிரார்.
தாய் அல்லது தந்தைக்காகத் துக்கம் கொண்டாடுகிறவனுக்கு
ஆறுதலின் கிண்ணத்தில் பருகக் கொடுக்கவும் யாருமிரார்.
8 விருந்து நடக்கும் வீடுகளுக்குச் செல்லாதே;
உண்டு குடிப்பதற்காக அங்கு அமராதே."
9 ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
இந்த இடத்தில் மகிழ்ச்சி ஒலியும்,
உவகைக் குரலும், திருமண ஆரவாரமும்
எழாதிருக்கச் செய்வேன். [*]
இவை உங்கள் வாழ்நாளில் உங்கள் கண்முன்னே நிகழும்.


10 நீ இம்மக்களுக்கு இச்சொற்களை எல்லாம்
அறிவிக்கும்போது அவர்கள் உன்னை நோக்கி,
'எங்களுக்கு எதிராக இப்பெருந்தீங்கு அனைத்தையும்
ஆண்டவர் அறிவிக்கக் காரணம் என்ன?
எங்கள் குற்றம் என்ன?
எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக
நாங்கள் செய்த பாவம் என்ன?' என்று கேட்பார்கள்.
11 நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது:
ஆண்டவர் கூறுவது:
உங்கள் மூதாதையர் என்னைப் புறக்கணித்தனர்.
வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றினர்.
அவற்றுக்கு ஊழியம் செய்து அவற்றையே வழிபட்டனர்.
என்னையோ புறக்கணித்தனர்.
என் சட்டத்தை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை.
12 நீங்களோ உங்கள் மூதாதையரைவிடப்
பெருந்தீமைகள் செய்தீர்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் தம் தீய இதயத்தின்
பிடிவாதத்தின்படி நடக்கின்றீர்கள்;
என் சொல்லுக்கோ செவிகொடுப்பதில்லை.
13 ஆகையால் இந்த நாட்டிலிருந்து,
உங்களுக்கோ உங்கள் மூதாதையருக்கோ
முன்பின் தெரியாத ஒரு நாட்டுக்கு,
உங்களைத் தூக்கி எறிவேன்.
அங்கு நீங்கள் அல்லும் பகலும் வேற்றுத் தெய்வங்களுக்கு
ஊழியம் செய்வீர்கள்;
அங்கு என் ஆதரவு உங்களுக்கு இராது.

அடிமைத்தனத்தினின்று திரும்புதல்[தொகு]


14 ஆதலால் ஆண்டவர் கூறுவது:
இதோ, நாள்கள் வருகின்றன.
அப்போது 'எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்த
வாழும் ஆண்டவர் மேல் ஆணை'
என்று யாரும் சொல்லமாட்டார்கள்.
15 மாறாக, 'வடக்கு நாட்டிலிருந்தும்,
அவர்கள் விரட்டப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும்
இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த
வாழும் ஆண்டவர் மேல் ஆணை' என்று கூறுவார்கள்.
ஏனெனில் நான் அவர்களின் மூதாதையருக்குக்
கொடுத்திருந்த நாட்டிற்கே
அவர்களை மீண்டும் அழைத்து வருவேன்.

வரவிருக்கும் தண்டனை[தொகு]


16 ஆண்டவர் கூறுவது:
இதோ, மீனவர் பலரை அனுப்புகிறேன்.
அவர்கள் அவர்களைப் பிடிப்பர்.
அதன்பின் வேடர் பலரையும் அனுப்புவேன்.
அவர்கள் அனைத்து மலைகளிலும் குன்றுகளிலும்
பாறையிடுக்குகளிலும் உள்ளோரை வேட்டையாடுவர்.
17 அவர்கள் வழிகளெல்லாம் என் கண்முன்னே உள்ளன.
அவை எனக்கு மறைவாய் இருப்பதில்லை.
அவர்களின் குற்றங்கள் என் பார்வைக்குத் தப்புவதில்லை.
18 முதற்கண், அவர்களின் குற்றத்திற்காகவும்,
பாவத்திற்காகவும் அவர்களுக்கு
இரட்டிப்பான தண்டனை கொடுப்பேன்.
ஏனெனில், பிணம் ஒத்த சிலைகளால்
அவர்கள் என் நாட்டைத் தீட்டுப்படுத்தினார்கள்;
அருவருப்பானவற்றால் என் உரிமைச் சொத்தை நிரப்பினார்கள்.

எரேமியாவின் நம்பிக்கை[தொகு]


19 ஆண்டவரே! என் வலிமையே! என் அரணே!
துன்பக் காலத்தில் என் புகலிடமே!
உலகின் எல்லைகளிலிருந்து
வேற்றினத்தார் உம்மிடம் வந்து,
"எங்கள் மூதாதையர் பொய்ம்மையை மரபுரிமையாகப் பெற்றனர்;
எதற்கும் பயனற்ற சிலைகளையே பெற்றனர்.
20 மனிதர் தமக்குத் தாமே தெய்வங்களைச் செய்ய முடியுமா?
அவை தெய்வங்கள் அல்லவே!" என்று கூறுவார்கள்.
21 "எனவே இதோ அவர்கள் அறியும்படி செய்வேன்;
என் ஆற்றலையும் என் வலிமையையும் அறியும்படி செய்வேன்.
என் பெயர் ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்."


குறிப்பு

[*] 16:1-9 = எரே 7:34; 25:10; திவெ 18:23.


(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 17 முதல் 18 வரை