திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 25 முதல் 26 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆண்டவர்...திராட்சைப்பழம் மிதிப்போரின் ஆரவாரம்போல் பூவுலகில் வாழ்வோர் அனைவருக்கு எதிராகவும் குரல் எழுப்புவார்." - எரேமியா 25:30

எரேமியா (The Book of Jeremiah)[தொகு]

அதிகாரங்கள் 25 முதல் 26 வரை

அதிகாரம் 25[தொகு]

ஆண்டவரின் சாட்டையான பாபிலோன்[தொகு]


1 யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம்
ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில்,
அதாவது பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்
ஆட்சியேற்ற முதல் ஆண்டில்,
யூதா மக்கள் அனைவரையும் குறித்து
எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது. [1]
2 அதனை இறைவாக்கினரான எரேமியா
யூதாவின் அனைத்து மக்களுக்கும்,
எருசலேமில் குடியிருப்போர் யாவருக்கும் எடுத்துரைத்தார்;
3 ஆமோனின் மகனும் யூதாவின் அரசனுமான யோசியா
ஆட்சியேற்ற பதின்மூன்றாம் ஆண்டிலிருந்து இன்றுவரை,
அதாவது கடந்த இருபத்திமூன்று ஆண்டுகளாக,
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டு வந்துள்ளது.
நானும் அதை உங்களிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளேன்.
நீங்களோ அதற்குச் செவிகொடுக்கவில்லை.
4 ஆண்டவர்தம் ஊழியர்களான இறைவாக்கினர் எல்லாரையும்
தொடர்ந்து அனுப்பியுள்ளார்.
நீங்களோ காது கொடுத்துக் கேட்கவில்லை;
கவனிக்கவுமில்லை.
5 அவரது செய்தி இதுவே:
"நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர்தம் தீய வழிகளையும்
தீச்செயல்களையும் விட்டு விலகுங்கள்.
அப்போது ஆண்டவர் உங்களுக்கும்
உங்கள் மூதாதையருக்கும்
எக்காலத்திற்குமெனக் கொடுத்துள்ள நாட்டில் வாழ்வீர்கள்.


6 வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி,
அவற்றுக்கு ஊழியம் செய்து வழிபடாமலும்,
உங்கள் கைவேலைப்பாடுகளால்
எனக்குச் சினமூட்டாமலும் இருந்தால்,
நான் உங்களுக்குத் தீங்கிழைக்க மாட்டேன்.
7 நீங்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை,"
என்கிறார் ஆண்டவர்.
உங்கள் கை வேலைப்பாடுகளால்
உங்களுக்கே தீங்கிழைக்கும் வகையில்
எனக்குச் சினமூட்டினீர்கள்.


8 ஆகவே படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
நீங்கள் என் சொற்களுக்குக் கீழ்ப்படியால் இருந்தீர்கள்.
9 எனவே நான் வடநாட்டுக் குலங்கள் அனைத்தையும்,
என் ஊழியனான பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரையும்
கூட்டிச் சேர்த்து, அவர்களை இந்த நாட்டுக்கும்,
இதன் குடிமக்களுக்கும்,
சுற்றியுள்ள எல்லா நாடுகளுக்கும்
எதிராகக் கொண்டு வருவேன், என்கிறார் ஆண்டவர்.
நான் அவர்களை முற்றிலும் அழித்துவிடுவேன்.
அவர்கள் இகழ்ச்சிக் குறியாகக் காட்சியளிப்பார்கள்;
ஏளனத்துக்கும் முடிவில்லா அழிவுக்கும் உள்ளாவார்கள்.


10 அவர்களிடம் மகிழ்ச்சி ஒலியும்
உவகைக் குரலும் திருமண ஆரவாரமும்
எழாதிருக்கச் செய்வேன்;
இயந்திரக் கற்களின் ஓசையும்
விளக்கின் ஒளியும் இல்லாதிருக்கச் செய்வேன். [2]
11 இந்நாடு முற்றிலும் அழிந்து பாழ்நிலமாகும்.
சுற்றியுள்ள நாடுகளும்
எழுபது ஆண்டளவாய்ப்
பாபிலோனிய மன்னனுக்கு அடிமையாகும். [3]
12 ஆனால் எழுபது ஆண்டுகள் முடிந்தபின்
பாபிலோனிய மன்னனையும்
அந்த நாட்டையும் தண்டிப்பேன், என்கிறார் ஆண்டவர்.
அவர்களது குற்றத்தின் காரணமாகக்
கல்தேயரின் நாட்டை என்றென்றைக்கும் பாழ்நிலம் ஆக்குவேன்.


13 நான் அந்த நாட்டுக்கு எதிராய்ப் பேசியுள்ள
அனைத்துச் சொற்களும்,
எரேமியா வேற்று நாடுகளுக்கு எதிராய் உரைத்து
இந்நூலில் எழுதப்பட்டுள்ள அனைத்து இறைவாக்குகளும்
அந்நாட்டின் மேல் பலிக்கச் செய்வேன்.
14 அந்நாட்டினரைக் கூடப்
பல நாடுகளும் மாமன்னர்களும், அடிமையாக்குவர்.
அவர்களின் செயல்களுக்கும்
நடத்தைக்கும் ஏற்றவாறு
நான் அவர்களுக்குக் கைம்மாறு அளிப்பேன்.

வேற்றினத்தார்க்கு எதிராய்[தொகு]


15 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்
என்னிடம் கூறியது இதுவே:
சீற்றத்தால் நிரம்பியுள்ள இந்த இரசக் கிண்ணத்தை
என் கையிலிருந்து எடுத்து,
நான் உன்னை எந்த மக்களினத்தாரிடம் அனுப்புகிறேனோ
அந்த மக்களினத்தார் எல்லாம் குடிக்கக் கொடு.
16 நான் அவர்கள்மேல் அனுப்பப்போகும் வாளை முன்னிட்டு
அவர்கள் குடித்துத் தள்ளாடி வெறிகொள்வார்கள்.


17 அப்போது நான் ஆண்டவரின் கையிலிருந்து
அந்தக் கிண்ணத்தை எடுத்து
ஆண்டவர் என்னை எந்த மக்களித்தாரிடம் அனுப்பியிருந்தாரோ
அந்த மக்களினத்தார் எல்லாம் குடிக்கச் செய்தேன்.
18 எருசலேமும் யூதாவின் நகர்களும்
அவற்றின் அரசர்களும் தலைவர்களும்
அதனைக் குடிக்கச் செய்தேன்.
இன்று காண்பதுபோல்,
அவை அழிந்து பாழாகவும்
ஏளத்துக்கும் சாபத்துக்கும் உள்ளாகவுமே
இவ்வாறு செய்தேன்.
19 எகிப்திய மன்னன் பார்வோன்,
அவன் அலுவலர்கள், தலைவர்கள், மக்கள் எல்லாரும்,
20 அங்குள்ள வேற்றின மக்கள் அனைவரும்,
ஊசு நாட்டு மன்னர்கள் யாவரும்,
அனைத்துப் பெலிஸ்திய மன்னர்களும்,
அஸ்கலோன், காசா, எக்ரோன், அஸ்தோதில் எஞ்சியோர்,


21 ஏதோம், மோவாபு, அம்னோனின் புதல்வர்,
22 தீர், சீதோன் மன்னர்கள் யாவரும்,
கடலுக்கு அப்பாலுள்ள கடற்கரை நாட்டு மன்னர்கள் எல்லாரும்,
23 தெதான், தேமா, பூசு,
முன்தலையை மழித்துக் கொள்ளும் எல்லாரும்,
24 அரேபியாவின் அனைத்து மன்னர்களும்,
பாலைநிலத்தில் வாழும் பல இன மக்களின் மன்னர்களும்,
25 சிம்ரியின் மன்னர்கள் யாவரும்,
ஏலாம் மன்னர்கள் எல்லாரும்,
மேதிய மன்னர்கள் அனைவரும்,
26 ஒருவருக்குப் பின் ஒருவராய் அருகிலும்
தொலையிலும் உள்ள வட நாட்டு மன்னர்கள் யாவரும்,
மண்ணுலக நாடுகளின் அரசுகள் அனைத்தும்
அக்கிண்ணத்திலிருந்து குடிக்கச் செய்தேன்.
அவர்களுக்குப் பிறகு சேசாக்கு [4] மன்னனும் குடிப்பான்.
27 இஸ்ரயேலின் கடவுளான
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
'குடியுங்கள், போதையேறக் குடியுங்கள்; கக்குங்கள்.
நான் உங்கள்மேல் அனுப்பும் வாளால் வீழுங்கள்;
எழவே மாட்டீர்கள்' என்று நீ அவர்களிடம் கூறு.
28 உன் கையிலிருந்து கிண்ணத்தை
எடுத்துக் குடிக்க அவர்கள் மறுத்தால்,
"படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
நீங்கள் குடித்துத்தான் ஆகவேண்டும்"
என்று அவர்களிடம் கூறு.
29 இதோ! என் பெயர் வழங்கும் இந்நகருக்குத்
தீங்கு செய்யப் போகிறேன்.
நீங்கள் மட்டும் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியுமா?
தப்பவே முடியாது.
ஏனெனில், நாட்டில் வாழ்வோர் அனைவருக்கும் எதிராக
வாளை வரவழைக்கப் போகிறேன்,
என்கிறார் படைகளின் ஆண்டவர்.


30 ஆகவே அவர்களுக்கு எதிராக
இச்சொற்களை எல்லாம் இறைவாக்காக உரை:


"ஆண்டவர் மேலிருந்து கர்ச்சனை செய்வார்;
தமது தூய உறைவிடத்திலிருந்து குரல் எழுப்புவார்;
தம் இருப்பிடத்திலிருந்து கடுமையாகக் கர்ச்சனை செய்வார்;
திராட்சைப்பழம் மிதிப்போரின் ஆரவாரம்போல்
பூவுலகில் வாழ்வோர் அனைவருக்கு எதிராகவும்
குரல் எழுப்புவார்.


31 அவரது கர்ச்சனை உலகின் எல்லைவரை எட்டும்;
ஏனெனில், ஆண்டவர் மக்களினங்களுக்கு எதிராக
வழக்குத் தொடரப்போகிறார்;
அவர் எல்லா மனிதர்க்கும் தீர்ப்பு வழங்கப்போகிறார்;
தீயோரை அவர் வாளுக்கு இரையாக்குவார்,
என்கிறார் ஆண்டவர்."


32 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
இதோ! தீமை நாட்டிலிருந்து நாட்டுக்குப் பரவுகின்றது.
பூவுலகின் எல்லைகளிலிருந்து
பெரும் புயலொன்று புறப்பட்டுப் போகின்றது.


33 அந்நாளில் ஆண்டவரால் கொல்லப்பட்டவர்கள்,
உலகின் ஒரு முனையிலிருந்து
மறுமுனைவரை விழுந்து கிடப்பார்கள்.
புலம்புவாரற்று, எடுத்துச் சேர்ப்பாரற்று,
புதைப்பாரற்றுத் தரையில் சாணம்போல் கிடப்பார்கள்.
34 மேய்ப்பர்களே! ஒப்பாரி வையுங்கள்;
கதறியழுங்கள்.
மந்தையின் தலைவர்களே! சாம்பலில் புரளுங்கள்.
ஏனெனில் நீங்கள் கொல்லப்படுவதற்கும்
சிதறடிக்கப்படுவதற்குமான நாள்கள் நெருங்கிவிட்டன.
விலையுயர்ந்த பாத்திரம் நொறுக்கப்படுவதுபோல்,
நீங்கள் அழிக்கப்படுவீர்கள்.
35 மேய்ப்பர்கள் ஓடி ஒளிய இயலாது.
மந்தையின் தலைவர்களுக்குத் தப்ப வழியும் இராது.
36 மேய்ப்பர்களின் ஆழுகுரலும்
மந்தையின் தலைவர்களது ஒப்பாரியும் கேட்கின்றதே!
ஏனெனில் ஆண்டவர் அவர்களின் மேய்ச்சல் நிலத்தை
அழித்து விட்டார்.
37 ஆண்டவரின் கோபக்கனலால்
அமைதியான பசும்புல் தரைகள் அழிந்து போயின.
38 தன் குகையில் இருந்து வெளியேறும் சிங்கத்தைப் போல்
அவர் வெளியேறி விட்டார்.
கொடியோனின் வாளாலும்
ஆண்டவரின் கோபக்கனலாலும்
அவர்கள் நாடு பாழடைந்து போயிற்று.


குறிப்புகள்

[1] 25:1 = 2 அர 24:1; 2 குறி 36:5-7; தானி 1:1-2.
[2] 25:10 = எரே 7:34; 16:9; திவெ 18:22-23.
[3] 25:11 = 2 குறி 3:21; எரே 29:10; தானி 9:2.
[4] 25:26 - 'சேசாக்கு' என்னும் சொல் பாபிலோனைக் குறிக்கும்.


அதிகாரம் 26[தொகு]

எரேமியா சிறைப்படல்[தொகு]


1 யோசியாவின் மகனும்
யூதாவின் அரசனுமான
யோயாக்கிமுடைய ஆட்சியின் தொடக்கத்தில்
ஆண்டவர் அருளிய வாக்கு:
2 "ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
'நீ ஆண்டவர் இல்லத்தின் முற்றத்தில் நின்று கொண்டு,
அங்கு வழிபாடு செலுத்தவரும் யூதாவின்
எல்லா நகரினர்க்கும் சொல்லுமாறு
நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாச் சொற்களையும்
நீ அவர்களுக்கு அறிவி;
அவற்றில் ஒன்றையும் விட்டுவிடாதே.
3 ஒருவேளை அவர்கள் உனக்குச் செவிசாய்த்து
அவரவர் தம் தீயவழிகளை விட்டுத் திரும்பலாம்.


அப்பொழுது அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு
அவர்களுக்கு நான் அளிக்க எண்ணியுள்ள
தண்டனை பற்றி என் மனத்தை மாற்றிக் கொள்வேன்'.


4 நீ அவர்களிடம் சொல்லவேண்டியது:
'ஆண்டவர் கூறுவது இதுவே:
நீங்கள் எனக்குச் செவிகொடாமலும்,
உங்களுக்குக் கொடுத்திருக்கும் என் சட்டத்தின்படி நடவாமலும்,
5 நீங்கள் செவி சாய்க்காதபொழுதும்
நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் அனுப்பி வைக்கும்
என் ஊழியர்களான இறைவாக்கினர்களுடைய
சொற்களைக் கேளாமலும் இருப்பீர்களாகில்,
6 இக்கோவிலைச் சீலோவைப் போல் ஆக்குவேன்;
இந்நகரை உலகில் எல்லா மக்களினத்தார்
நடுவிலும் சாபக்குறியாக மாற்றுவேன்."


7 ஆண்டவர் இல்லத்தில் எரேமியா உரைத்த
இச்சொற்களைக் குருக்களும் இறைவாக்கினரும்
மக்கள் அனைவரும் கேட்டனர்.
8 மக்கள் அனைவருக்கும் சொல்லும்படி
ஆண்டவர் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும்
எரேமியா கூறிமுடித்தபோது,
குருக்களும் இறைவாக்கினரும்
மக்கள் அனைவரும் அவரைப் பிடித்து,
"நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்"
என்று கூச்சலிட்டனர்.
9 "இக்கோவில் சீலோவைப் போல் மாறும்;
இந்நகர் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப்போகும்
என்று ஆண்டவரின் பெயரால்
நீ ஏன் இறைவாக்கு உரைத்தாய்?" என்று கூறி,
ஆண்டவர் இல்லத்திலேயே
மக்கள் எல்லாரும் ஏரேமியாவைச் சூழ்ந்து கொண்டனர்.


10 யூதாவின் தலைவர்கள் இதைப்பற்றிக் கேள்வியுற்று
அரண்மனையிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்று
அங்கே 'புதுவாயில்' அருகே அமர்ந்தார்கள்.
11 குருக்களும் இறைவாக்கினரும்
தலைவர்களையும் மக்கள் அனைவரையும் நோக்கி,
"இந்த ஆள் கொலைத் தீர்ப்புக்கு உரியவன்;
ஏனெனில் நீங்களே உங்கள் காதால் கேட்டதுபோல,
இந்நகருக்கு எதிராக இவன் இறைவாக்கு உரைத்துள்ளான்"
என்று முறையிட்டனர்.


12 அப்பொழுது தலைவர்கள் மற்றும்
மக்கள் அனைவரிடமும் எரேமியா கூறியது:
"நீங்கள் கேட்ட இச்சொற்களை எல்லாம்
இக்கோவிலுக்கும் இந்நகருக்கும் எதிராக
அறிவிக்குமாறு ஆண்டவரே என்னை அனுப்பியுள்ளார்.
13 எனவே, இப்பொழுதே உங்கள் வழிகளையும்
செயல்களையும் சீர்படுத்திக் கொள்ளுங்கள்;
உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள்.
அப்பொழுது உங்களுக்கு அறிவித்திருந்த தண்டனைபற்றி
ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக் கொள்வார்.
14 இதோ, நான் உங்கள் கையில் இருக்கிறேன்.
நல்லது எனவும் நேரியது எனவும்
நீங்கள் கருதுவதை எனக்குச் செய்யுங்கள்.
15 ஆனால் ஒன்றை மட்டும் நன்கு அறிந்துகொள்ளுங்கள்;
என்னை நீங்கள் கொல்வீர்களாகில்,
மாசற்ற இரத்தப்பழி உங்கள் மேலும்,
இந்நகர் மேலும்,
அதில் குடியிருப்போர் மேலும்
உறுதியாக வந்து விழும்.
ஏனெனில் இச்சொற்கள் எல்லாம்
உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க
ஆண்டவர் உங்களிடம் என்னை
உண்மையாகவே அனுப்பியுள்ளார்."


16 பின்னர் தலைவர்களும் மக்கள் எல்லாரும்
குருக்களையும் இறைவாக்கினரையும் நோக்கி,
"கொலைத் தீர்ப்பு இந்த ஆளுக்கு வேண்டாம்;
ஏனெனில் நம் கடவுளான ஆண்டவரின் பெயராலேயே
இவன் நம்மிடம் பேசியுள்ளான்" என்றார்கள்.
17 உடனே நாட்டின் மூப்பர்களுள் சிலர் எழுந்து,
மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கூறியது:
18 "யூதாவின் அரசரான எசேக்கியாவின் காலத்தில்
மோரசேத்தைச் சார்ந்த மீக்கா
இறைவாக்கு உரைத்துக் கொண்டிருந்தார்.
அவர் யூதா மக்கள் எல்லாரையும் நோக்கி,
'படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
வயல்வெளியைப் போல் சீயோன் உழப்படும்;
எருசலேம் பாழடைந்து மண்மேடாக மாறும்.
கோவில் உள்ள மலையோ அடர்ந்த காடாகும்,' என்று சொன்னார்.
19 இதற்காக யூதாவின் அரசரான எசேக்கியாவும்
யூதா நாடு முழுவதும் அவரைக் கொன்று போட்டார்களா?
எசேக்கியா ஆண்டவருக்கு அஞ்சி,
அவருடைய உதவியைக் கெஞ்சி மன்றாடவில்லையா?
இதனால் ஆண்டவர் அவர்களுக்கு அறிவித்திருந்த
தண்டனையைக் குறித்துத்
தமது மனத்தை மாற்றிக்கொள்ளவில்லையா?
நாமோ நமக்கே பெரும் தீங்கை
விளைவித்துக்கொள்ளப் போகிறோம்.


20 ஆண்டவர் பெயரால் இறைவாக்கு உரைத்த
இன்னொருவரும் இருந்தார்;
அவர் கிரியத்து எயாரிமைச் சார்ந்த
செமாயாவின் மகன் உரியா ஆவார்.
அவரும் எரேமியாவைப் போலவே
இந்நகருக்கும் இந்நாட்டுக்கும் எதிராக
இறைவாக்கு உரைத்திருந்தார்.
21 யோயாக்கிம் அரசரும்
அவருடைய படைவீரர்களும்
தலைவர்கள் அனைவரும்
உரியா சொன்னதைக் கேட்டனர்.
உடனே அரசர் அவரைக் கொல்ல முயன்றார்.
ஆனால் உரியா அதை அறிந்து
அச்சமுற்று எகிப்துக்குத் தப்பி ஓடிவிட்டார்.
22 அரசர் யோயாக்கிமோ
அக்போரின் மகன் எல்னாத்தானையும்,
அவனோடு சில ஆள்களையும் எகிப்துக்கு அனுப்பி வைத்தார்.
23 அவர்கள் எகிப்திலிருந்து உரியாவை இழுத்து வந்து,
அரசர் யோயாக்கிடம் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
அரசரோ அவரை வாளுக்கு இரையாக்கி,
அவருடைய சடலத்தைப் பொதுமக்கள் கல்லறையில் வீசி எறிந்தார்."


24 ஆனால், மக்கள் கையில் எரேமியா அகப்பட்டுக் கொல்லப்படாதவாறு,
சாப்பானின் மகன் அகிக்காம்
அவருக்கு உறுதுணையாய் இருந்தார்.


குறிப்புகள்

[1] 26:1 = 2 அர 23:36-24:6; 2 குறி 36:5-7.
[2] 26:6 யோசு 18:1; திபா 78:60; எரே 7:12-14.
[3] 26:18 = மீக் 3:12.


(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 27 முதல் 28 வரை