திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எஸ்தர்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
எஸ்தர் அரசியோடு அவர்தம் உறவினர் மொர்தக்காய் உரையாடுதல். ஓவியர்: ஏர்ட் டெ கெல்டர் (1645-1727). ஆண்டு: 1685. ஓலாந்து. காப்பிடம்: பூடாபெஸ்ட்

எஸ்தர் (The Book of Esther[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

யூதரை அழிக்க ஆமானின் திட்டம்[தொகு]


1 இந்நிகழ்ச்சிக்குப்பின் மன்னர் அகஸ்வேர்
ஆகாகியனான அம்மதாத்தின் மகன் ஆமானை உயர்த்தி,
அவனுடன் இருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மேலான பதவியில் அமர்த்தினார்.
2 மன்னரின் ஆணைப்படி,
அரசவாயிலில் பணிபுரிந்த அனைத்து அலுவலர்களும் தலை வணங்கி ஆமானைப் பணிந்தனர்.
ஆனால் மொர்தக்காய் மட்டும் அவன்முன் மண்டியிட்டு வணங்கவில்லை.
3 அவ்வமயம் அரச வாயிலில் இருந்த அரசப் பணியாளர் மொர்தக்காயிடம்,
"நீ ஏன் மன்னரின் ஆணைக்குக் கீழ்ப்படிவதில்லை?" என வினவினர்.
4 ஒவ்வொரு நாளும் அவர்கள் இவ்வாறு சொல்லியும்
மொர்தக்காய் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.
தாம் ஒரு யூதர் என்று மொர்தக்காய் அவர்களுக்கு அறிவிக்க,
விளைவைக் காணுமாறு அவர்கள் அதை ஆமானுக்குத் தெரிவித்தனர்.
5 மொர்தக்காய் தம்முன் மண்டியிட்டு வணங்குவதில்லை என்பதைக் கண்ட
ஆமானின் நெஞ்சில் வெஞ்சினம் நிரம்பியது.
6 மொர்தக்காயை மட்டும் அழிக்க அவன் விரும்பவில்லை.
அவர்தம் இனத்தார் யார் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததால்,
அகஸ்வேரின் அரசெங்கும் இருந்த
அவர்தம் இனத்தாராகிய யூதர் அனைவரையும் அழிக்க
ஆமான் வழிதேடினான்.


7 அகஸ்வேரது ஆட்சியில் பன்னிரண்டாம் ஆண்டில்,
முதல் மாதமாகிய நீசானில்,
யூதரைக் கொன்று ஒழிப்பதற்கான மாதத்தையும், நாளையும் அறியுமாறு,
ஆமானின் முன்னிலையில் 'பூர்' என்ற சீட்டுப் போடப்பட்டது.
அதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளுக்குச் சீட்டு விழுந்தது.


8 ஆமான் அகஸ்வேரிடம்,
"உம் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநிலங்களின் மக்களிடையே
மாறுபட்ட மக்கள் சிதறுண்டு பரவியுள்ளனர்.
அவர்தம் நியமங்கள் மற்றெல்லா மக்களின் நியமங்களிலும் மாறுபட்டவை;
அவர்கள் மன்னரின் நியமங்களின்படி செய்வதில்லை.
அவர்களை அவ்வாறே விட்டுவைப்பதில் மன்னருக்கு நன்மை ஏதுமில்லை.
9 இது மன்னருக்கு நலமெனப்பட்டால், அவர்களை அழிக்கும்படி கட்டளையிடவேண்டும்.
இவ்வேலையைச் செய்வோருக்குக் கொடுக்குமாறு
நானூறு 'டன்' [*] வெள்ளியை நிறுத்து
மன்னரின் கருவூலத்தில் சேர்ப்பேன்" என்று கூறினான்.


10 அப்போது, மன்னர் தம் கணையாழியைக் கழற்றி,
யூதரின் பகைவனாம் ஆகாகியனான அம்மதாத்தின் மகன் ஆமானிடம் கொடுத்தார்.
11 மன்னர் ஆமானிடம்,
"வெள்ளியும், யூத மக்களும் உன் கையில்;
உனக்கு நலமெனப்பட்டதை அவர்களுக்குச் செய்" என்றார்.


12 உடனே அரச எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டனர்.
முதல் மாதம் பதின்மூன்றாம் நாளில் ஆமான் கட்டளையிட்ட அனைத்தும்
அரசின் குறுநில மன்னர்களுக்கும், மாநிலங்களின் அனைத்து ஆளுநர்களுக்கும்,
அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும், அவர்தம் மக்களின் வரிவடிவ வாரியாகவும்,
மொழி வாரியாகவும் அரசரின் பெயரால் எழுதப்பெற்று,
அரச கணையாழியால் முத்திரையிடப் பெற்று அனுப்பப்பட்டது.
13 அதார் என்ற பன்னிரண்டாம் மாதத்தின் பதின்மூன்றாம் நாளன்று,
ஒரே நாளில், சிறுவர்முதல் பெரியோர் வரை,
குழந்தைகளும் பெண்களும் உட்பட யூதர் அனைவரும் கொல்லப்பட்டு,
அழிந்து ஒழிந்துபோகுமாறும்,
அவர்தம் உடைமைகள் கொள்ளையிடப்பட வேண்டும் எனவும்
எழுதப்பட்ட மடல்கள் விரைவு அஞ்சலர் வழியே
அரசின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பட்டன.
14 இம்மடலின் நகல் ஒவ்வொன்றும்,
ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமாக அறிவிக்கப்பட்டு,
மக்கள் அனைவரும் அந்நாளுக்கென ஆயத்தமாகும்படி அழைக்கப்பட்டனர்.


15 விரைவு அஞ்சலர் மன்னரின் ஆணையால் ஏவப்பட்டு விரைந்து வெளியேற,
சூசான் அரண்மனையிலும் இச்சட்டம் அறிவிக்கப்பட்டது.
மன்னரும் ஆமானும் மது அருந்துமாறு அமர்ந்தனர்.
சூசான் நகரே கலங்கிற்று.


குறிப்புகள்

[*] 3:9 'பதினாயிரம் தாலந்து' என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 4[தொகு]

அரசி எஸ்தரின் உதவியை மொர்தக்காய் நாடல்[தொகு]


1 இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் அறிந்த மொர்தக்காய்
தம் ஆடைகளைக் கிழித்து, சாக்கு உடை அணிந்து,
சாம்பல் பூசிக்கொண்டு,
வெளியே நகரின் மையத்திற்குச் சென்று ஓலமிட்டு, மனங்கசிந்து அழுதார்.
2 அரச வாயிலுள் சாக்கு உடை அணிந்து எவரும் நுழையக்கூடாது என்பதால்
அவர் வாயில் வரை சென்றார்.
3 மன்னரின் வார்த்தையும் நியமமும் எந்தெந்த மாநிலங்களை அடைந்தனவோ,
அங்கெல்லாம் இருந்த யூதரிடையே
பெரும் புலம்பலும், நோன்பும், கண்ணீரும், அழுகையும் விளங்க,
அனைவரும் சாக்கு உடை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டனர்.


4 எஸ்தரின் செவிலியரும் அண்ணகர்களும் வந்து இவற்றை அவரிடம் சொல்ல,
அரசி பெரிதும் வாடித் துடித்தார்.
மொர்தக்காய் சாக்கு உடை களைந்து,
நல்லாடை அணிந்து கொள்ளும்படி ஆடைகளை அவர் அனுப்பி வைத்தார்.
அவரோ அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.
5 எஸ்தருக்குப் பணிபுரியும்படி
மன்னரால் நியமிக்கப்பட்டிருந்த அண்ணகர் அத்தாக்கை அவர் அழைத்து,
மொர்தக்காயின் அவலநிலைக்குக் காரணம் யாதென அறிந்து வருமாறு அனுப்பினார்.
6 அத்தாக்கு அரச வாயிலுக்கு எதிரே நகர்ச் சந்தியில் இருந்த மொர்தக்காயிடம் சென்றார்.
7 மொர்தக்காய் தமக்கு நேரிட்ட அனைத்தைப் பற்றியும்,
யூதரை அழிக்கும்படி அரச கருவூலத்தில் சேர்ப்பதற்காக
ஆமான் வாக்களித்த வெள்ளி பற்றியும் அவருக்குத் தெரிவித்தார்.
8 மேலும், சூசானில் பிறப்பிக்கப்பட்ட நியமத்தின் ஒரு நகலை
எஸ்தரிடம் காட்டும்படி கொடுத்து,
அவர் மன்னரிடம் சென்று மன்றாடி,
அவர் முன்னிலையில் தம் மக்களுக்காகப் பரிந்து பேசுமாறு வேண்டினார்.
9 அத்தாக்கு அவ்வாறே சென்று,
எஸ்தரிடம் மொர்தக்காயின் வார்த்தைகளை எடுத்துரைத்தார்.
10 எஸ்தர் மறுபடியும் அத்தாக்கு வழியாக மொர்தக்காய்க்குச் சொல்லி அனுப்பியது:
11 "மன்னரால் அழைப்புப் பெறாத ஆண், பெண் எவரும்
மன்னரின் உள்முற்றத்திற்குச் சென்றால் கொல்லப்படுவர் என்பதும்,
யாருக்கு மன்னர் தம் பொற்செங்கோலை நீட்டுகிறாரோ அவரே பிழைப்பார் என்பதும் அரச நியமம்;
இதனை மன்னரின் அனைத்து ஊழியர்களும் மாநில மக்கள் அனைவரும் அறிவர்."


12 அவரும் எஸ்தரின் வார்த்தைகளை மொர்தக்காயிடம் அறிவித்தார்.
13 அதற்கு மொர்தக்காய் எஸ்தரிடம் அறிவிக்கும்படியாகக் கூறியது:
அனைத்து யூதருள்ளும் அரச மாளிகையில் உள்ள நீ மட்டும் காப்பாற்றப் பெறுவாய் என
உனக்குள் கற்பனை செய்யவேண்டாம்.
14 ஏனெனில், இவ்வமயம் நீ மௌனமாய் வாளாவிருப்பின்,
விடுதலையும் பாதுகாப்பும் யூதருக்குப் பிறிதொரு இடத்தினின்று தோன்றும்.
ஆனால் நீயும் உன் தந்தையின் வீட்டாரும் அழிவீர்.
யார் அறிவார்? ஒருவேளை இதுபோன்ற நேரத்திற்கெனவே நீ அரசியாகி உள்ளாய் போலும்!".


15 இது கேட்ட எஸ்தர் மொர்தக்காயிடம் சொல்லும்படியாகக் கூறியது:
16 "சூசானில் காணப்படும் அனைத்து யூதரையும் ஒன்று சேர்ப்பீராக!
எனக்காக நோன்பிருந்து மூன்றுநாள் இரவு பகல் உண்ணாமலும், குடியாமலும் இருப்பீராக!
நானும் என் செவிலியரும் அவ்வாறே நோன்பிருப்போம்.
சட்டத்திற்குப் புறம்பே எனினும் நான் மன்னரிடம் செல்வேன்!
அழிவதாயின் அழிகின்றேன்."
17 மொர்தக்காய் அவ்வாறே சென்று,
எஸ்தரின் வாக்கின்படியே அனைத்தையும் செய்தார்.


(தொடர்ச்சி): எஸ்தர்:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை