திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 29 முதல் 30 வரை

விக்கிமூலம் இலிருந்து
அரசர் எசேக்கியா. சுவர் ஓவியம். கலைஞர்: மிக்கேலாஞ்சலோ போனரோட்டி (1495-1564). காப்பிடம்: வத்திக்கான் நகர்.

2 குறிப்பேடு (The Second Book of Chronicles)[தொகு]

அதிகாரங்கள் 29 முதல் 30 வரை

அதிகாரம் 29[தொகு]

யூதாவின் அரசர் எசேக்கியா[தொகு]

(2 அர 18:1-3)


1 எசேக்கியா அரசரானபோது அவருக்கு வயது இருபத்தைந்து. அவர் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். செக்கரியா மகளான அபியா என்பவளே அவர் தாய்.
2 அவர் தம் மூதாதையான தாவீதைப் போல் ஆண்டவரின் பார்வையில் நேரியன செய்தார்.

திருக்கோவில் தூய்மைப்படுத்தப்படல்[தொகு]


3 அவர் தம் ஆட்சியின் முதல் ஆண்டின் முதல் மாதத்தில் ஆண்டவரின் இல்லக் கதவுகளைத் திறந்து, அவற்றைப் பழுதுபார்த்தார்.
4 குருக்களையும் லேவியரையும் வரவழைத்து கீழை மண்டபத்தில் ஒன்று கூட்டினார்.
5 அவர் அவர்களை நோக்கி, "லேவியரே, கேளுங்கள்; இப்பொழுது நீங்கள் உங்களையே தூய்மைப்படுத்திக்கொண்டு, உங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரின் இல்லத்தைத் தூய்மைப்படுத்துங்கள், திருத்தலத்தின் எல்லாத் தீட்டுகளையும் அகற்றுங்கள்.
6 ஏனெனில், நம் தந்தையர் துரோகம் செய்து, நம் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் தீயன செய்தனர்; அவரைப் புறக்கணித்து, ஆண்டவரின் திருஉறைவிடத்திலிருந்து தங்கள் முகங்களைத் திருப்பி, முதுகைக் கட்டினர்.
7 அவர்கள், திருத்தலத்தில், இஸ்ரயேலின் கடவுளுக்குத் தூபமிடாமலும் எரிபலி செலுத்தாமலும் விளக்குகளை அணைத்து விட்டு, மண்டபக் கதவுகளைப் பூட்டி வைத்தனர்.
8 அதனால், யூதாவின் மீதும், எருசலேமின்மீதும் ஆண்டவர் சினம் கொண்டார்; அவர் அவர்களை நடுக்கத்திற்கும் அச்சத்துக்கும், பழிப்பிற்கும் கையளித்தார். இதை நீங்கள் கண்ணாரக் கண்டீர்கள்!
9 இதன் பொருட்டே இதோ நம் தந்தையர் வாளால் வெட்டுண்டனர்; நம் புதல்வரும் புதல்வியரும் மனைவியரும் நாடு கடத்தப்பட்டனர்.


10 இப்பொழுது இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருடன் ஓர் உடன்படிக்கை செய்ய என் மனம் முடிவு செய்துள்ளது; அப்பொழுதுதான் அவரது வெஞ்சினம் நம்மைவிட்டு நீங்கும்.
11 ஆதலால், எம் புதல்வர்களே, நீங்கள் வாளாவிருக்க வேண்டாம்; ஏனெனில், நீங்கள் ஆண்டவர் திருமுன் நின்று திருப்பணி புரியவும், வழிபாடு நிறைவேற்றவும், தூபமிடவும் அவர் உங்களைத் தேர்ந்து கொண்டுள்ளார்" என்றார்.


12 அதைக் கேட்ட கோகாத்து புதல்வரில் அமாசாயின் மகன் மகாத்து, அசரியாவின் மகன் யோவேல், மெராரி புதல்வரில் அப்தியின் மகன் கீசு, எகல்லேலின் மகன் அசரியா, கெர்சோனியரில் சிமமாவின் மகன் யோவாகு, யோவாகின் மகன் ஏதேன்,
13 எலிசாப்பான் புதல்வரில் சிம்ரியும் எயூயேலும், ஆசாபு புதல்வரில் செக்கரியாவும் மத்தனியாவும்,
14 ஏமான் புதல்வரில் எகுவேலும் சிமயியும், எதுத்தூன் புதல்வரில் செமாயாவும் உசியேலும் ஆகிய லேவியர் எழுந்து,
15 தங்கள் சகோதரர்களை ஒன்றுதிரட்டி, தங்களையே தூய்மைப்படுத்தியபின், அரச கட்டளைக்கும் ஆண்டவரின் வாக்குக்கும் ஏற்ப ஆண்டவரின் இல்லத்தைத் தூய்மைப்படுத்த நுழைந்தனர்.
16 ஆண்டவரின் இல்லத்தின் உட்புறத்தைத் தூய்மைப்படுத்த குருக்கள் உள்ளே சென்று, திருக்கோவிலில் கண்ட தீட்டான எல்லாவற்றையும் அதன் மண்டபத்திற்குக் கொண்டு வந்தனர். லேவியர் அவற்றை எடுத்துக் கிதரோன் பள்ளத்தாக்கில் கொட்டினர்.
17 முதல் மாதத்தின் முதல் நாளில் அவர்கள் தூய்மைப்படுத்தத் தொடங்கினர். மாதத்தின் எட்டாம் நாள் ஆண்டவரின் மண்டபத்திற்கு வந்து, ஆண்டவரின் இல்லத்தை எட்டு நாளில் தூய்மைப்படுத்தினர். ஆக, முதல் மாதத்தின் பதினாறாம் நாளில் இப்பணியை முடித்தனர்.

திருக்கோவில் மறு அர்ப்பணம்[தொகு]


18 அரசர் எசேக்கியாவிடம் அவர்கள் வந்து, "ஆண்டவரின் இல்லத்தை முழுமையாக நாங்கள் தூய்மைப்படுத்திவிட்டோம்; எரிபலி பீடத்தையும், அதற்குரிய எல்லாத் துணைக்கலன்களையும், திருமுன்னிலை அப்ப மேசையையும், அதற்குரிய எல்லாத் துணைக்கலன்களையும்,
19 ஆகாசு தனது ஆட்சிக் காலத்தில் துரோகம் செய்து புறக்கணித்திருந்த எல்லாக் கலன்களையும் தூய்மைப்படுத்தி, ஆண்டவரின் பலிபீடத்துக்கு முன்பாக அவற்றை ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறோம்" என்றனர்.


20 அரசர் எசேக்கியா அதிகாலையில் எழுந்து, நகரத் தலைவர்களை ஒன்று திரட்டிக் கொண்டு ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்றார்.
21 அரசுக்காகவும், திருத்தலத்துக்காகவும், யூதாவுக்காகவும் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுக்க அவர்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கிடாய்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்குட்டிகளையும் கொண்டு வந்தனர். ஆண்டவருக்கு அவற்றைப் பீடத்தில் பலியிட அரசர் ஆரோனின் புதல்வர்களான குருக்களுக்குக் கட்டளையிட்டார்.
22 அவர்கள் காளைகளை வெட்ட, குருக்கள் அவற்றின் குருதியைப் பிடித்துப் பலிபீடத்தின் மேல் தெளித்தனர்; ஆட்டுக்கிடாய்களை வெட்டி, அவற்றின் குருதியையும் பலிபீடத்தின் மேல் தெளித்தனர்; ஆட்டுக்குட்டிகளையும் வெட்டி அவற்றின் குருதியையும் பலிபீடத்தின்மேல் தெளித்தனர்;
23 அடுத்து, பாவம்போக்கும் பலியான வெள்ளாட்டுக் கிடாய்களை அரசனுக்கும் மக்கள் சபைக்கும் முன்பாகக் கொண்டுவந்து, அவற்றின்மேல் தங்கள் கைகளை விரித்தனர்.
24 "இஸ்ரயேலர் அனைவருக்காகவும் எரிபலியும் பாவம்போக்கும் பலியும் செலுத்தவேண்டும்" என்று அரசர் கூறியிருந்ததால், குருக்கள் அவற்றை வெட்டி அவற்றின் குருதியைப் பலிபீடத்தில் தெளித்து, இஸ்ரயேலர் அனைவருக்காகவும் பாவம்போக்கும் பலியை நிறைவேற்றினர்.


25 தாவீதின் கட்டளைப்படியும், அரசரின் காட்சியாளர் காத்து, இறைவாக்கினர் நாத்தான் ஆகியோரின் கட்டளைப்படியும், கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவற்றை இசைக்கும் லேவியரை ஆண்டவரின் இல்லத்தில் எசேக்கியா நியமித்திருந்தார். ஏனெனில், ஆண்டவரே இக்கட்டளையைத் தமது இறைவாக்கினர்கள் வாயிலாக அளித்திருந்தார்.
26 அதனால், தாவீதின் இசைக்கருவிகளுடன் லேவியரும், எக்காளத்துடன் குருக்களும் அங்கே நின்றிருந்தனர்.
27 பின்னர் எரிபலியைப் பீடத்தின்மேல் நிறைவேற்றுமாறு எசேக்கியா கட்டளையிட்டார்; அப்பலியைச் செலுத்தத் தொடங்கியபோது, இஸ்ரயேலரின் அரசர் தாவீதின் இசைக்கருவிகளுடனும் எக்காளத்துடனும் ஆண்டவருக்கான புகழ்ப்பாடல் தொடங்கியது.
28 எரிபலி நிறைவேறுமட்டும் பாடகர்கள் பாட எக்காளம் முழங்க, எல்லா மக்களும் வணங்கி நின்றனர்.
29 அப்பலி நிறைவுற்றபோது அரசரும் அவரோடு இருந்த அனைவரும் தலைவணங்கி வழிபட்டனர்.
30 தாவீதின் வார்த்தைகளிலும், திருக்காட்சியாளர் ஆசாபின் மொழிகளிலும் ஆண்டவரைப் புகழுமாறு அரசர் எசேக்கியாவும் தலைவர்களும் லேவியர்களுக்குக் கட்டளையிட்டனர். அவர்களும் மகிழ்ச்சியுடன் ஆண்டவரைப் புகழந்து தலைவணங்கி வழிபட்டனர்.


31 அப்பொழுது எசேக்கியா அவர்களை நோக்கி, "இதோ நீங்கள் ஆண்டவருக்கென உங்களையே அர்ப்பணித்துள்ளீர்கள்; ஆதலால் அணுகி வாருங்கள், ஆண்டவரின் இல்லத்துக்குப் பலிகளையும் நன்றிப்பலிகளையும் கொண்டு வாருங்கள்" என்று கூறினார். அப்பொழுது மக்கள் சபையார் பலிகளையும், நன்றிப்பலிகளையும் கொண்டு வந்தனர், விரும்பியோர் பலர் எரிபலிகளையும் கொண்டுவந்தனர்.
32 மக்கள் சபையார் கொண்டுவந்த எரிபலிகளின் மொத்த எண்ணிக்கை: எழுபது காளைகள், நூறு ஆட்டுக் கிடாய்கள், இருநூறு ஆட்டுக்குட்டிகள், இவையாவும் ஆண்டவருக்கான எரிபலி.
33 இவற்றுடன் அவர்கள் அறுநூறு மாடுகளையும் மூவாயிரம் ஆடுகளையும் அர்ப்பணித்தனர்.
34 குருக்கள் சிலரே இருந்ததால், எரிபலிகளுக்கான எல்லாவற்றையும் தோலுரிக்க அவர்களால் இயலவில்லை. எனவே, அவ்வேலையை முடித்துத் தங்களைத் தூய்மைப்படுத்தும்வரை அவர்களுக்கு அவர்கள் சகோதரர்களான லேவியர் உதவி செய்தனர். ஏனெனில் குருக்களைவிட லேவியர் தம்மைத் தூய்மையாக்கிக் கொள்வதில் அதிக நேர்மையுடன் நடந்து கொண்டனர்.
35 ஏராளமான எரிபலிகளுடன், நல்லுறவுப் பலிகளின் கொழுப்பும், எரிபலிக்கான நீர்மப் படையல்களும் இருந்தன. இவ்வாறு ஆண்டவரின் இல்ல வழிபாடு மறுமலர்ச்சி அடைந்தது.
36 தன் மக்களுக்காகக் கடவுள் ஆற்றியது குறித்து எசேக்கியாவும், எல்லா மக்களும் மகிழ்ந்தனர். ஏனெனில், இவையாவும் மிக விரைவாய் நடந்தேறின.

அதிகாரம் 30[தொகு]

பாஸ்கா திருவிழா[தொகு]


1 இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருக்குப் பாஸ்கா விழா கொண்டாட ஆண்டவரின் இல்லத்திற்கு வருமாறு இஸ்ரயேல், யூதா மக்கள் அனைவருக்கும் ஆள்மூலமும் எப்ராயிம், மனாசே குலத்தாருக்கு மடல் மூலமும் எசேக்கியா அழைப்பு விடுத்தார்.
2 பாஸ்காவை இரண்டாம் மாதத்தில் கொண்டாடுவதாக அரசரும், எல்லாத் தலைவர்களும், எருசலேமின் மக்கள் சபையார் எல்லாரும் முடிவு செய்தனர்.
3 குறிப்பிட்ட காலத்தில் கொண்டாட இயலாததற்குக் காரணம், போதுமான குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவில்லை; மக்களும் எருசலேமில் வந்து கூடவில்லை. [*]
4 அரசருக்கும் மக்கள் சபையார் எல்லாருக்கும் இத்திட்டம் சரியெனப்பட்டது.


5 எருசலேமில் இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருக்குப் பாஸ்கா விழா கொண்டாடப் பெயேர்செபாமுதல் தாண்வரை இருந்த இஸ்ரயேலர் எல்லாருக்கும் அழைப்பு விடுக்கும் ஓர் அறிவிப்பை அனுப்ப முடிவு செய்தனர்; ஏனெனில், எழுதியுள்ளபடி மக்கள் பெரும் தொகையினராய் அதனைக் கொண்டாடவில்லை.
6 அரசரிடமிருந்தும் தலைவர்களிடமிருந்தும் மடல்களைப் பெற்றுக்கொண்ட அஞ்சலர், அரச கட்டளைப்படி, இஸ்ரயேல், யூதா நாடெங்கும் சென்று, "இஸ்ரயேல் மக்களே! ஆபிரகாம், ஈசாக்கு இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; அப்பொழுது அசீரிய மன்னனின் கைக்குத் தப்பிய எஞ்சியோராகிய உங்களிடம் அவர் மீண்டும் வருவார்.
7 தங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவருக்கு எதிராகத் தீமையானதையே செய்த உங்கள் தந்தையர், சகோதரர்கள் போன்று நீங்கள் இருக்க வேண்டாம்; நீங்களே காண்பதுபோல், அவர் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தார்.
8 உங்கள் மூதாதையரைப் போல் நீங்களும் முரட்டுப் பிடிவாதம் கொண்டவராயிருக்க வேண்டாம். மாறாக, ஆண்டவருக்குப் பணியுங்கள், அவர் என்றென்றும் புனிதமாக்கியுள்ள திருத்தலத்திற்கு வந்து, உங்கள் கடவுளாம் ஆண்டவருக்கு ஊழியம் புரியுங்கள். அப்பொழுது அவரது கோபக்கனல் உங்களை விட்டு நீங்கும்.
9 நீங்கள் ஆண்டவரிடம் திரும்பி வந்தால், உங்கள் சகோதரர்களும் புதல்வர்களும் தங்களைச் சிறைப்படுத்தியோரிடமிருந்து இரக்கம் பெற்று, இந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர். ஏனெனில் உங்கள் கடவுளாம் ஆண்டவர் அருளும் இரக்கமும் கொண்டவர்; நீங்கள் அவர்பால் திரும்பினால் அவர் தம் முகத்தை உங்களிடமிருந்து திருப்பிக்கொள்ளார்" என்றனர்.


10 அஞ்சலர், எப்ராயிம், மனாசே நாடுகளிலும் செபுலோனிலும்கூட நகர் நகராகச் சென்றனர். ஆனால் அவற்றின் மக்கள் இவர்களை எள்ளி நகையாடினர்.
11 ஆயினும், ஆசேர், மனாசே செபுலோன் ஆகியவற்றிலிருந்து சிலர் தம்மையே தாழ்த்திக் கொண்டு எருசலேமுக்கு வந்தனர்.
12 ஆண்டவரின் வாக்கிற்கு ஏற்பவும், அரசர், தலைவர்களின் கட்டளைப்படியும் யூதாவினர் நடப்பதற்கு ஆண்டவரின் ஆற்றல் அவர்களை ஒருமனப்படுத்தியது.
13 இரண்டாம் மாதத்தில் புளியாத அப்பத் திருவிழாவைக் கொண்டாட எருசலேமில் மக்கள் சபையார் மாபெரும் அளவில் கூடினர்.
14 அவர்கள் எருசலேமில் இருந்த பலிபீடங்கள், தூபபீடங்கள் எல்லாவற்றையும் தகர்த்து, கிதரோன் பள்ளத்தாக்கில் எறிந்தனர்.

பாஸ்காப் பலி[தொகு]


15 இரண்டாம் மாதத்தின் பதினான்காம் நாள் அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியை வெட்டினர்; குருக்களும் லேவியரும் வெட்கம் அடைந்தவராய், தங்களையே தூய்மையாக்கிக் கொண்டனர். பின்னர், ஆண்டவரின் இல்லத்திற்கு எரிபலியைக் கொண்டு வந்தனர்.
16 கடவுளின் மனிதராம் மோசேயின் திருச்சட்டப்படி, அவர்கள் தங்களுக்குரிய இடத்தில் நின்றனர். லேவியர் கையினின்று பெற்ற இரத்தத்தை குருக்கள் தெளித்தனர்.
17 சபையிலிருந்த பலர் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, லேவியர் பாஸ்காப் பலியை அதனை புனிதப்படுத்த இயலாத தீட்டுடையோர் சார்பாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தனர்.
18 இருப்பினும், மக்கள் பலர் - எப்ராயிம், மனாசே, இசக்கார், செபுலோன் குலத்தார் பலர் - தங்களையே தூய்மையாக்கிக் கொள்ளாமல், எழுதியுள்ளதற்கு மாறாக, பாஸ்காவை உண்டனர். எனவே எசேக்கியா வேண்டியது: "நல்லவரான ஆண்டவரே! மன்னித்தருளும்.
19 தன் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரைத் தேட மனம் கொண்ட ஒவ்வொருவனையும் - அவன் திருத்தலத்திற்கு ஏற்ற முறையில் தன்னையே தூய்மையாக்கிக் கொள்ளவில்லையெனினும் - மன்னித்தருளும்."
20 ஆண்டவர் எசேக்கியாவின் வேண்டுதலைக் கேட்டு, மக்களுக்கு நலமளித்தார்.
21 எருசலேமில் கூடியிருந்த இஸ்ரயேல் மக்கள் புளியாத அப்பத் திருவிழாவை மிகுந்த மகிழ்ச்சியோடு ஏழு நாள்கள் கொண்டாடினர். ஆண்டவரை லேவியர் நாள்தோறும் புகழ்ந்தனர்; குருக்கள் பேரொலி இசைக்கருவிகளை மீட்டிப் போற்றினர்.
22 ஆண்டவரின் பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட லேவியர் அனைவரின் உள்ளத்தையும் தொடுமாறு எசேக்கியா பேசினார். விழா உணவை அவர்கள் ஏழு நாள் உண்டு நல்லுறவுப் பலிகளைச் செலுத்தி, அவர்களின் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரைப் புகழ்ந்து போற்றினர்.


23 மீண்டும் ஏழு நாள்கள் கொண்டாட, மக்கள் சபையார் எல்லாரும் முடிவு செய்தனர்; அவ்வாறே அவர்கள் அக்களிப்புடன் மீண்டும் ஏழு நாள்கள் கொண்டாடினர்.
24 யூதாவின் அரசர் எசேக்கியா மக்கள் சபைக்காக ஆயிரம் காளைகளையும், எழுபதாயிரம் ஆடுகளையும் அளித்திருந்தார், அவ்வாறே தலைவர்களும் மக்கள் சபைக்காக ஆயிரம் காளைகளையும், பத்தாயிரம் ஆடுகளையும் அளித்திருந்தனர். குருக்கள் பலர் தங்களையே தூய்மையாக்கிக்கொண்டனர்.
25 யூதாவின் அனைத்துச் சபையார், குருக்கள், லேவியர், இஸ்ரயேலின் அனைத்து மக்கள் சபையார் இஸ்ரயேலிலிருந்து வந்தவரும் யூதாவில் வாழ்ந்தவருமான அன்னியர் அனைவரும் அக்களிப்புற்றனர்.
26 எருசலேமில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. ஏனெனில், இஸ்ரயேலின் அரசர் தாவீதின் மகன் சாலமோனின் காலம் முதல் எருசலேமில் இப்படி நடந்ததே இல்லை.
27 குருக்களும் லேவியரும் எழுந்து மக்களுக்கு ஆசி வழங்கினர். அவர்களது மன்றாட்டு கேட்கப்பட்டது. கடவுளின் திருஉறைவிடமான வானத்தை அவர்களது வேண்டுதல் எட்டியது.

குறிப்பு

[*] 30:2-3 = எண் 9:9-11.

(தொடர்ச்சி): குறிப்பேடு - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 31 முதல் 32 வரை