திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - முதல் நூல்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து
லேவி குலத்தவரின் அடையாளச் சின்னம்.

1 குறிப்பேடு (The First Book of Chronicles)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

ரூபனின் வழிமரபினர்[தொகு]


1 இஸ்ரயேலின் தலைமகன் ரூபனின் புதல்வர்: அவர் தலைமகனாய் இருந்தும் தம் தந்தையின் மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தியதால் அவரது தலைமகனுரிமை இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் புதல்வர்களுக்கு வழங்கப்பட்டது. எனவே தலைமுறை அட்டவணையில் அவர் தலைமகனாய்க் கருதப்படவில்லை. [1]
2 யூதா, தம் சகோதரருள் வலிமைமிக்கவராயிருந்தும் அவரிடமிருந்து தலைவர் ஒருவர் தோன்றியபோதிலும், தலைமகனுரிமை யோசேப்புக்கே உரித்தாயிற்று. [2]
3 இஸ்ரயேலின் தலைமகன் ரூபனின் புதல்வர்: அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி.


4 யோவேலின் புதல்வர்: அவர் மகன் செமாயா, அவர் மகன் கோகு, அவர் மகன் சிமயி,
5 அவர் மகன் மீக்கா, அவர் மகன் இரயாயா, அவர் மகன் பாகால்,
6 அவர் மகன் பெயேரா; ரூபனியரின் தலைவரான அவரை அசீரிய மன்னன் தில்கத்பில்னேசர் சிறைப்படுத்திச் சென்றான். [3]


7 அவர்களது உறவின்முறையில் குடும்ப வாரியாகத் தலைமுறை அட்டவணையில் குறிக்கப்பட்டோர்: தலைவர் எயியேல், செக்கரியா,
8 யோவேல் மகன் செமாவிற்குப் பிறந்த ஆசாசு புதல்வன் பெலா. அவர் வழிமரபினர் அரோயேரிலிருந்து நேபோ, பாகால்மெயோன் வரை குடியேறியிருந்தனர்.
9 அவர்கள் கிழக்கே யூப்பிரத்தீசு நதி முதல் பாலைநிலத்தின் எல்லை வரை வாழ்ந்து வந்தனர்; கிலயாது நாட்டில் அவர்களின் கால்நடைகள் பெருகின.
10 அவர்கள் சவுலின் நாள்களில் அகாரியருடன் போர்தொடுத்துத் தம் கையால் அவர்களை வீழ்த்தினர்; கிலயாதின் கிழக்குப் புறம் எங்கும் தங்கள் கூடாரங்களில் வாழ்ந்தனர்.

காத்தின் வழிமரபினர்[தொகு]


11 அவர்களுக்கு வடக்கே பாசான் நிலப்பகுதியில் சலிக்காவரை காத்தின் புதல்வர் குடியேறியிருந்தனர்.
12 பாசானில், தலைவரான யோவேல், அடுத்தவரான சாப்பாம், யானாய், சாப்பாத்து ஆகியோர் வாழ்ந்தனர்.
13 அவர்கள் மூதாதையர் வீட்டுச் சகோதரர் மிக்கேல், மெசுல்லாம், சேபா, யோராய், யாக்கான், சீயா, ஏபேர் என்னும் ஏழு பேர்.
14 இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபிகயிலின் புதல்வர்: ஊரி யாரோவாகின் மகன்; அவர் கிலெயாதின் மகன்; அவர் மிக்கேலின் மகன்; அவர் எசிசாயின் மகன்; அவர் யாகுதோவின் மகன்; அவர் பூசின் மகன்.
15 கூனிக்குப் பிறந்த அப்தியேலின் மகன் அகி அவர்களின் மூதாதை வீட்டுக்குத் தலைவராய் இருந்தார்.
16 அவர்கள் கிலயாது, பாசான், அதைச் சார்ந்த நகர்கள், சாரோனின் மேய்ச்சல் நிலப்பகுதிகள் மற்றும் அவற்றின் எல்லைகள்வரை குடியேறினர்.
17 அவர்கள் யாவரும் யூதா அரசன் யோத்தாம் காலத்திலும் இஸ்ரயேல் அரசன் எரொபவாம் நாள்களிலும் தலைமுறை அட்டவணையில் பதிவு செய்யப்பட்டனர்.

கிழக்குப் பழங்குடிகளின் படைகள்[தொகு]


18 ரூபனின் புதல்வர், காத்தின் புதல்வர், மனாசேயின் பாதிக்குலத்தார் ஆகியோர்களிடையே கேடயத்தையும் வாளையும் ஏந்தி, வில் எய்து, போர்ப்பயிற்சி பெற்ற வலிமைமிக்கோர் நாற்பத்து நாலாயிரத்து எழுநூற்று அறுபது பேர் இருந்தனர்.
19 அவர்கள் ஆகாரியர், எத்தூர், நாப்பிசு, நோதாபு ஆகியோரை எதிர்த்துப் போரிட்டனர். vv
20 அப்பொழுது அவர்கள் ஆகாரியரையும் அவர்களோடு இருந்த யாவரையும் எதிர்ப்பதற்குரிய ஆற்றலைக் கடவுளிடமிருந்து பெற்றார்கள். பகைவரும் அவர்களிடம் கையளிக்கப்பட்டனர். ஏனெனில் அவர்கள் போர் நடக்கும் போது கடவுளை நோக்கி மன்றாடினார்கள். அவர் மேல் அவர்கள் நம்பிக்கை வைத்ததால் அவரும் அவர்களின் மன்றாட்டைக் கேட்டருளினார்.
21 அவர்கள் தம் எதிரிக்குச் சொந்தமான கால்நடைகளான ஐம்பதாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், இலட்சம் ஆள்களையும் உயிருடன் கைப்பற்றினார்கள்.
22 அந்தப் போர் கடவுளால் நடத்தப்பட்டதால், பலர் வெட்டி வீழ்த்தப்பட்டனர். நாடு கடத்தப்படும்வரை அவர்கள் அங்கேயே வாழ்ந்தார்கள்.

கிழக்கு மனாசே பகுதியின் மக்கள்[தொகு]


23 மனாசேயின் பாதிக்குலத்துப் புதல்வரும் இந்த நாட்டிலேயே வாழ்ந்த வந்தனர். அவர்கள் பாசான் முதல் பாகால்எர்மோன், செனிர், எர்மோன் மலைவரைக்கும் பெருவாரியாகப் பெருகியிருந்தனர்.
24 அவர்களின் மூதாதை வீட்டுத் தலைவர்கள் இவர்களே: ஏப்பேர், இசி, எலியேல், அஸ்ரியேல், எரேமியா, ஓதவியா, எகுதியேல். அவர்கள் ஆற்றல்மிக வீரர்களாகவும் புகழ்மிக்கவர்களாகவும் தம் மூதாதை வீட்டுத் தலைவர்களாகவும் திகழ்ந்தார்கள்.

கிழக்குப் பழங்குடிகளின் வெளியேற்றம்[தொகு]


25 அவர்களோ தங்கள் கண்முன்னே கடவுள் அழித்து விட்ட நாட்டு மக்களின் தெய்வங்களைப் பின்பற்றிய வேசித்தனத்தின் மூலம் தங்கள் மூதாதையரின் கடவுளுக்குத் துரோகம் செய்தனர்.
26 ஆதலால் இஸ்ரயேலின் கடவுள் அசீரிய மன்னன் பூலையும், அசீரிய மன்னன் தில்கத்பில்னேசரையும் கிளர்ந்தெழச் செய்தார். அவன் ரூபனியரையும், காத்தியரையும், மனாசேயின் பாதிக்குலத்தாரையும் சிறைப்படுத்தி, அலாகு, ஆபோர், ஆரா, கோசான் ஆற்றுப்பகுதி ஆகிய இடங்களுக்கு இழுத்துச் சென்றான். இன்று வரை அவர்கள் அங்கேயே உள்ளனர். [4]

குறிப்புகள்

[1] 5:1 = தொநூ 35:22; 49:3-4.
[2] 5:2 = தொநூ 49:8-10.
[3] 5:6 = 2 அர 15:29.
[4] 5:26 = 2 அர 15:19,29; 17:6.

அதிகாரம் 6[தொகு]

குருக்களின் குடும்ப அட்டவணை[தொகு]


1 லேவியின் புதல்வர்: கேர்சோன், கோகாத்து, மெராரி.
2 கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல்.


3 அம்ராமின் புதல்வர்: ஆரோன், மோசே, மிரியாம்.


4 ஆரோனின் புதல்வர்: நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர். எலயாசருக்குப் பினகாசு பிறந்தார்; பினகாசுக்கு அபிசூவா பிறந்தார்.
5 அபிசூவாவுக்குக் புக்கி பிறந்தார்; புக்கிக்கு உசீ பிறந்தார்.
6 உசீக்கு செரகியா பிறந்தார்; செரகியாவுக்கு மெரயோத்து பிறந்தார்.
7 மெரயோத்துக்கு அமரியா பிறந்தார்; அமரியாவுக்கு அகித்தூபு பிறந்தார்;
8 அகித்தூபுக்குச் சாதோக்கு பிறந்தார்; சாதோக்குக்கு அகிமாசு பிறந்தார்.
9 அகிமாசுக்கு அசரியா பிறந்தார்; அசரியாவுக்கு யோகனான் பிறந்தார்.
10 யோகனானுக்கு அசரியா பிறந்தார்; சாலமோன் எருசலேமில் கட்டிய திருக்கோவிலில் குருவாகப் பணி புரிந்தவர் இவரே.
11 அசரியாவுக்கு அமரியா பிறந்தார்; அமரியாவுக்கு அகித்தூபு பிறந்தார்.
12 அகித்தூபுக்குச் சாதோக்கு பிறந்தார்; சாதோக்குக்கு சல்லூம் பிறந்தார்.
13 சல்லூமுக்கு இல்க்கியா பிறந்தார்; இல்க்கியாவுக்கு அசரியா பிறந்தார்.
14 அசரியாவுக்குச் செராயா பிறந்தார்; செராயாவுக்கு யோசதாக்கு பிறந்தார்.
15 ஆண்டவர் நெபுகத்னேசரின் கைவன்மை கொண்டு எருசலேமையும் யூதாவையும் சிறைப்படுத்தியபோது யோசதாக்கும் நாடுகடத்தப்பட்டார்.

லேவியின் பிற வழிமரபினர்[தொகு]


16 லேவியின் புதல்வர்: கேர்சோம், கோகாத்து, மெராரி.
17 கேர்சோமின் புதல்வர் பெயர்கள் இவையே: லிப்னி, சிமயி.
18 கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல்.
19 மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி; இவர்கள் அவர்களின் மூதாதை வழி வந்த லேவியர் குடும்பங்கள். [*]


20 கேர்சோமின் புதல்வர்: லிப்னி; அவர் மகன் யாகத்து; அவர் மகன் சிம்மா;
21 அவர் மகன் யோவாகு; அவர் மகன் இத்தோ; அவர் மகன் செராகு; அவர் மகன் எயத்தராய்.


22 கோகாத்தின் புதல்வர்: அம்மினதாபு; அவர் மகன் கோராகு; அவர் மகன் அசீர்;
23 அவர் மகன் எல்கானா; அவர் மகன் எபியசாபு; அவர் மகன் அசீர்;
24 அவர் மகன் தாகத்து; அவர் மகன் ஊரியேல்; அவர் மகன் உசியா; அவர் மகன் சாவூல்.


25 எல்கானாவின் புதல்வர்: அமாசாய், அகிமோத்து,
26 அவர் மகன் எல்கானா; அவர் மகன் சோப்பாய்; அவர் மகன் நாகத்து,


27 அவர் மகன் எலியாபு; அவர் மகன் எரோகாம்; அவர் மகன் எல்கானா.


28 சாமுவேலின் புதல்வர்: தலை மகன் யோவேல், இரண்டாமவர் அபியா.


29 மெராரியின் புதல்வர்: மக்லி; அவர் மகன் லிப்னி; அவர் மகன் சிமயி; அவர் மகன் உசா,
30 அவர் மகன் சிமயா, அவர் மகன் அகியா; அவர் மகன் அசாயா.

கோவில் பாடற்குழுவினர்[தொகு]


31 ஆண்டவரின் இல்லத்தில் பேழை தங்கியிருந்தபோது அங்கே திருப்பாடல் பணிக்கெனத் தாவீது நியமித்திருந்தவர்கள் இவர்களே.
32 எருசலேமில் சாலமோன் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டியெழுப்பும் வரை, அவர்கள் சந்திப்புக்கூடாரத் திருஉறைவிடத்தின்முன் திருப்பாடல்கள் பாடிப் பணியாற்றினார்கள். அவர்கள் தங்கள் பணிமுறையின்படி ஊழியம் செய்து வந்தார்கள்.


33 அங்குத் திருப்பணியாற்றியவர்களும் அவர்களின் புதல்வரும் இவர்களே: கோகாத்திய மக்களுள் ஏமான் என்னும் பாடகர்; அவர் யோவேலின் மகன்; அவர் சாமுவேலின் மகன்;
34 அவர் எல்கானாவின் மகன்; அவர் எரோகாமின் மகன்; அவர் எலியேலின் மகன்; அவர் தோவாகின் மகன்;
35 அவர் சூப்பின் மகன்; அவர் எல்கானாவின் மகன்; அவர் மாகாத்தின் மகன்; அவர் அமாசாயின் மகன்;
36 அவர் எல்கானாவின் மகன்; அவர் யோவேலின் மகன்; அவர் அசரியாவின் மகன்; அவர் செப்பனியாவின் மகன்;
37 அவர் தாகத்தின் மகன்; அவர் அசீரின் மகன், அவர் எபியாசாபின் மகன்; அவர் கோராகின் மகன்;
38 அவர் இஸ்காரின் மகன், அவர் கோகாத்தின் மகன்; அவர் லேவியின் மகன்; அவர் இஸ்ரயேலின் மகன்.


39 ஏமானின் வலப்புறம் பணியாற்றியவர் அவர் சகோதரர் ஆசாபு. ஆசாபு பெரக்கியாவின் மகன்; அவர் சிமயாவின் மகன்.
40 அவர் மிக்கேலின் மகன்; அவர் பாசேயாவின் மகன்; அவர் மல்கியாவின் மகன்;
41 அவர் எத்னியின் மகன்; அவர் செராகின் மகன்; அவர் அதாயாவின் மகன்;
42 அவர் ஏத்தானின் மகன்; அவர் சிம்மாவின் மகன்; அவர் சிமயியின் மகன்;
43 அவர் யாகாத்தின் மகன்; அவர் கேர்சோமின் மகன், அவர் லேவியின் மகன்.


44 ஏமானின் இடப்புறம் பணியாற்றிய அவர்களின் சகோதரரான மெராரியின் புதல்வர்: அவர் ஏத்தான், அவர் கீசியின் மகன்; அவர் அப்தியின் மகன்; அவர் மல்லூக்கின் மகன்,
45 அவர் அசபியாவின் மகன்; அவர் அமட்சியாவின் மகன், அவர் இல்க்கியாவின் மகன்;
46 அவர் அம்சியின் மகன்; அவர் பானியின் மகன்; அவர் செமேரின் மகன்;
47 அவர் மக்லியின் மகன்; அவர் மூசியின் மகன்; அவர் மெராரியின் மகன்; அவர் லேவியின் மகன்.
48 அவர்கள் சகோதரராகிய பிற லேவியர் கடவுளது இல்லத்தின் திருஉறைவிடத்து அனைத்துப் பணிகளுக்குமென்று நியமிக்கப்பட்டனர்.

ஆரோனின் வழிமரபினர்[தொகு]


49 ஆரோனும் அவர் புதல்வரும் எரி பலி பீடத்தில் பலியிட்டு, தூபப் பீடத்தில் தூபம் காட்டினர். அவர்கள் திருத்தூயகத் தொடர்பான அனைத்துத் திருப்பணிகளையும் செய்து, ஆண்டவரின் ஊழியன் மோசேயின் கட்டளைப்படி இஸ்ரயேலுக்கெனப் பாவம் போக்கும் பலி செலுத்தி வந்தார்கள்.
50 ஆரோனின் புதல்வர் இவர்களே: பினகாசின் மகன் எலயாசர்; அவர் மகன் அபிசூவா;
51 அவர் மகன் புக்கி; அவர் மகன் உசி; அவர் மகன் செரகியா;
52 அவர் மகன் மெரயோத்து; அவர் மகன் அமரியா; அவர் மகன் அகித்தூபு,
53 அவர் மகன் சாதோக்கு, அவர் மகன் அகிமாசு.

லேவியர் வாழ்ந்த பகுதிகள்[தொகு]


54 லேவியரின் எல்லைகளுக்குள் விழுமாறு குறிக்கப்பட்ட குடியிருப்புகள் இவையே: ஆரோன் புதல்வருள் கோகாத்தியக் குடும்பத்தாருக்கு முதல் சீட்டு விழுந்தது.
55 அதன்படி யூதா நாட்டிலுள்ள எபிரோனும் அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் அளிக்கப்பட்டன.
56 அந்நகரின் வயல்வெளிகளும் அதன் சிற்றூர்களும் எபுன்னேயின் மகன் காலேபுக்கு அளிக்கப்பட்டன.


57 ஆரோனின் புதல்வருக்கு வழங்கப்பட்ட புகலிடங்கள்: எபிரோன், லிப்னா, அவற்றின் மேய்ச்சல் நிலங்கள்; யத்தீர், எஸ்தமோவா, அவற்றின் மேய்ச்சல் நிலங்கள்;
58 ஈலேன் அதன் மேய்ச்சல் நிலங்கள்; தெபீர், அதன் மேய்ச்சல் நிலங்கள்;
59 ஆசான், அதன் மேய்ச்சல் நிலங்கள்; பெத்-செமேசு, அதன் மேய்ச்சல் நிலங்கள்.


60 பென்யமின் குலத்தினின்று கிடைத்தவை: கேபா, அதன் மேய்ச்சல் நிலங்கள்; ஆலமேத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்; அனத்தோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள். இந்த நகர்கள் பதின்மூன்றும் அவர்கள் குடும்பங்கள் வாரியாகக் கோகாத்தியருக்கு வழங்கப்பட்டன.
61 எஞ்சியருந்த கோகாத்தின் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக மனாசேயின் பாதிக்குலத்தின் பத்து நகர்கள் சீட்டுக் குலுக்கி வழங்கப்பட்டன.


62 கேர்சோம் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக இசக்கார், ஆசேர், நப்தலி பாசானிலிருக்கும் மனாசே ஆகிய குலங்களிலிருந்து கிடைத்த நகர்கள் பதின்மூன்று.
63 மெராரியின் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக ரூபன், காத்து, செபுலோன் ஆகிய குலங்களிலிருந்து விழுந்த சீட்டின்படி பன்னிரண்டு நகர்கள் வழங்கப்பட்டன.
64 இவ்வாறு இஸ்ரயேல் மக்கள் லேவியருக்கு நகர்களையும் மேய்ச்சல் நிலங்களையும் வழங்கினர்.
65 இவ்வாறு அவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட நகர்களை குலுக்கல் முறையில் இஸ்ரயேலுக்கு யூதா, சிமியோன், பென்யமின் ஆகிய குலங்களிலிருந்து லேவியருக்கு வழங்கினார்கள்.


66 கோகாத்தின் புதல்வர்களுள் இன்னும் சில குடும்பங்களுக்கு எப்ராயிம் குலத்தின் எல்லைகளிலிருந்து நகர்கள் கிடைத்தன.
67 அவர்களுக்கு அளிக்கப்பட்ட புகலிட நகர்கள்: எப்ராயிம் மலைப்பகுதியில் இருக்கும் செக்கேம், அதன் மேய்ச்சல் நிலங்கள்; கெசேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்;
68 யோக்மயாம், அதன் மேய்ச்சல் நிலங்கள்; பெத்கோரோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்;
69 அய்யலோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்; கத்ரிம்மோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்,
70 மனாசேயின் பாதிக்குலத்தில் ஆனேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்; பிலயாம், அதன் மேய்ச்சல் நிலங்கள்; இவையே கோகாத்தின் புதல்வரின் எஞ்சிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டவை.


71 கேர்சோம் புதல்வருக்கு மனாசே பாதிக்குலக் குடும்பங்களினின்று கிடைத்தவை: பாசானிலுள்ள கோலான், அதன் மேய்ச்சல் நிலங்கள்; அஸ்தரோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.
72 இசக்கார் குலத்திலிருந்து கிடைத்தவை: கெதேசு, அதன் மேய்ச்சல் நிலங்கள்; தபராத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.
73 இராமோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்; ஆனேம், அதன் மேய்ச்சல் நிலங்கள்.
74 ஆசேர் குலத்திலிருந்து கிடைத்தவை: மாசால், அதன் மேய்ச்சல் நிலங்கள்; அப்தோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்;
75 உக்கோக்கு, அதன் மேய்ச்சல் நிலங்கள்; இரகோபு, அதன் மேய்ச்சல் நிலங்கள்.
76 நப்தலி குலத்திலிருந்து கிடைத்தவை: கலிலேயாவிலிருக்கும் கெதேசு, அதன் மேய்ச்சல் நிலங்கள்; அம்மோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்; கிரித்தாயிம், அதன் மேய்ச்சல் நிலங்கள்.


77 மெராரியின் எஞ்சிய புதல்வருக்குச் செபுலோன் குலத்திலிருந்து கிடைத்தவை: ரிம்மோனோ, அதன் மேய்ச்சல் நிலங்கள்; தாபோர், அதன் மேய்ச்சல் நிலங்கள்.
78 எரிகோவுக்கு அப்பால், யோர்தானுக்குக் கிழக்கே ரூபன் குலத்திலிருந்து கிடைத்தவை: பாலை நிலத்திலுள்ள பெட்சேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்; யாகுசா, அதன் மேய்ச்சல் நிலங்கள்;
79 கெதமோத்து அதன் மேய்ச்சல் நிலங்கள்; மேபாத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.
80 காத்து குலத்திலிருந்து கிடைத்தவை: கிலயாதிலுள்ள இராமோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்; மகனயிம், அதன் மேய்ச்சல் நிலங்கள்;
81 கெஸ்போன், அதன் மேய்ச்சல் நிலங்கள்; யாசேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்.

குறிப்பு

[*] 6:16-19 = விப 6:16-19.


(தொடர்ச்சி): குறிப்பேடு - முதல் நூல்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை