திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
மீக்காலை அப்னேர் தாவீது அரசரிடம் அனுப்பிவைக்கிறார் (2 சாமு 3:1-16). மார்கன் விவிலிய வரைவோவியம். காலம்: சுமார் 1240.


2 சாமுவேல்[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]


1 சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் இடையே ஒரு நீண்ட போர் ஏற்பட்டது. தாவீது தொடர்ந்து வலிமை பெற்றார், சவுலின் வீட்டாரோ தொடர்ந்து வலிமை இழந்தனர்.

தாவீதின் மக்கள்[தொகு]


2 எபிரோனில் தாவீதுக்குப் புதல்வர்கள் பிறந்தனர். இஸ்ரியேலைச் சார்ந்த அகினோவாமுக்குப் பிறந்த அம்னோன் அவர்தம் தலைமகன்.
3 கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலுக்குப் பிறந்த கிலயாபு அவர்தம் இரண்டாம் மகன். கெசூர் மன்னனான தால்மாயின் மகள் மாக்காவுக்குப் பிறந்த அப்சலோம் அவர்தம் மூன்றாம் மகன்.
4 அகீத்துக்குப் பிறந்த அதோனியா நான்காம் மகன்; அபித்தாலுக்குப் பிறந்த செபற்றியா ஐந்தாம் மகன்;
5 தாவீதின் மனைவி எக்லாவுக்குப் பிறந்த இத்ரயாம் ஆறாம் மகன்; இவர்கள் தாவீதுக்கு எப்ரோனில் பிறந்தவர்கள்.

அப்னேர் தாவீதுடன் சேர்ந்து கொள்ளுதல்[தொகு]


6 சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் இடையே பூசல் நிலவிய போது, சவுலின் வீட்டில் அப்னேர் தன்னையே வலுப்படுத்திக் கொண்டான்.


7 அய்யாவின் மகளான இரிஸ்பா, சவுலின் வைப்பாட்டியாக இருந்தவள். இஸ்பொசேத்து அப்னேரை நோக்கி, "என் தந்தையின் வைப்பாட்டியோடு நீ ஏன் உறவு கொண்டாய்?" என்று கேட்டான்.
8 இஸ்பொசேத்தின் கேள்வி அப்னேருக்குக் கடுஞ்சினத்தை ஏற்படுத்தியது. "நான் என்ன யூதாவுக்கு வாலாட்டும் நாயா? உன் தந்தை சவுலின் வீட்டாருக்கும் அவருடைய சகோதரர் நண்பர்களுக்கும் இன்று நான் உண்மையுள்ளவனாய் இருக்கிறேன். தாவீதின் கைகளில் உன்னை நான் ஒப்புவிக்கவில்லை. நீயோ, இன்று என்மீது ஒரு பெண்ணைக் குறித்து குற்றம் சாட்டுகிறாய்!
9-10 தாவீதுக்குக் கடவுள் ஆணையிட்டுக் கூறியவாறே, சவுலின் வீட்டிலிருந்து அரசை நான் மாற்றச் செய்து, தாணிலிருந்து பெயேர்செபா வரை இஸ்ரயேல்மீதும் யூதாமீதும் தாவீதின் அரியணையை நிறுவவில்லையென்றால், [1]
10 கடவுள் அப்னேருக்கு உரியதும் கொடுமையானதுமான தண்டனையை அளிப்பாராக!" என்று அப்னேர் கூறினான்.
11 இஸ்பொசேத்து அப்னேருக்கு அஞ்சியதால் மறுமொழி எதுவும் பேசவில்லை.


12 பிறகு அப்னேர் தன் சார்பாகத் தாவீதிடம் தூதனுப்பி, "நாடு யாருடையது? என்னோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். அனைத்து இஸ்ரயேலையும் உம்மிடம் கொண்டுவர, எனது கை உம்மோடு இருக்கும்" என்று கூறினான்.
13 தாவீது "நல்லது, உன்னோடு நான் உடன்படிக்கை செய்து கொள்கிறேன். ஆனால் உன்னிடமிருந்து நான் ஒன்றைக் கேட்கிறேன்: அதாவது நீ என்முன் வரும்போது, சவுலின் மகள் மீக்காலைக் கொண்டு வரவேண்டும். இல்லையெனில் என் முகத்தில் விழிக்காதே" என்று மறுமொழி கூறினார்.


14 அதற்குபின் தாவீது சவுலின் மகன் இஸ்பொசேத்திடம் தூதனுப்பி, "பெலிஸ்தியர் நூறு பேரின் நுனித் தோலை ஈடாகக் கொடுத்து நான் மணந்த என் மனைவி மீக்காலை எனக்குக் கொடு" என்று கேட்டார். [2]
15 இஸ்பொசேத்து ஆளனுப்பி அவளை அவள் கணவன் இலாயிசின் மகன் பல்தியேலிடமிருந்து கொண்டுவரச் செய்தான்.
16 அவள் கணவனோ அழுது கொண்டே அவளைத் தொடர்ந்து பகுரிம் வரை சென்றான். அங்கே அப்னேர் அவனிடம் "திரும்பிச் செல்" என்றான்; அவனும் திரும்பிச் சென்றான்.


17 அப்னேர் இஸ்ரயேலின் பெரியோர்களிடம் இவ்வாறு பேசினான்: "தாவீது உங்கள் மீது ஆட்சி செய்ய வேண்டுமென்று கடந்த சில நாள்களாக நீங்கள் விரும்பிக் கொண்டிருந்தீர்கள்.
18 இப்போது அதை நிலை நாட்டுங்கள்; ஏனெனில் ஆண்டவர் தாவீதிடம், "என் ஊழியன் தாவீதின் கையால் என் மக்கள் இஸ்ரயேலைப் பெலிஸ்தியரிடமிருந்தும் அவர்களின் அனைத்து எதிரிகளிடமிருந்தும் நான் காப்பாற்றுவேன்' என்று கூறியுள்ளார்".
19 அப்னேர் பென்யமினியரோடு தனியாகப் பேசியபின், எபிரோனுக்குச் சென்று இஸ்ரயேலுக்கும் பென்யமின் வீட்டாருக்கும் நல்லதெனப்பட்ட அனைத்தையும் தாவீதிடம் எடுத்துக் கூறினான்.


20 ஆப்னேர் இருபது ஆள்களோடு தாவீதைக் காண எபிரோன் வந்தான். அப்னேருக்கும் அவனோடு இருந்த ஆள்களுக்கும் தாவீது விருந்து படைத்தார்.
21 பிறகு அப்னேர் தாவீதிடம், "நான் எழுந்து சென்று அனைத்து இஸ்ரயேலையும் அரசரும் என் தலைவருமாகிய உமக்குமுன் ஒன்று திரட்டி வருகிறேன். அவர்கள் உம்மோடு உடன்படிக்கை செய்துகொள்ளட்டும், நீரும் உம் விருப்படி ஆட்சி புரியலாம்" என்று கூறினான். தாவீது அப்னேரை வழியனுப்ப அவனும் பாதுகாப்புடன் சென்றான்.

அப்னேர் கொலை செய்யப்படல்[தொகு]


22 அப்போது தாவீதின் பணியாளர்களும் யோவாபும் கொள்ளையடித்துத் திரும்பினர். தங்களோடு மிகுதியான கொள்ளைப் பொருள்களைக் கொண்டு வந்திருந்தனர். அச்சமயம் அப்னேர் தாவீதோடு எபிரோனில் இல்லை. ஏனெனில், ஏற்கெனவே அவன் வழியனுப்ப்பட்டுப் பாதுகாப்புடன் சென்றுவிட்டான்.
23 யோவாபும் அவனோடு இருந்த படைவீரர் அனைவரும் வந்தபொழுது, "நேரின் மகன் அப்னேர் தாவீதிடம் வந்தான். அவர் அவனை வழியனுப்ப, அவனும் பாதுகாப்புடன் சென்று விட்டான்" என்று யோவாபிடம் கூறப்பட்டது.
24 யோவாபு அரசனிடம் சென்று, "நீர் என்ன காரியம் செய்தீர்! அப்னேர் உம்மிடம் வந்தானல்லவா? நீர் ஏன் அவனைப் போகவிட்டீர்? அவனும் சென்று விட்டானே!
25 நேரின் மகன் அப்னேரை உமக்குத் தெரியும். உமது போக்குவரத்தையும் நீர் செய்வது அனைத்தையும் அறிந்து கொண்டு உம்மை ஏமாற்றவே அவன் வந்தான்" என்றான்.


26 யோவாபு தாவீதைவிட்டுச் சென்று அப்னேரின் பின்னால் தூதர்களை அனுப்பினான். அவர்கள் அவனைச் சீராவின் ஊற்றினருகிலிருந்து திருப்பியழைத்து வந்தார்கள். தாவீதுக்கோ இது தெரியாது.
27 அப்னேர் எபிரோனுக்குத் திரும்பி வந்ததும் யோவாபு அவனேடு தனிமையில் பேசுவதற்கென ஒதுக்கமாக அவனை வாயில் மையத்திற்கு அழைத்துச் சென்றான். தன் சகோதரன் அசாவேலின் இரத்தத்திற்காக அங்கே அவனை வயிற்றில் குத்த, அவன் இறந்தான்.
28 பிறகு தாவீது இதைக் கேள்வியுற்ற போது, "நேரின் மகன் அப்னேரின் இரத்தத்தின் மட்டில் நானும் எனது அரசும் ஆண்டவர் முன்பு என்றென்றும் குற்றமற்றவர்கள்.
29 யோவாபின் தலைமீதும், அவன் தந்தையின் வீட்டார் மீதும் அது விழட்டும். இரத்த கசிவு உடையவனோ, தொழுநோயாளியோ, அண்ணகனோ, வாளால் மடிபவனோ, உணவுக்காகத் தவிப்பவனோ, யோவாபின் குடும்பத்தில் இல்லாமல் போகமாட்டார்கள்" என்றார்.
30 தங்கள் சகோதரன் அசாவேலைக் கிபயோனில் நடந்த போரில் அப்னேர் கொன்றதற்காக யோவாபும் அவன் சகோதரன் அபிசாயும் அவனைக் கொன்றார்கள்.

அப்னேர் அடக்கம் செய்யப்படல்[தொகு]


31 "உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ளுங்கள்; சாக்கு உடைகளை அணியுங்கள்; அப்னேருக்காகப் புலம்புங்கள்" என்று தாவீது யோவாபுக்கும் அவனோடு இருந்த அனைத்து மக்களுக்கும் கட்டளையிட்டார். பாடையின் பின்னால் அரசர் தாவீதும் நடந்து சென்றார்.
32 அப்னேரை எபிரோனில் அடக்கம் செய்தார்கள். அப்னேரின் கல்லறையருகே தாவீது தம் குரலை உயர்த்தி அழுதார்; மக்கள் அனைவரும் அழுதார்கள்.


33 அரசர் இவ்வாறு கூறிப் புலம்பினார்: "மூடன் மடிவதுபோல் அப்னேர் மடியவேண்டுமா?
34 உன் கைகள் விலங்கிடப்படவில்லை; உன் பாதங்கள் கட்டப்படவில்லை; தீயோர்முன் வீழ்பவன் போல, நீயும் வீழ்ந்தனையே!" மீண்டும் அனைத்து மக்களும் அவனுக்காகப் புலம்பினார்கள்.


35 பிறகு மக்கள் அனைவரும் தாவீதிடம் வந்து பகலாக இருக்கும் போதே உண்ணும்படி அவரைத் தூண்டினர். "கதிரவன் மறைவதற்குள் நான் உணவையோ வேறு எதையோ சுவைத்தேனாகில், கடவுள் அதற்குத் தக்கவாறும் அதற்கு மேலும் என்னைத் தண்டிப்பாராக! என்று தாவீது ஆணையிட்டுக் கூறினார்.
36 மக்கள் அனைவரும் இதைக் கேட்டார்கள். அவர்களுக்கு அது நல்லதெனபட்டது. அரசன் செய்ததெல்லாம் மக்கள் அனைவருக்கும் நல்லதெனப்பட்டது.
37 நேரின் மகன் அப்னேரின் கொலையில் அரசருக்குப் பங்கில்லை என்று மக்கள் அனைவருக்கும் அனைத்து இஸ்ரயேலுக்கும் அன்று தெரிய வந்தது.
38 மேலும் அரசர் தம் பணியாளர்களிடம் இவ்வாறு கூறினார்: "இன்று இஸ்ரயேலில் தலைவனும் உயர்குடிமகனுமான ஒருவன் மடிந்துவிட்டான் என்று நீங்கள் அறியீரோ?
39 நான் அரசனாகத் திருப்பொழிவு செய்யபட்டும் இன்று வலுவிழந்தனவாய் இருக்கிறேன்! செரூயாவின் புதல்வர்களான இவர்கள் என்னைவிட வலியவர் ஆகிவிட்டனர்! தீங்கிழைப்பவனுக்கு அவன் தீங்கிற்கு ஏற்ப ஆண்டவர் தண்டனை வழங்கட்டும்!"

குறிப்புகள்

[1] 3:9-10 = 1 சாமு 15:28.
[2] 3:14 = 1 சாமு 18:27.

அதிகாரம் 4[தொகு]

இஸ்பொசேத்து கொலை செய்யப்படல்[தொகு]


1 அப்னேர் எபிரோனில் இறந்ததைக் கேட்டதும், சவுலின் மகன் இஸ்பொசேத்து நிலைகுலைந்தான். அனைத்து இஸ்ரயேலும் கலங்கியது.
2 சவுலின் மகனிடம் இரண்டு படைத்தலைவர்கள் இருந்தனர். ஒருவன் பெயர் பானா; மற்றவன்பெயர் இரேக்காபு. பென்யமின் குலத்தைச் சார்ந்த பெயரோத்தில் வாழும் ரிம்மோன் என்பவனின் புதல்வர்கள் இவர்கள். பெயரோத்தும் பென்யமினியரைச் சார்ந்ததாகவே கருதப்பட்டது.
3 பெயரோத்தியர் கித்தாயிமுக்குத் தப்பியோடி, இந்நாள்வரை அங்கே அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.


4 சவுலின் மகன் யோனத்தானுக்கு மெபிபொசேத்து என்ற மகன் ஒருவன் இருந்தான். இஸ்ரியேலிலிருந்து சவுல், யோனத்தான் ஆகியோரைப் பற்றிய செய்தி வந்தபோது அவனுக்கு வயது ஐந்து. அவனுடைய செவிலித் தாய் அவனைத் தூக்கிக் கொண்டு தப்பி ஓடுகையில் விரைந்து சென்றதால், அவன் கீழே விழுந்து கால் முடமானான். [1]


5 பெயரோத்தைச் சார்ந்த ரிம்மேனின் புதல்வர்களான இரேக்காபும் பானாவும் உச்சிவேளையில் இஸ்பொசேத்தின் வீட்டுக்கு வந்தார்கள். நண்பகல் வேளையில் அவன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.
6 கோதுமை கொண்டு செல்பவர்களைப் போல் நடுவீட்டிற்கு வந்து, அவனது வயிற்றில் ஊடுருவக் குத்திவிட்டு, இரேக்காபும் அவனுடைய சகோதரன் பானாவும் தப்பிவிட்டார்கள்.
7 இவ்வாறு அவர்கள் வீட்டினுள் நுழைந்து, தன் படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருந்த போது அவனை ஊடுருவக் குத்திக் கொன்று தலையை வெட்டினார்கள். அத்தலையை எடுத்துக் கொண்டு இரவு முழுவதும் அராபா வழியாகப் பயணம் செய்தார்கள்.
8 இஸ்பொசேத்தின் தலையை எபிரோனில் இருந்த தாவீதிடம் கொண்டு வந்தார்கள். "உமது உயிரை பறிக்கத் தேடிய உம் எதிரி சவுலின் மகன் இஸ்பொசேத்தின் தலை இதோ! ஆண்டவர் எம் தலைவராம் அரசர் சார்பாகச் சவுலையும் அவனுடைய வாரிசையும் பழிவாங்கி விட்டார்" என்று அவர்கள் கூறினார்கள்.


9 பெயரோத்தைச் சார்ந்த ரிம்மோனின் புதல்வர்களான இரேக்காபையும் அவனுடைய சகோதரன் பானாவையும் நோக்கி தாவீது இவ்வாறு கூறினார்: "அனைத்துத் துயரங்களினின்றும் என்னை விடுவித்த வாழும் ஆண்டவர் பெயரால் ஆணையிட்டுச் சொல்கிறேன்.
10 'இதோ சவுல் இறந்து விட்டான்' என்று எனக்குச் சொல்ல வந்தவன், தான் நற்செய்தி கொண்டு வந்ததாகவே நினைத்தான்' நானோ அவனை பிடித்துச் சிக்லாகில் கொன்றேன். அவனுக்கு நான் வெகுமதியாகத் தந்தது அதுவே. [2]
11 இப்பொழுது குற்றமற்றவனைத் தீயவர்கள் அவன் வீட்டிலே, அவனது படுக்கையிலே கொன்று விட்டார்கள். அவனது இரத்தத்தைச் சிந்திய பழிக்கு ஈடாக உங்களை நான் உலகினின்றே அழித்து விட மாட்டேனா?"
12 தாவீது ஆணையிட, அவர்தம் பணியாளர் அவர்களை கொன்றனர்; கைகளையும் கால்களையும் வெட்டியபின் அவர்களை எபிரோன் குளத்தருகே தொங்கவிட்டனர்; இஸ்பொசேத்தின் தலையை எடுத்து எபிரோனில் அப்னேரின் கல்லறைக்கு அருகே புதைத்தனர்.

குறிப்புகள்

[1] 4:4 = 2 சாமு 9:3.
[2] 4:10 = 2 சாமு 1:1-16.

(தொடர்ச்சி):சாமுவேல் - இரண்டாம் நூல்:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை