திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தானியேல்/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து
"இரவில் நான் கண்ட காட்சியில் வானத்தின் நான்கு திசைக் காற்றுகளும் பெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன. அப்பொழுது நான்கு பெரிய விலங்குகள் கடலினின்று மேலெழும்பின. அவை வெவ்வேறு உருவம் கொண்டவை. அவற்றுள் முதலாவது கழுகின் இறக்கைகளை உடைய சிங்கத்தைப்போல் இருந்தது..." - தானியேல் 7:2-4

தானியேல் (The Book of Daniel)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

தானியேல் கண்ட கனவு: நான்கு விலங்குகள்[தொகு]

(7:1-12:13)


1 பாபிலோனிய அரசனாகிய பெல்சாட்சரின் முதலாண்டில்
தானியேல் கனவு கண்டார்;
அவர் படுத்திருக்கையில், அவரது மனக்கண்முன் காட்சிகள் தோன்றின.
பிறகு அந்தக் கனவை எழுதிவைத்து அதைச் சுருக்கமாகச் சொன்னார்.
2 தானியேல் கூறியது:
"இரவில் நான் கண்ட காட்சியில் வானத்தின் நான்கு திசைக் காற்றுகளும்
பெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன.
3 அப்பொழுது நான்கு பெரிய விலங்குகள் கடலினின்று மேலெழும்பின. [1]
4 அவை வெவ்வேறு உருவம் கொண்டவை.
அவற்றுள் முதலாவது கழுகின் இறக்கைகளை உடைய சிங்கத்தைப்போல் இருந்தது.
நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அதன் இறக்கைகள் பிடுங்கப்பட்டன;
அது தரையினின்று தூக்கப்பட்டு மனிதனைப்போல் இரண்டு கால்களில் நின்றது;
அதற்கு மனித இதயமும் கொடுக்கப்பட்டது.
5 அடுத்து, வேறொரு இரண்டாம் விலங்கைக் கண்டேன்.
கரடியைப் போன்ற அந்த விலங்கு பின்னங்கால்களை ஊன்றி எழுந்து நின்றது;
தன் மூன்று விலா எலும்புகளைத் தன் வாயின் பற்களுக்கு இடையில் கவ்விக் கொண்டிருந்தது.
'எழுந்திரு, ஏராளமான இறைச்சியை விழுங்கு' என்று அதற்குச் சொல்லப்பட்டது.
6 இன்னும் நோக்குகையில், வேங்கை போன்ற வேறோரு விலங்கு காணப்பட்டது.
அதன் முதுகில் பறவையின் இறக்கைகள் நான்கு இருந்தன;
அந்த விலங்குக்கு நான்கு தலைகள் இருந்தன;
அதற்கும் ஆளும் உரிமை கொடுக்கப்பட்டது. [2]
7 இவற்றுக்குப் பிறகு, இரவின் காட்சியில் கண்ட நான்காம் விலங்கு,
அஞ்சி நடுங்க வைக்கும் தோற்றமும் மிகுந்த வலிமையும் கொண்டதாய் இருந்தது.
அதற்குப் பெரிய இரும்புப் பற்கள் இருந்தன.
அது தூள் தூளாக நொறுக்கி விழுங்கியது;
எஞ்சியதைக் கால்களால் மிதித்துப் போட்டது.
இதற்குமுன் நான் கண்ட விலங்குகளுக்கு இது மாறுபட்டது.
இதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன. [3]
8 அந்தக் கொம்புகளை நான் கவனித்துப் பார்க்கையில்,
அவற்றின் நடுவில் வேறொரு சிறிய கொம்பு முளைத்தது;
அதற்கு இடமளிக்கும் வகையில்,
முன்னைய கொம்புகளுள் மூன்று வேரோடு பிடுங்கப்பட்டன;
அந்தக் கொம்பில் மனிதக் கண்களைப் போலக் கண்களும்
பெருமை பேசும் வாயும் இருந்தன. [4]
9 நான் பார்த்துக் கொண்டிருக்கையில்,


அரியணைகள் அமைக்கப்பட்டன;
தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்;
அவருடைய ஆடை வெண்பனி போலவும்,
அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன;
அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும்
அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. [5]


10 அவர் முன்னிலையிலிருந்து
நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது;
பல்லாயிரம் பேர் அவருக்குப் பணிபுரிந்தார்கள்.
பலகோடி பேர் அவர்முன் நின்றார்கள்;
நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது;
நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. [6]


11 அந்தக் கொம்பு பேசின பெருமை மிக்க சொற்களை முன்னிட்டு
நான் அதைக் கவனித்துப் பார்த்தேன்.
அப்படிப் பார்க்கையில், அந்த விலங்கு கொல்லப்பட்டது;
அதன் உடல் சிதைக்கப்பட்டு நெருப்பிற்கு இரையாக்கப்பட்டது.
12 மற்ற விலங்குகளிடமிருந்து அவற்றின் ஆட்சியுரிமை பறிக்கப்பட்டது;
ஆயினும் அவற்றின் வாழ்நாள் குறிப்பிட்ட கால நேரம்வரை நீட்டிக்கப்பட்டது.


13 இரவில் நான் கண்ட காட்சியாவது;
வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்;
இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்;
அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். [7]


14 ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன;
எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்;
அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்;
அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது. [8]


15 தானியேல் ஆகிய நான் உள்ளம் கலங்கினேன்.
மனக்கண்முன்னே தோன்றிய காட்சிகள் என்னை அச்சுறுத்தின.
16 அங்கு நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவரை அணுகி,
'இவற்றிற்கெல்லாம் பொருள் என்ன?' என்று கேட்டேன்.
அவர் அவற்றின் உட்பொருளை எல்லாம் எனக்கு விளக்கிக் கூறினார்.
17 'இந்த நான்கு விலங்குகளும் உலகில் எழும்பப்போகும் நான்கு அரசர்களைக் குறிக்கின்றன.
18 ஆனால் உன்னதரின் புனிதர்கள் அரசுரிமை பெறுவர்;
அந்த அரசுரிமையை என்றும் ஊழ்ஊழிக் காலமும் கொண்டிருப்பர்.' [9]


19 அதன்பின்னர், மற்ற விலங்குகளினின்று மாறுபட்டு,
மிகவும் அஞ்சி நடுங்கவைக்கும் தோற்றத்துடன்,
இரும்புப் பற்களும் வெண்கல நகங்களும் கொண்டு,
அனைத்தையும் தூள் தூளாக நொறுக்கி விழுங்கி,
எஞ்சியதைக் கால்களால் மிதித்துப்போட்ட அந்த நான்காம் விலங்கைப்பற்றி
அறிந்து கொள்ள விரும்பினேன்.
20 அதன் தலையில் இருந்த பத்துக் கொம்புகளைப் பற்றியும்,
மூன்று கொம்புகள் தன் முன்னிலையில் விழுந்து போக
அங்கே முளைத்த கண்களும் பெருமையாகப் பேசும் வாயும் கொண்டிருந்த
ஏனையவற்றைவிடப் பெரியதாகத் தோன்றிய அந்தக் கொம்பைப் பற்றியும்
தெரிந்து கொள்ள விரும்பினேன்.
21 நான் பார்த்துக் கொண்டிருக்கையில்,
அந்தக் கொம்பு புனிதர்களுக்கு எதிராகப் போர் புரிந்து அவர்களை வென்றது. [10]
22 தொன்மை வாய்ந்தவர் வந்து
உன்னதரின் புனிதர்களுக்கு நீதி வழங்கும் வரையிலும்
உரிய காலத்தில் புனிதர்கள் அரசுரிமை பெறும் வரையில் இவ்வாறு நடந்தது. [11]


23 அவர் தொடர்ந்து பேசினார்:
அந்த நான்காம் விலங்கோ உலகில் தோன்றப் போகும்
நான்காம் அரசைக் குறிக்கின்றது;
இது மற்றெல்லா அரசுகளையும் விட வேறுபட்டதாகும்.
உலக முழுவதையும் அது மிதித்துத் தூள்களாக நொறுக்கி விழுங்கிவிடும்.


24 அந்தப் பத்துக் கொம்புகளோ இந்த அரசினின்று தோன்றவிருக்கும்
பத்து மன்னர்களைக் குறிக்கின்றன.
அவர்களுக்குப் பிறகு மற்றொருவன் எழும்புவான்;
முந்தினவர்களைவிட வேறுபட்டிருப்பான்;
மூன்று அரசர்களை முறியடிப்பான்; [12]


25 அவன் உன்னதர்க்கு எதிரான சொற்களைப் பேசுவான்;
உன்னதரின் புனிதர்களைத் துன்புறுத்துவான்;
வழிபாட்டுக் காலங்களையும் திருச்சட்டத்தையும் மாற்ற நினைப்பான்.
மூன்றரை ஆண்டுகள் புனிதர்கள் அவனது கையில் ஒப்புவிக்கப்படுவர். [13]


26 ஆனால், நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமரும்;
அவனது ஆட்சி அவனிடமிருந்து பறிக்கப்பட்டு,
எரியுண்டு ஒன்றுமில்லாது அழிக்கப்படும்.


27 ஆட்சியும் அரசுரிமையும்,
வானத்தின் கீழுள்ள உலகனைத்திலும் உள்ள அரசுகளின் மேன்மையும்
உன்னதரின் புனித மக்களுக்குத் தரப்படும்.
அவர்களது அரசு என்றென்றும் நிலைக்கும் அரசு;
எல்லா அரசுகளும் அவர்களுக்குப் பணிந்து கீழ்ப்படியும். [14]


28 இத்தோடு விளக்கம் முடிகிறது.
தானியேல் ஆகிய நான் என் நினைவுகளின் பொருட்டு மிகவும் கலங்கினேன்;
என் முகம் வெளிறியது;
ஆயினும் இவற்றை என் மனத்திற்குள் வைத்துக் கொண்டேன்.


குறிப்புகள்

[1] 7:3 = திவெ 13:1; 17:8.
[2] 7:4-6 = திவெ 13:2.
[3] 7:7 = திவெ 12:3; 13:1.
[4] 7:8 = திவெ 13:5-6.
[5] 7:9 = திவெ 20:4; 1:14.
[6] 7:10 = திவெ 5:11; 20:12.
[7] 7:13 = மத் 24:30; 26:64; மாற் 13:26; 14:62;
லூக் 21:27; திவெ 1:7,13; 14:14.
[8] 7:14 = திவெ 11:15.
[9] 7:18 = திவெ 22:5.
[10] 7:21 = திவெ 13:7.
[11] 7:22 = திவெ 20:4.
[12] 7:24 = திவெ 17:12.
[13] 7:25 = திவெ 12:14; 13:5-6.
[14] 7:27 = திவெ 20:4; 22:5.


அதிகாரம் 8[தொகு]

தானியேல் கண்ட காட்சி: செம்மறியும் வெள்ளாடும்[தொகு]


1 முன்பு தோன்றிய காட்சிக்குப் பிறகு,
பெல்சாட்சரின் மூன்றாம் ஆட்சியாண்டில்
தானியேல் என்னும் நான் வேறொரு காட்சி கண்டேன்.
2 அந்தக் காட்சியில் நான் கண்டது பின்வருமாறு:
ஏலாம் மாநிலத்தின் தலைநகரான சூசா நகரில் நான் இருந்தேன்;
அந்தக் காட்சியில் நான் ஊலாய் ஆற்றின் அருகே நின்றுகொண்டிருந்தேன்.
3 நான் கண்களை உயர்த்திப் பார்த்தபொழுது,
ஒரு செம்மறிக்கிடாய் அந்த ஆற்றங்கரையில் நிற்கக் கண்டேன்.
அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன;
இரண்டும் நீளமான கொம்புகள்; ஒன்று மற்றதைவிட நீளமானது;
நீளமானது இரண்டாவதாக முளைத்தது.
4 அந்தச் செம்மறிக்கிடாய் தன் கொம்புகளால் மேற்கு நோக்கியும்
வடக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் பாய்ந்து முட்டுவதைக் கண்டேன்.
அதன் எதிரே நிற்க எந்த விலங்காலும் இயலவில்லை;
அதன் வலிமையிலிருந்து விடுவிக்க வல்லவர் யாருமில்லை.
அது தன் விருப்பப்படியே நடந்து தற்பெருமை கொண்டு திரிந்தது.


5 நான் இதை உற்று நோக்கிக் கொண்டிருக்கையில்,
மேற்கிலிருந்து வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று புறப்பட்டு வந்து,
நிலவுலகின் எம்மருங்கிலும் சுற்றியது.
அது நிலத்தில் கால் ஊன்றவே இல்லை.
அந்த வெள்ளாட்டுக்கிடாயின் கண்களுக்கு இடையில்
எடுப்பாகத் தோன்றும் ஒரு கொம்பு இருந்தது.
6 ஆற்றங்கரையில் நிற்கையில் நான் கண்டவாறு,
அந்த வெள்ளாட்டுக்கிடாய் இரு கொம்புடைய அச்செம்மறிக்கிடாயை
நோக்கிச் சென்று, தன் முழு வலிமையோடும்
அதைத் தாக்க அதன்மேல் பாய்ந்தது.
7 அது செம்மறிக்கிடாயை நெருங்கி
அதன்மேல் கடுஞ்சினம் கொண்டு அதைத் தாக்கி,
அதன் கொம்புகள் இரண்டையும் முறித்துவிட்டதை நான் கண்டேன்.
அதன் எதிரே நிற்கச் செம்மறிக்கிடாய்க்கு வலிமை இல்லை.
ஆகவே வெள்ளாட்டுக்கிடாய் அதைத் தரையில் தள்ளி மிதித்து விட்டது.
செம்மறிக்கிடாயை முன்னதன் வலிமையினின்று
விடுவிக்க வல்லவர் யாருமில்லை.
8 அதன்பின்னர் வெள்ளாட்டுக்கிடாய்
தற்பெருமை மிகக் கொண்டு திரிந்தது;
ஆனால் அது வலிமையாக இருந்த பொழுதே
அதன் பெரிய கொம்பு முறிக்கப்பட்டது.
அதற்குப் பதிலாக, எடுப்பாகத் தோன்றிய
வேறு நான்கு கொம்புகள் முளைத்து,
வானத்தின் நான்கு பக்கங்களையும் நோக்கி வளர்ந்தன.


9 அவற்றுள் ஒன்றிலிருந்து சிறிய கொம்பு ஒன்று முளைத்தெழுந்து,
தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் அழகுமிக்க நாட்டை நோக்கியும்,
மிகப் பெரிதாக வளர்ந்து நீண்டது.
10 அது வான் படைகளைத் தொடுமளவு உயர்ந்து வளர்ந்து,
விண்மீன் திரள்களுள் சிலவற்றையும் தரையில் வீழ்த்தி மிதித்துவிட்டது. [1]
11 மேலும், அது வான்படைகளின் தலைவரையே எதிர்த்துத்
தன்னை உயர்த்திக் கொண்டது.
இடையறாது செலுத்தப் பட்ட எரிபலியையும்
அவரிடமிருந்து பறித்துக்கொண்டு
அவரது தூயகத்தையும் அழித்துப் போட்டது.
12 குற்றங்களை முன்னிட்டு, வான்படைகளும் அன்றாட எரிபலியும்
அதற்கு ஒப்புக் கொடுக்கப்பட்டன.
அது உண்மையை மண்ணுக்குத் தள்ளியது.
அது தன் செயலில் வெற்றி கண்டது.
13 அப்பொழுது புனிதர் ஒருவர் பேசுவதைக் கேட்டேன்.
வேறொரு புனிதர் முன்பு பேசியவரிடம்,
'இடையறாது செலுத்தப் பட்ட எரிபலியையும்,
நடுங்கவைக்கும் குற்றத்தையும்
தூயகமும் வான் படைகளும் மிதிபடுவதற்குக்
கையளிக்கப்படுவதையும் பற்றிய
இந்தக் காட்சி இன்னும் எத்தனை நாள் நீடிக்கும்?' என்று கேட்டார்.
14 அதற்கு அவர், 'இரண்டாயிரத்து முன்னூறு
மாலையும் காலையும் இது நீடிக்கும்.
பின்னரே தூயகம் அதற்குரிய நிலைக்குத் திரும்பும்' என்றார்.


15 தானியேல் ஆகிய நான் இந்தக் காட்சியைக் கண்டபின்,
அதன் உட்பொருளை அறியத் தேடினேன்.
அப்பொழுது மனிதத் தோற்றம் கொண்ட ஒருவர்
எனக்கு முன்பாக வந்து நின்றார்.
16 ஊலாய் ஆற்றின் நடுவிலிருந்து ஒரு மனிதக் குரல் ஒலித்தது.
அது, 'கபிரியேல்! இந்தக் காட்சி இவருக்கு விளங்குமாறு செய்'
என்று கூப்பிட்டுச் சொன்னது. [2]
17 அவ்வாறே அவர் நான் நின்ற இடத்திற்கு வந்தார்.
அவர் வருவதைப் பார்த்து, நான் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தேன்.
அவர் என்னைநோக்கி, 'மானிடா! இந்தக் காட்சி
இறுதிக் காலத்தைப் பற்றியது எனத் தெரிந்துகொள்' என்றார்.


18 அவர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கையில்,
நான் தரையில் முகங்குப்புற விழுந்து மயக்கத்தில் ஆழ்ந்துகிடந்தேன்.
அவர் என்னைத் தொட்டு எழுப்பி என்னைக் காலூன்றி நிற்கச் செய்தார்.
19 'பெருஞ்சினத்தின் முடிவு நாளில் நிகழப்போவதை உனக்குத் தெரிவிப்பேன்;
ஏனெனில், அது குறிக்கப்பட்ட இறுதி காலத்தைப் பற்றியது.
20 இரு கொம்பு உடையதாக நீ கண்ட செம்மறிக்கிடாய்
மேதியர், பாரசீகரின் அரசர்களைக் குறிக்கிறது.
21 வெள்ளாட்டுக்கிடாய் கிரேக்க நாட்டின் அரசனைக் குறிக்கிறது;
அதன் கண்களுக்கு இடையிலிருந்த பெரிய கொம்பு முதல் அரசன் ஆகும்.
22 அது முறிந்துபோன பின் அதற்குப் பதிலாக முளைத்தெழுந்த நான்கு கொம்புகள்,
அவனது அரசினின்று தோன்றவிருக்கும் நான்கு அரசுகள் ஆகும்;
ஆனால், முன்னதன் ஆற்றல் இவற்றுக்கு இராது.
23 இவற்றின் ஆட்சி முடிவுற்று, குற்றங்கள் மலிந்து உச்சநிலை அடையும்போது,
கடுகடுத்த முகமும் வஞ்சக நாவும் கூர்மதியும் கொண்ட ஓர் அரசன் தோன்றுவான்.
24 அவனது வலிமை பெருகும்.
அது அவனது சொந்த ஆற்றலினால் அல்ல.
அவன் அஞ்சத்தக்க வகையில் அழிவு வேலை செய்வான்;
தன் செயலில் வெற்றி காண்பான்;
வலிமைமிக்கவர்களையும் புனித மக்களையும் அழித்து விடுவான்.
25 நயவஞ்சகத்தின் மூலம் அவன் பொய் புரட்டை வளர்ப்பான்.
அவன் தன் உள்ளத்தில் தற்பெருமை கொண்டிருப்பான்;
முன்னெச்சரிக்கை தராமல் பலரைக் கொலை செய்வான்;
இறுதியில் மன்னர்க்கு மன்னரையே எதிர்க்கத் துணிவான்.
ஆயினும், எந்த மனித முயற்சியும் இன்றி, அவன் அழிவுறுவான்.
26 மாலைகளையும் காலைகளையும் பற்றிய காட்சியைக் குறித்து
இதுவரை சொல்லப்பட்டது முற்றிலும் உண்மையானது.
ஆயினும், நீ இந்தக் காட்சியை உன் மனத்தில் மறைத்துவை.
ஏனெனில், பலநாள்களுக்குப் பிறகே இது நிறைவேறும்."


27 தானியேல் ஆகிய நான் சோர்வடைந்து
சில நாள்கள் நோயுற்று நலிந்து கிடந்தேன்;
பிறகு எழுந்து அரசனின் அலுவல்களில் ஈடுபட்டேன்.
ஆயினும் அந்தக் காட்சி என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது;
அதன் பொருளும் எனக்கு சரியாக விளங்கவில்லை.


குறிப்புகள்

[1] 8:10 = திவெ 12:4.
[2] 8:16 = லூக் 1:19, 26.


(தொடர்ச்சி): தானியேல்:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை