திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 61 முதல் 62 வரை

விக்கிமூலம் இலிருந்து
"கடவுளே, உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைகிறேன்" (திபா 63 [62]). தூய பிரெண்டன் கோவில், கார்க், அயர்லாந்து. கண்ணாடிப் படிம ஓவியம்.

திருப்பாடல்கள்[தொகு]

இரண்டாம் பகுதி (42-72)
திருப்பாடல்கள் 61 முதல் 62 வரை

திருப்பாடல் 61[தொகு]

பாதுகாப்புக்காக மன்றாடல்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு;
நரம்பிசைக் கருவிகளுடன்;
தாவீதுக்கு உரியது)



1 கடவுளே! என் கூக்குரலைக் கேளும்;
என் விண்ணப்பத்திற்குச் செவிசாயும்.


2 பூவுலகின் கடைமுனையினின்று
உம்மைக் கூப்பிடுகின்றேன்;
என் உள்ளம் சோர்வுற்றிருக்கின்றது;
உயரமான குன்றுக்கு என்னை அழைத்துச் செல்லும்.


3 ஏனெனில் நீரே என் புகலிடம்;
எதிரியின்முன் வலிமையான கோட்டை.


4 நான் உமது கூடாரத்தில் எந்நேரமும் தங்கியிருப்பேன்;
உமது இறக்கைகளின் பாதுகாப்பில் தஞ்சம் புகுவேன். (சேலா)


5 ஏனெனில், கடவுளே!
நான் செய்த பொருத்தனைகளை நீர் அறிவீர்;
உமது பெயருக்கு அஞ்சுவோர்க்குரிய
உடைமையை எனக்குத் தந்தீர்.


6 அரசரைப் பல்லாண்டு வாழச் செய்யும்;
அவரது ஆயுள் தலைமுறை தலைமுறையாக நீடிக்கட்டும்!


7 கடவுள் முன்னிலையில் அவர் என்றென்றும் வீற்றிருப்பாராக!
பேரன்போடும் உண்மையோடும் அவரைக் காத்தருளும்!


8 உமது பெயரை என்றென்றும் புகழ்ந்து பாடுவேன்;
நாள்தோறும் என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.


திருப்பாடல் 62[தொகு]

கடவுளின் பாதுகாப்பில் நம்பிக்கை[தொகு]

(பாடகர் தலைவர் எதுத்தூனுக்கு;
தாவீதின் புகழ்ப்பா)



1 கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய்க் காத்திருக்கின்றேன்;
எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தே;


2 உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே;
என் கோட்டையும் அவரே;
எனவே நான் சிறிதும் அசைவுறேன்.


3 ஒருவரைக் கொல்லவேண்டுமென்று நீங்கள் அனைவரும்
எவ்வளவு காலம் வெறியுடன் தாக்குவீர்?
நீங்கள் எல்லாரும் இடிந்த மதிலுக்கும் சிதைந்த வேலிக்கும் ஒப்பாவீர்.


4 அவர் இருக்கும் உயர்நிலையிலிருந்து
அவரைத் தள்ளிவிடத் திட்டமிடுகின்றனர்;
பொய் சொல்வதில் இன்பம் காண்கின்றனர்;
அவர்களது வாயில் ஆசிமொழி;
அவர்களது உள்ளத்திலோ சாபமொழி. (சேலா)


5 நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு;
ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே;


6 உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அவரே.
எனவே, நான் சிறிதும் அசைவுறேன்.


7 என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன;
என் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமும் கடவுளே.


8 மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்;
அவர் முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத்
திறந்து கொட்டுங்கள்;
கடவுளே நமக்கு அடைக்கலம். (சேலா)


9 மெய்யாகவே, மானிடர் நீர்க்குமிழி போன்றவர்;
மனிதர் வெறும் மாயை;
துலாவில் வைத்து நிறுத்தால்,
அவர்கள் மேலே போகின்றார்கள்;
எல்லாரையும் சேர்த்தாலும்
நீர்க்குமிழியை விட எடை குறைகின்றார்கள்.


10 பிறரைக் கசக்கிப் பிழிவதில் நம்பிக்கை வைக்காதீர்;
கொள்ளையடிப்பதில் குறியாய் இராதீர்;
செல்வம் பெருகும்போது, உள்ளத்தை அதற்குப் பறிகொடுக்காதீர்.


11 'ஆற்றல் கடவுளுக்கே உரியது!' என்று
அவர் ஒருமுறை மொழிய, நான் இருமுறை கேட்டேன்.


12 'என் தலைவரே! உண்மைப் பேரன்பு உமக்கே உரியது!'
ஏனெனில், ஒவ்வொரு மனிதருக்கும்
அவர்தம் செயல்களுக்குத்
தக்க கைம்மாறு நீரே அளிக்கின்றீர். [*]


குறிப்பு

[*] 62:12 = யோபு 34:11; எரே 17:10; மத் 16:27; உரோ 2:6; திவெ 2:23.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 63 முதல் 64 வரை