திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 77 முதல் 78 வரை

விக்கிமூலம் இலிருந்து
ஞானமும் இறைவாக்கும் அருகருகே நிற்க, நடுவில் தாவீது அரசர். விவிலிய நூல் ஓவியம். "பாரிசு திருப்பாடல்கள் நூல்". காலம்: 10ஆம் நூற்றாண்டு. காப்பகம்: பாரிசு.

திருப்பாடல்கள்[தொகு]

மூன்றாம் பகுதி (73-89)
திருப்பாடல்கள் 77 முதல் 78 வரை

திருப்பாடல் 77[தொகு]

துன்ப நாளில் ஆறுதல்[தொகு]

(பாடகர் தலைவர் எதுத்தூனுக்கு;
ஆசாபின் புகழ்ப்பா



1 கடவுளை நோக்கி உரத்த குரலில் மன்றாடுகின்றேன்;
கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள வேண்டுமென்று
அவரை நோக்கி மன்றாடுகின்றேன்.


2 என் துன்ப நாளில் என் தலைவரை நாடினேன்;
இரவில் அயராது கைகூப்பினேன்;
ஆனாலும் என் ஆன்மா ஆறுதல் அடையவில்லை.


3 கடவுளை நினைத்தேன்; பெருமூச்சு விட்டேன்;
அவரைப்பற்றி சிந்தித்தேன்; என் மனம் சோர்வுற்றது. (சேலா)


4 என் கண் இமைகள் மூடாதபடி செய்துவிட்டீர்;
நான் கலக்கமுற்றிருக்கிறேன்;
என்னால் பேச இயலவில்லை.


5 கடந்த நாள்களை நினைத்துப் பார்க்கின்றேன்;
முற்கால ஆண்டுகளைப்பற்றிச் சிந்திக்கின்றேன்.


6 இரவில் என் பாடலைப்பற்றி நினைத்துப் பார்த்தேன்;
என் இதயத்தில் சிந்தித்தேன்;
என் மனம் ஆய்வு செய்தது;


7 'என் தலைவர் என்றென்றும் கைவிட்டுவிடுவாரோ?
இனி ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டாரோ?


8 அவரது பேரன்பு முற்றிலும் மறைந்துவிடுமோ?
அவரது வாக்குறுதி தலைமுறைதோறும்
அற்றுப்போய்விடுமோ?


9 கடவுள் இரக்கங்காட்ட மறந்துவிட்டாரோ?
அல்லது சினங்கொண்டு
தமது இரக்கத்தை நிறுத்திவிட்டாரோ?' (சேலா)


10 அப்பொழுது நான்,
'உன்னதரின் வலக்கை மாறுபட்டுச் செயலாற்றுவதுபோல்
என்னை வருத்துகின்றது' என்றேன்.


11 ஆண்டவரே,
உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்;
முற்காலத்தில் நீர் செய்த வியத்தகு செயல்களை
நினைத்துப் பார்ப்பேன்.


12 உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானிப்பேன்!
உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச் சிந்திப்பேன்.


13 கடவுளே, உமது வழி தூய்மையானது!
மாபெரும் நம் கடவுளுக்கு நிகரான இறைவன் யார்!


14 அரியன செய்யும் இறைவன் நீர் ஒருவரே!
மக்களினங்களிடையே உமது ஆற்றலை
விளங்கச் செய்தவரும் நீரே;


15 யாக்கோபு, யோசேப்பு என்போரின் புதல்வரான உம் மக்களை
நீர் உமது புயத்தால் மீட்டுக் கொண்டீர். (சேலா)


16 கடவுளே, வெள்ளம் உம்மைப் பார்த்தது;
வெள்ளம் உம்மைப் பார்த்து நடுக்கமுற்றது;
ஆழ்கடல்களும் கலக்கமுற்றன.


17 கார்முகில்கள் மழை பொழிந்தன;
மேகங்கள் இடிமுழங்கின;
உம் அம்புகள் எத்திக்கும் பறந்தன.


18 உமது இடிமுழக்கம் கடும்புயலில் ஒலித்தது;
மின்னல்கள் பூவுலகில் ஒளி பாய்ச்சின;
மண்ணுலகம் நடுங்கி அதிர்ந்தது.


19 கடலுக்குள் உமக்கு வழி அமைத்தீர்;
வெள்ளத்திரளிடையே உமக்குப் பாதை ஏற்படுத்தினீர்;
ஆயினும் உம் அடிச்சுவடுகள் எவருக்கும் புலப்படவில்லை.


20 மோசே, ஆரோன் ஆகியோரைக் கொண்டு
உம் மக்களை மந்தையென அழைத்துச் சென்றீர்.


திருப்பாடல் 78[தொகு]

கடவுளும் அவர்தம் மக்களும்[தொகு]

(ஆசாபின் அறப்பாடல்)



1 என் மக்களே,
என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்;
என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள்.


2 நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்;
முற்காலத்து மறைசெய்திகளை எடுத்துரைப்பேன்.


3 நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை,
எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை -
இவற்றை உரைப்போம்.


4 அவர்களின் பிள்ளைகளுக்கு நாங்கள்
அவற்றை மறைக்க மாட்டோம்;
வரவிருக்கும் தலைமுறைக்கு
ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும்
அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம்.


5 யாக்கோபுக்கென அவர் நியமங்களை வகுத்தார்;
இஸ்ரயேலுக்கெனத் திருச்சட்டத்தை ஏற்படுத்தினார்;
இதனையே தம் பிள்ளைகளுக்கும் கற்பிக்குமாறு
நம் மூதாதையர்க்கு அவர் கட்டளையிட்டார்.


6 வரவிருக்கும் தலைமுறையினர் இவற்றை அறிந்திடவும்,
இனிப் பிறக்கவிருக்கும் பிள்ளைகள் -
இவர்கள் தம் புதல்வர்களுக்கு ஆர்வத்துடன் கற்றுக்கொடுக்கவும்,


7 அதனால், அவர்கள் கடவுள்மீது நம்பிக்கை வைக்கவும்,
இறைவனின் செயல்களை மறவாதிருக்கவும்,
அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும்,


8 தங்கள் மூதாதையரைப்போல், எதிர்ப்பு மனமும்,
அடங்காக் குணமும் கொண்ட தலைமுறையாகவும்,
நேரிய உள்ளமற்றவர்களாகவும்
இறைவன்மீது உண்மைப் பற்று அற்றவர்களாகவும் இராதபடி
அவர் கட்டளையிட்டார்.


9 வில் வீரரான எப்ராயிம் மக்கள்,
போரில் புறங்காட்டி ஓடினர்.


10 அவர்கள் கடவுளோடு செய்துகொண்ட
உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கவில்லை;
அவரது திருச்சட்டத்தைப் பின்பற்ற மறுத்துவிட்டனர்.


11 அவர்தம் செயல்களையும்
அவர் ஆற்றிய அருஞ்செயல்களையும் அவர்கள் மறந்தனர்.


12 எகிப்து நாட்டில், சோவான் சமவெளியில்
அவர்களின் மூதாதையர் காணுமாறு
அவர் வியத்தகு செயல்கள் பல புரிந்தார்; [1]


13 கடலைப் பிரித்து அவர்களை வழிநடத்தினார்;
தண்ணீரை அணைக்கட்டுப்போல நிற்கும்படி செய்தார்; [2]


14 பகலில் மேகத்தினாலும் இரவு முழுவதும் நெருப்பின் ஒளியாலும்
அவர்களை வழி நடத்தினார். [3]


15 பாலைநிலத்தில் பாறைகளைப் பிளந்தார்;
ஆழத்தினின்று பொங்கிவருவது போன்ற நீரை
அவர்கள் நிறைவாகப் பருகச் செய்தார்;


16 பாறையினின்று நீரோடைகள் வெளிப்படச் செய்தார்;
ஆறுகளென நீரை அவர் பாய்ந்தோடச் செய்தார். [4]


17 ஆயினும், அவர்கள் அவருக்கெதிராகத்
தொடர்ந்து பாவம் செய்தனர்;
வறண்ட நிலத்தில் உன்னதருக்கு எதிராய் எழுந்தனர்.


18 தம் விருப்பம்போல் உணவு கேட்டு
வேண்டுமென்றே இறைவனைச் சோதித்தனர்.


19 அவர்கள் கடவுளுக்கு எதிராக இவ்வாறு பேசினார்கள்:
'பாலை நிலத்தில் விருந்தளிக்க இறைவனால் இயலுமா?


20 உண்மைதான்!
அவர் பாறையை அதிரத் தட்டினார்;
நீர் பாய்ந்து வந்தது; ஆறுகள் கரைபுரண்டு ஓடின.
ஆயினும், அப்பமளிக்க இயலுமா அவரால்?
தம் மக்களுக்கு இறைச்சி தர முடியுமா?'


21 எனவே, இதைக் கேட்ட ஆண்டவர் சினங்கொண்டார்;
நெருப்பு யாக்கோபுக்கு எதிராய்க் கிளர்ந்தெழுந்தது;
இஸ்ரயேல்மீது அவரது சினம் பொங்கியெழுந்தது.


22 ஏனெனில், அவர்கள் கடவுள்மீது பற்றுறுதி கொள்ளவில்லை;
அவர் காப்பார் என்று நம்பவில்லை.


23 ஆயினும், மேலேயுள்ள வானங்களுக்கு அவர் கட்டளையிட்டார்;
விண்ணகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார்.


24 அவர்கள் உண்பதற்காக மன்னாவை
மழையெனப் பொழியச் செய்தார்;
அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார். [5]


25 வான தூதரின் உணவை மானிடர் உண்டனர்;
அவர்களுக்கு வேண்டியமட்டும் உணவுப் பொருளை அவர் அனுப்பினார்.


26 அவர் விண்ணுலகினின்று கீழ்க்காற்றை இறங்கிவரச் செய்தார்;
தம் ஆற்றலினால் தென்காற்றை அழைத்துவந்தார்.


27 அவர் இறைச்சியைத் துகள்துகளென
அவர்கள்மீது பொழிந்தார்;
இறகுதிகழ் பறவைகளைக்
கடற்கரை மணலென வரவழைத்தார்.


28 அவற்றை அவர்தம் பாளையத்தின் நடுவிலும்
கூடாரத்தைச் சுற்றிலும் விழச்செய்தார்.


29 அவர்கள் உண்டனர்;
முற்றிலுமாய் நிறைவடைந்தனர்;
அவர்கள் விரும்பியவற்றையே அவர் அவர்களுக்கு அளித்தார்.


30 அவர்களது பெருந்தீனி வேட்கை தணியுமுன்பே,
அவர்கள் வாயிலில் உணவு இருக்கும் பொழுதே,


31 கடவுளின் சினம் அவர்களுக்கு எதிராக மூண்டெழுந்தது;
அவர்களுள் வலியோரை அவர் கொன்றார்;
இஸ்ரயேலின் இளைஞரை வீழ்த்தினார். [6]


32 இவையெல்லாம் நிகழ்ந்த பின்னும்,
அவர்கள் தொடர்ந்து பாவம் செய்தார்கள்;
அவர்தம் வியத்தகு செயல்களில் நம்பிக்கை கொள்ளவில்லை.


33 ஆகையால், அவர்களது வாழ்நாளை
மூச்சென மறையச் செய்தார்;
அவர்களது ஆயுளைத்
திடீர்த் திகிலால் முடிவுறச் செய்தார்.


34 அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்;
மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர்.


35 கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும்
உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும்
அவர்கள் நினைவில் கொண்டனர்.


36 ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே
அவரைப் புகழ்ந்தார்கள்;
தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள்.


37 அவர்கள் இதயம் அவரைப் பற்றிக் கொள்வதில் உறுதியாய் இல்லை;
அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை.


38 அவரோ இரக்கம் கொண்டவராய்,
அவர்கள் குற்றத்தை மன்னித்தார்;
அவர்களை அழித்துவிடவில்லை,
பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார்.
தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை.


39 அவர்கள் வெறும் சதையே என்பதையும்
திரும்பி வராத காற்று என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.


40 பாலை நிலத்தில் அவர்கள் எத்தனையோமுறை
அவருக்கெதிராய்க் கிளர்ந்தெழுந்தனர்!
வறண்ட நிலத்தில் அவர் மனத்தை வருத்தினர்!


41 இறைவனை அவர்கள் மீண்டும் மீண்டும் சோதித்தனர்;
இஸ்ரயேலின் தூயவருக்கு எரிச்சலூட்டினர்.


42 அவரது கைவன்மையை மறந்தனர்;
எதிரியிடமிருந்து அவர் அவர்களை விடுவித்த நாளையும் மறந்தனர்;


43 அந்நாளில் எகிப்தில் அவர் அருஞ்செயல்கள் செய்தார்;
சோவான் சமவெளியில் வியத்தகு செயல்கள் புரிந்தார்.


44 அவர்களின் ஆறுகளைக் குருதியாக மாற்றினார்;
எனவே, தங்கள் ஓடைகளினின்று
அவர்களால் நீர் பருக இயலவில்லை. [7]


45 அவர்களை விழுங்குமாறு அவர்கள்மீது ஈக்களையும்
அவர்களது நாட்டை அழிக்குமாறு தவளைகளையும்
அவர் அனுப்பினார். [8]


46 அவர்களது விளைச்சலைப் பச்சைப் புழுக்களுக்கும்
அவர்களது உழைப்பின் பயனை வெட்டுக்கிளிகளுக்கும்
அவர் கொடுத்தார். [9]


47 கல்மழையினால் அவர்களுடைய திராட்சைக் கொடிகளையும்
உறைபனியால் அவர்களுடைய அத்தி மரங்களையும் அவர் அழித்தார்.


48 அவர்களுடைய கால்நடைகளைக் கல்மழையிடமும்
அவர்களுடைய ஆடுமாடுகளை
இடி மின்னலிடமும் அவர் ஒப்புவித்தார். [10]


49 தம் சினத்தையும், சீற்றத்தையும்
வெஞ்சினத்தையும் இன்னலையும் -
அழிவு கொணரும் தூதர்க் கூட்டத்தை -
அவர் ஏவினார்.


50 அவர் தமது சினத்திற்கு வழியைத் திறந்துவிட்டார்;
அவர்களைச் சாவினின்று தப்புவிக்கவில்லை;
அவர்களின் உயிரைக் கொள்ளை நோய்க்கு ஒப்புவித்தார்.


51 எகிப்தின் அனைத்துத் தலைப்பேறுகளையும்
'காம்' கூடாரங்களில் ஆண் தலைப்பேறுகளையும் அவர் சாகடித்தார். [11]


52 அவர்தம் மக்களை ஆடுகளென வெளிக்கொணர்ந்தார்;
பாலைநிலத்தில் அவர்களுக்கு மந்தையென வழி காட்டினார். [12]


53 பாதுகாப்புடன் அவர்களை அவர் அழைத்துச் சென்றார்;
அவர்கள் அஞ்சவில்லை;
அவர்களுடைய எதிரிகளைக் கடல் மூடிக்கொண்டது. [13]


54 அவர் தமது திருநாட்டுக்கு,
தமது வலக்கரத்தால் வென்ற மலைக்கு,
அவர்களை அழைத்துச் சென்றார். [14]


55 அவர்கள் முன்னிலையில்
வேற்றினத்தாரை அவர் விரட்டியடித்தார்;
அவர்களுக்கு நாட்டைப் பங்கிட்டு
உரிமைச் சொத்தாகக் கொடுத்தார்;
இஸ்ரயேல் குலங்களை அவர்கள் கூடாரங்களில் குடியேற்றினார். [15]


56 ஆயினும், உன்னதரான கடவுளை அவர்கள் சோதித்தனர்;
அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்;
அவர்தம் நியமங்களைக் கடைப்பிடிக்கவில்லை. [16]


57 தங்கள் மூதாதையர்போல் அவர்கள் வழி தவறினர்;
நம்பிக்கைத் துரோகம் செய்தனர்;
கோணிய வில்லெனக் குறி மாறினர்.


58 தம் தொழுகை மேடுகளால் அவருக்குச் சினமூட்டினர்;
தம் வார்ப்புச் சிலைகளால் அவருக்கு ஆத்திரமூட்டினர்.


59 கடவுள் இதைக் கண்டு சினம் கொண்டார்;
இஸ்ரயேலை அவர் முழுமையாகப் புறக்கணித்தார்;


60 சீலோவில் அமைந்த தம் உறைவிடத்தினின்று வெளியேறினார்;
மானிடர் நடுவில் தாம் வாழ்ந்த கூடாரத்தினின்று அகன்றார்; [17]


61 தம் வலிமையை [18] அடிமைத் தனத்திற்குக் கையளித்தார்;
தம் மாட்சியை [19] எதிரியிடம் ஒப்புவித்தார்;


62 தம் மக்களை வாளுக்குக் கையளித்தார்;
தம் உரிமைச்சொத்தின்மீது கடுஞ்சினங்கொண்டார்.


63 அவர்களுடைய இளைஞரை நெருப்பு விழுங்கியது;
அவர்களுடைய கன்னியர்க்குத்
திருமணப் பாடல் இல்லாது போயிற்று.


64 அவர்களுடைய குருக்கள் வாளால் வீழ்த்தப்பட்டனர்;
அவர்களுடைய கைம்பெண்டிர்க்கு
ஒப்பாரி வைக்க வழியில்லை.


65 அப்பொழுது, உறக்கத்தினின்று எழுவோரைப்போல்,
திராட்சை மதுவால் களிப்புறும் வீரரைப்போல்
எம் தலைவர் விழித்தெழுந்தார்.


66 அவர் தம் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தார்;
அவர்களை என்றென்றும் இகழ்ச்சிக்கு உள்ளாக்கினார்.


67 அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்;
எப்ராயிம் குலத்தைத் தேர்வு செய்யவில்லை.


68 ஆனால், யூதாவின் குலத்தை
தமக்கு விருப்பமான சீயோன் மலையை அவர் தேர்ந்துகொண்டார்.


69 தம் திருத்தலத்தை உயர் விண்ணகம் போல் அவர் அமைத்தார்;
மண்ணுலகத்தில் [20] என்றும் நிலைத்திருக்குமாறு எழுப்பினார்.


70 அவர் தாவீதைத் தம் ஊழியராய்த் தேர்ந்தெடுத்தார்;
ஆட்டு மந்தைகளினின்று அவரைப் பிரித்தெடுத்தார்.


71 இறைவன் தம் மக்களான யாக்கோபை,
தம் உரிமைச் சொத்தான இஸ்ரயேலை,
பால் கொடுக்கும் ஆடுகளைப் பேணிய
தாவீது மேய்க்குமாறு செய்தார். [21]


72 அவரும் நேரிய உள்ளத்தோடு அவர்களைப் பேணினார்;
கைவன்மையாலும் அறிவுத்திறனாலும்
அவர்களை வழிநடத்தினார்.


குறிப்புகள்

[1] 78:12 = விப 7:8-12:35.
[2] 78:13 = விப 14:21-22.
[3] 78:14 = விப 13:21-23.
[4] 78:15-16 = விப 17:1-7; எண் 20:13.
[5] 78:24 = யோவா 6:31.
[6] 78:18-31 = விப 16:2-15; எண் 11:4-23; 31-35.
[7] 78:44 = விப 7:17-21.
[8] 78:45 = விப 8:1-6; 22-24.
[9] 78:46 = விப 10:12-15.
[10] 78:47-48 = விப 9:22-25.
[11] 78:51 = விப 12:29.
[12] 78:52 = விப 13:17-22.
[13] 78:53 = விப 14:26-28.
[14] 78:54 = விப 15:17; யோசு 3:14-17.
[15] 78:55 = யோசு 11:16-23.
[16] 78:56 = நீதி 2:11-15.
[17] 78:60 = யோசு 18:1; எரே 7:12-14; 26:6.
[18] 78:61 "தம் வலிமையை", மற்றும் "தம் மாட்சியை" என்னும் சொற்கள்
உடன்படிக்கைப் பேழையைக் குறிக்கும். (காண். 1 சாமு 4:1-22).
[19] 78:61 = 1 சாமு 4:4-22.
[20] 78:69 "மண்ணுலகத்தில்" என்பது "மண்ணகம்போல்" என்று எபிரேய பாடத்தில் உள்ளது.
[21] 78:70-71 = 1 சாமு 16:11-12; 2 சாமு 7:8; 1 குறி 17:7.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 79 முதல் 80 வரை