திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
நீதிமொழிகள் வழங்கும் ஞானம் நிறைந்த அரசராக சாலமோன். ஓவியர்: பேத்ரோ பெர்ருகேத்தே (1450-1504. காப்பிடம்: எசுப்பானியா.

நீதிமொழிகள் (The Book of Proverbs)[தொகு]

முன்னுரை

"நீதிமொழிகள்" என்னும் இந்நூல் ஒழுக்கத்தையும் சமயத்தையும் சார்ந்த போதனைகளின் தொகுப்பாகும். இவை சொற்கோவை, பழமொழி ஆகிய வடிவங்களில் காணப்படுகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை அன்றாட வாழ்வையும் நடைமுறை வழக்கையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன.

இந்நூல் "ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்" எனத் தொடங்கி, சமய ஒழுக்கம் பற்றியும் நல்லறிவு, நன்னடத்தை ஆகியவை பற்றியும் விளக்கிக் கூறுகின்றது. இங்குக் காணப்படும் சொற்கோவைகள் பண்டைய இஸ்ரயேலின் ஞானிகளுடைய அனுபவமிக்க அறிவுரைகளாக அமைந்துள்ளன. மேலும் குடும்ப உறவுகள், பொருளீட்டு முயற்சிகள், சமூக உறவுகள், நன்னடத்தை, தற்கட்டுப்பாடு ஆகிய முறைமைகள் பற்றியும், மனத் தாழ்வு, பொறுமை, ஏழையர்பால் அன்பு, மாறாத நட்பு ஆகிய பண்புகள் பற்றியும் இந்நூல் விரித்துரைக்கின்றது.

நீதிமொழிகள்[தொகு]

நூலின் பிரிவுகள்


பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. ஞானம் பற்றிய புகழுரை 1:1 - 9:18 941 - 950
2. சாலமோனின் நீதிமொழிகள் 10:1 - 29:27 950 - 974
3. ஆகூரின் மொழிகள் 30:1-33 974 - 976
4. பல்வேறு சொற்கோவைகள் 31:1-31 976 - 977

நீதிமொழிகள்[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

இந்நூலின் நோக்கம்[தொகு]


1 தாவீதின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமாகிய
சாலமோனின் நீதிமொழிகள்.


2 இவற்றைப் படிப்பவர் ஞானமும் நற்பயிற்சியும் பெறுவர்;
ஆழ்ந்த கருத்தடங்கிய நன்மொழிகளை உணர்ந்து கொள்வர்;


3 நீதி, நியாயம், நேர்மை நிறைந்த
விவேக வாழ்க்கையில் பயிற்சி பெறுவர்;


4 அறிவுற்றோர் கூரறிவு பெறுவர்;
இளைஞர் அறிவும் விவேகமும் அடைவர்.


5 ஞானமுள்ளோர் இவற்றைக் கேட்டு
அறிவில் இன்னும் தேர்ச்சியடைவர்;
விவேகிகள் அறிவுரை கூறும் திறமை பெறுவர்;


6 நீதிமொழிகளையும் உவமைகளையும்
ஞானிகளின் நன்மொழிகளையும் புதிர் மொழிகளையும்
அவர்கள் உய்த்துணர்வர்.

இளைஞருக்கு நல்லுரை[தொகு]


7 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்;
ஞானத்தையும் நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர்.


8 பிள்ளாய்! உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி;
உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே;
9 அவை உன் தலைக்கு அணிமுடி;
உன் கழுத்துக்கு மணிமாலை.


10 பிள்ளாய்! தீயவர்கள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்;
நீ அவர்களுடன் போக இணங்காதே.
11 அவர்கள் என்னைப் பார்த்து,
"எங்களோடு வா; பதுங்கியிருந்து எவரையாவது கொல்வோம்;
யாராவது ஓர் அப்பாவியை ஒளிந்திருந்து தாக்குவோம்;
12 பாதாளத்தைப்போல நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்;
படுகுழிக்குச் செல்வோரை அது விழுங்குவதுபோல,
நாமும் அவர்களை முழமையாக விழுங்குவோம்.
13 எல்லா வகையான அரும் பொருள்களும் நமக்குக் கிடைக்கும்;
கொள்ளையடித்த செல்வத்தால் நம் வீடுகளை நிரப்புவோம்.
14 நீ எங்களோடு சேர்ந்துகொள்;
எல்லாவற்றிலும் உனக்குச் சம பங்கு கிடைக்கும்"
என்றெல்லாம் சொல்வார்கள்.
15 பிள்ளாய்! அவர்களோடு சேர்ந்து அவர்கள் வழியில் செல்லாதே;
அவர்கள் செல்லும் பாதையில் அடிவைக்காதே.
16 அவர்கள் கால்கள் தீங்கிழைக்கத் துடிக்கின்றன;
இரத்தம் சிந்த விரைகின்றன.
17 பறவையைப் பிடிக்க, அதன் கண்முன்னே அன்று,
மறைவாகவே கண்ணி வைப்பார்கள்.
18 அவர்கள் பதுங்கியிருப்பது அவர்களுக்கே ஊறுவிளைவிக்கும் கண்ணியாகி விடும்;
அவர்கள் ஒளிந்து காத்திருப்பது அவர்களையே அழிக்கும் பொறியாகி விடும்.
19 தீய முறையில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே;
அந்தப் பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்.

ஞானம் விடுக்கும் அழைப்பு[தொகு]


20 ஞானம் வீதிகளிலிருந்து உரத்துக் கூறுகின்றது;
பொதுவிடங்களிலிருந்து குரலெழுப்புகின்றது;
21 பரபரப்பு மிகுந்த தெருக்களிலிருந்து அழைக்கின்றது;
நகர வாயிலிருந்து முழங்குகின்றது:
22 "பேதையரே, நீங்கள் இன்னும் எவ்வளவு காலம்
உங்கள் பேதைமையில் உழல்வீர்கள்?
இகழ்வார் இன்னும் எவ்வளவு காலம்
இகழ்ச்சி செய்வதில் மகிழ்ச்சி காண்பர்?
முட்டாள்கள் இன்னும் எவ்வளவு காலம்
அறிவை வெறுப்புடன் நோக்குவார்கள்?
23 என் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்வீர்களானால்,
நான் என் உள்ளத்திலிருப்பதை உங்களுக்குச் சொல்வேன்;
என் செய்தியை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
24 நான் கூப்பிட்டேன், நீங்களோ செவிசாய்க்க மறுத்தீர்கள்;
உங்களை அரவணைக்கக் கையை நீட்டினேன்; எவரும் கவனிக்கவில்லை.
25 என் அறிவுரைகளுள் ஒன்றையும் பொருட்படுத்தவில்லை;
என் எச்சரிக்கை அனைத்தையும் புறக்கணித்தீர்கள்.
26 ஆகையால், உங்களுக்கு இடுக்கண் வரும்போது, நான் நகைப்பேன்;
உங்களுக்குப் பெருங்கேடு விளையும்போது ஏளனம் செய்வேன்.
27 பேரிடர் உங்களைப் புயல் போலத் தாக்கும்போது,
இடுக்கண் உங்களைச் சுழற்காற்றென அலைக்கழிக்கும்போது,
துன்பமும் துயரமும் உங்களைச் சூழ்ந்து கொள்ளும்போது,
நான் எள்ளி நகையாடுவேன்.
28 அப்பொழுது, நீங்கள் என்னை நோக்கி மன்றாடுவீர்கள்;
நான் பதிலளிக்க மாட்டேன்;
ஆவலோடு என்னை நாடுவீர்கள்;
ஆனால் என்னைக் காணமாட்டீர்கள்.
29 ஏனெனில், நீங்கள் அறிவை வெறுத்தீர்கள்;
ஆண்டவரிடம் அச்சம் கொள்வதில் உங்களுக்கு விருப்பமில்லை.
30 நீங்கள் என் அறிவுரையை ஏற்கவில்லை;
என் எச்சரிக்கை அனைத்தையும் அவமதித்தீர்கள்.
31 நீங்கள் உங்கள் நடத்தையின் பயனைத் துய்ப்பீர்கள்;
சூழ்ச்சி செய்து நீங்களே சலித்துப் போவீர்கள்.
32 பேதையரின் தவறுகள் அவர்களையே கொன்றுவிடும்;
சிறுமதியோரின் தற்பெருமை அவர்களை அழித்துவிடும்.
33 எவர் எனக்குச் செவி கொடுக்கின்றாரோ அவர் தீங்கின்றி வாழ்வார்;
தீமை வருகையிலும் அச்சமின்றி அவர் மன அமைதியுடன் இருப்பார்."


குறிப்புகள்

[1] 1:1 = 1 அர 4:32.
[2] 1:7 = யோபு 28:28; திபா 111:10; நீமொ 9:10.
[3] 1:20-21 = நீமொ 8:1-3.


அதிகாரம் 2[தொகு]

ஞானம் அளிக்கும் பயன்[தொகு]


1 பிள்ளாய்!
நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து,
மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி,
2 என் மொழிகளை ஏற்று,
என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள்.
3 ஆம், நீ உணர்வுக்காக வேண்டுதல் செய்து,
மெய்யறிவுக்காக உரக்க மன்றாடு.
4 செல்வத்தை நாடுவதுபோல் ஞானத்தை நாடி,
புதையலுக்காகத் தோண்டும் ஆர்வத்தோடு அதைத் தேடு.
5 அப்பொழுது, ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம்
இன்னதென்பதை உணர்ந்து கொள்வாய்.
கடவுளை அறியும் அறிவைப் பெறுவாய்.
6 ஏனெனில் ஞானத்தை அளிப்பவர் ஆண்டவரே,
அறிவிற்கும் விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே.
7 நேர்மையாளருக்கு அவர் துணை செய்யக் காத்திருக்கின்றார்;
மாசற்றோருக்குக் கேடயமாய் இருக்கின்றார்.
8 நேர்மையாளரின் பாதைகளை அவர் பாதுகாக்கின்றார்;
தம் அடியாரின் வழிகளைக் காவல் செய்கின்றார்.
9 எனவே, நீ நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும்
நலமார்ந்த நெறிகள் அனைத்தையும் தெரிந்துகொள்வாய்.
10 ஞானம் உன் உள்ளத்தில் குடிபுகும்;
அறிவு உன் இதயத்திற்கு இன்பம் தரும்.
11 அப்பொழுது, நுண்ணறிவு உனக்குக் காவலாய் இருக்கும்;
மெய்யறிவு உன்னைக் காத்துக்கொள்ளும்.
12 நீ தீய வழியில் செல்லாமலும்,
வஞ்சகம் பேசும் மனிதரிடம் அகப்படாமலும் இருக்கும்படி,
அது உன்னைப் பாதுகாக்கும்.
13 நேர்மையான வழியை விட்டு விலகி,
இருளான பாதையில் நடப்போரின் கைக்கு உன்னைத் தப்புவிக்கும்.
14 அவர்கள் தீமை செய்து களிக்கின்றவர்கள்.
15 அவர்களுடைய வழிகள் கோணலானவை.
அவர்களுடைய பாதைகள் நேர்மையற்றவை.
16 ஞானம் உன்னைக் கற்புநெறி தவறியளிடமிருந்தும்,
தேனொழுகப் பேசும் விலைமகளிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும்.
17 அவள் இளமைப் பருவத்தில் தான் மணந்த கணவனைக் கைவிட்டவள்;
தான் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மறந்தவள்.
18 அவளது வீடு சாவுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றது;
அவளின் வழிகள் இறந்தோரிடத்திற்குச் செல்கின்றன.
19 அவளிடம் செல்லும் எவனும் திரும்பி வருவதேயில்லை;
வாழ்வெனும் பாதையை அவன் மீண்டும் அடைவதில்லை.
20 எனவே, நீ நல்லாரின் நெறியில் நடப்பாயாக!
நேர்மையாளரின் வழியைப் பின்பற்றுவாயாக!
21 நேர்மையாளரே உலகில் வாழ்வர்;
மாசற்றாரே அதில் நிலைத்திருப்பர்.
22 பொல்லாரோ உலகினின்று பூண்டோடு அழிவர்;
நயவஞ்சகர் அதனின்று வேரோடு களைந்தெறியப்படுவர்.


(தொடர்ச்சி):நீதிமொழிகள்:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை