திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/புலம்பல்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
எருசலேமுக்கு நிகழ்ந்த பேரழிவை முன்னிட்டுப் புலம்புகின்றார் எரேமியா இறைவாக்கினர்: "அனைவரும் உற்றுப் பாருங்கள்! எனக்கு வந்துற்ற துயர்போல வேறேதும் துயர் உண்டோ?" - புலம்பல் 1:12. ஓவியர்: ரெம்ப்ராண்ட். காப்பிடம்: ஆம்ஸ்டர்டாம், ஒல்லாந்து. ஆண்டு: 1630.

புலம்பல் (The Book of Lamentations) [1][தொகு]

முன்னுரை

புலம்பல் என்னும் இத்திருநூல் ஐந்து எபிரேய அகர வரிசைக் கவிதைகளால்ஆனது. கி.மு. 586இல் எருசலேமுக்கு நேரிட்ட பேரழிவையும், அதன் தொடர் நிகழ்ச்சியான நாடுகடத்தப்படுதலையும் பற்றிய புலம்பலாக இந்நூல் அமைந்துள்ளது.

எரேமியாவின் காலச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட இந்நூலில், அவலச் சுவையே மேலோங்கி நிற்கின்றது. ஆயினும், கடவுளின் அருளினால் கிடைக்கவிருக்கும் ஒளிமயமான எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் ஆங்காங்கே வெளிப்படுகின்றது. இக்கவிதைகள், மேற்குறிப்பிட்ட பேரழிவின் நினைவு நாளுக்கான நோன்பு வழிபாட்டில், யூதர்களால், ஆண்டுதோறும் பயன்படுத்தப்படுகின்றன.

புலம்பல்[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. எருசலேமின் துன்பங்கள் 1:1-22 1198 - 1200
2. எருசலேமுக்குரிய தண்டனை 2:1-22 1200 - 1202
3. தண்டனைத் தீர்ப்பும் நம்பிக்கையும் 3:1-66 1202 - 1204
4. வீழ்ச்சியுற்ற எருசலேம் 4:1-22 1204 - 1206
5. இறைவனின் இரக்கத்திற்காக வேண்டல் 5:1-22 1206

புலம்பல்[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

எருசலேமின் துன்பங்கள்[தொகு]


1 அந்தோ! மக்கள் மிகுந்த மாநகர் தனியளாய் அமர்ந்தனளே!
நாடுகளில் மாண்புடையாள் விதவைபோல் ஆனாளே!
மாநிலங்களின் இளவரசி அடிமைப்பெண் ஆயினளே!


2 ஆறாத் துயருற்று இரவில் அவள் அழுகின்றாள்;
அவளின் கன்னங்களில் கண்ணீர் வடிகின்றது;
அவளின் காதலரில் தேற்றுவார் எவரும் இல்லை;
அவளின் நண்பர் அனைவரும் அவளுக்குத்
துரோகம் செய்து பகைவர் ஆயினர்.


3 இன்னலுற்று அடிமையான யூதா நாடுகடத்தப்பட்டாள்!
வேற்றினத்தாருடன் தங்கியிருக்கும் அவள் அமைதி பெறவில்லை!
துரத்தி வந்தோர் இடுக்குகளிடையே அவளை வளைத்து பிடித்தனர்!


4 விழாக்களுக்குச் செல்பவர் யாருமில்லை;
சீயோனுக்குச் செல்லும் வழிகள் புலம்புகின்றன;
அவள் நுழைவாயில்கள் பாழடைந்துள்ளன;
அவள் குருக்கள் பெருமூச்சு விடுகின்றனர்;
அவளின் கன்னிப் பெண்கள் ஏங்கித் தவிக்கின்றனர்;
அவளுக்கு வாழ்க்கையே கசப்பாயிற்று.


5 உயர் தலைவர் ஆயினர் அவளின் எதிரிகள்!
வளமுடன் வாழ்கின்றனர் அவளின் பகைவர்!
அவளுடைய பல்வேறு குற்றங்களுக்காக
ஆண்டவர் அவளைத் துன்பத்திற்கு உட்படுத்தினார்!
அவள் குழந்தைகளை எதிரிகள் கைதியாக்கிக்கொண்டு போயினர்.


6 அனைத்து மேன்மையும் மகள் சீயோனை விட்டு அகன்றது;
அவள் தலைவர்கள் பசும்புல் காணா மான்கள்போல் ஆயினர்.
துரத்தி வருவோர் முன் அவர்கள் ஆற்றல் அற்றவர் ஆயினர்.


7 எருசலேம், தன் துன்ப நாள்களிலும்,
அகதியாய் வாழ்ந்தபோதும்,
முன்னாள்களில் தனக்கிருந்த நலன்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்தாள்;
அவளின் மக்கள் எதிரிகளின் கைகளில் சிக்கினார்கள்;
அவளுக்கு உதவி செய்வார் யாருமில்லை;
அவளது வீழ்ச்சியைக் கண்ட எதிரிகள்
அவளை ஏளனம் செய்தனர்.


8 ஏராளமாய்ப் பாவம் செய்தாள் எருசலேம்;
அதனால் அவள் கறைப்பட்டவள் ஆனாள்;
அவளை முன்பு மதித்த அனைவரும் அவமதித்தனர்;
அவளுடைய திறந்த மேனியைக் கண்டனர்;
அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னோக்கித் திரும்பினாள்.


9 ஐயகோ! அவள் தீட்டு அவள் ஆடையில் தெரிகின்றதே!
அவள் தனக்கு வரவிருப்பதை நினைவில் கொள்ளவில்லை!
அவளது வீழ்ச்சி அதிர்ச்சியைத் தருகின்றது!
அவளைத் தேற்றுவார் யாரும் இல்லை!
"ஆண்டவரே என் துன்பத்தைப் பாரும்!
பகைவன் பெருமை பெற்றுவிட்டான்!"


10 ஒப்பற்ற அவளது விருப்பமான
பொருளனைத்தின்மீதும் கைவைத்தான் பகைவன்!
வேற்றினத்தார் உம் சபைக்கு வருவதைத் தடை செய்தீர்!
அன்னார் அவளது திருத்தலத்தில் நுழைவதை
அவள் பார்த்து நின்றாள்!


11 உணவைத் தேடி அவளின் மக்கள்
அனைவரும் ஓலமிடுகின்றனர்!
உயிரைக் காத்திடத் தம் ஒப்பற்ற பொருள்களை
உணவுக்காகத் தந்தனர்!
"ஆண்டவரே என்னைக் கண்ணோக்கும்!
நான் எத்தகு இழிநிலைக்கு உள்ளானேன் என்று பாரும்!"


12 இவ்வழியாய்க் கடந்து செல்வோரே!
உங்களுக்குக் கவலை இல்லையா?
அனைவரும் உற்றுப் பாருங்கள்!
எனக்கு வந்துற்ற துயர்போல வேறேதும் துயர் உண்டோ?
ஆண்டவர் தம் வெஞ்சின நாளில்
என்னைத் துன்பத்திற்கு உள்ளாக்கினார்.


13 மேலிருந்து அவர் நெருப்பினை
என் எலும்புகளுக்குள் இறங்கச் செய்தார்!
என் கால்களுக்கு வலை விரித்தார்!
அவர் என்னைப் பின்னடையச் செய்தார்!
அவர் என்னைப் பாழாக்கினார்!
நாள் முழுவதும் நான் சோர்ந்து போகிறேன்.


14 என் குற்றங்கள் என்னும் நுகம்
அவர் கையால் பூட்டப்பட்டுள்ளது;
அவை பிணைக்கப்பட்டு, என் கழுத்தைச் சுற்றிக் கொண்டன;
அவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்;
நான் எழ இயலாதவாறு என் தலைவர்
என்னை அவர்கள் கையில் ஒப்புவித்தார்.


15 என் தலைவர் என்னிடமுள்ள
வலியோர் அனைவரையும் அவமதித்தார்;
என் இளைஞரை அடித்து நொறுக்க
அவர் எனக்கு எதிராக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்;
மகள் யூதாவாகிய கன்னியை,
ஆலையில் திராட்சைப் பழத்தைப் பிழிவதுபோல,
என் தலைவர் கசக்கிப் பிழிந்தார்.


16 இவற்றின் பொருட்டு நான் புலம்புகின்றேன்;
என் இரு கண்களும் கண்ணீரைப் பொழிகின்றன;
என் உயிரைக் காத்து ஆறுதல் அளிப்பவர்
எனக்கு வெகு தொலையில் உள்ளார்;
பகைவன் வெற்றி கொண்டதால்
என் பிள்ளைகள் பாழாய்ப் போயினர்.


17 சீயோன் தன் கைகளை உயர்த்துகின்றாள்;
அவளைத் தேற்றுவார் யாருமில்லை;
சூழ்ந்து வாழ்வோர் யாக்கோபுக்கு எதிரிகளாயிருக்குமாறு
ஆண்டவர் கட்டளையிட்டார்;
எருசலேம் அவர்களிடையே தீட்டுப்பொருள் ஆயிற்று.


18 ஆண்டவரோ நீதியுள்ளவர்;
நான் அவரது வாக்குக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தேன்;
அனைத்து மக்களினங்களே, செவிகொடுங்கள்;
என் துயரத்தைப் பாருங்கள்;
என் கன்னிப்பெண்களும் இளைஞரும் நாடுகடத்தப்பட்டனர்.


19 என் காதலர்களை அழைத்தேன்;
அவர்களோ என்னை ஏமாற்றினர்;
என் குருக்களும் பெரியோரும்
தங்கள் உயிரைக் காத்திட உணவு தேடுகையில்,
நகரில் பசியால் மாண்டனர்.


20 ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கும்!
துயரில் நான் மூழ்கியுள்ளேன்!
நான் பெருங் கலகம் செய்துள்ளேன்!
என் குலை நடுங்குகின்றது!
என் இதயம் வெடிக்கின்றது!
வெளியே வாளுக்கு இரையாகினர் என் பிள்ளைகள்!
வீட்டினுள்ளும் சாவு மயம்!


21 நான் விடும் பெருமூச்சை அவர்கள் கேட்டார்கள்;
என்னைத் தேற்றுவார் யாரும் இல்லை;
என் எதிரிகள் அனைவரும் எனக்கு நேரிட்ட
தீங்கைப்பற்றிக் கேள்வியுற்றனர்;
நீரே அதைச் செய்தீர் என மகிழ்ச்சி அடைகின்றனர்!
நீர் அறிவித்த நாளை வரச் செய்யும்!
அவர்களும் என்னைப்போல் ஆகட்டும்!


22 அவர்கள் தீச்செயல்கள் அனைத்தும்
உம் திருமுன் வருவதாக!
என் அனைத்துக் குற்றங்களின் பொருட்டு,
நீர் என்னைத் தண்டித்தது போல்,
அவர்களையும் தண்டியும்!
விம்மல்கள் மிகப் பல!
என் இதயம் சோர்ந்துபோயிற்று!


அதிகாரம் 2[தொகு]

எருசலேமுக்குரிய தண்டனை[தொகு]


1 ஐயோ! மகள் சீயோனை ஆண்டவர்
தம் சினமென்னும் மேகத்தால் மூடினார்!
அவர் இஸ்ரயேலின் மேன்மையை
விண்ணினின்று மண்ணுக்குத் தள்ளினார்!
அவரது சினத்தின் நாளில்
தம் கால்மணையை மனத்தில் கொள்ளவில்லை!


2 ஆண்டவர் யாக்கோபின் அனைத்துக்
குடியிருப்புகளையும் இரக்கமின்றி அழித்தார்;
அவர் சீற்றமடைந்து மகள் யூதாவின்
அரண்களைத் தகர்த்தார்;
அவற்றைத் தரைமட்டமாக்கினார்.
அவரது நாட்டையும் அதன் தலைவர்களையும்
மேன்மை குலையச் செய்தார்.


3 அவர் வெஞ்சினம் கொண்டு
இஸ்ரயேலின் கொம்பை முற்றிலும் வெட்டிவிட்டார்;
பகைவன் வந்தபொழுது
தம் வலக்கையைப் பின்புறம் மறைத்துக்கொண்டார்;
சூழ்ந்திருக்கும் யாவற்றையும் எரிக்கும் தீப்பிழம்பென,
அவர் யாக்கோபின் மீது பற்றியெரிந்தார்.


4 எதிரி போலத் தமது வில்லை நாணேற்றினார்;
பகைவன் போலத் தம் வலக்கையை ஓங்கினார்;
கண்ணுக்கு இனியவை அனைத்தையும் அழித்தார்;
மகள் சீயோனின் கூடாரத்தில்
தம் சினத்தை நெருப்பெனக் கொட்டினார்.


5 என் தலைவர் எதிரி போலானார்;
அவர் இஸ்ரயேலை அழித்தார்;
அதன் கோட்டை கொத்தளங்களைத் தகர்த்தார்;
மகள் யூதாவின் அழுகையையும் புலம்பலையும் மிகுதியாக்கினார்.


6 தோட்டத்துப் பரணைப் பிரித்தெறிவது போலத்
தம் கூடாரத்தையும் பிரித்தெறிந்தார்;
சபை கூடும் இடத்தையும் அழித்தார்;
சீயோனில் ஆண்டவர் விழாக்களையும்
ஓய்வுநாளையும் மறக்கச் செய்தார்;
அவர் வெஞ்சினமுற்று அரசனையும்
குருவையும் வெறுத்து ஒதுக்கினார்.


7 என் தலைவர் தம் பலிபீடத்தை வெறுத்தொதுக்கினார்.
தம் திருத்தூயகத்தைக் கைவிட்டார்;
அதன் கோட்டைச் சுவர்களைப் பகைவரிடம் கையளித்தார்;
விழா நாளில் ஆரவாரம் செய்வதுபோல
ஆண்டவரின் இல்லத்தில் அவர்கள் ஆரவாரம் செய்தனர்;


8 மகள் சீயோனின் மதிலை அழிக்க
ஆண்டவர் திட்டமிட்டார்;
அதற்கென நூலினால் அளந்தார்;
அதை அழிப்பதை நிறுத்தத்
தம் கையை மடக்கிக் கொள்ளவில்லை;
அரணும் மதிலும் புலம்பச் செய்தார்;
அவை ஒருங்கே சரிந்து வீழ்ந்தன.


9 அவளின் வாயிற்கதவுகள் மண்ணில் புதைந்து கிடந்தன;
அதன் தாழ்களை உடைத்துச் சிதறடித்தார்;
அவளின் அரசனும் தலைவர்களும்
வேற்றினத்தாரிடையே உள்ளனர்!
திருச்சட்டம் இல்லை;
அவளின் இறைவாக்கினரும் ஆண்டவரின் காட்சி பெறவில்லை.


10 மகள் சீயோனின் பெரியோர்
தரையில் மௌனமாய் அமர்ந்துள்ளனர்;
அவர்கள் தங்கள் தலைமேல் புழுதியைத்
தூவிக் கொண்டுள்ளனர்;
சாக்கு உடை உடுத்தியுள்ளனர்;
எருசலேமின் கன்னிப் பெண்கள்
தங்கள் தலைகளைத் தரை மட்டும் தாழ்த்தியுள்ளனர்.


11 என் கண்கள் கண்ணீர் சொரிந்து சோர்ந்துள்ளன!
என் குலை நடுங்குகின்றது!
என் துயரத்தால் என் ஈரல் வெடித்துத்
தரையில் சிதறுகின்றது!
என் மக்களாகிய மகள் நசுக்கப்பட்டுள்ளாள்!
நகர் வீதிகளில் குழந்தைகளும்
மழலைகளும் மயங்கிக் கிடக்கின்றனர்!


12 அவர்கள் தங்கள் அன்னையரிடம்,
'அப்பம், திராட்சை இரசம் எங்கே?' என்று கேட்கின்றனர்!
படுகாயமுற்றோரைப்போல,
நகர் வீதிகளில் அவர்கள் மயங்கி வீழ்கின்றனர்!
தாய் மடியில் உயிர்விட்டவர்போல் ஆகின்றனர்!


13 மகளே! எருசலேம்!
உன் சார்பாக நான் என்ன சொல்வேன்?
உன்னை எதற்கு ஒப்பிடுவேன்?
மகள் சீயோனே! கன்னிப் பெண்ணே!
யாருக்கு உன்னை இணையாக்கித் தேற்றுவேன் உன்னை?
உன் காயம் கடலைப்போல் விரிந்துள்ளதே!
உன்னைக் குணமாக்க யாரால் முடியும்?


14 உன் இறைவாக்கினர் உனக்காகப்
பொய்யும் புரட்டுமான காட்சிகளைக் கண்டனர்;
நீ நாடுகடத்தப்பட இருப்பதைத் தவிர்க்குமாறு,
உன் நெறிகேடுகளை அவர்கள் உனக்கு எடுத்துச் சொல்லவில்லை;
அவர்கள் பொய்யையும் அபத்தங்களையும்
காட்சியாகக் கண்டு,
உனக்குப் பொய்வாக்கு உரைத்தனர்!


15 அவ்வழியாய்க் கடந்து செல்வோர்
உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர்!
மகள் எருசலேமை நோக்கித்
தலையை ஆட்டிச் சீழ்க்கையடித்தனர்!
"அழகின் நிறைவும் மண்ணுலகின் மகிழ்ச்சியுமாக
இருந்த மாநகர் இதுதானா?" என்றனர்.


16 உன் எதிரிகள் அனைவரும் உன்னை நோக்கிக்
கோணல்வாய் காட்டுகின்றனர்;
சீழ்க்கையடித்துப் பற்களை நறநற வென்று கடிக்கின்றனர்;
'நாம் அவளைப் பாழாக்கினோம்' என்றனர்.
'இந்நாளுக்காகவே நாம் காத்திருந்தோம்;
இப்போதுதான் நம்மால் அதைக் காணமுடிந்தது' என்றனர்.


17 ஆண்டவர் தாம் திட்டமிட்டபடியே செய்தார்;
நெடுநாள்களுக்குமுன் தாம் முன்னெச்சரிக்கை
செய்தவாறு செயல்பட்டார்;
ஈவிரக்கமின்றி இடித்துத் தள்ளினார்;
உன் எதிரிகளை மகிழ்ச்சியடையச் செய்தார்;
பகைவனின் ஆற்றலைப் பெருகச் செய்தார்.


18 அவர்களின் இதயம்
என் தலைவனை நோக்கிக் கூக்குரலிடுகின்றது;
மகள் சீயோனின் மதிலே!
இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி!
உனக்கு ஓய்வு வேண்டாம்!
கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்!


19 எழு! இரவில் முதற் சாமத்தில் குரலெழுப்பு!
உள்ளத்தில் உள்ளதை என் தலைவர் திருமுன்
தண்ணீரைப் போல் ஊற்றிவிடு!
தெருமுனையில் பசியால் மயங்கி விழும்
குழந்தைகளின் உயிருக்காக,
அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து!


20 கண்ணோக்கும் ஆண்டவரே!
எண்ணிப் பாரும்; யாருக்கு இப்படிச் செய்திருக்கின்றீர்?
பெண்கள் தங்கள் கர்ப்பத்தின் கனிகளையே,
கைக்குழந்தைகளையே, தின்ன வேண்டுமோ?
குருவும், இறைவாக்கினரும்
என் தலைவரின் திருத்தூயகத்தில் கொல்லப்படவேண்டுமோ?


21 வீதிகளின் புழுதியில் சிறியோரும்
பெரியோரும் வீழ்ந்து கிடக்கின்றனர்!
என் கன்னியரும் காளையரும்
வாளால் வீழ்த்தப்பட்டனர்!
உமது சீற்றத்தின் நாளில்
ஈவிரக்கமின்றி அவர்களைக் கொன்று குவித்தீர்!


22 திருவிழாவுக்கு அழைப்பது போல,
எப்பக்கமும் எனக்கெதிராகப் பேரச்சத்தை வரவழைத்தீர்!
ஆண்டவரது சீற்றத்தின் நாளில்
உயிர்தப்பிப் பிழைத்தவரோ எஞ்சியவரோ எவரும் இல்லை!
நான் பேணி வளர்த்தவர்களை என் எதிரி கொன்றழித்தான்!



(தொடர்ச்சி): புலம்பல்:அதிகாரங்கள் 3 முதல் 5 வரை