திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோசுவா/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

விக்கிமூலம் இலிருந்து
யோசுவா எரிகோ நகரைக் கைப்பற்றுதல் (யோசு 6:1-27). ஓவியர்: யூலியுஸ் ஷ்னோர் ஃபோன் காரல்ஸ்ஃபெல்ட் (1794-1872). செருமனி.

யோசுவா[தொகு]

அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

அதிகாரம் 19[தொகு]

சிமியோனுக்கு அளிக்கப்பட்ட பகுதி[தொகு]


1 இரண்டாவது சீட்டு சிமியோனின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்களது உரிமைச்சொத்து யூதா மக்களின் பங்கிற்கு நடுவில் அமைந்திருந்தது.
2 அவர்களுக்கு உடைமையான நகர்கள்: பேயேர்செபா, சேபா, மோலாதா,
3 அட்சர்சூவால், பாலா எட்சேம்,
4 எல்தோலகு, பெத்தூல், ஓர்மா,
5 சிக்லாகு, பெத்மர்க்கபோத்து, அட்சர்சூசா,
6 பெத்லாபாவோத்து, சாருகன் ஆக, பதின்மூன்று நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
7 அயின், ரிம்மோன், எக்தேர், ஆசான், ஆக, நான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
8 இவைகளன்றித் தெற்கே இராமாது எனப்படும் பாகலாத்பெயேர் வரை உள்ள நகர்களும் அவற்றின் சிற்றூர்கள் அனைத்தும். இதுவே சிமியோன் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்து. [1]
9 சிமியோன் மக்களின் உரிமைச்சொத்து யூதா மக்களுக்குரிய பங்கில் ஒரு பகுதி. யூதா மக்களுக்கு ஏராளமான உடைமை இருந்தது. அவர்களின் உரிமைச் சொத்தின் நடுவில் சிமியோனின் மக்கள் உரிமைச் சொத்தைப் பெற்றனர்.

செபுலோனுக்கு அளிக்கப்பட்ட பகுதி[தொகு]


10 மூன்றாவது சீட்டு செபுலோன் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்கள் உடைமையின் எல்லை சாரீதுவரை சென்றது.
11 அவர்களது எல்லை மேற்கே மரியலாவுக்கு ஏறி, தபாசேத்துக்கு வந்து யோக்னயாமுக்கு எதிரில் உள்ள ஓடையைத் தொடுகின்றது.
12 சாரீதிலிருந்து கதிரவன் உதிக்கும் கிழக்குப்பக்கம் திரும்பி கிஸ்லோத்துதாபோரையும், தாபராத்தையும் நோக்கிச் சென்று யாப்பியாமேல் ஏறுகிறது.
13 அங்கிருந்து கிழக்காகக் காத்கேப்பேரையும் இத்தகாச்சினையும் ரிம்மோனையும் கடந்து சென்று நேயா பக்கம் வளைகிறது.
14 மேலும் இவ்வெல்லை வடக்கில் அன்னாத்தோனைச் சுற்றுகிறது. இது இப்தாவேல் பள்ளத்தாக்கில் முடிவடைகிறது.
15 கற்றாத்து, நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் ஆக பன்னிரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
16 இந்நகர்களும் அவற்றின் சிற்றூர்களுமே செபுலோன் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச்சொத்து.

இசக்காருக்கு அளிக்கப்பட்ட பகுதி[தொகு]


17 நான்காவது சீட்டு இசக்காரின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.
18 அவர்களது எல்லை: இஸ்ரியேல், கெசுல்லோத்து, சூனேம்,
19 அப்பாராயிம், சியோன், அனகராத்து,
20 இரப்பீத்து, கிசியோன், எபெசு,
21 இரமேத்து, ஏன்கன்னிம், ஏன்கத்தா, பெத்-பசேசு என்பவையே.
22 அவ்வெல்லை தாபோரையும் சகட்சி மாவையும் பெத்சமேசையும் தொட்டு, யோர்தானில் முடிவடைகின்றது. ஆக, பதினாறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
23 இவை இசக்கார் மக்களின் குலத்தாருக்கு அவர்களின் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.

ஆசேருக்கு அளிக்கப்பட்ட பகுதி[தொகு]


24 ஐந்தாவது சீட்டு ஆசேர் மக்களின் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.
25 அவர்களின் எல்லை; எல்காத்து, அலீ, பெத்தேன், அக்சாபு,
26 அல்லமெலக்கு, அமாது, மிசால் என்பவை. மேற்குப்பக்கம் கர்மேலையும் சகோர் லிப்னாத்தையும் தொட்டு,
27 கிழக்குப் பக்கம் திரும்பி, பெத்தாகோன் சென்று செபுலுன், இப்தாவேல் பள்ளத்தாக்கையும், பெத்தேமக்கு நெகியேலுக்கு வடக்காகத் தொட்டு, காபூலில் இடப்பக்கம் திரும்புகின்றது.
28 எபிரோன், இரகோபு, அம்மோன், தானா, பெரிய சீதோன்வரை சென்று,
29 பிறகு இராமா பக்கம் திரும்புகின்றது. அரண்சூழ் நகரான தீர் வரை சென்று, கோசா பக்கம் திரும்பிக் கடலில் முடிவடைகிறது. மேகேபல், அக்சீபை ஒட்டிய கடலில் முடிவடைகிறது.
30 உம்மா, அபேக்கு, இரகோபு, ஆக, இருபத்திரண்டு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
31 இவையே ஆசேர் மக்கள் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்தாகிய நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.

நப்தலிக்கு அளிக்கப்பட்ட பகுதி[தொகு]


32 ஆறாவது சீட்டு நப்தலியின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.
33 அவர்களது எல்லை ஏலப்பிலிருந்து சானான்னிமிலுள்ள கருவாலி மரத்திலிருந்து, அதாமிநெகேபு, யப்னவேல், இலக்கும் வரை சென்று யோர்தானில் முடிகின்றது.
34 பிறகு அவ்வெல்லை மேற்கில் அசனோத்துதாபோர் பக்கம் திரும்புகின்றது; அங்கிருந்து உக்கோகில் வெளியேறுகின்றது. தெற்கில் செபுலோனையும், மேற்கில் ஆசேரையும் கிழக்கில் யோர்தானையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
35 அரண்சூழ் நகர்கள்: சித்திம், சேர், அம்மாத்து, இரக்காத்து, கினரேத்து,
36 அதாமா, இராமா, ஆட்சோர்,
37 கெதேசு, எதிரேயி, ஏன்ஆட்சோர்,
38 ஈரோன், மிக்தலேல், ஒரேம், பெத்தனாத்து, பெத்சமேசு. ஆக, பத்தொன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
39 இவை நப்தலியின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.

தாணுக்கு அளிக்கப்பட்ட பகுதி[தொகு]


40 ஏழாவது சீட்டு தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.
41 அவர்களது உரிமைச் சொத்தின் எல்லை: சோரா, எசுத்தாவோல், ஈர்சமேசு,
42 சாயலாபிம், அய்யலோன், இதிலா,
43 ஏலோன், திமினா, எக்ரோன்,
44 எல்தெக்கே, கிபதோன், பாகலாத்து,
45 எகூது, பெனபராக்கு, காத்ரிம்மோன்,
46 மேயர்க்கோன், இரக்கோன் ஆகிய இந்நகர்களும் யோப்பாவுக்கு எதிரே எல்லைப் பகுதியும்.
47 தாண் மக்களின் எல்லை ஒடுக்கமாக இருந்ததால், அவர்கள் புறப்பட்டுப்போய் இலசேமை முற்றுகையிட்டு வளைத்துக் கொண்டனர்; அதை வாள் முனையில் தாக்கித் தங்கள் உடைமையாக்கிக் கொண்டு அங்கு வாழ்ந்தனர். தங்கள் மூதாதையான தாணின் பெயரை ஒட்டி, இலசேமிற்குத் "தாண்" என்று பெயரிட்டார்கள். [2]
48 இந்நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்து.
49 நாட்டுக்கு எல்லை வகுத்து அவரவர்களுக்கு உரிமைச்சொத்து பிரித்துக் கொடுத்தபின், நூனின் மகன் யோசுவாவுக்கு இஸ்ரயேல் மக்கள் தங்கள் நடுவில் உரிமைச்சொத்து அளித்தனர்.
50 எப்ராயிம் மலைநாட்டில் அவர் கேட்ட நகரான திம்னத்செராவை ஆண்டவரின் கட்டளைப்படி அவருக்குக் கொடுத்தனர். அவர் அந்நகரைக் கட்டியெழுப்பி அதில் வாழ்ந்தார்.
51 இவ்வாறு, குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, இஸ்ரயேல் குலங்களின் முதுபெரும் தலைவர்கள் ஆகியோர் இவற்றை இஸ்ரயேல் மக்களின் குடும்பங்களுக்கு உரிமைச் சொத்தாகச் சீலோவில் ஆண்டவர் முன்னிலையில் சந்திப்புக் கூடார வாயிலில் திருவுளச்சீட்டுப் போட்டு உரிமையாக்கி, நாட்டின் பங்கீட்டுப் பணியை நிறைவு செய்தனர்.

குறிப்புகள்

[1] 19:2-8 = 1 குறி 4:28-33.
[2] 19:47 = நீத 18:27-29.

அதிகாரம் 20[தொகு]

அடைக்கல நகர்கள்[தொகு]


1 ஆண்டவர் யோசுவாவை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:
2 "இஸ்ரயேல் மக்களிடம் அவர்களுக்கு மோசே வழியாகக் கூறியபடி, 'அடைக்கல நகர்களை உங்களுக்கெனத் தேர்ந்துகொள்ளுங்கள்' என்று கூறுவாய்.
3 அறியாமல் தவறுதலாக ஒருவரைக் கொன்றவர் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்பி ஓடித் தஞ்சம்புக இந்நகர்கள் உங்களுக்கு அடைக்கலமாக அமையும்.
4 கொலையாளி இந்நகர்களில் ஒன்றனுள் ஓடி, நுழைவாயிலில் நின்று, அந்நகர்ப் பெரியவர்களின் காதில்படும்படியாக தம் நிலையை எடுத்துரைப்பார். அவர்கள் அவரைத் தங்கள் நகருக்குள் அழைத்துச்சென்று தங்களுடன் தங்கியிருப்பதற்கு ஓர் இடம் கொடுப்பர்.
5 இரத்தப்பழி வாங்குபவர் துரத்திவந்தால், கொலையாளியை அவர் கையில் ஒப்படைக்க மாட்டார்கள். ஏனெனில் அவர் அறியாமல்தான் மற்றவரைக் கொன்றுவிட்டார். இதற்கு முன் கொலையாளி அவரை வெறுத்ததில்லை.
6 கொலையாளி தீர்ப்புக்காக அவையின் முன் நிற்கும்வரை, அந்நாள் தலைமைக் குரு சாகும்வரை அவர் அந்நகரில் தங்குவார். அதன்பின் கொலையாளி தம் நகருக்கு எந்த நகரிலிருந்து ஓடி வந்திருந்தாரோ, அந்த நகருக்கு தம் வீட்டுக்குச் செல்வார்.".
7 தேர்ந்து கொள்ளப்பட்ட அடைக்கல நகர்கள்: நப்தலி மலைநாட்டில் கலிலேயாவில் கெதேசு எப்ராயிம்; மலைநாட்டில் செக்கேம்; யூதா மலை நாட்டில் எபிரோன் எனப்படும் கிரியத்து அர்பா;
8 யோர்தானுக்கு அப்பால் எரிகோவுக்குக் கிழக்காக ரூபனின் குலத்திற்குரிய பாலைநிலச் சமவெளியில் பெட்சேர்; காத்துக் குலத்திற்குரிய கிலயாதில் இராமோத்து; மனாசேயின் குலத்திற்குரிய பாசானில் கோலான்;
9 இஸ்ரயேலர் அனைவருக்கும் அவர்கள் நடுவில் வாழும் வேற்றினத்தாருக்கும் மேற்குறிப்பிட்டவை அடைக்கல நகர்களாக விளங்கின. அறியாமல் பிறரைக் கொன்ற எவரும் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்புவதற்கு இவற்றில் அடைக்கலம் புகுவார். மக்களவை அவருக்குத் தீர்ப்பு வழங்கும் வரை அவர் கொல்லப்படுவதில்லை. [*]

குறிப்பு

[*] 20:1-9 = எண் 35:6:32; இச 4:41-43; 19:1-13.

(தொடர்ச்சி): யோசுவா: அதிகாரங்கள் 21 முதல் 22 வரை