திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/ரூத்து (ரூத்)/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
ரூத்து போவாசைச் சந்திக்கிறார். ஓவியர்: ஜூலியுஸ் ஷ்னோர் ஃபோன் காரல்ஸ்ஃபெல்ட் (1794-1872). காப்பிடம்: இலண்டன்.

ரூத்து (Ruth)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

ஆண்டவரின் ஆசி[தொகு]


1 ஒரு நாள் மாமியாராகிய நகோமி ரூத்திடம், "நீ இல்வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் இருக்குமாறு செய்வது என் கடமை அல்லவா?
2 போவாசு நமக்கு உறவினர். அவருடைய பணிப்பெண்களோடுதான் நீ இத்தனை நாள்களும் இருந்தாய். நான் சொல்வதைக் கவனமாய்க் கேள். இன்றிரவு அவர் களத்தில் வாற்கோதுமையைத் தூற்றிக் கொண்டிருப்பார்.
3 நீ குளித்துவிட்டு, எண்ணெய் தடவிக் கொண்டு, உன்னிடமுள்ள ஆடைகளில் மிகவும் நல்லதை உடுத்திக் கொள்; பின்னர் அவருடைய களத்துக்குப் போ. ஆனால் அவர் உண்டு குடிக்கும் வரை, அவர் கண்ணில் படாமலிரு; அவர் படுக்கும் இடத்தைப் பார்த்து வைத்துக் கொள்.
4 அவர் உறங்கியதும், நீ சென்று அவர் கால்களை மூடியிருக்கும் போர்வையை விலக்கிவிட்டு, அங்கேயே படுத்துக் கொள். அதற்கு மேல் நீ செய்ய வேண்டியதை அவரே உன்னிடம் சொல்வார்" என்றார்.
5 ரூத்து, "நீர் சொல்லித்தந்த அனைத்தையும் நான் செய்கிறேன்" என்றார்.


6 அவ்வாறே ரூத்து அந்தக் களத்துக்குச் சென்று, தம் மாமியார் சொல்லித் தந்த அனைத்தையும் செய்தார். போவாசு உண்டு குடித்து மகிழ்ச்சியாய் இருந்தார்.
7 பிறகு, அவர் தானியக் குவியல் ஒன்றின் அருகே சென்று உறங்குவதற்காகப் படுத்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து ரூத்து ஓசையின்றி அங்கே சென்று அவர் கால்களை மூடியிருந்த போர்வையை விலக்கிவிட்டுப் படுத்துக் கொண்டார்.
8 நள்ளிரவில் திடீரென்று போவாசு விழித்துக் கொண்டார்; தலை உயர்த்திப் பார்க்கையில் தம் காலருகில் ஒரு பெண் படுத்துக்கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டார். உடனே அவர், "யார் நீ?" என்று கேட்க, அவர், "நான் தான் ஐயா! ரூத்து, உம்முடைய அடியாள். நீரே என்னைக் காப்பாற்றும் கடமையுள்ள என் முறைஉறவினர். அந்த முறைப்படி என்னை உமது போர்வையால் மூடும்" என்றார்.
9 அதற்கு அவர் "என் மகளே, ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! நீ இது வரை காட்டிய குடும்பப் பற்றை விட இப்போது காட்டும் குடும்பப் பற்றே மேலானது என்பேன்.
10 ஏனெனில், பணமுள்ள ஓர் இளைஞனை நீ நாடவில்லை; ஏழையாயினும் இளைஞனே வரவேண்டும் என்று நீ கேட்கவில்லை.
11 என் மகளே, கவலைப்படாதே! என் உறவின் முறையினர் அனைவருக்கும் நீ எவ்வளவு நல்லவள் என்பது தெரியும். நீ கேட்பது அனைத்தையும் நான் செய்து முடிப்பேன்.
12 நான் உன்னைக் காப்பாற்றும் கடமையுள்ள உன்னுடைய முறைஉறவினன் என்பது உண்மைதான். எனினும், என்னைவிட இன்னும் நெருங்கிய முறைஉறவினர் ஒருவர் உனக்கு இருக்கிறார். [*]
13 இந்த இரவு கழியும்வரை நீ இங்கேயே இரு. காலையில் அவர் உன்னுடைய முறைஉறவினராகத் தம் கடமையை ஏற்றுக் கொள்ள முன்வருவாரானால் நல்லது. அவர் ஏற்றுக் கொள்ளாவிடில், நானே அக்கடமையை ஏற்றுக்கொள்வேன். வாழும் ஆண்டவர் மேல் இதை ஆணையிட்டுக் கூறுகிறேன். பொழுது புலரும்வரை இங்கேயே படுத்திரு" என்றார்.


14 அவ்வாறே ரூத்து பொழுது புலரும்வரை அவர் அருகே படுத்திருந்தார். ஒரு பெண் களத்திற்கு வந்திருந்தது யாருக்கும் தெரியக்கூடாது என்று போவாசு ஏற்கெனவே அவரிடம் சொல்லியிருந்தார். அதற்கிணங்க, ஆள் அடையாளம் கண்டுகொள்ள இயலாத வைகறைப் பொழுதிலேயே ரூத்து எழுந்து விட்டார்.
15 போவாசு அவரிடம், "உன் போர்வையை விரித்துப்பிடி" என்றார். அவரும் அவ்வாறே செய்தார். அவர் ஆறு மரக்கால் எடையுள்ள வாற்கோதுமையை அதில் கொட்டி, அதை அவர் எடுத்துப் போகுமாறு கொடுத்தார்.
16 ரூத்து மாமியாரிடம் வந்ததும், நகோமி, "மகளே, என்ன நடந்தது?" என்று கேட்டார். போவாசு தமக்குச் செய்ததையெல்லாம் ரூத்து கூறினார்.
17 மேலும் அவர், "நான் உம்மிடம் வெறுங்கையோடு வரக்கூடாது என்று அவர் ஆறு மரக்கால் வாற்கோதுமையும் கொடுத்தார்" என்றார்.
18 நகோமி அவரிடம், "மகளே, இது எப்படி முடியும் என்பதை அறியும்வரை காத்திரு. அவர் காலந்தாழ்த்தமாட்டார்; இன்றே இதற்கு நல்லதொரு முடிவு காண்பார்" என்றார்.

குறிப்பு

[*] 3:12 = ரூத் 2:20.

அதிகாரம் 4[தொகு]

கைம்பெண்ணின் மறுமணம்[தொகு]


1 இதற்கிடையில், போவாசு பொது மன்றம் கூடும் நகர வாயிலுக்குச் சென்று அங்கே அமர்ந்து கொண்டார். போவாசு முன்பு குறிப்பிட்ட எலிமலேக்கின் முறைஉறவினர் அவ்வழியாக வந்தார். போவாசு அவரைப் பெயர் சொல்லி அழைத்து, "இங்கே வந்து சற்று உட்காரும்" என்றார். அவரும் அவ்வாறே அருகில் வந்து உட்கார்ந்தார்.
2 பிறகு போவாசு ஊர்ப்பெரியோருள் பத்துப் பேரை வரவழைத்து, "இங்கே சற்று உட்காருங்கள்" என்றார்.
3 அவர்கள் உட்கார்ந்தவுடன் போவாசு அந்த உறவினரை நோக்கி, "நம் நெருங்கிய உறவினரான எலிமலேக்கிற்குச் சொந்தமான துண்டு நிலம் ஒன்று இருப்பது உமக்கு தெரியும் அல்லவா? மோவாபு நாட்டிலிருந்து திரும்பி வந்திருக்கும் நகோமி இப்போது அதை விற்கப் போகிறார்.
4 இதை உம் காதில் போட்டு வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இங்கு அமர்ந்திருப்பவர் முன்னிலையிலும் என் உறவின்முறைப் பெரியோர் முன்னிலையிலும் அந்த நிலத்தை நீர் வாங்கிக் கொள்ளும்; விருப்பமில்லையெனில் சொல்லிவிடும். ஏனெனில் அதை மீட்கும் உரிமை முதலில் உமக்கும் உமக்குப் பின் எனக்கும் உண்டு; வேறெவர்க்கும் இல்லை" என்றார். அதற்கு அவர், "சரி, வேண்டுமானால் வாங்கிக் கொள்கிறேன்" என்றார்.
5 போவாசு அவரிடம், "ஆனால் நகோமியிடமிருந்து [1] இந்த நிலத்தை நீர் வாங்கும் நாளில், இறந்தவனின் மனைவியான மோவாபியப் பெண் ரூத்தை உம் மனைவியாக ஏற்றுக்கொள்கின்றீர் என்பதைத் தெரிந்து கொள்ளும். இறந்துபோனவருக்கு வழிமரபு தோன்றுவதற்காகவும் அவரது குடும்பச் சொத்து அவர் பெயரிலேயே தொடர்ந்து இருப்பதற்காகவும் நீர் இதைச் செய்ய வேண்டும்" என்றார்.
6 அவரோ, "என்னால் அந்த நிலத்தை வாங்க இயலாது. ஏனெனில் இதனால், என் குடும்பத்திற்குரிய உரிமைச் சொத்து குறைந்து போகும். நீரே அந்த உரிமையை எடுத்துக் கொள்ளும். என்னால் நிலத்தை வாங்கவே இயலாது" என்றார்.


7 இஸ்ரயேலரிடையே பண்டைக் காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நிலவிற்பனை அல்லது கொடுக்கல் வாங்கல் நடைபெறும்போது எடுக்கும் முடிவை உறுதிப்படுத்துவதற்காக, ஒருவர் தம் காலணியைக் கழற்றி மற்றவரிடம் கொடுத்துவிடுவார். எடுக்கப்பட்ட முடிவை உறுதிப்படுத்தும் முறை இதுவே.
8 அவ்வாறே அந்த முறை உறவினர் போவாசிடம், "நீரே வாங்கிக்கொள்ளும்" என்று சொன்னபோது, அவர் தம் காலணியைக் கழற்றி அவரிடம் கொடுத்தார். [2]
9 அதன்பின், போவாசு அங்கிருந்த பெரியோரையும் மற்றெல்லாரையும் நோக்கி, "நான் எலிமலேக்கு, கிலியோன், மக்லோன் ஆகியோருக்கு உரிமையான அனைத்தையும் நகோமியிடமிருந்து வாங்கி விட்டேன்; இதற்கு இன்று நீங்களே சாட்சி.


10 மேலும், மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபியப் பெண் ரூத்தை என் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். இறந்தவரின் உரிமைச் சொத்து அவர் பெயரிலேயே தொடர்ந்து இருக்கவும் அப்பெயர் அவருடைய உறவின்முறையிலும் ஊரிலும் நீடித்திருக்கவும் இதைச் செய்கிறேன். இதற்கும் நீங்கள் இன்று சாட்சி" என்றார். [3]
11 அதற்கு நகர வாயிலில் இருந்த பெரியோரும் மற்றெல்லாரும், "ஆம்; நாங்கள் சாட்சிகள். இஸ்ரயேலின் குடும்பம் பெருகச் செய்த ராகேல் லேயாள் இருவரைப் போல - உமது இல்லம் புகுந்திடும் இந்தப் பெண்ணும் இருக்கும் வண்ணம் ஆண்டவர் அருள்க! எப்ராத்தில் வளமுடன் நீர் வாழ்க! பெத்லகேமில் புகழுடன் நீர் திகழ்க! [4]
12 ஆண்டவர் இந்தப் பெண் வழியாக அருளும் பிள்ளைகளால் உமது குடும்பம் யூதா தாமார் மகனாம் பெரேட்சு குடும்பம் போன்று விளங்குவதாக!" என்று வாழ்த்தினர். [5]


13 இவ்வாறு போவாசு தாம் சொன்னபடியே ரூத்தைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவரை மணந்து கொண்டார். அவர்கள் கூடி வாழ்ந்த போது, அவர் கருத்தரிக்க ஆண்டவர் அருள்கூர்ந்தார். ரூத்து ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார்.


14 ஊர்ப் பெண்கள் நகோமியைப் பார்த்து, "ஆண்டவர் திருப்பெயர் போற்றி! போற்றி! உன்னைக் காக்கும் பொறுப்பினை உடையான் ஒருவனை அவர்தாம் அருளியுள்ளாரே; இஸ்ரயேலில் அவனது பெயரும் புகழுடன் ஓங்கித் திகழுவதாக!
15 புதுவாழ்வுனக்கு அன்னவன் தருவான்; முதுமையில் உனக்கு அன்னமும் அளிப்பான்; உன்பால் கொண்ட அன்பால், உனக்கு மைந்தர் எழுவரின் மேலாய் விளங்கும், மருமகள் அவனை ஈன்றவள் அன்றோ!" என்று வாழ்த்தினார்கள்.


16 நகோமி குழந்தையைக் கையில் எடுத்து மார்போடணைத்துக் கொண்டார். அவரே, அதைப் பேணி வளர்க்கும் தாயானார்.
17 சுற்றுப்புறப் பெண்கள், "நகோமிக்கு ஒரு மகன் பிறந்துள்ளான்" என்று சொல்லி, அவனுக்கு 'ஓபேது' என்று பெயரிட்டார்கள், அவனே தாவீதின் தந்தையான ஈசாயின் தந்தை.
18 பெரேட்சின் வழித்தோன்றல்களின் அட்டவணை இதுவே: பெரேட்சுக்கு எட்சரோன் பிறந்தார்.
19 எட்சரோனுக்கு இராம் பிறந்தார்; இராமுக்கு அம்மினதாபு பிறந்தார்;
20 அம்மினதாபுக்கு நகுசோன் பிறந்தார்; நகுசோனுக்குச் சல்மோன் பிறந்தார்.
21 சல்மோனுக்குப் போவாசு பிறந்தார்; போவாசுக்கு ஓபேது பிறந்தார்.
22 ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார். ஈசாய்க்குத் தாவீது பிறந்தார்.

குறிப்புகள்

[1] 4:5 'நகோமியிடமிருந்தும் ரூத்திடமிருந்தும்' என்பது எபிரேய பாடம்.
[2] 4:7-8 = இச 25:9.
[3] 4:10 = இச 25:5-6.
[4] 4:11 = தொநூ 29:31.
[5] 4:12 = தொநூ 38:27-30.


(ரூத்து] நிறைவுற்றது)


(தொடர்ச்சி): சாமுவேல் - முதல் நூல்:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை