திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/உரோமையர்/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

விக்கிமூலம் இலிருந்து
"நான் உங்களிடம் வரப் பலமுறை நினைத்தும் அது தடைப்பட்டது. ஆனால் இப்பொழுது இந்தப் பகுதிகளில் எனக்கு இனி வேலையில்லை. மேலும் நான் ஸ்பெயின் நாட்டுக்குப் போகும்போது உங்களைக் காண வரவேண்டும் என்று பல ஆண்டுகளாகவே ஏங்கிக் கொண்டிருக்கிறேன். போகும் வழியில் உங்களைக் கண்டு, சில நாள்களேனும் உங்களோடு தங்கி மகிழ்ந்த பின்னர் என்னை அங்கிருந்து நீங்கள் வழியனுப்பி வைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். எனினும் தற்பொழுது இறைமக்களுக்குச் செய்யப்படவேண்டிய பொருளுதவியை முன்னிட்டு எருசலேமுக்குப் புறப்படுகிறேன். எருசலேமில் வாழும் ஏழை இறைமக்களுக்கு சிறிது பொருளுதவி செய்ய மாசிதோனியா, அக்காயா மாநிலத்தார் முன்வந்துள்ளனர்... எனவே, தண்டல் செய்த தொகையை நானே அவர்களிடம் பொறுப்பாய் ஒப்படைத்துவிட்டு, என் வேலை முடிந்த பின்னர் உங்கள் ஊரின் வழியாக ஸ்பெயினுக்குப் போவேன். அப்போது, கிறிஸ்துவின் நிறைவான அருளாசியோடு உங்களிடம் வருவேன் என்பது உறுதி."- உரோமையர் 15:22-26,28-29

உரோமையர் (Romans)[தொகு]

அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

அதிகாரம் 15[தொகு]

பிறருக்கு உகந்ததையே தேடுங்கள்[தொகு]


1 மன வலிமை கொண்டவர்களாகிய நாம்
வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்;
நமக்கு உகந்ததையே தேடலாகாது.
2 அடுத்தவருடைய நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு
அவர்களுக்கு உகந்தவர்களாக வாழுங்கள். [1]
3 கிறிஸ்துவும் தமக்கு உகந்ததைத் தேடவில்லை.


"உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள்
என் மீது விழுந்தன"


என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! [2]
4 முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும்
நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன.
மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும்
நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது.
5 கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள்
ஒரே மனத்தினராய் இருக்குமாறு
மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள்
உங்களுக்கு அருள்புரிவாராக!
6 இவ்வாறு நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு,
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை
ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள்.

நற்செய்தி யூதருக்கும் பிற இனத்தார்க்கும் உரியது[தொகு]


7 ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல
நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.
அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள்.
என் கருத்து இதுவே.
8 கடவுள் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுமாறு
கிறிஸ்து விருத்தசேதனம் செய்து கொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார்.
மூதாதையருக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தவும்,
9 பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து
அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார்.
ஆகவே,


"பிறஇனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்;
உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்"


என இதைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளது. [3]
10 மேலும்,


"வேற்றினங்களே,
ஆண்டவரின் மக்களோடு மகிழுங்கள்"


என்றும் [4]


11 "பிற இனத்தாரே, நீங்கள் அனைவரும்


ஆண்டவரைப் போற்றுங்கள்;
மக்களினத்தாரே


நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்"


என்றும் எழுதியுள்ளது அல்லவா! [5]
12 இன்னும்,


"ஈசாயின் குலக்கொழுந்து ஒருவர் வருவார்;


மக்களினங்களை ஆளும் தலைவராய் அவர் தோன்றுவார்;


மக்களினங்கள் அவரையே எதிர்நேக்கி இருப்பர்"


என்று எசாயா கூறுகிறார். [6]
13 எதிர்நோக்கைத் தரும் கடவுள்,
நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும்,
அமைதியாலும் உங்களை நிரப்புவாராக!
அவ்வாறு தூய ஆவியின் வல்லமையால்
நீங்கள் இன்னும் மிகுதியான எதிர்நோக்குடன் வாழ அருள்புரிவாராக.

7. முடிவுரையும் வாழ்த்தும்[தொகு]

பவுல் பொறுப்பேற்ற பணி[தொகு]


14 என் சகோதர சகோதரிகளே,
நீங்கள் நன்னயம் நிறைந்தவர்களாயும்,
எல்லா அறிவும் நிரம்பப் பெற்றவர்களாயும்,
ஒருவர் மற்றவரை அறிவுறுத்தக் கூடியவர்களாயும் இருக்கிறீர்கள் என
நான் உறுதியாக நம்புகிறேன்.
15 ஆயினும் உங்களுக்கு நினைவூட்டும் வகையில்
சிலவற்றை இக்கடிதத்தில் மிகத் துணிவோடு எழுதியுள்ளேன்.
நான் கடவுளின் அருளைப் பெற்றவன் என்பதால் தான் அவ்வாறு எழுதினேன்.
16 அந்த அருள்தான் என்னைப் பிற இனத்தாருக்குப் பணிசெய்யக்
கிறிஸ்து இயேசுவின் ஊழியனாக்கிற்று.
பிற இனத்தார் தூய ஆவியால் அர்ப்பணிக்கப்பட்ட,
கடவுளுக்கு உகந்த காணிக்கையாகும்படி
அவர்களுக்கு கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி.
17 ஆகையால், கடவுளுக்காகச் செய்யும் இந்தப் பணியை முன்னிட்டு,
கிறிஸ்து இயேசுவுக்குரியவனாகிய நான் பெருமை பாராட்டிக் கொள்ள இடமுண்டு.
18 பிற இனத்தார் தமக்குக் கீழ்ப்படியும் பொருட்டுக்
கிறிஸ்து என் வழியாய்ச் சொல்லாலும் செயலாலும்,
அரும் அடையாளங்கள், அருஞ் செயல்களின் வல்லமையாலும்,
கடவுளின் ஆவியின் வல்லமையாலும்
செய்து முடித்தவற்றைத் தவிர
வேறெதைப் பற்றியும் பேச நான் துணியமாட்டேன்.
19 இவ்வாறு, எருசலேம் தொடங்கி இல்லிரிக்கம் மாநிலம் வரை
எங்கும் சுற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியை முடித்துவிட்டேன்.
20 கிறிஸ்துவின் பெயரைக் கேள்விப்படாத இடங்களில் மட்டும்
நற்செய்தி அறிவிப்பதே என நோக்கமாய் இருந்தது.
ஏனெனில் வேறொருவர் இட்ட அடித்தளத்தின்மேல்
கட்டி எழுப்ப நான் விரும்பவில்லை.
21 ஆனால்,


"தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்;
தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்துகொள்வர்"


என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! [7]

பவுலின் பயணத் திட்டம்[தொகு]


22 எனவேதான் நான் உங்களிடம் வரப் பலமுறை நினைத்தும் அது தடைப்பட்டது. [8]
23-24 ஆனால் இப்பொழுது இந்தப் பகுதிகளில் எனக்கு இனி வேலையில்லை.
மேலும் நான் ஸ்பெயின் நாட்டுக்குப் போகும்போது
உங்களைக் காண வரவேண்டும் என்று
பல ஆண்டுகளாகவே ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.
போகும் வழியில் உங்களைக் கண்டு,
சில நாள்களேனும் உங்களோடு தங்கி மகிழ்ந்த பின்னர்
என்னை அங்கிருந்து நீங்கள் வழியனுப்பி வைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
25 எனினும் தற்பொழுது இறைமக்களுக்குச் செய்யப்படவேண்டிய
பொருளுதவியை முன்னிட்டு எருசலேமுக்குப் புறப்படுகிறேன்.
26 எருசலேமில் வாழும் ஏழை இறைமக்களுக்கு
சிறிது பொருளுதவி செய்ய மாசிதோனியா,
அக்காயா மாநிலத்தார் முன்வந்துள்ளனர். [9]
27 ஆம், மனமுவந்து முன்வந்துள்ளனர்.
எருசலேமில் வாழும் இறைமக்களுக்கு உண்மையில்
பிற இனத்தார் கடன்பட்டவர்களே.
எவ்வாறெனில், ஆவிக்குரிய கொடைகளில் இவர்கள்
அவர்களின் பங்காளிகள் ஆயினர்;
அதற்கேற்ப உடலைச் சார்ந்த தேவைகளில்
அவர்களுக்கு ஊழியம் செய்ய இவர்கள் கடமைப்பட்டவர்கள் அல்லவா? [10]
28 எனவே, தண்டல் செய்த தொகையை
நானே அவர்களிடம் பொறுப்பாய் ஒப்படைத்துவிட்டு,
என் வேலை முடிந்த பின்னர்
உங்கள் ஊரின் வழியாக ஸ்பெயினுக்குப் போவேன்.
29 அப்போது, கிறிஸ்துவின் நிறைவான அருளாசியோடு
உங்களிடம் வருவேன் என்பது உறுதி.


30 சகோதர சகோதரிகளே,
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை முன்னிட்டும்
தூய ஆவி நம் உள்ளத்தில் பொழிந்துள்ள அன்பை முன்னிட்டும்
நான் உங்களைக் கேட்டுக்கொள்வது:
எனக்காகக் கடவுளிடம் வேண்டி,
என் போராட்டத்தில் எனக்குத் துணை செய்யுங்கள். [11]
31 யூதேயாவில் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாதோரிடமிருந்து
என்னைக் காப்பாற்றுமாறும்
நான் எருசலேமில் செய்யப்போகும் பொருளுதவி
இறைமக்களுக்கு உகந்ததாய் இருக்குமாறும் வேண்டுங்கள்.
32 இவ்வாறு, கடவுளின் திருவுளத்தால்
மகிழ்ச்சியுடன் நான் உங்களிடம் வந்து ஓய்வு எடுக்க இயலுமாறு
எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
33 அமைதி தரும் கடவுள் உங்கள் அனைவரோடும் இருப்பாராக! ஆமென்.


குறிப்புகள்

[1] 15:1,2 = கலா 6:2.
[2] 15:3 = திபா 69:9.
[3] 15:9 = 2 சாமு 22:50; திபா 18:49.
[4] 15:10 = இச 32:43.
[5] 15:11 = திபா 117:1.
[6] 15:12 = எசா 11:10.
[7] 15:21 = எசா 52:15.
[8] 15:22 = உரோ 1:13.
[9] 15:25,26 = 1 கொரி 16:1-4.
[10] 15:27 = 1 கொரி 9:11; கலா 6:6.
[11] 15:30 = 2 கொரி 1:11; எபே 6:19; கொலோ 4:3; 1 தெச 5:25.

அதிகாரம் 16[தொகு]

வாழ்த்துகள்[தொகு]


1 நம் சகோதரியாகிய பெயிபாவைக் குறித்து நற்சான்று அளிக்க விரும்புகிறேன்;
இவர் கெங்கிரேயாவில் இருக்கும் சபையில் திருத்தொண்டராய் இருக்கிறார்.
2 இறை மக்களுக்கு ஏற்றவாறு ஆண்டவரின் பெயரால் அவரை வரவேற்று,
அவருக்குத் தேவையான உதவி செய்யுங்கள்.
ஏனெனில் அவரும் பலருக்கு உதவி செய்திருக்கிறார்;
எனக்கும் உதவி செய்திருக்கிறார்.


3 கிறிஸ்து இயேசுவுக்காக என்னோடு சேர்ந்து உழைக்கின்ற
பிரிஸ்காவுக்கும் அக்கிலாவுக்கும் என் வாழ்த்து. [1]
4 அவர்கள் என் உயிரைக் காக்கத் தலைகொடுக்கவும் முன்வந்தார்கள்.
அவர்களுக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் மட்டும் அல்ல, பிற இனத்துத் திருச்சபைகள் அனைத்துமே
நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன.
5அ அவர்கள் வீட்டில் கூடும் திருச்சபைக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.


5ஆ என் அன்பார்ந்த எப்பைனத்துக்கும் வாழ்த்துக் கூறுங்கள்.
ஆசியாவில் [2] கிறிஸ்துவை முதன் முதல் ஏற்றுக் கொண்டவர் இவரே.
6 உங்களுக்காக பாடுபட்டு உழைத்த மரியாவுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள்.
7 என் உறவினர்களும் உடன் கைதிகளுமான அந்திரோனிக்கு,
யூனியா ஆகியவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்;
திருத்தூதர்களுள் இவர்கள் பெயர்பெற்றவர்கள்;
இவர்கள் எனக்குமுன் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.


8 ஆண்டவருக்கு உரியவரான என் அன்பார்ந்த அம்பிலியாத்துக்கு வாழ்த்துக்கள்.
9 கிறிஸ்துவுக்காக உழைக்கும் என் உடன் உழைப்பாளரான உர்பானுக்கும்
என் அன்பார்ந்த ஸ்தாக்கிக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.
10 அப்பெல்லுக்கும் என் வாழ்த்து;
இவர் தகைமை வாய்ந்த ஒரு கிறிஸ்தவர்.
அரிஸ்தோபுல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள்.
11 என் உறவினரான எரோதியோனுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள்.
நர்க்கிசு குடும்பத்தில் உள்ள ஆண்டவருடைய அடியார்களுக்கு என் வாழ்த்து.
12 ஆண்டவருக்காக உழைக்கும் திரிபேனாவுக்கும் திரிபோசாவுக்கும் என் வாழ்த்து;
அன்பார்ந்த பெர்சிக்கும் என் வாழ்த்துகள்.
இவரும் ஆண்டவருக்காக மிகவும் பாடுபட்டு உழைத்தார்.
13 ஆண்டவர் பணிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரூபுக்கும்
அவர் அன்னைக்கும் வாழ்த்துக் கூறுங்கள்.
அவருடைய அன்னை எனக்கும் அன்னை போன்றவர். [3]
14 அசிங்கிரித்து, பிலகோன், எர்மசு, பத்திரொபா,
எர்மா ஆகியோருக்கும்
அவர்களோடு இருக்கும் சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக் கூறுங்கள்.
15 பிலலோகு, யூலியா, நேரேயு,
அவருடைய சகோதரி ஒலிம்பா ஆகியோருக்கும்
அவர்களோடு இருக்கும் இறைமக்கள் எல்லாருக்கும் என் வாழ்த்துகள்.


16 தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள்.
கிறிஸ்துவின் எல்லாச் சபைகளும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றன.


17 சகோதர சகோதரிகளே, நான் உங்களிடம் வேண்டுவது:
நீங்கள் கற்றுக்கொண்ட போதனையை மீறிப்
பிரிவினைகளையும் தடைகளையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்துக்
கவனமாய் இருங்கள். அவர்களை விட்டு விலகுங்கள்.
18 ஏனெனில், இத்தகையோர் நம் ஆண்டவர் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யவில்லை;
தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்கிறார்கள்.
இவர்கள் இன்சொல் பேசி முகமன் கூறிக்
கபடற்ற உள்ளத்தினரை ஏமாற்றுகிறார்கள்.
19 நீங்கள் நற்செய்தியைப் பின்பற்றி வாழ்கிறீர்கள் என்பது
எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது.
எனவே உங்களைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
எனினும், நீங்கள் நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாயும்,
தீமை என்றால் என்ன என்றே தெரியாத கபடற்றவர்களாயும்
இருக்க வேண்டும் என விழைகிறேன்.
20 அமைதி தரும் கடவுள்
சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப் போடுவார்.
நம் ஆண்டவர் இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக!
21 என் உடனுழைப்பாளரான திமொத்தேயுவும்,
என் உறவினர்களான லூகியு, யாசோன்,
சோசிபத்தர் ஆகியோரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். [4]
22 இந்தத் திருமுகத்தை எழுதிக் கொடுத்த தெர்த்தியுவாகிய நான்
ஆண்டவருக்கு உரியவன் என்னும் முறையில் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறேன்.
23 நான் தங்குவதற்கும் சபையினர் அனைவரும் ஒன்று கூடுவதற்கும்
தம் வீட்டில் இடமளிக்கிற காயு உங்களுக்கு வாழ்த்துச் சொல்லுகிறார்.
நகரத்தின் பொருளாளரான எரஸ்தும்
நம் சகோதரனாகிய குவர்த்தும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள். [5]
[24] [6]

கடவுளுக்குப் புகழுரை[தொகு]


25 இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக்
கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர்.
ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி
இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
26 இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது.
என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி
எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது.
இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர்.
27 ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே
இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.


குறிப்புகள்

[1] 16:3 = திப 18:2.
[2] 16:5 - ஆசியா என்பது உரோமை மாநிலங்களுள் ஒன்று.
இது இன்றைய துருக்கி நாட்டின் ஒரு பகுதியாகும்.
[3] 16:13 = மாற் 15:21.
[4] 16:21 = திப 16:1.
[5] 16:23 = திப 19:29; 1 கொரி 1:14; 2 திமொ 4:20.
[6] [16:24] - "நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக! ஆமென்!"
என்னும் வசனம் முக்கியமல்லாத சில கையெழுத்துப் படிகளில் மட்டுமே காணப்படுகிறது.


(பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் நிறைவுற்றது)

(தொடர்ச்சி):கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை