திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆனால் கேபா அந்தியோக்கியாவுக்கு வந்தபோது அவர் நடந்து கொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன்...நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், 'நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிறஇனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க பிற இனத்தார் யூதமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?' என்று கேட்டேன்." (கலாத்தியர் 2:11,14)

கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் (Galatians) [1][தொகு]

முன்னுரை

உரோமையருக்கு எழுதிய திருமுகம் போல் நம்பிக்கையினால் ஏற்புடைமை ஆதல் பற்றிச் சுருக்கமாகப் பேசும் இன்னொரு திருமுகம் கலாத்தியர் திருமுகமாகும். உரோமையர் திருமுகத்தை இத்திருமுகத்தின் விரிவுரையாகப் பலர் பார்க்கின்றனர். குறிப்பாக உரோ 1 - 8 அதிகாரங்கள் கலா 2:15-21 பகுதியின் விரிவுரையாக அமைகின்றன.

சூழலும் நோக்கமும்[தொகு]

கலாத்திய சபையில் யூதமயமாக்கும் கிறிஸ்தவர்கள் சிலர் புகுந்து பவுல் எடுத்துரைத்த போதனைக்கு எதிராகப் பேசினர். அவர்கள் திருச்சட்டத்தினால்தான் மீட்புப் பெற இயலும் என வாதிட்டனர்; பிற இனத்துக் கிறிஸ்தவர்கள் மோசேயின் சட்டமாகிய விருத்தசேதனம் போன்றவற்றைக் கடைப்பிடித்தாக வேண்டும் என்றனர். வேற்றினத்துக் கிறிஸ்தவர்களிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதற்காக சில சட்ட எதிர்பார்ப்புகளைப் பவுல் நீக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் யூதமயமாக்கும் கிறிஸ்தவர்களின் போதனையை முறியடிக்கக் கடுமையான முறையில் பவுல் இத்திருமுகத்தை எழுதுகிறார். இதனைக் கி.பி. 52-53 ஆண்டுகளில் எழுதியிருக்கலாம் என்பது பொதுவான கருத்து. எனினும் ஒரு சிலர் இத்திருமுகம் எருசலேம் சங்கத்துக்கு முன்பே, அதாவது கி.பி. 49க்கு முன்பே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

உள்ளடக்கம்[தொகு]

இத்திருமுகத்தின் முதற்பகுதியில் பவுல் தம்மைக் குறித்துப் பேசுகிறார். தாம் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர் என்பதை நிலைநாட்டப் பார்க்கிறார்; தம் திருத்தூதுப் பணிக்கான அழைப்பு எந்த மனித அதிகாரத்திடமிருந்தும் வரவில்லை, மாறாகக் கடவுளிடமிருந்தே வந்நது என்கிறார்; யூதரல்லாதார்க்கும் நற்செய்தி போதிப்பதே தம்முடைய பணி என அடித்துச் சொல்கிறார் (1-2).

நம்பிக்கையால் மட்டுமே நாம் கடவுளுக்கு ஏறுடையவர்களாகிறோம் என்கிறார் பவுல்; கிறிஸ்தவர் தூய்மையாக்கப்படுவது சட்டம் சார்பான செயல்களால் அல்ல, மாறாக நம்பிக்கையால் விளையும் கீழ்ப்படிதலால் என்கிறார்; கிறிஸ்துவைச் சார்ந்தோர் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் என்பதை அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார் (3-4).

கிறிஸ்தவ வாழ்வு கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையால் விளையும் அன்பின் அடிப்படையில் உள்ளது என அவர் விளக்குகிறார் (5-6).

கலாத்தியர்[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை (வாழ்த்தும், நற்செய்தியும்) 1:1-10 346
2. நிகழ்ச்சிப் பகுதி:

பவுல் திருத்தூதராக அழைப்புப் பெறல்,
எருசலேம் சங்கம்,
பவுல் அறிவிக்கும் நீதி

1:11 - 2:21 346 - 348
3. கொள்கைப் பகுதி:

நம்பிக்கையால் இறைவனுக்கு ஏற்புடைமை ஆதல்

3:1 - 4:31 348 - 351
4. அறிவுரைப் பகுதி:

கிறிஸ்தவரின் உரிமை வாழ்வு,
நம்பிக்கை ஆகியவற்றை வாழ்ந்து காட்டுதல்

5:1 - 6:10 352 - 353
5. முடிவுரை 6:11-18 353 - 354

கலாத்தியர் (Galatians)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

1. முன்னுரை[தொகு]

வாழ்த்து[தொகு]


1-2 கலாத்திய மாநிலத்தில் உள்ள திருச்சபைகளுக்கு,
எந்த ஒரு தனி மனிதராலோ மனித அதிகாரத்தாலோ ஏற்படுத்தப்படாமல்
இயேசு கிறிஸ்துவாலும்
இறந்த அவரை உயிர்த்தெழச் செய்த தந்தையாம் கடவுளாலும்
திருத்தூதனாக ஏற்படுத்தப்பட்ட பவுலாகிய நானும்
என்னுடன் இருக்கும் சகோதரர் அனைவரும் எழுதுவது:


3 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும்
உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
4 இவரே நம் தந்தையாம் கடவுளின் திருவுளத்திற்கேற்ப
இன்றைய பொல்லாத காலத்தினின்று நம்மை விடுவிக்குமாறு
நம்முடைய பாவங்களின் பொருட்டுத் தம்மையே ஒப்புவித்தார். [1]
5 தந்தையாம் கடவுளுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

நற்செய்தி ஒன்றே[தொகு]


6 கிறிஸ்துவின் பொருட்டு அருள் கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு
இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக் கொண்டுவிட்டீர்களே!
எனக்கே வியப்பாய் இருக்கிறது. [2]
7 வேறு ஒரு நற்செய்தி இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை.
மாறாகச் சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக்
கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை.
8 நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ,
விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக!
9 ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம்;
இப்போது மீண்டும் சொல்கிறேன்:
நீங்கள் பெற்றுக் கொண்ட நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை
யாராவது உங்களுக்கு அறிவித்தால் அவர்கள் சபிக்கப்படுக!


10 இப்படிப் பேசும்போது நான் நாடுவது மனிதருடைய நல்லெண்ணமா?
கடவுளுடைய நல்லெண்ணமா?
நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா பார்க்கிறேன்?
நான் இன்னும் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால்
கிறிஸ்துவுக்குப் பணியாளனாய் இருக்க முடியாது.

2. நிகழ்ச்சிப் பகுதி[தொகு]

பவுல் திருத்தூதராக அழைப்புப் பெற்ற வரலாறு[தொகு]


11 சகோதர சகோதரிகளே,
உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்;
நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல.
12 எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை;
எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக் கொடுக்கவில்லை.
மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது.


13 நான் யூதநெறியைப் பின்பற்றி வந்த காலத்தில்
எவ்வாறு நடந்து கொண்டேன் என்பதுபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். [3]
14 மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்கவனாய்
என் இனத்தவருள் என் வயதினர் பலரைவிட யூதநெறியில் சிறந்து விளங்கினேன். [4]

பவுல் அறிவிக்கும் நற்செய்தி[தொகு]


15 ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே
என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத்
தமது அருளால் என்னை அழைத்த கடவுள்,
16 தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப்
பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு
அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார்.
அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை. [5]
17 எனக்குமுன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண
எருசலேமுக்குப் போகவுமில்லை.
ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன்.
அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன்.
18 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன்.
அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன். [6]
19 ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர
திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை.


20 நான் உங்களுக்கு எழுதுவதில் பொய் ஒன்றுமில்லை;
இதற்குக் கடவுளே சாட்சி!


21 பிறகு நான் சிரியா, சிலிசியப் பகுதிகளுக்குச் சென்றேன்.
22 ஆயினும் யூதேய நாட்டிலிருந்த கிறிஸ்தவச் சபைகளுக்கு
அதுவரை அறிமுகம் ஆகாமலேயே இருந்தேன்.
23 "ஒரு காலத்தில் தங்களைத் துன்புறுத்தியவன்,
தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தை
இப்பொழுது நற்செய்தியாக அறிவிக்கிறான்" என்று மட்டும்
அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள்.
24 அதற்காக என் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.


குறிப்புகள்

[1] 1:4 = 1 திமொ 2:6.
[2] 1:6 = 2 கொரி 11:4.
[3] 1:13 = திப 8:3; 22:4,5; 26:9-11.
[4] 1:14 = திப 22:3.
[5] 1:15,16 = திப 9:3-6; 22:6-10; 26:13-18.
[6] 1:18 = திப 9:26-30.

அதிகாரம் 2[தொகு]

எருசலேமில் திருத்தூதர்களின் கூட்டம்[தொகு]


1 பதினான்கு ஆண்டுகளுக்குப்பின் தீத்துவையும் கூட்டிக்கொண்டு
பர்னபாவுடன் நான் மீண்டும் எருசலேமுக்குப் போனேன். [1]
2 நான் போக வேண்டும் என்று வெளிப்படுத்தப்பட்டபடியால்தான் அங்குப் போனேன்.
பிற இனத்தார் நடுவில் நான் அறிவித்து வந்த நற்செய்தியைப் பற்றி
அங்கே எடுத்துக் கூறினேன்.
செல்வாக்கு உள்ளவர்களிடம் தனிமையில் எடுத்துரைத்தேன்.
நான் இப்போது செய்யும் பணியும் இதுவரை செய்த பணியும்
பயனற்றுப்போகக் கூடாதே என்பதற்காகத்தான் இவ்வாறு செய்தேன்.
3 என்னுடன் இருந்த தீத்து கிரேக்கராய் இருந்தும்
விருத்தசேதனம் செய்து கொள்ளுமாறு அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
4 திருட்டுத்தனமாய் நுழைந்த போலிச் சகோதரர்கள் அங்கே இருந்ததால்தான்
விருத்தசேதனத்தைப் பற்றிய பேச்சே எழுந்தது.
கிறிஸ்து இயேசுவோடு ஒன்றித்து நாம் வாழும் விடுதலை வாழ்வைப் பற்றி
உளவுபார்க்க வந்தவர்கள் அவர்கள்.
நம்மை மீண்டும் அடிமை நிலைக்குக் கொண்டு வருவதே அவர்களது நோக்கம்.
5 உங்கள் பொருட்டு, நற்செய்தியின் உண்மை என்றும் நிலைத்திருக்குமாறு,
நாங்கள் ஒரு நாழிகையேனும் அவர்களுக்கு அடிபணியவில்லை.


6 செல்வாக்கு உள்ளவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் கூட
நான் கற்பிப்பதற்கு அதிகமாய் எதுவும் சொல்லவில்லை.
இவர்கள் முன்பு எப்படிப் பட்டவர்களாய் இருந்தார்கள்
என்பது பற்றி எனக்குக் கவலையில்லை.
கடவுள் ஆளைப் பார்த்தா செயல்படுகிறார்!
7 ஆனால் யூதர்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி
பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போலவே,
பிறஇனத்தாருக்கு அதை அறிவிக்கும் பணி
என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள்.
8 ஆம், யூதர்களின் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலைப்
பேதுருவுக்குத் தந்தவரே
பிற இனத்தாருக்குத் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலை எனக்கும் தந்தார்.
9 அந்த அருள்பணி எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து
திருச்சபையின் தூண்கள் எனக் கருதப்பட்ட யாக்கோபு, கேபா, யோவான் ஆகியோர்
நட்புறவின் அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் கை கொடுத்தனர்.
யூதர்களுக்கு அவர்களும் யூதரல்லாதோர்க்கு நாங்களும்
நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்று ஒத்துக்கொண்டோம்.
10 ஏழைகளுக்கு உதவிசெய்ய மறக்கவேண்டாம் என்று மட்டும்
அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
அதைச் செய்வதில்தான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன்.

அந்தியோக்கியாவில் பவுல் பேதுருவைக் கடிந்து கொள்தல்[தொகு]


11 ஆனால் கேபா அந்தியோக்கியாவுக்கு வந்தபோது
அவர் நடந்து கொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால்
நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன்.
12 அதாவது யாக்கோபின் ஆள்கள் சிலர் வருமுன்
கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார்;
ஆனால் அவர்கள் வந்தபின் அவர்களுக்கு அஞ்சி அவ்வாறு உண்பதை விட்டுவிட்டார்.
13 மற்ற யூதர்களும் இந்த வெளிவேடத்தில் அவரோடு சேர்ந்து கொண்டனர்.
இந்த வெளிவேடம் பர்னபாவைக் கூடக் கவர்ந்து விட்டது.
14 இவ்வாறு அவர்கள் நற்செய்தியின் உண்மைக்கேற்ப
நேர்மையாய் நடவாததைக் கண்ட நான்
எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம்,
"நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல்
பிறஇனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே!
அப்படியிருக்க பிற இனத்தார் யூதமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென
நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?" என்று கேட்டேன்.


15 பிறப்பால் நாம் யூதர்கள்; பாவிகள் எனப்படும் பிற இனத்தாரைச் சேர்ந்தவரல்ல.
16 எனினும் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல,
இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையால்தான்
ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக்கிறோம்.
ஆதலால்தான் நாமும் சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல,
நம்பிக்கையால் இறைவனுக்கு எற்புடையவராகுமாறு
கிறிஸ்து இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம்.
ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால்
எவருமே இறைவனுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை. [2]
17 கிறிஸ்து வழியாக இறைவனுக்கு ஏற்புடையவராவதற்கு முயலும் நாமும் பாவிகளே என்றால்
கிறிஸ்து பாவத்திற்குத் துணைபோகிறார் என்றாகுமே!
இப்படி ஒருபோதும் இருக்க முடியாது.
18 நான் இடித்துத் தகர்த்ததை நானே மீண்டும் கட்டி எழுப்பினால்
சட்டத்தை மீறினவன் என்பதற்கு நானே சான்று ஆவேன்.
19 திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் இறந்தவன் ஆனேன்.
அதற்கு அச்சட்டமே காரணம்.
நான் கடவுளுக்காக வாழ்கிறேன்.
கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். [3]
20 எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்.
இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன்.
இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்.
21 நான் கடவுளின் அருள் பயனற்றுப்போக விட மாட்டேன்.
ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால்
ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகக்கூடுமானால்
கிறிஸ்து இறந்தது வீண் என்றாகுமே!


குறிப்புகள்

[1] 2:1 = திப 11:30; 15:2.
[2] 2:16 = திபா 143:2; உரோ 3:20,22.
[3] 2:19 = உரோ 6:11.


(தொடர்ச்சி):கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை