திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
"நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்." (1 கொரிந்தியர் 3:16-17)

1 கொரிந்தியர் (1 Corinthians)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

கடவுளின் உடன் உழைப்பாளர்கள்[தொகு]


1 சகோதர சகோதரிகளே,
ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல நான் உங்களிடம் பேசமுடியவில்லை.
மாறாக, நீங்கள் ஊனியல்பு கொண்டவர்கள் எனவும்,
கிறிஸ்துவோடுள்ள உறவில் குழந்தைகள் எனவும் எண்ணிப் பேசுகிறேன்.
2 நான் உங்களுக்குத் திட உணவை அல்ல, பாலையே ஊட்டினேன்.
ஏனெனில், திட உணவை உங்களால் உண்ண முடியவில்லை.
இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள். [1]
3 நீங்கள் இன்னும் உங்கள் ஊனியல்புக்கேற்பவே நடக்கிறீர்கள்.
ஏனெனில், பொறாமையும், சண்டை சச்சரவும் உங்களிடையே உள்ளன.
நீங்கள் ஊனியல்புக்கேற்ப நடந்து மனிதப் போக்கில்தானே வாழ்கிறீர்கள்?
4 ஏனெனில், ஒருவர் 'நான் பவுலைச் சார்ந்துள்ளேன்' என்றும்
வேறொருவர் 'நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்' என்றும்
உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது
நீங்கள் மனிதப்போக்கில்தானே நடக்கிறீர்கள்? [2]


5 அப்பொல்லோ யார்? பவுல் யார்?
நீங்கள் நம்பிக்கை கொள்ளக் காரணமாயிருந்த பணியாளர்கள்தானே!
ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் அருளியவாறு அவர்கள் தொண்டாற்றுகிறார்கள்.
6 நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். [3]
7 நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை;
விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை.
8 நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான்.
தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர்.
9அ நாங்கள் கடவுளின் உடன் உழைப்பார்கள்.
நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம்.


9ஆ நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்.
10 கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே,
நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன்.
அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார்.
ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.
11 ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று.
இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே.
வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது.
12 அந்த அடித்தளத்தின்மேல் ஒருவர் பொன், வெள்ளி,
விலையுயர்ந்த கற்கள், மரம், புல், வைக்கோல்
ஆகியவற்றுள் எதையும் வைத்துக் கட்டலாம்.
13 ஆனால், அவரவருடைய வேலைப்பாடு தெரிந்துவிடும்;
தீர்ப்பு நாள் அதைத் தெளிவுப்படுத்தும்.
அந்நாள் நெருப்பு மயமாய் வெளிப்படும்.
அந்நெருப்பு அவரவருடைய வேலை எத்தகையது என்பதைக் காட்டும்.
14 ஒருவர் கட்டியது நிலைத்து நின்றால் அதற்கான கூலியை அவர் பெறுவார்.
15 ஒருவர் கட்டியது தீக்கிரையாகுமானால் அவர் இழப்புக்குள்ளாவார்.
ஆனால் நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவர்போல் அவர் மீட்கப்படுவார்.


16 நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும்
கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? [4]
17 ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார்.
ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.


18 எவரும் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்.
இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக் கொள்வோர்
தாங்களே மடையராகட்டும்.
அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள்.
19 இவ்வுலக ஞானம் கடவுள்முன் மடமையாய் உள்ளது.
ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு,


"ஞானிகளைக் கடவுள் அவர்களது
சூழ்ச்சியில் சிக்க வைப்பார்." [5]


20 மேலும்


"ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை
என ஆண்டவர் அறிவார்." [6]


21-22 எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது.
பவுல், அப்பொல்லோ, கேபா, ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே.
அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம்,
எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே.
23 ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்;
கிறிஸ்து கடவுளுக்குரியவர்.


குறிப்புகள்

[1] 3:2 = எபி 12:15.
[2] 3:4 = 1 கொரி 1:12.
[3] 3:6 = திப 18:4-11, 24-28.
[4] 3:16 = 1 கொரி 6:19; 2 கொரி 6:16.
[5] 3:19 = யோபு 5:13.
[6] 3:20 = திபா 94:11; 4:1; லூக் 12:42-44.


அதிகாரம் 4[தொகு]

திருத்தூதரின் பணி[தொகு]


1 நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள்,
கடவுளின் மறை உண்மைகளை
அறிவிக்கும் பொறுப்புடையவர்கள் எனக் கருத வேண்டும்.
2 பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க்
காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம் அன்றோ!
3 என்னைப் பொறுத்த மட்டில் எனக்கு எதிராக நீங்களோ
மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால்
அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டேன்.
எனக்கு நானே தீர்ப்பளித்துக் கொள்ளவும் மாட்டேன்.
4 எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆயினும் நான் குற்றமற்றவனாகி விட மாட்டேன்.
எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே.
5 எனவே, குறித்த காலம் வருமுன்,
அதாவது ஆண்டவரின் வருகைக்குமுன்
யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம்.
அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்;
உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார்.
அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவர்.


6 சகோதர சகோதரிகளே,
உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும்
எடுத்துக்காட்டாகக் கொண்டு இவற்றைக் கூறினேன்.
ஏனெனில் "எழுதியுள்ளதற்கு மேல் போகாதே" என்பதின் பொருளை
எங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்;
இறுமாப்புக் கொள்ளாதீர்கள்.
7 நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்?
உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவை தானே?
பெற்றுக்கொண்டும் பெற்றுக்கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்?


8 தேவையானவற்றை எல்லாம் ஏற்கெனவே பெற்றுவிட்டீர்களோ?
ஏற்கெனவே செல்வர்களாகி விட்டீர்களோ?
எங்களை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் ஆட்சி செலுத்துகிறீர்களோ?
நீங்கள் ஆட்சி செலுத்த முடியுமென்றால் நல்லதுதான்.
அப்படியானால் நாங்களும் உங்களோடு சேர்ந்து ஆட்சி செலுத்தலாமே.
9 கடவுளின் திருத்தூதராகிய எங்களை அவர் எல்லாருக்கும் கடையராக்கினார்;
நாங்கள் மரண தண்டனை பெற்றவர்கள்போல் ஆனோம்.
மனிதருக்கும் வானதூதருக்கும் உலகுக்கும்
காட்சிப் பொருளானோம் எனக் கருதுகிறேன்.
10 நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள்;
நீங்களோ கிறிஸ்துவோடு இணைந்த அறிவாளிகள்.
நாங்கள் வலுவற்றவர்கள்; நீங்களோ வலிமை மிக்கவர்கள்.
நீங்கள் மாண்புள்ளவர்கள்; நாங்களோ மதிப்பற்றவர்கள்.
11 இந்நேரம்வரை பட்டினியோடும் தாகத்தோடும்
ஆடையின்றியும் இருக்கிறோம்.
அடிக்கப்படுகிறோம்; நாடோடிகளாய் இருக்கிறோம். [1]
12 எங்கள் கைகளால் பாடுபட்டு உழைக்கிறோம்.
பழிக்கப்படும் போது ஆசி கூறுகிறோம்;
துன்புறுத்தப்படும்போது பொறுத்துக் கொள்கிறோம். [2]
13 அவமதிக்கப்படும்போதும் கனிவாகப் பேசுகிறோம்.
நாங்கள் உலகத்தின் குப்பை போலானோம்.
இதுவரை அனைத்திலும் கழிவுப்பொருட்கள் எனக் கருதப்பட்டு வருகிறோம்.


14 உங்களை வெட்கமடையச் செய்ய நான் இவற்றை எழுதவில்லை;
நீங்கள் என் அன்பார்ந்த பிள்ளைகளென எண்ணி,
உங்களுக்கு அறிவு புகட்டவே இவற்றை எழுதுகிறேன்.
15 கிறிஸ்துவைச் சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் இருக்கலாம்;
ஆனால் தந்தையர் பலர் இல்லை.
நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன். [3]
16 ஆகையால் நீங்கள் என்னைப்போலாகுங்கள் என அறிவுரை கூறுகிறேன். [4]
17 இதற்காகவே, திமொத்தேயுவை உங்களிடம் அனுப்பியுள்ளேன்.
அவர் என் அன்பார்ந்த பிள்ளை.
ஆண்டவருடன் இணைந்து வாழும் அவர் நம்பிக்கைக்குரியவர்.
நான் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலையில்
கடைப்பிடிக்கும் நெறிமுறைகளை அவர் உங்களுக்கு நினைவூட்டுவார்.
அவற்றையே நான் எங்கும் எல்லாத் திருச்சபைகளிலும் கற்பித்து வருகிறேன்.
18 நான் உங்களிடம் வரப்போவதில்லை என
உங்களுள் சிலர் எண்ணி இறுமாப்புக் கொண்டிருக்கின்றனர்.
19 ஆனால் ஆண்டவர் திருவுளம் கொண்டால்
நான் உங்களிடம் விரைவிலேயே வருவேன்.
இறுமாப்புக் கொண்டுள்ள அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அல்ல,
அவர்களால் என்ன செய்யமுடியும் என்பதைத்
தெரிந்துகொள்ளத்தான் போகிறேன்.
20 இறையாட்சி பேச்சில் அல்ல, செயல்பாட்டில்தான் இருக்கிறது.
21 நான் பிரம்போடு வரவேண்டுமா அல்லது
அன்போடும் கனிவான உள்ளத்தோடும் வரவேண்டுமா?
எதை விரும்புகிறீர்கள்? [5]


குறிப்புகள்

[1] 4:11 = 2 கொரி 11:27.
[2] 4:12 = திப 18:3.
[3] 4:15 = கலா 4:19; 1 தெச 2:11; பில 10.
[4] 4:16 = 1 கொரி 11:1; பிலி 3:17.
[5] 4:21 = 2 கொரி 10:2.


(தொடர்ச்சி):கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை