திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து
"என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நான் உண்ணும் உணவு ஒரு தடைக்கல்லாக இருக்குமானால், இறைச்சியை ஒரு நாளும் உண்ணமாட்டேன். அவர் பாவத்தில் விழ நான் காரணமாய் இருக்கமாட்டேன்." (1 கொரிந்தியர் 8:23)

1 கொரிந்தியர் (1 Corinthians)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

திருமண வாழ்வு[தொகு]


1 இப்போது, நீங்கள் எழுதிக் கேட்டிருந்தவற்றைக் குறித்துப் பார்ப்போம்.
ஆம், பெண்ணைத் தொடாமல் இருப்பதே நல்லது.
2 எனினும் எங்கும் பரத்தைமை காணப்படுவதால்
ஆண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்த மனைவியோடேயே வாழ வேண்டும்;
பெண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்தக் கணவரோடேயே வாழ வேண்டும்.
3 கணவர் தம் மனைவிக்கு மண வாழ்க்கைக்குரிய உரிமைகளைக் கொடுக்க வேண்டும்;
அதுபோல மனைவியும் தம் கணவருக்குக் கொடுக்க வேண்டும்.
4 மனைவிக்குத் தம் உடலின்மேல் அதிகாரம் இல்லை;
கணவனுக்கே அந்த அதிகாரம் உண்டு.
அப்படியே கணவருக்குத் தம் உடலின்மேல் அதிகாரம் இல்லை;
மனைவிக்கே அந்த அதிகாரம் உண்டு.
5 மணவாழ்க்கைக்குரிய உரிமைகளை ஒருவருக்கொருவர் மறுக்காதீர்கள்.
இருவரும் ஒத்துக் கொண்டால் இறைவேண்டலில் ஈடுபடுவதற்காக
சிறிது காலம் பிரிந்து வாழலாம்.
ஆனால் உணர்ச்சிகளை அடக்க முடியாத நிலையில்
சாத்தான் உங்களைச் சோதிக்காதபடி
பிரிந்த நீங்கள் மீண்டும் கூடி வாழுங்கள்.
6 இதை நான் கட்டளையாகச் சொல்லவில்லை;
ஆனால் உங்கள் நிலைமையைக் கருதியே இப்படிச் சொல்கிறேன்.
7 எல்லாரும் என்னைப்போலவே இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
எனினும், ஒவ்வொருவருக்கும் கடவுள் தரும் தனிப்பட்ட அருள்கொடை உண்டு.
இது ஒருவருக்கு ஒருவகையாகவும், வேறொருவருக்கு வேறு வகையாகவும் இருக்கிறது.


8 இப்போது மணமாகாதவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் நான் சொல்வது இதுவே:
அவர்களும் என்னைப்போலவே இருந்துவிட்டால் மிகவும் நல்லது.
9 எனினும் அவர்கள் தன்னடக்கமில்லாதவர்கள் என்றால் திருமணம் செய்து கொள்ளட்டும்.
ஏனெனில், காமத்தீயில் உருகுவதைவிடத் திருமணம் செய்து கொள்வதே நல்லது.


10-11 திருமணமானவர்களுக்கு நான் கட்டளையாகச் சொல்வது இதுவே:
"மனைவி கணவரிடமிருந்து பிரிந்து வாழக்கூடாது."
இது என்னுடைய கட்டளையல்ல; மாறாக ஆண்டவருடையது.
அப்படிப் பிரிந்து வாழ்ந்தால் மறுமணம் செய்யாமலிருக்க வேண்டும்.
அல்லது கணவருடன் ஒப்புரவாக வேண்டும்.
கணவரும் மனைவியை விலக்கிவிடக் கூடாது. [1]


12 மற்றவர்களுக்கு நான் சொல்வது இதுவே:
இதை ஆண்டவரல்ல, நானே சொல்கிறேன்:
சகோதரர் ஒருவரின் மனைவி நம்பிக்கை கொள்ளாதவரானாலும்
தொடர்ந்து அச்சகோதரரோடு வாழ உடன்பட்டால், அவர் அவரை விலக்கிவிடக் கூடாது.
13 அப்படியே, சகோதரி ஒருவரின் கணவர் நம்பிக்கை கொள்ளாதவரானாலும்
தொடர்ந்து அச்சகோதரியோடு வாழ உடன்பட்டால்,
தம் கணவரை அவர் விலக்கிவிடக் கூடாது.
14 நம்பிக்கை கொள்ளாத கணவர்,
நம்பிக்கை கொண்ட தம் மனைவியால் தூயவராகிறார்.
அப்படியே, நம்பிக்கை கொள்ளாத மனைவி,
நம்பிக்கை கொண்ட கணவரால் தூயவராகிறார்.
அப்படி இல்லையெனில் உங்கள் பிள்ளைகள் தூய்மையற்றவர்களாய் இருப்பார்களே!
ஆனால் அவர்கள் தூயவர்களாய் இருக்கிறார்கள்.
15 கணவன் மனைவி ஆகிய இருவருள்
நம்பிக்கை கொள்ளாத ஒருவர் பிரிந்து வாழ விரும்பினால், பிரிந்து வாழட்டும்.
இத்தகைய சூழ்நிலையில் நம்பிக்கை கொண்ட கணவனுக்கோ மனைவிக்கோ
எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை.
ஆனால் கடவுள் உங்களை அமைதியுடன் வாழவே அழைத்துள்ளார்.
16 மணமான சகோதரியே,
ஒருவேளை உம்மால் உம் கணவர் மீட்படையலாம்.
மணமான சகோதரரே, ஒருவேளை உம்மால் உம் மனைவி மீட்படையலாம்.
இது உங்களுக்குத் தெரியாதா?

ஆண்டவர் அழைப்பில் நிலைத்திருத்தல்[தொகு]


17 எது எப்படியிருந்தாலும், ஒவ்வொருவரும்
ஆண்டவர் அவரவருக்குப் பகிர்ந்தளித்த கொடையின்படியும்
அவர் விடுத்த அழைப்பின்படியும் வாழட்டும்.
இதுவே நான் எல்லாத் திருச்சபைகளிலும் கொடுத்துவரும் கட்டளை.
18 விருத்தசேதனம் செய்யப்பட்ட நிலையில் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தால்
அவர் அந்நிலையிலேயே இருக்கட்டும்.
ஒருவேளை விருத்தசேதனம் செய்யப்படாத நிலையில் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தால்
அவர் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டாம்.
19 விருத்த சேதனம் செய்வதிலும் பயனில்லை;
செய்யாமல் இருப்பதிலும் பயனில்லை;
கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்தலே பயன்தரும்.
20 ஒவ்வொருவரும் எந்நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ
அந்நிலையிலேயே நிலைத்திருக்கட்டும்.
21 அடிமை நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறீர்களா?
அதுபற்றிக் கவலைப்பட வேண்டாம்.
எனினும், அந்நிலையிலிருந்து விடுதலை பெற முடியுமானால்
அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். [2]
22 அடிமை நிலையில் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்
ஆண்டவர் வழியாய் விடுதலை பெற்றவர் ஆகிறார்.
அப்படியே விடுதலை நிலையில் அழைக்கப்பபட்டவர்
கிறிஸ்துவின் அடிமையாய் இருக்கிறார்.
23 நீங்கள் ஆண்டவரால் விலைகொடுத்து மீட்கப்பட்டீர்கள்.
எனவே மனிதருக்கு அடிமையாக வேண்டாம்.
24 சகோதர சகோதரிகளே,
நீங்கள் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிற நிலையிலேயே
கடவுள்முன் நிலைத்திருங்கள்.

மணமாகாதவர்களும் கைம்பெண்களும்[தொகு]


25 இனி, மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம்.
இவர்களைப் பற்றி ஆண்டவரின் கட்டளை எதுவும் என்னிடமில்லை.
எனினும், ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்குரியவனாயிருக்கும் நான்
என் கருத்தைச் சொல்கிறேன்.
26 மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது.
இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன்.


27 மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள்
மணவிலக்குக்கு வழிதேடக் கூடாது;
மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது.
28 நீங்கள் திருமணம் செய்துகொண்டால் அது பாவமல்ல.
இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல.
ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர்.
நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.


29 அன்பர்களே, நான் சொல்வது இதுவே:
இனியுள்ள காலம் குறுகியதே.
இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும்.
30 அழுபவர் அழாதவர் போலவும்,
மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும்,
பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும்.
31 உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர்
அவற்றில் முழமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும்.
இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.


32 நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்கவேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.
மணமாகாதவர் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்கிறார்;
எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்.
33 ஆனால் மணமானவர் உலகுக்குரியவற்றில் அக்கறைகொள்கிறார்;
எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்.
34 இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது.
மணமாகாத பெண்ணும் கன்னிப்பெண்ணும்
ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்வதால்
அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோராகின்றனர்.
ஆனால் மணமான பெண்,
உலகுக்குரியவற்றில் அக்கறை கொள்வதால்
எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார்.


35 உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல,
உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன்.
எல்லாம் ஒழுங்காய் இருக்கவும்
நீங்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே
இவ்வாறு சொல்கிறேன்.


36 ஒருவர் காம உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல்,
தாம் மண ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணுடன்
தவறாக நடக்க எண்ணங்கொண்டால்,
வேறு வழி இல்லையென்றால்
அவர் திருமணம் செய்து கொண்டு தம் விருப்பத்தை நிறைவேற்றட்டும்.
அது பாவமல்ல.
37 ஆனால் தம் உள்ளத்தில் உறுதியாயிருந்து
எந்தக் கட்டாயத்திற்கும் உட்படாமல்,
தம் சொந்த விருப்பப்படி செயல்படும் ஆற்றல் கொண்ட ஒருவர்
தாம் மண ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணை
அந்நிலையிலேயே வைத்திருக்கத் தம் உள்ளத்தில் தீர்மானம் செய்திருந்தால்
அவர் செய்வதில் தவறில்லை.
38 ஆகவே தாம் ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணைத்
திருமணம் செய்பவர் நல்லதையே செய்கிறார்.
எனினும் திருமணம் செய்யாமல் இருப்பவர் அதைவிட நல்லதையே செய்கிறார்.


39 கணவர் உயிரோடு இருக்கும் காலம்வரை
மனைவி அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறார்.
கணவர் இறந்துவிட்டால் தாம் விரும்புபவரைத் திருமணம் செய்து கொள்ள
அவருக்கு உரிமையுண்டு.
ஆனால் அவர் திருமணம் செய்து கொள்பவர்
ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவராய் இருத்தல் வேண்டும்.
40 அவர் கைம்பெண்ணாகவே இருந்துவிட்டால்
அது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்.
இதுவே என் கருத்து.
நானும் கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப் பெற்றிருக்கிறேன் எனக் கருதுகிறேன்.


குறிப்புகள்


[1] 7:10,11 = மத் 5:32; 19:9; மாற் 10:11,12; லூக் 16:18.
[2] 7:21 - "எனினும்...கொள்ளுங்கள்" என்ற சொற்றொடரை
"விடுதலை பெற முடியுமானால் கூட, இப்போதைய அடிமைநிலையைப் பயன்படுத்திக்கொள்ளப் பாருங்கள்"
எனவும் மொழிபெயர்க்கலாம்.

அதிகாரம் 8[தொகு]

4. சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்ணுதல்[தொகு]


1 இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைக் குறித்துப் பார்ப்போம்.
நம் அனைவருக்கும் அறிவு உண்டு. இது நமக்குத் தெரிந்ததே.
இவ்வறிவு இறுமாப்படையச் செய்யும்;
ஆனால் அன்பு உறவை வளர்க்கும்.
2 தமக்கு ஏதோ அறிவு இருக்கிறது என்று நினைக்கிறவர்
அறிய வேண்டிய முறையில் எதையும் அறிந்து கொள்ளவில்லை.
3 கடவுளிடம் அன்பு செலுத்துகிறவரைக் கடவுள் அறிவார்.


4 இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்பதைக் குறித்துப் பார்ப்போம்:
'இவ்வுலகில் சிலை என்பது ஒன்றுமேயில்லை',
'கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை' என்று நமக்குத் தெரியும்.
5 விண்ணிலும் மண்ணிலும் தெய்வங்கள் என்று சொல்லப்படுபவை பல இருக்கலாம்;
தெய்வங்கள் பலவும் ஆண்டவர்கள் பலரும் உளர்.
6 ஆனால் நமக்குக் கடவுள் ஒருவரே; அவரே நம் தந்தை.
அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன;
அவருக்காக நாம் இருக்கின்றோம்.
அவ்வாறே, நமக்கு ஆண்டவரும் ஒருவரே; அவரே இயேசு கிறிஸ்து.
அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன;
அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம். [1]


7 ஆனால் இவ்வறிவு எல்லாரிடமும் இல்லை.
இதுவரை சிலைகளை வழிபட்டுப் பழக்கப்பட்ட சிலர்
அவற்றிற்குப் படைக்கப்பட்டவற்றைப்
படையல் பொருள் என எண்ணி உண்கிறார்கள்.
அவர்களின் மனச் சான்று வலுவற்றதாயிருப்பதால் அது கறைப்படுகிறது. [2]
8 நாம் உண்ணும் உணவு நம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்காது.
உண்ணாதிருப்பின் அதனால் ஒரு குறையுமில்லை.
உண்போமாயின் அதனால் ஒரு நிறைவுமில்லை.


9 ஆனால் உங்களுக்கிருக்கும் உரிமை
மனவலிமையற்றவர்களுக்குத் தடைக்கல்லாயிராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
10 'அறிவு' கொண்டுள்ள நீங்கள்
சிலைவழிபாட்டுக் கோவிலில் பந்தியமர்ந்திருப்பதை
வலுவற்ற மனச்சான்று உடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் காண்பாரானால்
அவரும் சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்ணத் தூண்டப் பெறுவாரல்லவா?
11 இவ்வாறு இந்த 'அறிவு' வலுவற்றவரின் அழிவுக்குக் காரணமாகிறது.
அவர் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் அல்லவா?
அவருக்காகவும் கிறிஸ்து இறந்தார் அல்லவா?
12 இவ்வாறு நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச்
சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால்,
அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும்.
13 ஆகையால் என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு
நான் உண்ணும் உணவு ஒரு தடைக்கல்லாக இருக்குமானால்,
இறைச்சியை ஒரு நாளும் உண்ணமாட்டேன்.
அவர் பாவத்தில் விழ நான் காரணமாய் இருக்கமாட்டேன்.


குறிப்புகள்

[1] 8:6 = உரோ 11:36; எபே 4:6.
[2] 8:7 = எபி 13:9


(தொடர்ச்சி):கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை