திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/திருத்தூதர் பணிகள்/ (அப்போஸ்தலர் பணி)/அதிகாரங்கள் 25 முதல் 26 வரை

விக்கிமூலம் இலிருந்து
"அகிரிப்பா பவுலை நோக்கி, 'நீர் உம் வழக்கை எடுத்துரைக்க அனுமதிக்கிறேன்' என்று கூறினார். உடனே பவுல் தமது கையை உயர்த்தித் தம் நிலையை விளக்கத் தொடங்கினார்: 'அகிரிப்பா அரசே! யூதர் எனக்கு எதிராகச் சாட்டும் அனைத்துக் குற்றங்களையும் பொறுத்த மட்டில் என் நிலையை இன்று உமக்குமுன் நான் விளக்கப் போகிறேன். இது எனக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பு என்று கருதுகிறேன். ஏனெனில் யூதருடைய முறைமைகளையும் அவர்களுடைய சிக்கல்களையும் குறித்து நீர் நன்கு அறிந்தவர். ஆகவே நான் சொல்வதைப் பொறுமையுடன் கேட்குமாறு உம்மிடம் வேண்டுகிறேன். நான் இளமை முதல் என் இனத்தாரிடையே எருசலேமில் எப்படி வாழ்ந்து வந்தேன் என்பதை யூதரனைவரும் தொடக்கமுதல் அறிவர். நான் நமது சமயத்தில் மிகவும் கண்டிப்பான பரிசேயக் கட்சி முறைப்படி வாழ்ந்து வந்தேன் என்பதும் தொடக்கமுதல் அவர்களுக்கே தெரியும்; விரும்பினால் அவர்களே அதற்கு சான்று கூறலாம். நம் மூதாதையருக்குக் கடவுள் அளித்த வாக்குறுதியை நான் எதிர்நோக்குவதால்தான் இப்போது விசாரணைக்காக நிறுத்தப்பட்டுள்ளேன். இந்த வாக்குறுதி நிறைவேறும் என்று எதிர்நோக்கி நம் பன்னிரு குலத்தினரும் கடவுளை அல்லும் பகலும் ஆர்வத்துடன் வழிபடுகின்றனர். அரசே! இந்த எதிர்நோக்கை நானும் கொண்டுள்ளதால் யூதர்கள் என்மீது குற்றம் சுமத்துகின்றார்கள். கடவுள் இறந்தோரை உயிர்த்தெழச் செய்கிறார் என்பதை இங்கிருக்கும் நீங்கள் ஏன் நம்ப முடியாத ஒன்றாகக் கருதுகிறீர்கள்?...' என்றார்." - திருத்தூதர் பணிகள் 26:1-8

திருத்தூதர் பணிகள் (Acts of the Apostles)[தொகு]

அதிகாரங்கள் 25 முதல் 26 வரை

அதிகாரம் 25[தொகு]

சீசரின் விசாரணையை பவுல் நாடுதல்[தொகு]


1 பெஸ்து, மாநிலத் தலைவராக பதவியேற்று மூன்று நாள் ஆன பிறகு
செசரியாவிலிருந்து எருசலேம் சென்றார்.
2 தலைமைக் குருக்களும் யூத முதன்மைக் குடிமக்களும்
பவுலுக்கு எதிராக அவரிடம் முறையிட்டுத் தங்களுக்குத் தயவு காட்டிப்
பவுலை மீண்டும் எருசலேமுக்குக் கொண்டுவருமாறு வேண்டிக் கொண்டார்கள்;
3 ஏனெனில் வழியில் அவரைக் கொன்றுவிட சூழ்ச்சி செய்திருந்தார்கள்.
4 பெஸ்து அவர்களைப் பார்த்து,
"பவுல் செசரியாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்;
நானும் விரைவில் அங்குச் செல்லவிருக்கிறேன்.
5 உங்கள் தலைவர்கள் என்னுடன் வந்து
அவரிடம் ஏதாவது தவறு இருந்தால் அவர்மீது குற்றம் சுமத்தட்டும்" என்றார்.
6 பெஸ்து மேலும் எட்டு அல்லது பத்து நாள்கள் தங்கிவிட்டுச்
செசரியாவுக்குத் திரும்பிச் சென்றார்.
மறுநாள் அவர் நடுவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு
பவுலைக் கூட்டிக்கொண்டு வருமாறு ஆணை பிறப்பித்தார்.
7 பவுல் வந்து சேர்ந்ததும், எருசலேமிலிருந்து வந்திருந்த யூதர் அவரைச் சூழ நின்று,
தங்களால் மெய்ப்பிக்க முடியாத பல பெருங் குற்றங்களை அவர்மீது சுமத்தினார்கள்.
8 "நான் யூதருடைய திடருச்சட்டத்துக்கோ, கோவிலுக்கோ,
சீசருக்கோ எதிராகத் தவறு எதுவும் செய்யவில்லை" என்று
பவுல் தம் நிலையை விளக்கினார்.
9 பெஸ்து யூதரின் நல்லெண்ணத்தைப் பெற விரும்பிப் பவுலைப் பார்த்து,
"நீர் எருசலேம் வந்து அங்கே இந்தக் குற்றங்களுக்காக
விசாரிக்கப்பட விரும்புகிறீரா?" எனக் கேட்டார்.
10 பவுல் அவரிடம்,
"நான் சீசருடைய நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்;
அங்குதான் எனக்குத் தீர்ப்பு வழங்கப்படவேண்டும்.
நான் யூதருக்கு எதிராக எந்தத் தீங்கும் செய்யவில்லை.
இது உமக்கு நன்றாகத் தெரியும்.
11 நான் மரண தண்டனைக்குரிய குற்றம் ஏதாவது செய்திருந்தால்
அத்தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை.
ஆனால், இவர்கள் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளில்
உண்மை எதுவும் இல்லையெனில்
என்னை யாரும் இவர்களிடம் ஒப்பவிக்க முடியாது.
சீசரே என்னை விசாரிக்க வேண்டும்" என்றார்.
12 பின் பெஸ்து தன் ஆலோசகருடன் கலந்து பேசி,
"நீர் உம்மை சீசர் விசாரிக்க வேண்டும் என்று கூறினீர்.
எனவே நீர் சீசரிடமே செல்லும்" என்றார்.

அகிரிப்பா பெர்னிக்கியிடம் பவுல் கொண்டுவரப்படுதல்[தொகு]


13 சில நாள்களுக்குப் பின் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கியுவும்
பெஸ்தைச் சந்திக்கச் செசரியா வந்தனர்.
14 அவர்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தபோது
பெஸ்து பவுலுக்கு எதிரான வழக்கை அரசனிடம் எடுத்துக் கூறினார்;
"பெலிக்சு கைதியாக விட்டுச் சென்ற ஒரு மனிதர் இங்கு இருக்கிறார்.
15 நான் எருசலேமிலிருந்தபோது தலைமைக் குருக்களும்,
யூதரின் மூப்பர்களும் அவரைப்பற்றிய வழக்கை என்னிடம் தெரிவித்து
அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.
16 நான் அவர்களைப் பார்த்து,
'குற்றம் சாட்டப்பட்டவர் எவரும் குற்றம் சாட்டியவர்க்கு முன் நின்று
தம் மீது சுமத்தப்பட்ட குற்றத்தைப் பற்றி
விளக்குவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும்.
அதற்குமுன் அவருக்குத் தீர்ப்பு அளிப்பது உரோமையரின் வழக்கமல்ல' என்று கூறினேன்.
17 எனவே அவர்கள் இங்கே வந்தபோது, சற்றும் காலம் தாழ்த்தாமல்
மறுநாளிலேயே நான் நடுவர் இருக்கையில் அமர்ந்து
அவரை என்னிடம் கூட்டிக்கொண்டு வருமாறு ஆணை பிறப்பித்தேன்.
18 குற்றம் சுமத்தியவர்கள் எழுந்து பேசியபோது
நான் நினைத்திருந்த கொடிய குற்றம் எதுவும் அவர்மீது சுமத்தவில்லை.
19 அவர்கள் அவருக்கு எதிராகச் சொன்னதெல்லாம்
தங்கள் சமயத்திலுள்ள சில கருத்து வேறுபாடுகளாகத்தான் இருந்தன.
இறந்துபோன இயேசு என்னும் ஒருவரைப் பற்றியும் அவர்கள் பேசினார்கள்.
இந்த இயேசு உயிரோடு இருப்பதாக பவுல் சாதித்தார்.
20 இக்கருத்துச் சிக்கல்களைப் பற்றிக் கேட்டதும் நான் குழம்பிப்போய்,
"நீர் எருசலேமுக்கு வருகிறீரா?
அங்கு இவை பற்றி விசாரிக்கப்பட விரும்பகிறீரா?" எனக் கேட்டேன்.
21 பவுல், பேரரசரே விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும் வரை
தம்மைக் காவலில் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆதலால் இவரைச் சீசரிடம் அனுப்பும்வரை
காவலில் வைக்குமாறு ஆணை பிறப்பித்தேன்."
22 அகிரிப்பா பெஸ்துவை நோக்கி,
"அவர் பேசுவதை நானும் நேரில் கேட்க விரும்புகிறேன்" என்றார்.
அதற்குப் பெஸ்து, "நாளை நீர் கேட்கலாம்" என்றார்.
23 மறுநாளில் அகிரிப்பாவும், பெர்னிக்கியுவும் மிகுந்த பகட்டு ஆடம்பரத்துடனும்
ஆயிரத்தவர் தலைவர்களுடனும்,
நகரத்தின் உயர்குடி மக்களோடும் அவைக் கூடத்திற்கு வந்தார்கள்.
பெஸ்துவின் ஆணைப்படி பவுலும் அங்குக் கூட்டிக்கொண்டு வரப்பட்டார்.
24 அப்போது பெஸ்து, "அகிரிப்பா அரசே!
எம்மோடு இங்குக் குழுமியிருக்கும் மக்களே! இவரைப் பாருங்கள்.
எருசலேமிலும், இங்கும் யூதரனைவரும் திரண்டு வந்து
இவருக்கு எதிராக என்னிடம் முறையிட்டு,
'இவன் இனியும் உயிரோடு இருக்கக்கூடாது' என்று கூச்சலிட்டனர்.
25 நான் இவர் மரணதண்டனைக்குரிய குற்றமொன்றையும்
செய்யவில்லை என்பதைக் கண்டேன்.
ஆயினும் இவர் தம்மைப் பேரரசரே விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால்
அவரிடமே அனுப்பத் தீர்மானித்தேன்.
26 இவரைப் பற்றிப் பேரரசரருக்கு திட்டவட்டமாய் எழுத என்னிடத்தில் எதுவுமில்லை.
எனவே அவரை இங்கே உங்கள் முன்னிலையிலும்,
குறிப்பாக, அகிரியப்பா அரசே! உமக்கு முன்பாகவும் கூட்டிக் கொண்டு வந்துள்ளேன்.
நாம் அவரை விசாரித்தபின் எனக்கு எழுதுவதற்கு ஏதாவது கிடைக்குமென நினைக்கிறேன்.
27 ஒரு கைதியின் மேல் சாட்டப்பட்டுள்ள குற்றங்களைக் குறிப்பிடாமல்
அவனை அனுப்புவது அறிவீனம் என்று எனக்குத் தோன்றுகிறது" என்றார்.


அதிகாரம் 26[தொகு]

அகிரிப்பா முன் பவுல் தம் நிலையை விளக்குதல்[தொகு]


1 அகிரிப்பா பவுலை நோக்கி,
"நீர் உம் வழக்கை எடுத்துரைக்க அனுமதிக்கிறேன்" என்று கூறினார்.
உடனே பவுல் தமது கையை உயர்த்தித் தம் நிலையை விளக்கத் தொடங்கினார்:
2 "அகிரிப்பா அரசே!
யூதர் எனக்கு எதிராகச் சாட்டும் அனைத்துக் குற்றங்களையும் பொறுத்த மட்டில்
என் நிலையை இன்று உமக்குமுன் நான் விளக்கப் போகிறேன்.
இது எனக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பு என்று கருதுகிறேன்.
3 ஏனெனில் யூதருடைய முறைமைகளையும்
அவர்களுடைய சிக்கல்களையும் குறித்து நீர் நன்கு அறிந்தவர்.
ஆகவே நான் சொல்வதைப் பொறுமையுடன் கேட்குமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.
4 நான் இளமை முதல் என் இனத்தாரிடையே
எருசலேமில் எப்படி வாழ்ந்து வந்தேன் என்பதை
யூதரனைவரும் தொடக்கமுதல் அறிவர்.
5 நான் நமது சமயத்தில் மிகவும் கண்டிப்பான பரிசேயக் கட்சி முறைப்படி
வாழ்ந்து வந்தேன் என்பதும் தொடக்கமுதல் அவர்களுக்கே தெரியும்;
விரும்பினால் அவர்களே அதற்கு சான்று கூறலாம். [1]
6 நம் மூதாதையருக்குக் கடவுள் அளித்த வாக்குறுதியை நான் எதிர்நோக்குவதால்தான்
இப்போது விசாரணைக்காக நிறுத்தப்பட்டுள்ளேன்.
7 இந்த வாக்குறுதி நிறைவேறும் என்று எதிர்நோக்கி
நம் பன்னிரு குலத்தினரும் கடவுளை அல்லும் பகலும் ஆர்வத்துடன் வழிபடுகின்றனர்.
அரசே! இந்த எதிர்நோக்கை நானும் கொண்டுள்ளதால்
யூதர்கள் என்மீது குற்றம் சுமத்துகின்றார்கள்.
8 கடவுள் இறந்தோரை உயிர்த்தெழச் செய்கிறார் என்பதை
இங்கிருக்கும் நீங்கள் ஏன் நம்ப முடியாத ஒன்றாகக் கருதுகிறீர்கள்?
9 நானுங்கூட நாசரேத்து இயேசுவுக்கு எதிராகப் பல செயல்களைச்
செய்யவேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன்.
10 இதைத்தான் நான் எருசலேமில் செய்தேன்.
இறைமக்கள் பலரைச் சிறையிலடைக்கத்
தலைமைக் குருக்களிடம் அதிகாரம் பெற்றேன்.
அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க நானும் என் இசைவைத் தெரிவித்தேன்.
11 கடவுளைப் பழித்துரைக்க அவர்களைப் பலமுறை நான் கட்டாயப்படுத்தினேன்;
தொழுகைக் கூடங்களிலும் அவர்களைத் தண்டனைக்கு ஆளாக்கினேன்.
மேலும் நான் வெளியே உள்ள நகரங்களுக்கும் சென்று,
அங்குள்ளோர்மீது வெகுண்டெழுந்து அவர்களைத் துன்புறுத்தினேன். [2]
12 "இந்நோக்கத்துடன் நான் தலைமைக் குருக்களிடம்
அதிகாரமும் அனுமதியும் பெற்றுக் கொண்டு தமஸ்குவுக்குச் சென்றேன்.

பவுல் தம் அழைப்பைப் பற்றிக் கூறுதல்[தொகு]


13 போகும் வழியில் நடுப்பகல் வேளையில்,
அரசே! கதிரவனை விட அதிகமாகச் சுடர் வீசிய ஒளி ஒன்று
வானிலிருந்து தோன்றி என்னையும்
என்னோடு வந்தவர்களையும் சுற்றி ஒளிர்ந்ததை நான் கண்டேன்.
14 நாங்களனைவரும் தரையில் விழுந்தோம்.
எபிரேய மொழியில், 'சவுலே! சவுலே! ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?
தாற்றுக்கோலை உதைப்பது உனக்குக் கடினமாயிருக்கும்'
என்று ஒரு குரல் ஒலித்ததைக் கேட்டேன்.
15 அதற்கு நான், 'ஆண்டவரே நீர் யார்?' என்று கேட்க
அவர், 'நீ துன்புறுத்தும் இயேசு நானே.
16 எழுந்து நிமிர்ந்து நில்.
என் ஊழியனாகவும் சாட்சியாகவும் உன்னை ஏற்படுத்தவே நான் உனக்குத் தோன்றினேன்.
நீ என்னைக் கண்டது பற்றியும்
நான் உனக்குக் காண்பிக்கப் போவதைப் பற்றியும் சான்று பகர வேண்டும்.
17 உன் மக்களிடமிருந்தும், பிற இனத்தவரிடமிருந்தும்
நான் உன்னை விடுவிப்பேன்;
பிற இனத்தவரிடமே உன்னை அனுப்புவேன். [3]
18 நீ அவர்களை இருளிலிருந்து ஒளிக்கும்,
சாத்தானின் அதிகாரத்திலிருந்து கடவுளிடத்துக்கும் திரும்புமாறு
அவர்கள் கண்களைத் திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்கள்;
என்னிடம் நம்பிக்கை கொண்டு தங்களைத் தூயோராக்கிக் கொண்டவர்களோடு
உரிமைப்பேறு அடைவார்கள்' என்றார். [4]

பவுல் யூதருக்கும் வேற்றினத்தாருக்கும் சான்று பகருதல்[தொகு]


19 "ஆகையால் அகிரிப்பா அரசே! அந்த விண்ணகக் காட்சிக்கு நான் கீழ்ப் படிந்தேன்.
20 ஆகவே முதலில் தமஸ்குவிலும் பின் எருசலேமிலும்
யூதயோவின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்வோரிடமும்
பிற இனத்தாரிடமும் சென்று
அவர்கள் மனம் மாறி கடவுளிடம் திரும்ப வேண்டுமென்றும்,
மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால்
அவர்கள் காட்டவேண்டும் என்றும் அறிவித்தேன்.
21 இதன் காரணமாக யூதர்கள் கோவிலில் என்னைக் கைது செய்து கொல்ல முயன்றார்கள்.
22 ஆயினும் கடவுளின் உதவிபெற்று,
இந்நாள் வரை இறைவாக்கினரும் மோசேயும் நடக்கவிருப்பதாகக் கூறியதையே
நானும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சான்றாகக் கூறி வருகிறேன்.
23 அதாவது, மெசியா துன்பப்படுவார்;
எனினும் இறந்த அவர் முதலில் உயிர்த்தெழுந்து
நம் மக்களும் பிற இனத்தாரும் ஒளி பெறுவர் என
அவர்களுக்கு கூறியதையே நானும் கூறி வருகிறேன்." [5]

அகிரிப்பா நம்பிக்கை கொள்ளுமாறு பவுல் வேண்டுதல்[தொகு]


24 இவ்வாறு பவுல் தம் நிலையை விளக்கிக் கொண்டிருந்தபோது,
பெஸ்து உரத்த குரலில், "பவுலே! உனக்குப் பித்துப் பிடித்துவிட்டது;
அதிகப்படிப்பு உன்னைப் பைத்தியக்காரனாக மாற்றிவிட்டது" என்றார்.
25 அதற்குப் பவுல், "மாண்புமிகு பெஸ்துவே!
எனக்குப் பித்துப் பிடிக்கவில்லை.
நான் உண்மையோடும் அறிவுத்தெளிவோடும் பேசுகிறேன்.
26 அரசர் இவற்றை அறிவார்.
ஆகவே நான் துணிவோடு அவர்முன் பேசுகின்றேன்.
இவற்றில் எதுவும் அவரது கவனத்தில் படாமல் இருந்திருக்கும்
என்று நான் நம்பவில்லை.
ஏனெனில் இவை ஏதோ ஒரு மூலையில் நடந்தவையல்ல.
27 அகிரிப்பா அரசே, இறைவாக்கினர் கூறியவற்றை நம்புகிறீரா?
நீர் நம்புகிறீர் என்பது எனக்குத் தெரியும்" என்றார்.
28 அகிரிப்பா பவுலை நோக்கி,
"இவ்வளவு குறுகிய காலத்துக்குள்
என்னைக் கிறிஸ்தவனாக்கி விடலாம் என நம்புகிறீரா?" என்றார்.
29 அதற்குப் பவுல், "குறுகிய காலத்திலாயிருந்தாலும் சரி,
நெடுங்காலத்திலாயிருந்தாலும் சரி,
நீர் மட்டுமல்ல, இன்று நான் கூறுவதைக் கேட்கிற அனைவரும்
என்னைப் போலாக வேண்டும்;
ஆனால் இந்த விலங்குகள் மட்டும் உங்களுக்கு வேண்டாம்;
இதுவே கடவுளிடம் எனது வேண்டுதல்" என்றார்.
30 பின்பு அரசரும் ஆளுநரும் பெர்னிக்கியும்
அவர்களோடு அமர்ந்திருந்தவர்களும் எழுந்தார்கள்.
31 அவர்கள் அங்கிருந்து சென்றபோது,
"இவர் மரண தண்டனைக்கோ சிறைத் தண்டனைக்கோ உரிய
குற்றம் எதையும் செய்யவில்லையே" என
ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
32 அகிரிப்பா பெஸ்துவிடம்,
"இவர் சீசரே தம்மை விசாரிக்க வேண்டும் என்று கேட்டிராவிட்டால்
இவரை விடுவித்திருக்கலாம்" என்று கூறினார்.


குறிப்புகள்

[1] 26:5 = திப 8:3; பிலி 3:5.
[2] 26:9-11 = திப 8:3; 22:4,5.
[3] 26:16,17 = எசே 2:1,3.
[4] 26:18 = எசா 42:7,16.
[5] 26:23 = எசா 42:6; 49:6.


(தொடர்ச்சி):திருத்தூதர் பணிகள்: அதிகாரங்கள் 27 முதல் 28 வரை