திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/திருத்தூதர் பணிகள்/ (அப்போஸ்தலர் பணி)/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இலிருந்து
"இதற்கிடையில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் திருத்தூதர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி, இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார். இவ்வாறு அவர் புறப்பட்டுச்சென்று தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது. அவர் தரையில் விழ, 'சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?' என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார். அதற்கு அவர், 'ஆண்டவரே நீர் யார்?' எனக் கேட்டார். ஆண்டவர், 'நீ துன்புறுத்தும் இயேசு நானே. நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்' என்றார்." - திருத்தூதர் பணிகள் 9:1-6

திருத்தூதர் பணிகள் (Acts of the Apostles)[தொகு]

அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

அதிகாரம் 9[தொகு]

சவுல் அழைப்புப் பெறல்[தொகு]

(திப 22:6-16; 26:12-18)


1 இதற்கிடையில் சவுல் சீறியெழுந்து
ஆண்டவரின் திருத்தூதர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார்.
தலைமைக் குருவை அணுகி,
2 இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும்
அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத்
தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார்.
3 இவ்வாறு அவர் புறப்பட்டுச்சென்று தமஸ்குவை நெருங்கியபோது
திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது.
4 அவர் தரையில் விழ,
"சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?"
என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார்.
5 அதற்கு அவர், "ஆண்டவரே நீர் யார்?" எனக் கேட்டார்.
ஆண்டவர், "நீ துன்புறுத்தும் இயேசு நானே.
6 நீ எழுந்து நகருக்குள் செல்;
நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்" என்றார்.
7 அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர்.
ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர். [1]
8 சவுல் தரையிலிருந்து எழுந்தார்.
தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை.
எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து
அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள்.
9 அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார்.
அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை.


10 தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார்.
ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "அனனியா" என அழைக்க,
அவர், "ஆண்டவரே, இதோ அடியேன்" என்றார்.
11 அப்போது ஆண்டவர் அவரிடம்,
"நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய்
யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு.
அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்.
12 அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து
தாம் மீண்டும் பார்வையடையுமாறு
தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார்" என்று கூறினார்.
13 அதற்கு அனனியா மறுமொழியாக,
"ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு
என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.
14 உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும்
கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று
இங்கே வந்திருக்கிறான்" என்றார்.
15 அதற்கு ஆண்டவர் அவரிடம்,
"நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும்
இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல
நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார். [2]
16 என் பெயரின்பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை
நான் அவருக்கு எடுத்துக்காட்டுவேன்" என்றார்.


17 அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று
கைகளை அவர் மீது வைத்து,
"சகோதரர் சவுலே,
நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு
நீர் மீண்டும் பார்வை அடையவும்
தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும்
என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்" என்றார்.
18 உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே
அவர் மீண்டும் பார்வையடைந்தார்.
பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார்.
19 பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார்.

சவுல் தமஸ்குவில் போதித்தல்[தொகு]


சில நாள்களாக சவுல் தமஸ்குவில் சீடர்களுடன் தங்கியிருந்தார்.
20 உடனடியாக அவர் இயேசுவே இறைமகன் என்று
தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார்.
21 கேட்டவர் அனைவரும் மலைத்துப்போய்,
"எருசலேமில் இந்தப் பெயரை அறிக்கையிடுவோரை
ஒழிக்க முற்பட்டவன் இவனல்லவா?
அவ்வாறு அறிக்கையிடுவோரைக் கைது செய்து,
தலைமைக் குருக்களிடம் இழுத்துச் செல்லும் எண்ணத்தோடு
இங்கே வந்தவன் தானே இவன்" என்றார்கள்.
22 சவுல் மேன்மேலும் வல்லமை பெற்றவராய்,
'இயேசுவே கிறிஸ்து' என்பதை மெய்ப்பித்துத்
தமஸ்குவில் வாழ்ந்து வந்த யூதர்கள் அனைவரும் மனம் குழம்பச் செய்தார்.

சவுல் யூதர்களிடமிருந்து தப்பிச் செல்லுதல்[தொகு]


23 இவ்வாறே பல நாள்கள் கழிந்தன;
யூதர்கள் சவுலைக் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள்.
24 அவரைக் கொன்று விடுவதற்காக அவர்கள்
இரவும் பகலும் நகர வாயில்களைக் காவல் செய்தார்கள்.
அவர்களுடைய இச்சூழ்ச்சி சவுலுக்குத் தெரியவந்தது.
25 ஆகவே அவருடைய சீடர்கள் இரவில் அவரைக் கூடையில் வைத்து,
நகர மதில் வழியாக இறக்கி விட்டார்கள். [3]

எருசலேம் நகரத்தில் சவுல்[தொகு]


26 அவர் எருசலேம் நகரத்துக்கு வந்தபோது சீடர்களுடன் சேர்ந்து கொள்ள முயன்றார்.
ஆனால் அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல் அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர்.
27 பர்னபா அவருக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார்.
பவுல் ஆண்டவரை வழியில் கண்டதுபற்றியும் ஆண்டவர் அவரோடு பேசியதுபற்றியும்
அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும்
பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார்.
28 அதன்பின் சவுல் அவர்களோடு சேர்ந்து எருசலேமில் அங்கும் இங்குமாகச் சென்று
ஆண்டவரின் பெயரால் துணிவுடன் பேசிவந்தார்.
29 கிரேக்க மொழி பேசும் யூதரிடம் சென்று அவர்களோடு வாதாடினார்.
அவர்கள் அவரைக் கொன்றுவிட முயன்றார்கள்.
30 ஆனால் அவரோடு இருந்த சகோதரர்கள் இதை அறிந்து
அவரைச் செசரியாவுக்குக் கூட்டிச்சென்று
அங்கிருந்து தர்சு நகருக்கு அனுப்பி வைத்தார்கள்.
31 யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளிலெல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று,
ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து,
தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது.

ஐனேயாவின் பிணி போக்கல்[தொகு]


32 பேதுரு எல்லா இடங்களுக்கும் சென்றுவந்தார்;
ஒருநாள் லித்தாவில் வாழ்ந்த இறைமக்களிடம் வந்து சேர்ந்தார்.
33 அங்கே அவர் எட்டு ஆண்டுகள் முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த
ஐனேயா என்னும் பெயருடைய ஒருவரைக் கண்டார்;
34 அவரிடம், "ஐனேயா, இயேசு கிறிஸ்து உம் பிணியைப் போக்குகிறார்;
எழுந்து உம் படுக்கையை நீரே சரிப்படுத்தும்" என்று பேதுரு கூறினார்.
உடனே அவர் எழுந்தார்.
35 லித்தாவிலும் சாரோனிலும் வாழ்ந்து வந்தவர்கள் அனைவரும் அதைக் கண்டு
ஆண்டவரிடம் திரும்பினார்கள்.

தொற்கா மீண்டும் உயிர் பெறுதல்[தொகு]


36 யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருடைய பெண் சீடர் ஒருவர் இருந்தார்.
அவர் தொற்கா [4] என்றும் அழைக்கப்பட்டார்;
நன்மை செய்வதிலும் இரக்கச் செயல்கள் புரிவதிலும் அவர் முற்றிலும் ஈடுபட்டிருந்தார்.
37 உடல்நலம் குன்றி ஒருநாள் அவர் இறந்துவிட்டார்.
அங்கிருந்தோர் அவரது உடலைக் குளிப்பாட்டி மேல் மாடியில் கிடத்தியிருந்தனர்.
38 யோப்பாவிற்கு அருகிலுள்ள லித்தாவுக்குப் பேதுரு வந்திருப்பதைச்
சீடர்கள் கேள்விப்பட்டு இருவரை அவரிடம் அனுப்பி,
"எங்களிடம் உடனே வாருங்கள்" என்று கெஞ்சிக் கேட்டார்கள்.
39 பேதுரு புறப்பட்டு அவர்களோடு வந்தார்.
வந்ததும் அவர்கள் அவரை மேல்மாடிக்கு அழைத்துச் சென்றார்கள்.
கைம்பெண்கள் அவரருகில் வந்து நின்று,
தொற்கா தங்களோடு இருந்தபோது செய்துகொடுத்த எல்லா அங்கிகளையும்
ஆடைகளையும் காண்பித்தவாறே அழுதார்கள்.
40 பேதுரு அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு
முழந்தாள்படியிட்டு இறைவனிடம் வேண்டினார்;
அவரது உடலின் பக்கமாகத் திரும்பி, "தபித்தா, எழுந்திடு" என்றார்.
உடனே அவர் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டு, எழுந்து உட்கார்ந்தார்.
41 பேதுரு அவருடைய கையைப் பிடித்து எழுந்து நிற்கச் செய்தார்.
இறைமக்களையும் கைம்பெண்களையும் கூப்பிட்டு,
அவர்கள் முன் அவரை உயிருடன் நிறுத்தினார்.
42 இது யோப்பா நகர் முழுவதும் தெரிய வரவே
ஆண்டவர் மீது பலர் நம்பிக்கை கொண்டனர்.
43 யோப்பாவிலுள்ள தோல் பதனிடும் சீமோன் என்பவரிடம்
பேதுரு பலநாள் தங்கியிருந்தார்.


குறிப்புகள்

[1] 9:7 = 10:7.
[2] 9:15 = 1 கொரி 9:16,17.
[3] 9:23-25 = 2 கொரி 11:32,33.
[4] 9:36 - "தொற்கா" என்பதற்குப் பெண்மான் என்பது பொருள்


அதிகாரம் 10[தொகு]

பேதுருவும் கொர்னேலியுவும்[தொகு]


1 செசரியா நகரில் கொர்னேலியு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார்.
அவர் இத்தாலியா எனப்பட்ட படைப்பிரிவில் நூற்றுவர் தலைவர்.
2 அவர் இறைப்பற்றுள்ளவர்; தம் வீட்டார் அனைவருடனும் கடவுளுக்கு அஞ்சி நடந்தவர்;
மக்களுக்கு இரக்கச் செயல்கள் பல புரிந்தவர்;
இடைவிடாது கடவுளிடம் மன்றாடிவந்தவர்.
3 ஒரு நாள் பிற்பகல் மூன்று மணியளவில் அவர் ஒரு காட்சி கண்டார்.
அதில் கடவுளுடைய தூதர் அவரிடம் வந்து
"கொர்னேலியு" என்று அழைப்பது தெளிவாகத் தெரிந்தது.
4 அவர் வானதூதரை உற்றுப்பார்த்து,
"ஆண்டவரே, என்ன?" என்று அச்சத்தோடு கேட்டார்.
அதற்குத் தூதர், "உமது வேண்டல்களும் இரக்கச் செயல்களும்
கடவுள் திருமுன் சென்றடைந்துள்ளன; அவற்றை அவர் நினைவில் கொண்டுள்ளார்.
5 இப்போது யோப்பா நகருக்கு ஆள் அனுப்பிப்
பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரவழையும்.
6 தோல் பதனிடும் சீமோன் என்பவரின் வீட்டில் அவர் விருந்தினராய் தங்கியிருக்கிறார்.
அவர் வீடு கடலோரத்தில் உள்ளது" என்றார்.
7 தம்மோடு பேசிய வானதூதர் சென்றதும்
அவர் தம் வீட்டு வேலையாள்களுள் இருவரையும்
தம் நம்பிக்கைக்குரிய இறைப்பற்றுள்ள படைவீரர் ஒருவரையும் கூப்பிட்டு,
8 நடந்தவற்றையெல்லாம் விளக்கிச் சொல்லி அவர்களை யோப்பாவுக்கு அனுப்பினார்.
9 அவர்கள் வழிநடந்து மறுநாள் அந்த நகரை நெருங்கிக் கொண்டிருந்தபோது,
பேதுரு இறைவனிடம் வேண்ட வீட்டின் மேல்தளத்துக்குச் சென்றார்.
அப்போது மணி பன்னிரண்டு.
10 அவருக்குப் பசி உண்டாயிற்று. அவர் உணவருந்த விரும்பினார்.
உணவு தயாராகிக் கொண்டிருக்கும்போது அவர் மெய்ம்மறந்த நிலைக்குள்ளானார்;
11 வானம் திறந்திருப்தையும்,
பெரிய கப்பற்பாய் போன்றதொரு விரிப்பு
நான்கு முனைகளிலும் கட்டப்பட்டுத் தரையில் இறக்கப்படுவதையும் கண்டார்.
12 நடப்பன, தரையில் ஊர்வன, வானில் பறப்பன அனைத்தும் அதில் இருந்தன.
13 அப்போது "பேதுரு, எழுந்திடு! இவற்றைக்கொன்று சாப்பிடு" என்று ஒரு குரல் கேட்டது.
14 அதற்கு மறுமொழியாகப் பேதுரு,
"வேண்டவே வேண்டாம் ஆண்டவரே,
தீட்டானதும் தூய்மையற்றதுமான எதையும்
நான் ஒருபோதும் உண்டதேயில்லை" என்றுரைத்தார். [1]
15 இரண்டாம் முறையாக அக்குரல்,
"தூய்மையானது எனக் கடவுள் கருதுவதை தீட்டாகக் கருதாதே" என்று ஒலித்தது. [2]
16 இப்படி மும்முறை நடந்தவுடன் அந்த விரிப்பு வானத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
17 தாம் கண்ட காட்சியின் பொருள் என்ன என்பது பற்றிப்
பேதுரு தமக்குள்ளே குழம்பிக் கொண்டிருந்தபோது,
கொர்னேலியு அனுப்பிய ஆள்கள் சீமோன் வீட்டைக் கேட்டுத் தெரிந்துகொண்டு
கதவருகில் வந்து நின்று,
18 "பேதுரு என்னும் பெயருடைய சீமோன் என்பவர் இங்குத் தங்கியிருக்கிறாரா?"
என்று கூப்பிட்டுக் கேட்டனர்.
19 பேதுரு இக்காட்சியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது
தூய ஆவியார் அவரிடம்,
"இதோ மூவர் உன்னைத் தேடி வந்திருக்கின்றனர்;
20 நீ கீழே இறங்கித் தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு புறப்பட்டுச் செல்.
ஏனெனில் நான்தான் அவர்களை அனுப்பியுள்ளேன்" என்றார்.
21 பேதுரு கீழே இறங்கி அவர்களிடம், "நீங்கள் தேடுபவர் நான்தான்.
நீங்கள் வந்த காரணம் என்ன?" என்று கேட்டார்.
22 அதற்கு அவர்கள், "நூற்றுவர் தலைவரான கொர்னேலியு ஒரு நேர்மையாளர்;
கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்;
யூதமக்கள் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர்;
உம்மைத் தம் வீட்டுக்கு வரவழைத்து
நீர் சொல்வதைக் கேட்கவேண்டும் என்று
தூய வானதூதர் அவருக்கு வெளிப்படுத்தியுள்ளார்" என்றார்கள்.
23 அப்போது பேதுரு அவர்களை உள்ளே அழைத்துச் சென்று விருந்தோம்பினார்.
மறுநாள் அவர் அவர்களுடன் புறப்பட்டுப் போனார்.
யோப்பாவிலுள்ள சகோதரர் சிலரும் அவரோடு சென்றனர்.
24 அடுத்த நாள் அவர் செசரியா நகரைச் சென்றடைந்தார்.
கொர்னேலியு தம் உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து
அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
25 பேதுரு உள்ளே வரவே,
கொர்னேலியு அவரை எதிர்கொண்டு போய்
அவர் காலில் விழுந்து வணங்கினார்.
26 பேதுரு, "எழுந்திடும்; நானும் ஒரு மனிதன்தான்" என்று கூறி
அவரை எழுப்பினார். [3]
27 அவரோடு பேசியவாறே பேதுரு உள்ளே சென்றார்.
அங்குப் பலர் வந்திருப்பதைக் கண்டு
28 அவர்களைப் பார்த்து,
"ஒரு யூதன் பிற குலத்தவரிடம் செல்வதும்,
அவர்களோடு உறவாடுவதும் முறைகேடு என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஆனால் யாரையும் தீட்டுள்ளவர் என்றோ,
தூய்மையற்றவர் என்றோ சொல்லக்கூடாது" எனக் கடவுள் எனக்குக் காட்டினார். [4]
29 ஆகவே நீங்கள் என்னை வரவழைத்தபோது மறுப்புக் கூறாமல் வந்தேன்.
இப்போது சொல்லும்; எதற்காக என்னை வரவழைத்தீர்?" என்று வினவினார்.
30 அதற்கு கொர்னேலியு கூறியது:
"மூன்று நாள்களுக்குமுன் இதே நேரத்தில்,
அதாவது பிற்பகல் மூன்று மணிக்கு
என் வீட்டில் நான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தேன்.
அப்போது பளபளப்பான ஆடையணிந்த ஒருவர் என்முன் வந்து நின்றார்.
31 அவர் என்னிடம்,
'கொர்னேலியு, உம் வேண்டுதலைக் கடவுள் கேட்டருளினார்.
உம் இரக்கச் செயல்களை அவர் நினைவிற் கொண்டார்.
32 ஆகவே நீர் யோப்பாவுக்கு ஆள் அனுப்பிப்
பேதுரு என்னும் பெயருடைய சீமோனை வரவழையும்.
அவர் தோல் பதனிடுபவராகிய சீமோன் வீட்டில் விருந்தினராகத் தங்கியிருக்கிறார்.
அவ்வீடு கடலோரத்தில் உள்ளது' என்றார்.
33 எனவேதான் உடனே உமக்கு ஆள் அனுப்பினேன்.
நீரும் இங்கு வந்தது நல்லது.
ஆண்டவர் பணித்த அனைத்தையும் இப்போது உம் வழியாகக் கேட்பதற்கு
நாங்கள் யாவரும் கடவுள் திருமுன் கூடியிருக்கிறோம்."

கொர்னேலியுவின் இல்லத்தில் பேதுருவின் உரை[தொகு]


34 அப்போது பேதுரு பேசத் தொடங்கி,
"கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை
நான் உண்மையாகவே உணர்கிறேன். [5]
35 எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து
நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்.
36 இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்னும் நற்செய்தியை
அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார்.
அவரே அனைவருக்கும் ஆண்டவர். [6]
37 திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு
கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும்.
38 கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல்
தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார்.
கடவுள் அவரோடு இருந்தால்
அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து
எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்.
39 யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும்
அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள்.
மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள்.
40 ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக்
காட்சி அளிக்கச் செய்தார்.
41 ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல,
சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே,
அவர் காட்சியளித்தார்.
இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு,
குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.
42 மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக்
கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று
மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.
43 அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும்
அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று
இறைவாக்கினர் அனைவரும் அவரைக்குறித்துச் சான்று பகர்கின்றனர்" என்றார்.

பிற இனத்தவர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுதல்[தொகு]


44 பேதுரு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது
அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர்மீதும் தூய ஆவி இறங்கிவந்தது.
45 பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனத்தில் நம்பிக்கையுடையோர்
தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டதைக் கண்டு
மலைத்துப் போயினர்;
46 ஏனென்றால் அவர்கள் பரவசப்பேச்சுப் பேசிக்
கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள்.
47 பேதுரு, "நம்மைப் போலத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட இவர்கள்
தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்?" என்று கூறி,
48 இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கப் பணித்தார்.
பின்பு அவர்கள் சில நாள் தங்களுடன் தங்கியிருக்குமாறு அவரிடம் வேண்டினார்கள்.


குறிப்புகள்

[1] 10:14 = எசே 4:14.
[2] 10:15 = தொநூ 1:31.
[3] 10:26 = திப 14:15; திவெ 19:10.
[4] 10:28 = திப 15:9.
[5] 10:34 = இச 10:17; உரோ 2:11; 1 பேது 1:17.
[6] 10:36 = எசா 52:7.


(தொடர்ச்சி):திருத்தூதர் பணிகள்: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை