திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/திருத்தூதர் பணிகள்/ (அப்போஸ்தலர் பணி)/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து


"ஒருநாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர். அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்துகொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சைக் கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் 'அழகுவாயில்' என்னுமிடத்தில் வைப்பர். அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சைக் கேட்டார். பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து, "எங்களைப் பார்" என்று கூறினர். அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார். பேதுரு அவரிடம், "வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்" என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்; துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார். அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்களனைவரும் கண்டனர். அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகு வாயில் அருகே பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துகொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்ம்மறந்து நின்றனர்." - திருத்தூதர் பணிகள் 3:1-10

திருத்தூதர் பணிகள் (Acts of the Apostles)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

கோவிலின் வாயிலில் கால் ஊனமுற்றவர் குணமடைதல்[தொகு]


1 ஒருநாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப்
பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர்.
2 அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச்
சிலர் சுமந்துகொண்டு வந்தனர்.
கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சைக் கேட்பதற்காக
அவரை நாள்தோறும் கோவிலின் 'அழகுவாயில்' என்னுமிடத்தில் வைப்பர்.
3 அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த
பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சைக் கேட்டார்.
4 பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து,
"எங்களைப் பார்" என்று கூறினர்.
5 அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன்
அவர்களை ஆவலுடன் நோக்கினார்.
6 பேதுரு அவரிடம்,
"வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை;
என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன்.
நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்" என்று கூறி,
7 அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார்.
உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன.
8 அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்;
துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார்.
9 அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்களனைவரும் கண்டனர்.
10 அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகு வாயில் அருகே
பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துகொண்டனர்;
நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்ம்மறந்து நின்றனர்.

சாலமோன் மண்டபத்தில் பேதுருவின் அருளுரை[தொகு]


11 நலமடைந்த அவர் பேதுருவையும் யோவானையும்
விடாமல் பற்றிக் கொண்டிருக்க,
எல்லா மக்களும் திகிலுற்று
சாலமோன் மண்டபம் என்னும் இடத்திற்கு ஒரு சேர ஓடிவந்தனர்.
12 பேதுரு இதைக் கண்டு மக்களைப் பார்த்துக் கூறியது:
"எருசலேம் மக்களே, நீங்கள் ஏன் இதைப் பார்த்து வியப்படைகிறீர்கள்?
நாங்கள் எங்கள் சொந்த வல்லமையாலோ
இறைப்பற்றாலோ இவரை நடக்கச் செய்துவிட்டதுபோல்
ஏன் எங்களையே உற்றுப் பார்க்கிறீர்கள்?
13 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, என்னும்
நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர் [1] இயேசுவைப் பெருமைப்படுத்தினார்.
ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்துவிட்டீர்கள்.
அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும்
நீங்கள் அவரை மறுதலித்தீர்கள். [2]
14 நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக்
கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொண்டீர்கள். [3]
15 வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்.
ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார்.
இதற்கு நாங்கள் சாட்சிகள்.
16 இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர்.
இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது.
அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது.
இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும்
இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது.


17 அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும்
அறியாமையினாலேயே இப்படிச் செய்துவிட்டீர்கள் என எனக்குத் தெரியும். [4]
18 ஆனால் கடவுள், தம் மெசியா துன்புற வேண்டும் என்று
இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை
இவ்வாறு நிறைவேற்றினார். [5]
19 எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு
மனம்மாறி அவரிடம் திரும்புங்கள்.
20 அப்பொழுது ஆண்டவர் புத்துயிர் அளிக்கும் காலத்தை அருளி
உங்களுக்காக ஏற்படுத்திய மெசியாவாகிய இயேசுவை அனுப்புவார்.
21 விண்ணேற்றமடைந்த இயேசு
யாவும் சீர்படுத்தப்படும் காலம் வரை விண்ணுலகில் இருக்கவேண்டும்.
பழங்காலத் தூய இறைவாக்கினர் வாயிலாகக்
கடவுள் இந்தக் காலத்தைக் குறித்து கூறியிருந்தார்.
22 மோசேயும்,


'உங்கள் கடவுளாகிய ஆண்டவர்


உங்கள் சகோதரரிடமிருந்து
என்னைப்போல் ஓர் இறைவாக்கினரைத் தோன்றச் செய்வார்.
அவர் உங்களுக்குக் கூறும் எல்லாவற்றிற்கும்
நீங்கள் செவிசாயுங்கள். [6]
23 அந்த இறைவாக்கினருக்குச் செவிசாய்த்துக்
கீழ்ப்படியாத எவரும்


மக்களினின்று அடியோடு அழிக்கப்படுவர்'


என்று கூறியுள்ளார். [7]
24 சாமுவேல் தொடங்கி இறைவாக்குரைத்த அனைவரும்
இந்தக் காலத்தைப்பற்றி அறிவித்து வந்தனர்.
25 அந்த இறைவாக்கினர் உரைத்தவற்றை
உரிமையாக்கிக்கொள்பவர்கள் நீங்கள்.
கடவுள் ஆபிரகாமிடம்,


'உன் மரபினர் வழியாக
மண்ணின் மக்களினங்கள் அனைத்தும் ஆசிபெறும்'


என்று கூறி உடன்படிக்கை செய்தார்.
கடவுள் உங்கள் மூதாதையரோடு செய்த அந்த உடன்படிக்கையையும்
உரிமையாக்கிக் கொள்பவர்கள் நீங்களே. [8]
26 ஆகையால், நீங்கள் அனைவரும்
உங்கள் தீயசெயல்களைவிட்டு விலகி ஆசி பெற்றுக்கொள்வதற்காகவே,
கடவுள் தம் ஊழியரைத் தோன்றச் செய்து
முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்."


குறிப்புகள்

[1] 3:13 - இங்குப் பயன்படுத்தப்படும் மூலச்சொல் "மகன்" என்றும் பொருள்படும்.
[2] 3:13 = விப 3:15.
[3] 3:14 = மத் 27:15-23; மாற் 15:6-14; லூக் 23:13-23; யோவா 19:12-15.
[4] 3:17 = 1 கொரி 2:8; 1 திமொ 1:13.
[5] 3:18 = லூக் 18:31.
[6] 3:22 = இச 8:15,18.
[7] 3:23 = இச 18:19.
[8] 3:25 = இச 22:18.


அதிகாரம் 4[தொகு]

யூதத் தலைமைச் சங்கத்தின்முன் பேதுருவும் யோவானும்[தொகு]


1 பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது குருக்களும் சதுசேயர்களும்
கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்;
2 அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதையும்
இறந்தோர் இயேசுவின் மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததையும்
கண்டு எரிச்சலடைந்து,
3 அவர்களைக் கைது செய்தார்கள்;
ஏற்கெனவே மாலையாகிவிட்டதால் மறுநாள்வரை காவலில் வைத்தார்கள்.
4 அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்ட பலரும் நம்பிக்கை கொண்டனர்.
இவ்வாறு நம்பிக்கை கொண்ட ஆண்களது எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.
5 மறுநாள் தலைவர்களும் மூப்பர்களும்
மறைநூல் அறிஞர்களும் எருசலேமில் ஒன்று கூடினார்கள்.
6 அவர்களுடன் தலைமைக் குருவான அன்னாவும்,
கயபா, யோவான், அலக்சாந்தர் ஆகியோரும்,
தலைமைக் குருவின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கூடியிருந்தார்கள்.
7 அவர்கள் திருத்தூதர்களை நடுவில் நிறுத்தி,
"நீங்கள் எந்த வல்லமையால், அல்லது எந்தப் பெயரால் இதனைச் செய்தீர்கள்?"
என்று வினவினார்கள்.
8 அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு
அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது:
"மக்கள் தலைவர்களே, மூப்பர்களே,
9 உடல் நலமற்றியிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல்
எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து
நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம்.
10 நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார்.
இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும்.
நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள்.
ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார்.
11 இந்த இயேசுவே,


'கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல்.


ஆனாலும் முதன்மையான


மூலைக்கல்லாக விளங்குகிறார்.' [1]


12 இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை.
ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ்,
மனிதரிடையே இவரது பெயரன்றி
வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.


13 பேதுருவும் யோவானும் கல்வியறிவற்றவர்கள் என்பதைத்
தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால்,
அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர்;
அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டனர்.
14 நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால்
அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை.
15 எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும்
சங்கத்தைவிட்டு வெளியேறும்படி ஆணையிட்டு,
பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள்.
16 "நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்?
ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்;
இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும்.
இதை நாம் மறுக்க முடியாது. [2]
17 ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு
இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக் கூடாதென
நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்" என்று கூறினார்கள்.
18 அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து,
"இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது" என்று
கண்டிப்பாகக் கட்டளையிட்டனர்.
19 அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக,
"உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா?
இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என
நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்;
20 என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும்
எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது" என்றனர். [3]
21 அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும்,
மக்களுக்கு அஞ்சியதாலும்
தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர்.
ஏனென்றால் நடந்ததைக் குறித்து
மக்கள் அனைவரும் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
22 இந்த அரும் அடையாளம் வாயிலாக நலம் பெற்ற மனிதர்
நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்.

துணிவு பெற மன்றாட்டு[தொகு]


23 விடுதலை பெற்ற அவர்கள், தங்களைச் சேர்ந்தவர்களிடம் வந்து,
தலைமைக் குருக்களும் மூப்பர்களும் தங்களுக்குக் கூறிய யாவற்றையும் அறிவித்தார்கள்.
24 இவற்றைக் கேட்ட யாவரும் ஒரே மனத்துடன்
தங்கள் குரலைக் கடவுள்பால் எழுப்பி, பின்வருமாறு மன்றாடினர்:
"ஆண்டவரே, 'விண்ணுலகையும் மண்ணுலகையும்
கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே'.[4]
25 எங்கள் தந்தையும் உம் ஊழியருமாகிய தாவீது வாயிலாக
தூய ஆவி மூலம்


'வேற்றினத்தார் சீறி எழுவதேன்?


மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?
26 பூவுலகின் அரசர்களும் தலைவர்களும்
ஆண்டவருக்கும் அவர்தம் மெசியாவுக்கும் எதிராக


அணிவகுத்து நின்றனர்'


என்று உரைத்தீர். [5]
27 அதன்படியே இந்நகரில் உம்மால் அருள்பொழிவு பெற்ற
உமது தூய ஊழியராகிய இயேசுவுக்கு எதிராக
ஏரோதும் பொந்தியு பிலாத்தும்
பிற இனத்தவரோடும் இஸ்ரயேல் மக்களோடும் ஒன்று திரண்டனர். [6]
28 உமது கைவன்மையும் உமது திட்டமும் குறித்து
அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தனர்.
29 இப்போதுகூட ஆண்டவரே, அவர்கள் அச்சுறுத்துவதைப் பாரும்.
உம் அடியார் முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக்கூற அருள் தாரும். [7]
30 உமது தூய ஊழியர் இயேசுவின் பெயரால்
உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்;
அடையாளங்களும் அருஞ் செயல்களும் நடைபெறச் செய்யும்."
31 இவ்வாறு மன்றாடியவுடன் அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது.
அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க்
கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர். [8]

பொது உடைமை[தொகு]


32 நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும்
ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.
அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை;
எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது.
33 திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என
மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர்.
அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர்.
34 தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை.
நிலபுலன்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று
அந்தத் தொகையைக் கொண்டு வந்து
35 திருத்தூதருடைய காலடியில் வைப்பர்;
அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.
36 சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார்.
இவருக்குத் திருத்தூதர்கள் 'ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்' என்று பொருள்படும்
பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தார்கள்.
37 அவர் தமது நிலத்தை விற்று
அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார்.


குறிப்புகள்

[1] 4:11 = திபா 118:22; மத் 21:42; 1 பேது 2:7
[2] 4:16 = யோவா 11:47,48.
[3] 4:20 = 1 கொரி 9:16; 2 திமொ 1:7,8.
[4] 4:24 = விப 20:11; நெகே 9:6; திபா 146:6.
[5] 4:25,26 = திபா 2:1,2.
[6] 4:27 = லூக் 23:7-11; மத் 27:1,2; மாற் 15:1;
லூக் 23:1; யோவா 18:28,29.
[7] 4:29 = எபே 6:19.
[8] 4:32 = பிலி 1:27.


(தொடர்ச்சி): திருத்தூதர் பணிகள்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை