திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
"கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன். அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு, பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும். எனவே நம்மில் நிறைவு அடைந்தோர் யாவருக்கும் இத்தகைய மனநிலையே இருத்தல் வேண்டும். " (பிலிப்பியர் 5:12-15)

பிலிப்பியர் (Philippians)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

5. எதிரிகள் குறித்து எச்சரிக்கை[தொகு]

மீட்புக்கு வழி[தொகு]


1 இறுதியாக, என் சகோதர சகோதரிகளே,
ஆண்டவரோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சியடையுங்கள்.


எழுதியதையே மீண்டும் எழுதுவது எனக்குத் தொல்லையாயில்லை;
உங்கள் நன்மைக்காகவே எழுதுகிறேன்.
2 அந்த நாய்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்;
அந்தக் கெட்ட ஊழியர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்.
'உறுப்பு சிதைப்போரைக்' குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
3 ஏனெனில், உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ளாமல்,
கடவுளின் ஆவிக்கேற்ப வழிபட்டுக்
கிறிஸ்து இயேசுவைப் பெருமைப்படுத்தும் நாமே
உண்மையான விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள்.
4 உடலைச் சார்ந்தவற்றில்
உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டுமானால் நானும் வைக்கலாம்.
உடலைச் சார்ந்தவற்றில்
உறுதியான நம்பிக்கை கொள்ள முடியும் என
யாராவது நினைத்தால், அவரைவிட மிகுதியாக
நானும் நம்பிக்கை கொள்ள முடியும்.
5 நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன்;
இஸ்ரயேல் இனத்தவன்; பென்யமின் குலத்தவன்;
எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன்;
திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன். [1]
6 திருச்சட்டத்தில் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன்.
திருச்சட்டத்தின் அடிப்படையிலான நீதிநெறியைப் பொறுத்தமட்டில்
குற்றமற்றவனாய் இருந்தேன்.
7 ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும்
கிறிஸ்துவின்பொருட்டு இழப்பு எனக் கருதினேன்.
8 உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில்
என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே
நான் பெறும் ஒப்பற்றச் செல்வம்.
இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன்.
அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன்.
கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருகிறேன்.
9 கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன்.
திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவனாக இயலாது.
கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான்
அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும்.
இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது;
நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
10 கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும்
அவருடைய துன்பங்களில் பங்கேற்று,
சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்.
11 அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும்.

இலக்கை நோக்கி ஓடுதல்[தொகு]


12 நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ,
நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை.
கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம்
நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன்.
13 அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை.
ஆனால் ஒன்றுமட்டும் செய்கிறேன்.
கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு,
14 பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்.
கிறிஸ்து இயேசுவின் மூலம்
கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.
15 எனவே நம்மில் நிறைவு அடைந்தோர் யாவருக்கும்
இத்தகைய மனநிலையே இருத்தல் வேண்டும்.
எதைப்பற்றியாவது நீங்கள் மாறுபட்டக் கருத்துக் கொண்டிருந்தால்
அதைப்பற்றிய உண்மையைக் கடவுளே உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
16 நாம் எந்த நிலையை அடைந்திருந்தாலும், அதற்கேற்பத் தொடர்ந்து நடப்போம்.


17 சகோதர சகோதரிகளே,
நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள்.
நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். [2]
18 கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர்.
அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன்.
இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன்.
19 அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்;
மானக்கேடே அவர்கள் பெருமை;
அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே.
20 நமக்கோ விண்ணகமே தாய்நாடு;
அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து
வருவாரெனக் காத்திருக்கிறோம்.
21 அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை
மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும்
அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.


குறிப்புகள்

[1] 3:5 = திப 23:6; 26:5; உரோ 11:1.
[2] 3:17 = 2 கொரி 4:16; 11:1.


அதிகாரம் 4[தொகு]


1 ஆகவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
என் வாஞ்சைக்குரியவர்களே,
நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை;
அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்.

அறிவுரை[தொகு]


2 ஆண்டவரோடு இணைந்து ஒருமனத்தவராய் இருக்கும்படி
எயோதியாவைக் கேட்டுக்கொள்கிறேன்;
சிந்திக்காவை கெஞ்சிக் கேட்கிறேன்.
3 என் உண்மையான தோழரே,
அவர்களுக்கு உதவி செய்யுமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.
ஏனெனில் அவர்கள் கிளமந்தோடும்,
மற்ற உடன் உழைப்பாளரோடும் என்னோடும் சேர்ந்து
நற்செய்திக்காகப் போராடினார்கள்.
அவர்களுடைய பெயர்கள் வாழ்வோரின் நூலில் எழுதப்பட்டுள்ளன.


4 ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்;
மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.


5 கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும்.
ஆண்டவர் அண்மையில் உள்ளார்.
6 எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்.
ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு
ஆகிய அனைத்தின் வழியாகவும்
கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள்.
7 அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி
கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும்
மனத்தையும் பாதுகாக்கும்.


8 இறுதியாக, சகோதர சகோதரிகளே,
உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ,
நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ,
விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ,
நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ,
அவற்றையே மனத்தில் இருத்துங்கள்.
9 நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை,
என் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை,
என்னிடம் கேட்டறிந்தவை,
என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள்.
அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார்.

6. பவுலும் பிலிப்பிய நண்பர்களும்[தொகு]

நன்கொடைகளுக்கு நன்றி[தொகு]


10 என்னைப்பற்றிய அக்கறை இப்பொழுதாவது
மீண்டும் உங்களிடையே எழுந்தது கண்டு
ஆண்டவர் அருளால் நான் பெரிதும் மகிழ்கிறேன்.
நீங்கள் என்னைப் பற்றி அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பது உண்மைதான்.
ஆனால் அதைக் காட்டிக் கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லை.
11 எனக்கு ஏதோ குறைவாய் இருப்பதால் இவ்வாறு சொல்கிறேன்
என நினைக்க வேண்டாம்.
ஏனெனில் எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்கக் கற்றுக் கொண்டுள்ளேன்.
12 எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும்.
வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ,
நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப்
பயிற்சி பெற்றிருக்கிறேன்.
13 எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு
எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.


14 ஆயினும் நான் பட்ட துன்பத்தில் நீங்கள் பங்குகொண்டது
உங்கள் நன்மனத்தைக் காட்டுகிறது.
15 பிலிப்பியர்களே,
நான் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கின காலத்தில்,
மாசிதோனியாவை விட்டுச் சென்றபிறகு,
உங்களைத்தவிர வேறெந்தத் திருச்சபையும்
என் வரவு செலவில் பங்கேற்கவில்லை. இதை நீங்களும் அறிவீர்கள்.
16 ஏனெனில் நான் தெசலோனிக்காவில் இருந்தபோதுகூட
என் தேவையை நிறைவுசெய்ய ஒரு முறை மட்டுமல்ல,
இரு முறை உதவி அனுப்பினீர்கள். [1]
17 நான் உங்கள் நன்கொடைகளை நாடவில்லை;
மாறாக, உங்கள் கணக்கில் நற்பயன்கள் பெருகவேண்டும் என்றே விரும்புகிறேன்.
18 நீங்கள் அனுப்பியதெல்லாம் பெற்றுக்கொண்டேன்.
இப்பொழுது என்னிடம் நிறையவே இருக்கிறது.
நீங்கள் அனுப்பியவற்றை
எப்பப்பிராதித்துவிடமிருந்து பெற்றுக்கொண்டு நிறைவுற்றிருக்கிறேன்.
அவை நறுமணம் வீசும் காணிக்கையும்
கடவுளுக்கு ஏற்புடைய, உகந்த பலியுமாகும். [2]
19 என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த்
தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு,
உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்.
20 நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

7. முடிவுரை[தொகு]

இறுதி வாழ்த்து[தொகு]


21 கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் இறைமக்கள் யாவருக்கும்
வாழ்த்து கூறுங்கள்.
என்னோடிருக்கிற சகோதரர் சகோதரிகள் உங்களுக்கு வாழ்த்துக்கூறுகிறார்கள்.
22 இறைமக்கள் எல்லாரும்,
சிறப்பாகச் சீசரின் அரண்மனைப் பணியாளர்களும்
உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.


23 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக!


குறிப்புகள்

[1] 4:15,16 = 2 கொரி 11:9.
[2] 4:18 = விப 29:18.


(பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): கொலோசையருக்கு எழுதிய திருமுகம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை