திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மத்தேயு நற்செய்தி/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

விக்கிமூலம் இலிருந்து
"'எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே, உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே. கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே! இதோ! உங்கள் இறை இல்லம் கைவிடப்பட்டுப் பாழடையும்..." - மத்தேயு 23:37-38

மத்தேயு நற்செய்தி (Matthew)[தொகு]

அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

அதிகாரம் 23[தொகு]

மறைநூல் அறிஞர், பரிசேயர் கண்டிக்கப்படல்[தொகு]

(மாற் 12:38-40; லூக் 11:37-52; 20:45-47)


1 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது:
2 "மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.
3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ
அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள்.
ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள்.
ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.
4 சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி
மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்;
ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள். [1]
5 தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்;
தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை [2] அகலமாக்குகிறார்கள்;
அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். [3]
6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும்
தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்;
7 சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும்
ரபி [4] என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.
8 ஆனால் நீங்கள் 'ரபி' என அழைக்கப்பட வேண்டாம்.
ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே.
நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.
9 இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம்.
ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.
10 நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம்.
ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.
11 உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். [5]
12 தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர்.
தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர். [6]


13 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு!
மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக
விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்;
நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை; (14) [7]


15 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு!
ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு,
நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்;
அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட
இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.


16 "குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு!
யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை;
ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால்
அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்.
17 குருட்டு மடையரே! எது சிறந்தது?
பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா?
18 யாராவது பலிபீடத்தின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை;
ஆனால் அவர் அதில் படைக்கப்பட்ட காணிக்கையின்மீது ஆணையிட்டால்
அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்.
19 குருடரே! எது சிறந்தது?
காணிக்கையா? காணிக்கையைத் தூயதாக்கும் பலிபீடமா?
20 எனவே பலிபீடத்தின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும்
அதன்மேலுள்ள அனைத்தின்மீதும் ஆணையிடுகிறார்.
21 திருக்கோவிலின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும்
அதில் குடிகொண்டிருக்கிறவர்மீதும் ஆணையிடுகிறார்.
22 வானத்தின் மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணைமீதும்
அதில் வீற்றிருக்கிற கடவுள்மீதும் ஆணையிடுகிறார். [8]


23 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு!
நீங்கள் புதினா, சோம்பு, சிரகம் ஆகியவற்றில்
பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள்.
ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம்,
நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டு விடுகிறீர்கள்.
இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றையும் விட்டுவிடக்கூடாது. [9]
24 குருட்டு வழிகாட்டிகளே!
நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள்.
ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்.


25 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு!
ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள்.
ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும்
தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்.
26 குருட்டுப் பரிசேயரே,
முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள்.
அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.
27 வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு!
ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள்.
அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன;
அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும்
எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. [10]
28 அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு
நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள்.
ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள். [11]


29 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு!
ஏனெனில் நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்;
நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுப்படுத்துகிறீர்கள்;
30 'எங்கள் மூதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால்
இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்' என்கிறீர்கள். [12]
31 இவ்வாறு நீங்கள் இறைவாக்கினரைக்
கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள். [13]
32 உங்கள் மூதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு நீங்களும் செய்து முடியுங்கள்.
33 பாம்புகளே, விரியன் பாம்புக் குட்டிகளே,
நரகத் தண்டனையிலிருந்து நீங்கள் எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?
34 எனவே இதைக் கேளுங்கள்.
நான் உங்களிடையே இறைவாக்கினரையும் ஞானிகளையும்
மறைநூல் அறிஞர்களையும் அனுப்புகிறேன்.
இவர்களுள் சிலரை நீங்கள் கொல்வீர்கள்;
சிலரைச் சிலுவையில் அறைவீர்கள்;
சிலரை உங்கள் தொழுகைக் கூடங்களில் சாட்டையால் அடிப்பீர்கள்;
நகரங்கள்தோறும் அவர்களைத் துரத்தித் துன்புறுத்துவீர்கள்.
35 இவ்வாறு நேர்மையாளரான ஆபேலின் இரத்தம்முதல்
திருக்கோவிலுக்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொன்ற
பரக்கியாவின் மகன் சக்கரியாவின் இரத்தம்வரை
இம்மண்ணில் சிந்தப்பட்ட நேர்மையாளர் அனைவரின் இரத்தப் பழியும்
உங்கள்மேல் வந்து சேரும். [14]
36 இத்தலைமுறையினரே இத் தண்டனைகள் அனைத்தையும் அடைவர் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

எருசலேமுக்காகப் புலம்புதல்[தொகு]

(லூக் 13:34-35)


37 "எருசலேமே, எருசலேமே,
இறைவாக்கினரைக் கொல்லும் நகரே,
உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே.
கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல
நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள
எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே! [15]
38 இதோ! உங்கள் இறை இல்லம் கைவிடப்பட்டுப் பாழடையும்.
39 எனவே இதுமுதல்,

'ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசிபெற்றவர்!'


என நீங்கள் கூறும்வரை என்னைக் காண மாட்டீர்கள் என்று
நான் உங்களுக்குச் சொல்கிறேன். [16]


குறிப்புகள்

[1] 23:4 = இச 17:10,11; உரோ 2:17-24.
[2] 23:5 - "மறைநூல் வாசகப்பட்டை" என்பது திருச்சட்டநூல் வாசகங்களைக் கொண்ட
நெற்றியிலும் கையிலும் கட்டப்படும் பட்டை ஆகும்.
[3] 23:5 = மத் 6:8; எண் 15:38; இச 6:8.
[4] 23:7 - "ரபி" என்னும் எபிரேயச் சொல்லுக்குப் "போதகர்" என்பது பொருள்.
[5] 23:11 = மத் 20:26,27; மாற் 9:35; 10:43,44; லூக் 22:26.
[6] 23:12 = லூக் 14:11; 18:14; 1:52,53.
[7] 23:14 - "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு!
நீங்கள் கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்ளுகிறீர்கள்.
நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறீர்கள்.
இதன் பொருட்டுக் கடும் தண்டனைத் தீர்ப்புப் பெறுவீர்கள்"
என்னும் வசனம் சில முக்கியமல்லாத கையெழுத்துப்படிகளில் காணப்படுகிறது.
[8] 23:22 = எசா 66:1; மத் 5:34.
[9] 23:23 = லேவி 27:30; இச 14:22; எசே 45:13.
[10] 23:27 = திப 23:3.
[11] 23:28 = லூக் 16:15; 18:9.
[12] 23:30 = லூக் 11:47.
[13] 23:31 = திப 7:52.
[14] 23:35 = தொநூ 4:8-10; எபி 11:4; திவெ 16:6; 18:24.
[15] 23:37 = திபா 17:8; 91:4.
[16] 23:38,39 = திபா 118:26.


அதிகாரம் 24[தொகு]

நிறைவுகாலப் பொழிவு[தொகு]

எருசலேம் கோவிலின் அழிவுபற்றி முன்னறிவித்தல்[தொகு]

(மாற் 13:1-2; லூக் 21:5-6)


1 இயேசு கோவிலைவிட்டு வெளியே சென்றுகொண்டிருந்தபோது
அவருடைய சீடர்கள் கோவில் கட்டடங்களை அவருக்குக் காட்ட
அவரை அணுகி வந்தார்கள்.
2 அவர் அவர்களைப் பார்த்து,
"இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா!
இங்கே, கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

வரப்போகும் கேடு பற்றி அறிவித்தல்[தொகு]

(மாற் 13:3-13; லூக் 21:7-19)


3 ஒலிவ மலைமீது இயேசு அமர்ந்திருந்தபோது
சீடர்கள் அவரிடம் தனியாக வந்து,
"நீர் கூறியவை எப்போது நிகழும்?
உமது வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன?
எங்களுக்குச் சொல்லும்" என்று கேட்டார்கள். [1]
4 அதற்கு இயேசு கூறியது:
"உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
5 ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக் கொண்டு வந்து,
'நானே மெசியா' என்று சொல்லிப் பலரை நெறி தவறச் செய்வர்.
6 போர் முழக்கங்களையும் போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கப் போகிறீர்கள்.
ஆனால் திடுக்கிடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இவையே முடிவாகா.
7 நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.
பல இடங்களில் பஞ்சமும் நில நடுக்கங்களும் ஏற்படும்.
8 இவையனைத்தும் பேறுகால வேதனைகளின் தொடக்கமே.
9 பின்பு உங்களைத் துன்புறுத்திக் கொல்வதற்கென ஒப்புவிப்பர்.
என் பெயரின் பொருட்டு எல்லா மக்கள் இனத்தவரும் உங்களை வெறுப்பர். [2]
10 அப்பொழுது பலர் நம்பிக்கையை இழந்துவிடுவர்;
ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பர்; ஒருவரையொருவர் வெறுப்பர்.
11 பல போலி இறைவாக்கினர் தோன்றிப் பலரை நெறிதவறி அலையச் செய்வர்.
12 நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்.
13 ஆனால் இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்.
14 உலகமெங்கும் உள்ள எல்லா மக்களினத்தாரும் ஏற்றுக்கொள்ளுமாறு
விண்ணரசைப்பற்றிய இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்படும்.
அதன் பின்பு முடிவு வரும்.

வரப்போகும் பெரும் துன்பம்[தொகு]

(மாற் 13:14-23; லூக் 21:20-24)


15 "இறைவாக்கினர் தானியேல் உரைத்த,
'நடுங்கவைக்கும் தீட்டு' [3] திருவிடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள்.
- அப்பொழுது இதைப்படிப்பவர் புரிந்துகொள்ளட்டும்.-
16 யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.
17 வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்கித்
தம் வீட்டிலிருந்து எதையும் எடுக்காது ஓடட்டும்.
18 வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வரவேண்டாம். [4]
19 அந்நாள்களில் கருவுற்றிருப்போர் பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்!
20 குளிர்காலத்திலோ ஓய்வு நாளிலோ
நீங்கள் ஓடவேண்டிய நிலை ஏற்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்.
21 ஏனெனில் அப்போது பெரும் வேதனை உண்டாகும்.
உலகத் தோற்றமுதல் இந்நாள்வரை இத்தகைய துன்பம் உண்டானதில்லை;
இனிமேலும் உண்டாகப்போவதில்லை. [5]
22 அந்நாள்கள் குறைக்கப்படாவிட்டால் எவரும் தப்பிப் பிழைக்கமுடியாது.
எனவே தாம் தேர்ந்துகொண்டவர்களின் பொருட்டுக் கடவுள் அந்நாள்களைக் குறைப்பார்.
23 அப்பொழுது யாராவது உங்களிடம்,
'இதோ, மெசியா இங்கே இருக்கிறார்! அதோ, அங்கே இருக்கிறார்'
எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம். [6]
24 ஏனெனில் போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி,
முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறி தவறச் செய்ய
பெரும் அடையாளங்களையும் அருஞ் செயல்களையும் செய்வார்கள். [7]
25 இதை முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்.
26 ஆகையால் எவராவது உங்களிடம் வந்து,
'அதோ, பாலைநிலத்தில் இருக்கிறார்' என்றால் அங்கே போகாதீர்கள்;
'இதோ, உள்ளறையில் இருக்கிறார்' என்றால் நம்பாதீர்கள்.
27 ஏனெனில் மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை ஒளிர்வது போல
மானிட மகனின் வருகையும் இருக்கும்.
28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும். [8]

மானிடமகன் வருகை[தொகு]

(மாற் 13:24-27; லூக் 21:25-26)


29 "துன்பநாள்கள் முடிந்த உடனே கதிரவன் இருண்டுவிடும்;
நிலா தன் ஒளி கொடாது;
விண்மீன்கள் வானத்திலிருந்து விழும்;
வான்வெளிக்கோள்கள் அதிரும். [9]
30 பின்பு வானத்தில் மானிட மகன் வருகையின் அறிகுறி தோன்றும்.
அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன்
வானத்தின் மேகங்களின்மீது வருவார்.
இதைக் காணும் மண்ணுலகிலுள்ள எல்லாக் குலத்தவரும் மாரடித்துப் புலம்புவர். [10]
31 அவர் தம் தூதரைப் பெரிய எக்காளத்துடன் அனுப்புவார்.
அவர்கள் உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை
நான்கு திசைகளிலிருந்தும்
தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள்.

அத்தி மர உவமை[தொகு]

(மாற் 13:28-31; லூக் 21:29-33)


32 "அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள்.
அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது
கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.
33 அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது
மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
34 இவை அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
35 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்.
ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.

மானிடமகன் வரும் நாளும் வேளையும்[தொகு]

(மாற் 13:32-37; லூக் 17:26,30,34-36)


36 "அந்த நாளையும் வேளையையும்பற்றித்
தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது.
விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது.
37 நோவாவின் காலத்தில் இருந்தது போலவே
மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். [11]
38 வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில்,
நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை
எல்லாரும் திருமணம் செய்து கொண்டும்
உண்டும் குடித்தும் வந்தார்கள்.
39 வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை
அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள்.
அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். [12]
40 இருவர் வயலில் இருப்பர்.
ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.
41 இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர்.
ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.
42 விழிப்பாயிருங்கள்;
ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.
43 இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று
வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால்
அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள்.
44 எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்.
ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். [13]

நம்பிக்கைக்குரிய பணியாளர்[தொகு]

(லூக் 12:41-48)


45 "தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத்
தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரிய வரும் அறிவாளியுமான பணியாளர் யார்?
46 தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர்.
அவர் பேறு பெற்றவர்.
47 அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
48 அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால்,
தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு,
49 தன் உடன் பணியாளரை அடிக்கவும்
குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான்.
50 அப்பணியாள் எதிர்பாராத நாளில்,
அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார்.
51 அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி
வெளி வேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.
அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.


குறிப்புகள்

[1] 24:3 = 1 யோவா 2:28.
[2] 24:9 = மத் 10:22.
[3] 24:15 - "நடுங்க வைக்கும் தீட்டு" என்பது மக்கபேயர் காலத்தில்
எருசலேம் கோவிலில் அந்தியோக்கு எப்பிப்பானசு நிறுவிய
சிலையைக் குறிக்கும். இதனைப் பற்றித் தானி 9:27; 11:31; 12:11;
1 மக் 1:54 ஆகிய வசனங்களில் காணலாம்.
[4] 24:17,18 = லூக் 17:31.
[5] 24:21 = தானி 12:1; திவெ 7:14.
[6] 24:23 = லூக் 17:23,24; 2 தெச 2:3; 4:9.
[7] 24:24 = 2 பேது 2:1-3; 1 யோவா 4:1.
[8] 24:28 = யோபு 39:30; லூக் 17:37.
[9] 24:29 = எசா 13:10; 34:4; எசே 32:7;
யோவே 2:10,31; 3:15; திவெ 6:12,13.
[10] 24:30 = தானி 7:13; திவெ 1:7; 1 தெச 4:16.
[11] 24:37 = தொநூ 6:5-8; எபி 11:7.
[12] 24:39 = தொநூ 7:11-23; 2 பேது 3:6.
[13] 24:42-44 = மத் 25:13; லூக் 12:39,40;
1 தெச 5:2; 2 பேது 3:10; திவெ 3:3.


(தொடர்ச்சி): மத்தேயு நற்செய்தி: அதிகாரங்கள் 25 முதல் 26 வரை