திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

விக்கிமூலம் இலிருந்து
"பின்பு பெரிய, வெண்மையான ஓர் அரியணையைக் கண்டேன். அதில் ஒருவர் வீற்றிருந்தார். அவர் முன்னிலையில் மண்ணகமும் விண்ணகமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. இறந்தோருள் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவரும் அந்த அரியணைமுன் நிற்கக் கண்டேன். அப்பொழுது நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. வேறொரு நூலும் திறந்து வைக்கப்பட்டது. அது வாழ்வின் நூல். இறந்தோரின் செயல்கள் அந்நூல்களில் எழுதப்பட்டிருந்தன. அவற்றுக்கு ஏற்ப அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் கடல் தன்னகத்தே இருந்த இறந்தோரை வெளியேற்றியது. அதுபோலச் சாவும், பாதாளமும் தம்மகத்தே இருந்த இறந்தோரை வெளியேற்றின. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பத் தீர்ப்பு வழங்கப்பட்டது." (திருவெளிப்பாடு 20:11-13)


திருவெளிப்பாடு (Revelation)[தொகு]

அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

அதிகாரம் 19[தொகு]

விண்ணகத்தில் எழுந்த வெற்றி முழக்கம்[தொகு]


1 இதன்பின் பெருந்திரளான மக்களின் கூச்சல்போன்ற ஒலி
விண்ணகத்தில் எழக் கேட்டேன்.
அது பின்வருமாறு முழங்கியது:


"அல்லேலூயா! [1]


மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.
2 ஏனெனில் அவருடைய தீர்ப்புகள் உண்மை உள்ளவை, நீதியானவை.
தன் பரத்தைமையால் மண்ணுலகை அழிவுக்குட்படுத்திய
பேர்போன அந்த விலைமகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கினார்;
தம் பணியாளர்களைக் கொன்றதற்காக


அவளைப் பழிவாங்கினார்." [2]


3 மீண்டும் அந்த மக்கள்,


"அல்லேலூயா!


அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும்


மேலே எழுந்த வண்ணம் உள்ளது"


என்றார்கள். [3]
4 அந்த இருபத்து நான்கு மூப்பர்களும் நான்கு உயிர்களும்
அரியணையில் வீற்றிருந்த கடவுள்முன் விழுந்து வணங்கி,
"ஆமென், அல்லேலூயா" என்று பாடினார்கள்.

ஆட்டுக்குட்டியின் திருமண விருந்து[தொகு]


5 அரியணையிலிருந்து எழுந்த ஒரு குரல்,


"கடவுளின் பணியாளர்களே,


அவருக்கு அஞ்சி நடப்பவர்களே,
சிறியோர்களே, பெரியோர்களே,


நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள்"


என்று ஒலித்தது. [4]
6 பின்னர் பெருந்திரளான மக்களின் கூச்சல்போலும்
பெரும் வெள்ளத்தின் இரைச்சல்போலும்
பேரிடி முழக்கம் போலும் எழுந்த பேரொலியைக் கேட்டேன்.
அது சொன்னது:


"அல்லேலூயா!


நம் கடவுளாகிய ஆண்டவர், எல்லாம் வல்லவர்;
அவர் ஆட்சி செலுத்துகின்றார். [5]
7 எனவே மகிழ்வோம்,
பேருவகையுடன் அவரைப் போற்றிப் புகழ்வோம்.
ஏனெனில் ஆட்டுக்குட்டியின் திருமண விழா வந்துவிட்டது.
மணமகளும் விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கிறார்.
8 மணமகள் அணியுமாறு பளபளப்பான, தூய்மையான,
விலையுயர்ந்த மெல்லிய ஆடை அவருக்கு அளிக்கப்பட்டது.


அந்த ஆடை இறைமக்களின் நீதிச் செயல்களே."


9 அந்த வானதூதர் என்னிடம்,
"'ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு


அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்' என எழுது"


என்று கூறினார். தொடர்ந்து,
"இவை கடவுளின் உண்மையுள்ள சொற்கள்" என்று சொன்னார். [6]
10 நான் வானதூதரை வணங்கும் பொருட்டு அவரது காலடியில் விழுந்தேன்.
ஆனால் அவரோ என்னிடம்,
"வேண்டாம். இயேசுவுக்குச் சான்று பகர்ந்த [] உனக்கும்
உன் உடன்பிறப்புகளுக்கும் நான் உடன்பணியாளனே.
கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்" என்றார்.
ஏனெனில் இயேசு பகர்ந்த சான்றே இறைவாக்குகளுக்கு உயிர்மூச்சு.

வெண் குதிரை மீது அமர்ந்திருந்தவர்[தொகு]


11 பின்னர் நான் விண்ணகம் திறந்திருக்கக் கண்டேன்.
அங்கே ஒரு வெண்குதிரை காணப்பட்டது.
அதன்மேல் ஒருவர் அமர்ந்திருந்தார்.
'நம்பிக்கைக்குரியவர், உண்மையுள்ளவர்' என்பது அவருடைய பெயர்.
அவர் நீதியோடு தீர்ப்பளித்துப் போர் தொடுப்பார். [7]
12 அவருடைய கண்கள் தீப்பிழம்பு போலத் தென்பட்டன.
அவரது தலைமேல் பல மணிமுடிகள் இருந்தன.
அவரைத்தவிர வேறு எவருக்கும் தெரிந்திராத பெயர் ஒன்று
அவர்மீது எழுதப்பட்டிருந்தது. [8]
13 இரத்தம் தோய்ந்த ஆடையை அவர் அணிந்திருந்தார்.
'கடவுளின் வாக்கு' என்பது அவரது பெயர்.
14 வெண்மையும் தூய்மையுமான
விலையுயர்ந்த மெல்லிய ஆடை அணிந்த விண்ணகப்படைகள்
வெண் குதிரைகளில் அவரைப்பின் தொடர்ந்தன.
15 நாடுகளைத் தாக்குவதற்காக அவருடைய வாயிலிருந்து
கூர்மையான வாள் ஒன்று வெளியே வந்தது.
அவர் இருப்புக்கோல் கொண்டு அவர்களை நடத்துவார்;
எல்லாம் வல்ல கடவுளின் கடும் சீற்றம் என்னும்
பிழிவுக்குழியில் திராட்சை இரசத்தை அவர் பிழிந்தெடுப்பார். [9]


16 'அரசர்க்கெல்லாம் அரசர், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர்'
என்ற பெயர் அவருடைய ஆடையிலும் தொடையிலும் எழுதப்பட்டிருந்தது.


17 பின்னர் ஒரு வானதூதர் கதிரவன்மீது நிற்பதை நான் கண்டேன்.
அவர் நடுவானில் பறந்துகொண்டிருந்த எல்லாப் பறவைகளையும் பார்த்து,
உரத்த குரலில் கத்தி,
"வாருங்கள், கடவுள் அளிக்கும் பெரும் விருந்துக்கு வந்துகூடுங்கள்.


18 அரசர்கள், ஆயிரத்தவர் தலைவர்கள்,
வலியோர், படைவீரர்கள், குதிரைகள்,
குதிரைவீரர்கள், உரிமைக்குடிமக்கள், அடிமைகள்,
சிறியோர், பெரியோர் ஆகிய அனைவருடைய
சதையையும் தின்ன வாருங்கள்" என்றார். [10]


19 அந்த விலங்கும் மண்ணுலக அரசர்களும்
அவர்களுடைய படைகளும் குதிரைமீது அமர்ந்திருந்தவரோடும்
அவருடைய படைகளோடும் போர் தொடுக்குமாறு கூடியிருக்கக் கண்டேன்.


20 அவ்விலங்கு பிடிபட்டது.
அதன் முன்னிலையில் அரும் அடையாளங்கள் செய்திருந்த
போலி இறைவாக்கினனும் அதனோடு சேர்ந்து பிடிபட்டான்.
தான் செய்த அரும் அடையாளங்களால்
அந்த விலங்குக்குரிய குறி இட்டுக்கொண்டவர்களையும்
அதன் சிலையை வணங்கி வந்தவர்களையும் ஏமாற்றியவன் அவனே.
அந்தப் போலி இறைவாக்கினனும் விலங்கும்
கந்தகம் எரிந்துகொண்டிருந்த நெருப்பு ஏரியில் உயிரோடு எறியப்பட்டார்கள். [11]


21 மற்றவர்கள் குதிரைமீது அமர்ந்திருந்தவருடைய வாயினின்று
வெளியே வந்த வாளால் கொல்லப்பட்டார்கள்.
பறவைகளெல்லாம் அவர்களின் சதையை வயிறாரத் தின்றன.


குறிப்புகள்

[1] 19:1 - "அல்லேலூயா" என்ற எபிரேயச் சொல்லுக்கு
"ஆண்டவரைப் போற்றுங்கள்" என்பது பொருள்.
[2] 19:2 = இச 32:43; 2 அர 9:7.
[3] 19:3 = எசா 34:10.
[4] 19:5 = திபா 115:13.
[5] 19:6 = எசே 1:24; திபா 93:1; 97:1; 99:1.
[6] 19:9 = மத் 22:2,3.
[7] 19:11 = எசே 1:1; திபா 96:13; எசா 11:4.
[8] 19:12 = தானி 10:6.
[9] 19:15 = திபா 2:9; எசா 63:3; யோவே 3:13; திவெ 14:20.
[10] 19:17,18 = எசே 39:17-20.
[11] 19:20 = திவெ 13:1-18.


அதிகாரம் 20[தொகு]

ஆயிரம் ஆண்டு ஆட்சி[தொகு]


1 பின்னர் வானதூதர் ஒருவர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன்.
படுகுழியின் திறவுகோலும் முரட்டுச் சங்கிலியும் அவர் கையில் இருந்தன.


2 அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட அரக்கப் பாம்பை அவர் பிடித்தார்.
அதுவே தொடக்கத்தில் இருந்த பாம்பு.
வானதூதர் ஆயிரம் ஆண்டுகளுக்கு அதைக் கட்டிவைத்தார்; [1]
3 பின்னர் அதைப் படுகுழியில் தள்ளி, குழியை அடைத்து, முத்திரையிட்டார்;
இவ்வாறு அந்த ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை
நாடுகளை அது ஏமாற்றாதவாறு செய்தார்.
இதன்பின் சிறிது காலத்துக்கு அது கட்டவிழ்த்து விடப்பட வேண்டும்.


4 பின்பு நான் அரியணைகளைக் கண்டேன்.
தீர்ப்பளிக்கும் அதிகாரம் பெற்றிருந்த சிலர் அவற்றின்மீது வீற்றிருந்தனர்.
கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததற்காகத்
தலை கொடுத்தவர்களின் ஆன்மாக்களையும் கண்டேன்.
அவர்கள் அந்த விலங்கையோ அதன் சிலையையோ வணங்கியதில்லை;
அதற்குரிய குறியைத் தங்கள் நெற்றியிலோ கையிலோ இட்டுக்கொண்டதுமில்லை.
அவர்கள் மீண்டும் உயிர்பெற்று,
ஆயிரம் ஆண்டுகள் கிறிஸ்துவோடு ஆட்சி புரிந்தார்கள். [2]


5 இறந்த ஏனையோர் அந்த ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை உயிர் பெறவில்லை.
இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.


6 இந்த முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெறுவோர் பேறுபெற்றோர்;
அவர்கள் தூயோர் ஆவர்.
அவர்கள் மீது இரண்டாம் சாவுக்கு அதிகாரம் இல்லை.
அவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் பணிபுரியும் குருக்களாய் இருப்பார்கள்;
கிறிஸ்துவோடு ஆயிரம் ஆண்டுகள் ஆட்சிபுரிவார்கள்.

சாத்தானின் தோல்வி[தொகு]


7 அந்த ஆயிரம் ஆண்டுகள் முடிந்ததும்
சாத்தான் சிறையிலிருந்து கட்டவிழ்த்து விடப்படுவான்.


8 மண்ணகத்தின் நான்கு திக்குகளிலும் உள்ள நாடுகளை,
அதாவது கோகு, மாகோகு என்பவற்றை ஏமாற்றவும்,
அங்கிருந்து கடல் மணல் போன்ற பெருந் தொகையினரைப்
போருக்கு ஒன்று திரட்டவும் அவன் புறப்பட்டுச் செல்வான். [3]


9 அவர்கள் மண்ணுலகெங்கும் பரவிச் சென்று,
இறைமக்களின் பாசறையையும்
கடவுளின் அன்புக்குரிய நகரையும் சூழ்ந்து கொண்டார்கள்.
ஆனால், நெருப்பு வானத்திலிருந்து வந்து அவர்களைச் சுட்டெரித்தது.


10 பின்பு அவர்களை ஏமாற்றி வந்த அலகை
கந்தக, நெருப்பு ஏரியில் எறியப்பட்டது.
அங்கேதான் அந்த விலங்கும் அதன் போலி இறைவாக்கினனும் எறியப்பட்டிருந்தார்கள்.
அவர்கள் இரவு பகலாக என்றென்றும் வதைக்கப்படுவார்கள்.

இறுதித் தீர்ப்பு[தொகு]


11 பின்பு பெரிய, வெண்மையான ஓர் அரியணையைக் கண்டேன்.
அதில் ஒருவர் வீற்றிருந்தார்.
அவர் முன்னிலையில் மண்ணகமும் விண்ணகமும்
இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன.


12 இறந்தோருள் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவரும்
அந்த அரியணைமுன் நிற்கக் கண்டேன்.
அப்பொழுது நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.
வேறொரு நூலும் திறந்து வைக்கப்பட்டது. அது வாழ்வின் நூல்.
இறந்தோரின் செயல்கள் அந்நூல்களில் எழுதப்பட்டிருந்தன.
அவற்றுக்கு ஏற்ப அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. [4]
13 பின்னர் கடல் தன்னகத்தே இருந்த இறந்தோரை வெளியேற்றியது.
அதுபோலச் சாவும், பாதாளமும் தம்மகத்தே இருந்த இறந்தோரை வெளியேற்றின.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பத் தீர்ப்பு வழங்கப்பட்டது.


14 சாவும் பாதாளமும் நெருப்பு ஏரியில் எறியப்பட்டன.
இந்த நெருப்பு ஏரியே இரண்டாம் சாவு.


15 வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் நெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள்.


குறிப்புகள்

[1] 20:2 = தொநூ 3:1.
[2] 20:4 = தானி 7:9,22.
[3] 20:8 = எசே 7:2; 38:2,9,15.
[4] 20:11,12 = தானி 7:9,10.


(தொடர்ச்சி): யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு: அதிகாரங்கள் 21 முதல் 22 வரை