திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவான் எழுதிய முதல் திருமுகம்/அதிகாரங்கள் 4 முதல் 5 வரை

விக்கிமூலம் இலிருந்து
"அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது." (1 யோவான் 4:8-10)

1 யோவான் (1 John)[தொகு]

அதிகாரங்கள் 4 முதல் 5 வரை

அதிகாரம் 4[தொகு]

4. உண்மையும் பொய்ம்மையும்[தொகு]


1 அன்பார்ந்தவர்களே,
தூய ஆவியின் தூண்டுதல் தமக்கு இருப்பதாகச்
சொல்லிக்கொள்ளும் எல்லாரையுமே நம்பிவிடாதீர்கள்;
அந்தத் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள்;
ஏனெனில் போலி இறைவாக்கினர் பலர் உலகெங்கும் தோன்றியுள்ளனர்.
2 இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர்
என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும்
கடவுளிடமிருந்து வருவது.
இவ்வாறு கடவுளிடமிருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள்.
3 இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும்
கடவுளிடமிருந்து வருவதல்ல.
இதுவே எதிர்க்கிறிஸ்துவிடமிருந்து வரும் தூண்டுதல்.
இந்த எதிர்க்கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே!
இதோ! இப்போதே அவன் உலகில் இருக்கிறான்.


4 பிள்ளைகளே, நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்கள்.
நீங்கள் அந்தப் போலி இறைவாக்கினர்களை வென்றுவிட்டீர்கள்;
உங்களுள் இருப்பவர் உலகில் இருக்கும் அந்த எதிர்க்கிறிஸ்துவை விடப் பெரியவர்.
5 அவர்கள் உலகைச் சார்ந்தவர்கள்.
எனவேதான் உலகு சார்ந்தவற்றையே பேசுகிறார்கள்,
உலகமும் அவர்களுக்குச் செவிசாய்க்கிறது.
6 ஆனால் நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்;
கடவுளை அறிந்துகொண்டோர் நமக்குச் செவிசாய்க்கின்றனர்.
கடவுளைச் சாராதோர் நமக்குச் [1] செவி சாய்ப்பதில்லை.
இதிலிருந்து, உண்மையான தூண்டுதல் எது,
பொய்யான தூண்டுதல் எது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

5. அன்பும் நம்பிக்கையும்[தொகு]

அன்பும் கடவுளும்[தொகு]


7 அன்பார்ந்தவர்களே,
ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக!
ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது.
அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.
அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள்.
8 அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை;
ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார்.
9 நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.
இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.
10 நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல,
மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு
தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான்
அன்பின் தன்மை விளங்குகிறது.


11 அன்பார்ந்தவர்களே,
கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால்,
நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
12 கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை.
நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால்
கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்;
அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். [2]


13 அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால்
நாம் அவரோடு இணைந்திருக்கிறோமெனவும்
அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார்எனவும் அறிந்து கொள்கிறோம்.
14 தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார்
என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம்.
15 இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்;
அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார்.


16 கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம்.
கடவுள் அன்பாய் இருக்கிறார்.
அன்பில் நிலைத்திருகிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார்.
கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.
17 கடவுள் இருப்பதுபோல் நாமும் இவ்வுலகில் இருக்கிறோம்.
எனவே தீர்ப்பு நாளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்போம்.
இவ்வாறு நம்மிடையே உள்ள அன்பு நிறைவடைகிறது.
18 அன்பில் அச்சத்திற்கு இடமில்லை;
மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும்.
ஏனெனில் அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது;
அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது.


19 அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம். [3]
20 கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு
தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர்.
தம் கண்முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர்,
கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது.
21 கடவுளிடம் அன்பு செலுத்துவோர்
தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்.
இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை.


குறிப்புகள்

[1] 4:6 - "நமக்கு" என்னும் சொல்லை "எங்களுக்கு" எனவும் மொழிபெயர்க்கலாம்.
[2] 4:12 = யோவா 1:18.
[3] 4:19 - "நாமும் அன்பு செலுத்துகிறோம்" என்பது
"நாம் அவரிடம் அன்பு செலுத்துகிறோம்" என்று
சில முக்கியமல்லாத கையெழுத்து படிகளில் காணப்படுகிறது.

அதிகாரம் 5[தொகு]

நம்பிக்கை[தொகு]


1 இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.
பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர்.
2 நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது,
கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும்.
3 ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது.
அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. [1]
4 ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்;
உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.


5 இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?
6 நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து.
அவர் நீரால் மட்டும் அல்ல, நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென
தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.
7 எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன.
8 தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை.
இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை.
9 மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே!
கடவுள் தரும் சான்று அதை விட மேலானது அன்றோ!
கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார்.
10 இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர்
இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர்.
ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை.
11 கடவுள் நமக்கு நிலை வாழ்வை அளித்துள்ளார்.
இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று. [2]

6. முடிவுரை[தொகு]


12 இறைமகனைக் கொண்டிருப்போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்;
அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார்.
13 இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என
நீங்கள் அறிந்து கொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.
14 நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின்,
அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்;
இதுவே நாம் அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை.
15 நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும்.
எனவே, நாம் அவரிடம் கேட்டவற்றைப் பெறுவோம் என்னும் உறுதி நமக்கு உண்டு.
16 பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால்,
அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்ய வேண்டும்.
கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார்.
சாவுக்குரிய பாவமும் உண்டு.
அப்பாவத்தைச் செய்வோருக்காக வேண்டுதல் செய்ய வேண்டும் என நான் சொல்லவில்லை.
17 தீச்செயல் அனைத்துமே பாவம்;
ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல.
18 கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை என்பது நமக்குத் தெரியும்.
ஏனெனில் கடவுளிடமிருந்து பிறந்தவர்களை அவர் பாதுகாக்கிறார்.
தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை.
19 நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்;
ஆனால், உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது. இது நமக்குத் தெரியும்.


20 இறைமகன் வந்து உண்மையான இறைவனை
அறிந்து கொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும்.
நாம் உண்மையான இறைவனோடும்
அவர் மகன் இயேசுகிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம்.
இவரே உண்மைக் கடவுள். இவரே நிலைவாழ்வு.


21 பிள்ளைகளே, சிலைவழி பாட்டைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.


குறிப்புகள்

[1] 5:3 = யோவா 14:15.
[2] 5:11 = யோவா 3:36.


(1 யோவான் திருமுகம் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம்: அதிகாரம் 1