திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவான் (அருளப்பர்) நற்செய்தி/அதிகாரங்கள் 19 முதல் 21 வரை

விக்கிமூலம் இலிருந்து


"இயேசு மரியாவிடம், 'ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?' என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், 'ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்' என்றார். இயேசு அவரிடம், 'மரியா' என்றார். மரியா திரும்பிப் பார்த்து, 'ரபூனி' என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு 'போதகரே' என்பது பொருள். இயேசு அவரிடம், 'என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், 'என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்' எனச் சொல்' என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று, 'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்." - யோவான் 20:15-18


யோவான் நற்செய்தி (John)[தொகு]

அதிகாரங்கள் 19 முதல் 21 வரை

அதிகாரம் 19[தொகு]


1 பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான்.
2 வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து,
செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள்.
3 அவரிடம் வந்து, "யூதரின் அரசே வாழ்க!" என்று சொல்லி
அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள்.
4 பிலாத்து மீண்டும் வெளியே வந்து அவர்களிடம்,
"அவனை நான் உங்கள்முன் வெளியே கூட்டிவருகிறேன், பாருங்கள்.
அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்" என்றான்.
5 இயேசு முள் முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார்.
பிலாத்து அவர்களிடம், "இதோ! மனிதன்" [1] என்றான்.
6 அவரைக் கண்டதும் தலைமைக் குருக்களும் காவலர்களும்,
"சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள்.
பிலாத்து அவர்களிடம்,
"நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள்.
இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்றான்.
7 யூதர்கள் அவரைப் பார்த்து,
"எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும்.
ஏனெனில் இவன் தன்னையே இறைமகன் என உரிமைகொண்டாடுகிறான்" என்றனர். [2]


8 பிலாத்து இதைக் கேட்டதும் இன்னும் மிகுதியாக அஞ்சினான்.
9 அவன் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இயேசுவிடம்,
"நீ எங்கிருந்து வந்தவன்?" என்று கேட்டான்.
ஆனால் இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை.
10 அப்போது பிலாத்து, "என்னோடு பேசமாட்டாயா?
உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு,
உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு
என்பது உனக்குத் தெரியாதா?" என்றான்.
11 இயேசு மறுமொழியாக,
"மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என் மேல் எந்த அதிகாரமும் இராது.
ஆகவே என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம் செய்தவன்" என்றார்.


12 அதுமுதல் பிலாத்து அவரை விடுவிக்க வழிதேடினான்.
ஆனால் யூதர்கள், "நீர் இவனை விடுவித்தால்
சீசருடைய நண்பராய் இருக்க முடியாது.
தம்மையே அரசராக்கிக் கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி" என்றார்கள்.
13 இவ்வார்த்தைகளைக் கேட்டதும் பிலாத்து இயேசுவை வெளியே கூட்டி வந்தான்.
'கல்தளம்' என்னும் இடத்தில் இருந்த நடுவர் இருக்கை மீது அமர்ந்தான்.
அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் 'கபதா' என்பது பெயர்.


14 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள்.
ஏறக்குறைய நண்பகல் வேளை.
பிலாத்து யூதர்களிடம், "இதோ, உங்கள் அரசன்!" என்றான்.
15 அவர்கள், "ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள்.
பிலாத்து அவர்களிடம்,
"உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவேண்டும் என்கிறீர்களா?" என்று கேட்டான்.
அதற்குக் தலைமைக் குருக்கள்,
"எங்களுக்குச் சீசரைத் தவிர வேறுஅரசர் இல்லை" என்றார்கள். [3]
16 அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான்.
அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள்.

இயேசுவைச் சிலுவையில் அறைதல்[தொகு]

(மத் 27:32-44; மாற் 15:21-32; லூக் 23:26-43)


17 இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு
'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார்.
அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்.
18 அங்கே அவர்கள் இயேசுவையும்
அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்;
அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள்.
19 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி
அதைச் சிலுவையின் மீது வைத்தான்.
அதில் "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என்று எழுதியிருந்தது.
20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால்
யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர்.
அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. [4]
21 யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம்,
"'யூதரின் அரசன்' என்று எழுத வேண்டாம்;
மாறாக, 'யூதரின் அரசன் நான்' என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும்"
என்று கேட்டுக்கொண்டார்கள்.
22 பிலாத்து அவர்களைப் பார்த்து, "நான் எழுதியது எழுதியதே" என்றான்.


23 இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்
படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து
ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள்.
அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர்.
அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது.
24 எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி,
"அதைக் கிழிக்க வேண்டாம்.
அது யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்" என்றார்கள்.


"என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து
என் உடைமீது சீட்டுப் போட்டார்கள்"


என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. [5]
25 சிலுவை அருகில் இயேசுவின் தாயும்,
தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும்,
மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்.
26 இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு
தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார்.
27 பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார்.
அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

இயேசுவின் சாவு[தொகு]

(மத் 27:45-56; மாற் 15:33-41; லூக் 23:44-49)


28 இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு,
"தாகமாய் இருக்கிறது" என்றார்.
மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். [6]
29 அங்கே ஒரு பாத்திரம் நிறையப் புளித்த திராட்சை இரசம் இருந்தது.
அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி
அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள்
30 அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு,
"எல்லாம் நிறைவேறிற்று" என்று கூறித்
தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.

இயேசுவின் விலாவைக் குத்துதல்[தொகு]


31 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள்.
அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது.
எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக்
கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு
யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள். [7]
32 ஆகவே படைவீரர் வந்து
இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவருள்
ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்;
பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள்.
33 பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள்.
அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு
அவருடைய கால்களை முறிக்கவில்லை.
34 ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார்.
உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.
35 இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி.
அவரது சான்று உண்மையானதே.
அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும்.
நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார்.


36 "எந்த எலும்பும் முறிபடாது"


என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. [8]
37 மேலும்


"தாங்கள் ஊடுருவக் குத்தியவரை
உற்றுநோக்குவார்கள்"


என்றும் மறைநூல் கூறுகிறது. [9]

இயேசுவை அடக்கம் செய்தல்[தொகு]

(மத் 27:57-61; மாற் 15:42-47; லூக் 23:50-56)


38 அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர்;
யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர்.
அவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகக்
பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான்.
யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டு போனார்.
39 முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த
நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார்.
அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து
ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். [10]
40 அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து
யூத அடக்க முறைப்படி
நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள்.
41 அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்த இடத்தில் ஒருதோட்டம் இருந்தது.
அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது.
அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை.
42 அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும்
அக்கல்லறை அருகில் இருந்ததாலும்
அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்.


குறிப்புகள்

[1] 19:5 - "பாருங்கள், இவர்தான் மனிதன்" எனவும் மொழிபெயர்க்கலாம்.
[2] 19:7 = லேவி 24:16; யோவா 10:33.
[3] 19:15 = லூக் 19:14.
[4] 19:20 = எபி 13:12.
[5] 19:24 = திபா 22:18.
[6] 19:28 = திபா 69:21; 22:15.
[7] 19:31 = இச 21:23.
[8] 19:36 = விப 12:46; எண் 9:12; திபா 34:20.
[9] 19:37 = செக் 12:10; திவெ 1:7.
[10] 19:39 = யோவா 3:1,2.


அதிகாரம் 20[தொகு]

இயேசு உயிர்த்தெழுதல்[தொகு]

(மத் 28:1-10; மாற் 16:1-8; லூக் 24:1-12)


1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில்
இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்;
கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.
2 எனவே அவர் சீமோன் பேதுருவிடமும்
இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து,
"ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டனர்;
அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!" என்றார்.
3 இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.
4 இருவரும் ஒருமித்து ஓடினர்.
மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.
5 அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்;
ஆனால் உள்ளே நுழையவில்லை.
6 அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார்.
நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார்.
அங்குத் துணிகளையும்,
7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார்.
அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல்
ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. [1]
8 பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த
மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.
9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை
அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை. [2]
10 பின்பு சீடர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றார்கள்.

இயேசு மகதலா மரியாவுக்குத் தோன்றுதல்[தொகு]

(மாற் 16:9-11)


11 மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்;
அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார்.
12 அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார்.
இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில்
ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
13 அவர்கள் மரியாவிடம், "அம்மா, ஏன் அழுகிறீர்?" என்று கேட்டார்கள்.
அவர் அவர்களிடம், "என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்;
அவரை எங்கே வைத்தனரோ எனக்குக் தெரியவில்லை" என்றார்.
14 இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது
இயேசு நிற்பதைக் கண்டார்.
ஆனால் அங்க நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை. [3]
15 இயேசு அவரிடம், "ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?" என்று கேட்டார்.
மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம்,
"ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால்
எங்கே வைத்தீர் எனச் சொல்லும்.
நான் அவரை எடுத்துச் செல்வேன்" என்றார்.
16 இயேசு அவரிடம், "மரியா" என்றார்.
மரியா திரும்பிப் பார்த்து, "ரபூனி" என்றார்.
இந்த எபிரேயச் சொல்லுக்கு 'போதகரே' என்பது பொருள்.
17 இயேசு அவரிடம், "என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே.
நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை.
நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம்,
'என் தந்தையும் உங்கள் தந்தையும்
என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்' எனச் சொல்" என்றார்.
18 மகதலா மரியா சீடரிடம் சென்று,
"நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார்;
தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.

இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்[தொகு]

(மத் 28:16-20; மாற் 16:1-18; லூக் 24:36-40)


19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை.
யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள்
தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள்.
அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று,
"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார்.
20 இவ்வாறு சொல்லிய பின் அவர்
தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார்.
ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி,
"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார். [4]
22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி,
"தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். [5]
23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும்.
எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார். [6]

இயேசு தோமாவுக்குத் தோன்றுதல்[தொகு]


24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா,
இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.
25 மற்றச் சீடர்கள் அவரிடம்,
"ஆண்டவரைக் கண்டோம்" என்றார்கள்.
தோமா அவர்களிடம்,
"அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து,
அதில் என் விரலை விட்டு,
அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்றார்.
26 எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள்
மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள்.
அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார்.
கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று,
"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார்.
27 பின்னர் அவர் தோமாவிடம்,
"இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு.
உன் கையை நீட்டி என் விலாவில் இடு.
ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்றார்.
28 தோமா அவரைப் பார்த்து,
"நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார்.
29 இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய்.
காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார். [7]

முடிவுரை: நூலின் நோக்கம்[தொகு]


30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு
தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார்.
அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.
31 இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும்,
நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே
இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன. [8]


குறிப்புகள்

[1] 20:7 = யோவா 11:44; 19:40.
[2] 20:9 = யோவா 14:26.
[3] 20:14 = லூக் 24:16.
[4] 20:21 = மத் 28:19; மாற் 16:15; லூக் 24:47.
[5] 20:22 = திப 1:8.
[6] 20:23 = மத் 16:19; 18:18.
[7] 20:29 = லூக் 1:45; யோவா 4:48.
[8] 20:31 = 1 யோவா 5:13; திப 3:16.


அதிகாரம் 21[தொகு]

8. பிற்சேர்க்கை[தொகு]

இயேசு தம் சீடர் எழுவருக்குத் தோன்றுதல்[தொகு]


1 பின்னர் இயேசு தம் சீடருக்குத்
திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார்.
அவர் தோன்றியது இவ்வாறு:
2 சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா,
கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல்,
செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு
இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்.
3 அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம்,
"நான் மீன்பிடிக்கப் போகிறேன்" என்றார்.
அவர்கள், "நாங்களும் உம்மோடு வருகிறோம்" என்று,
போய்ப் படகில் ஏறினார்கள்.
அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. [1]


4 ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது.
இயேசு கரையில் நின்றார்.
ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை.
5 இயேசு அவர்களிடம்,
"பிள்ளைகளே! மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா?" என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், "இல்லை" என்றார்கள்.
6 அவர், "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்"
என்று அவர்களிடம் கூறினார்.
அவர்களும் அவ்வாறே வீசினார்கள்.
மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.
7 இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம்,
"அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்" என்றார்.
அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு
ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.
8 மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு
படகிலேயே வந்தார்கள்.
அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை;
ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.


9 படகைவிட்டு இறங்கியவுடன்
கரியினால் தீ மூட்டியிருப்பதையும்
அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள்.
அங்கு அப்பமும் இருந்தது. [2]
10 இயேசு அவர்களிடம்,
"நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்" என்றார்.
11 சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார்.
வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன.
அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று.
இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.
12 இயேசு அவர்களிடம், "உணவருந்த வாருங்கள்" என்றார்.
சீடர்களுள் எவரும், "நீர் யார்?" என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை.
ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
13 இயேசு அவர்கள் அருகில் வந்து,
அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.
14 இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு
தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

இயேசுவும் பேதுருவும்[தொகு]


15 அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம்,
"யோவானின் மகன் சீமோனே,
நீ இவர்களைவிட [3] மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார்.
அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே,
எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார்.
இயேசு அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்" என்றார். [4]


16 இரண்டாம் முறையாக இயேசு அவரிடம்,
"யோவானின் மகன் சீமோனே,
நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார்.
அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே,
எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார்.
இயேசு அவரிடம், "என் ஆடுகளை மேய்" என்றார்.
17 மூன்றாம் முறையாக இயேசு அவரிடம்,
"யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று கேட்டார்.
"உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று இயேசு
மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம்,
"ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே!
எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?" என்றார்.
இயேசு அவரிடம், "என் ஆடுகளைப் பேணிவளர். [5]


18 "நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு
உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய்.
உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய்.
வேறொருவர் உன்னைக் கட்டி,
உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என
உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" என்றார். [6]
19 பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே
அவர் இவ்வாறு சொன்னார்.
இதைச் சொன்ன பின் பேதுருவிடம், "என்னைப் பின் தொடர்" என்றார்.

இயேசுவும் அன்புச் சீடரும்[தொகு]


20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது
இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார்.
இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில்
அவர் மார்பு பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு,
"ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்?" என்று கேட்டவர். [7]
21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம்,
"ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்?" என்ற கேட்டார்.
22 இயேசு அவரிடம்,
"நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன?
நீ என்னைப் பின்தொடர்ந்து வா" என்றார்.
23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு
சகோதரர் சகோதரிகளிடையே பரவியது.
ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை.
மாறாக, "நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன?"
என்றுதான் கூறினார்.
24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி.
இவரே இவற்றை எழுதி வைத்தவர்.
இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும்.
25 இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு.
அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால்,
எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.


குறிப்புகள்

[1] 21:3 = லூக் 5:5-10.
[2] 21:9 = லூக் 24:41-43.
[3] 21:15 - "இவர்களை" என்னும் சொல்லை "இவற்றை" எனவும் மொழிபெயர்க்கலாம்.
[4] 21:15 = திப 20:28.
[5] 21:17 = மத் 16:17-19; லூக் 22:31,32.
[6] 21:18 = 2 பேது 1:14.
[7] 21:20 = யோவா 13:25.

(யோவான் நற்செய்தி நிறைவுற்றது)

(தொடர்ச்சி): திருத்தூதர் பணிகள்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை