திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/லூக்கா நற்செய்தி/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

விக்கிமூலம் இலிருந்து


"இயேசு அவரிடம் கூறியது: 'ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார். விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, 'வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது' என்று சொன்னார்". - லூக்கா 14:16-17


லூக்கா நற்செய்தி (Luke)[தொகு]

அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

அதிகாரம் 13[தொகு]

மனம் மாறாவிடில் அழிவு[தொகு]


1 அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து,
பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான்
என்ற செய்தியை அறிவித்தனர்.
2 அவர் அவர்களிடம் மறுமொழியாக,
"இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக்
கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?
3 அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன்.
மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.
4 சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே.
அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக்
குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?
5 அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன்.
மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்" என்றார்.

காய்க்காத அத்திமரம்[தொகு]


6 மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்:
"ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார்.
அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. [1]
7 எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம்,
'பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்;
எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும்.
இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்றார்.
8 தொழிலாளர் மறுமொழியாக,
'ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்;
நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.
9 அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்"
என்று அவரிடம் கூறினார்."

உடல் ஊனமுற்ற பெண் ஓய்வுநாளில் குணமடைதல்[தொகு]


10 ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார். [2]
11 பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து
உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார்.
அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார்.
12 இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு,
"அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்" என்று கூறி,
13 தம் கைகளை அவர் மீது வைத்தார்.
உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.


14 இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு,
மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து,
"வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே;
அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக்கொள்ளுங்கள்; ஓய்வுநாளில் வேண்டாம்" என்றார். [3]
15 ஆண்டவரோ அவரைப் பார்த்து,
"வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும்
ஓய்வுநாளில் தம் மாட்டையோ கழுதையையோ
தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டு போய்த்
தண்ணீர் காட்டுவதில்லையோ?
16 பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப்
பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான்.
இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வுநாளில் விடுவிப்பது முறையில்லையா?"
என்று கேட்டார்.
17 அவர் இவற்றைச் சொன்னபோது,
அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர்.
திரண்டிருந்த மக்கள் எல்லாரும்
அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

கடுகு விதை, புளிப்பு மாவு உவமைகள்[தொகு]

(மத் 13:31-33; மாற் 4:30-32)


18 பின்பு இயேசு, "இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது?
அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
19 அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும்.
ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார்.
அது வளர்ந்து மரமாயிற்று.
வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின" என்று கூறினார்.


20 மீண்டும் அவர், "இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்?
21 அது புளிப்புமாவுக்கு ஒப்பாகும்.
பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார்.
மாவு முழுவதும் புளிப்பேறியது" என்றார்.

இடுக்கமான வாயில்[தொகு]


22 இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே
எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்.
23 அப்பொழுது ஒருவர் அவரிடம்,
"ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?" என்று கேட்டார்.
அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:
24 "இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்.
ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்.
25 'வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்' என்று கேட்பீர்கள்.
அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது' எனப் பதில் கூறுவார். [4]
26 அப்பொழுது நீங்கள், 'நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம்.
நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே' என்று சொல்வீர்கள்.
27 ஆனாலும் அவர், 'நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள்' என உங்களிடம் சொல்வார். [5]
28 ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாகினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும்
நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது அழுது அங்கலாய்ப்பீர்கள். [6]
29 இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து
மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.
30 ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்." [7]

எருசலேமுக்காகப் புலம்புதல்[தொகு]

(மத் 23:37-39)


31 அந்நேரத்தில் பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து,
"இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்லவேண்டும் என்றிருக்கிறான்"
என்று கூறினார்.
32 அதற்கு அவர் கூறியது: "இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்;
மூன்றாம் நாளில் என்பணி நிறைவுபெறும் என
நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்.
33 இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாக வேண்டும்.
ஏனெனில், இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை
நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!


34 "எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே!
உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே!
கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல
நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்;
உனக்கு விருப்பமில்லையே!


35 இதோ, உங்கள் இறை இல்லம் கைவிடப்படும்.
'ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்' என
நீங்கள் கூறும் நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என
நான் உங்களுக்குச் சொல்கிறேன். [8]


குறிப்புகள்

[1] 13:6 = எரே 8:13; மத் 21:19,20.
[2] 13:10 = யோவா 9:14.
[3] 13:14 = விப 20:9,10; இச 5:13,14.
[4] 13:25 = மத் 25:10-12.
[5] 13:27 = திபா 6:8.
[6] 13:28 = மத் 8:11,12; 22:13; 15:30.
[7] 13:30 = மத் 19:30; 20:16; மாற் 10:31.
[8] 13:35 = திபா 118:26.


அதிகாரம் 14[தொகு]

நீர்க்கோவை நோயாளி குணமடைதல்[தொகு]


1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு
உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.
2 அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார்.
3 இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து,
"ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?" என்று கேட்டார்.
4 அவர்கள் அமைதியாய் இருந்தனர்.
இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார்.
5 பிறகு அவர்களை நோக்கி,
"உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால்
ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?" என்று கேட்டார். [1]
6 அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.

விருந்தினருக்கும் விருந்தளிப்போருக்கும் ஒரு போதனை[தொகு]


7 விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு
அவர்களுக்குக் கூறிய அறிவுரை:
8 "ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால்,
பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள்.
ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம்.
9 உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில்,
'இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார்.
அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும்.
10 நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள்.
அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம்,
'நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும்பொழுது
உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். [2]
11 தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்;
தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்." [3]


12 பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு,
"நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது
உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ,
செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம்.
அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம்.
அப்பொழுது அதுவே உமக்கு கைம்மாறு ஆகிவிடும்.
13 மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது
ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும்
கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். [4]
14 அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர்.
ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை.
நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்" என்று கூறினார்.

பெரிய விருந்து உவமை[தொகு]

(மத் 22:1-10)


15 இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இவற்றைக் கேட்டு அவரிடம்,
"இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்" என்றார். [5]
16 இயேசு அவரிடம் கூறியது:
"ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார்.
17 விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி,
'வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது' என்று சொன்னார்.
18 அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர்.
முதலில் ஒருவர், 'வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்;
அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும்.
என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றார்.
19 'நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்;
அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றார் வேறொருவர்.
20 'எனக்கு இப்போது தான் திருமணம் ஆயிற்று;
ஆகையால் என்னால் வர முடியாது' என்றார் மற்றொருவர்.
21 பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார்.
வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம்,
'நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று
ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர்,
கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும்', என்றார்.
22 பின்பு பணியாளர், 'தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று;
இன்னும் இடமிருக்கிறது என்றார்.
23 தலைவர் தம் பணியாளரை நோக்கி, '
'நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய்,
எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டிவாரும்.
24 அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச்
சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்' என்றார்."

இயேசுவின் சீடர் யார்?[தொகு]

(மத் 10:37-38)


25 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர்.
அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது:
26 "என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி,
பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும்,
ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால்,
அவர் என் சீடராயிருக்க முடியாது. [6]
27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர்
எனக்குச் சீடராய் இருக்கமுடியாது. [7]
28 "உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால்,
முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து,
அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா?
29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு
அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக,
30 'இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை' என்பார்களே!


31 "வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர்,
இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப்
பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று
முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?
32 எதிர்க்க முடியாதெனில்,
அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி,
அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?
33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும்
என் சீடராய் இருக்க முடியாது.


உவர்ப்பற்ற உப்பு[தொகு]

(மத் 5:13; மாற் 9:50)


34 "உப்பு நல்லது; ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால்
எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்?
35 அது நிலத்துக்கோ எருக்குழிக்கோ பயனற்றது.
அது வெளியே கொட்டப்படும்.
கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்".


குறிப்புகள்

[1] 14:5 = மத் 12:11; லூக் 13:15; யோவா 7:23.
[2] 14:8-10 = நீமொ 25:6,7; மத் 23:6.
[3] 14:11 = மத் 23:12; லூக் 18:14.
[4] 14:13 = நீமொ 22:9.
[5] 14:15 = மத் 8:11.
[6] 14:26 = மத் 10:37.
[7] 14:27 = மத் 10:38; 16:24; மாற் 8:34; லூக் 9:23.


(தொடர்ச்சி): லூக்கா நற்செய்தி: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை