திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/லூக்கா நற்செய்தி/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

விக்கிமூலம் இலிருந்து


"இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார். அவர்களிடம், 'என் இல்லம் இறைவேண்டலின் வீடு' என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்" என்று கூறினார்." - லூக்கா 19:45-46


லூக்கா நற்செய்தி (Luke)[தொகு]

அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

அதிகாரம் 19[தொகு]

இயேசுவும் சக்கேயுவும்[தொகு]


1 இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்.
2 அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார்.
அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர்.
3 இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்;
மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை.
ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.
4 அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக
ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார்.
இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.
5 இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம்,
"சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" என்றார்.
6 அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.
7 இதைக் கண்ட யாவரும், "பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்" என்று முணுமுணுத்தனர்.
8 சக்கேயு எழுந்து நின்று, "ஆண்டவரே, என் உடைமைகளில்
பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்;
எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால்
நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்று அவரிடம் கூறினார்.
9 இயேசு அவரை நோக்கி, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று;
ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே!
10 இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்" என்று சொன்னார்.

மினா நாணய உவமை[தொகு]

(மத் 25:14-30)


11 இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார்.
அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள்
இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள்.
அப்போது இயேசு மேலும் ஓர் உவமையைச் சொன்னார்:
12 "உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப் புறப்பட்டார்.
13 அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து,
பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி,
'நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்' என்று சொன்னார். [1]
14 அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர்.
எனவே, 'இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை' என்று சொல்லித் தூது அனுப்பினர்.
15 இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார்.
பின்னர் தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய
அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.


16 முதலாம் பணியாளர் வந்து,
'ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்' என்றார்.
17 அதற்கு அவர் அவரிடம், 'நன்று, நல்ல பணியாளரே,
மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர்.
எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்' என்றார்.
18 இரண்டாம் பணியாளர் வந்து,
'ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன்' என்றார்.
19 அவர், 'எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்' என்று அவரிடமும் சொன்னார்.


20 வேறொருவர் வந்து, 'ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன்.
21 ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன்.
நீர் வைக்காததை எடுக்கிறவர்; நீர் விதைக்காததை அறுக்கிறவர்' என்றார்.
22 அதற்கு அவர் அவரிடம், 'பொல்லாத பணியாளே,
உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன்.
நான் கண்டிப்பானவன்; வைக்காததை எடுக்கிறவன்; விதைக்காததை அறுக்கிறவன் என
உனக்குத் தெரியுமல்லவா?
23 அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை?
நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே' என்றார்.
24 பின்பு அருகில் நின்றவர்களிடம், 'அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து,
பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்' என்றார்.
25 அதற்கு அவர்கள், 'ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவே' என்றார்கள்.
26 அவரோ, 'உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்.
இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார். [2]
27 மேலும் அவர், 'நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை
இங்குக் கொண்டுவந்து என்முன் படுகொலை செய்யுங்கள்' என்று சொன்னார்."

6. எருசலேம் பணி[தொகு]

வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேமில் நுழைதல்[தொகு]

(மத் 21:1-11; மாற் 11:1-11; யோவா 12:12-19)


28 இவற்றைச் சொன்னபின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக
எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
29 ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள
பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்தபோது
இரு சீடர்களை அனுப்பினார்.
30 அப்போது அவர் அவர்களிடம்,
"எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்;
அதில் நுழைந்ததும் இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக் குட்டி
கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.
31 யாராவது உங்களிடம், 'ஏன் அவிழ்க்கிறீர்கள்?' என்று கேட்டால்,
'இது ஆண்டவருக்குத் தேவை' எனச் சொல்லுங்கள்" என்றார்.
32 அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச் சொன்னவாறே இருக்கக் கண்டார்கள்.
33 அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின் உரிமையாளர்கள்,
"கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார்கள்.
34 அதற்கு அவர்கள், "இது ஆண்டவருக்குத் தேவை" என்றார்கள்;
35 பின்பு அதை இயேசுவிடம் ஓட்டி வந்தார்கள்;
அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு,
இயேசுவை அதன்மேல் ஏற்றி வைத்தார்கள்.
36 அவர் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள்
தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக் கொண்டே சென்றார்கள்.
37 இயேசு ஒலிவ மலைச்சரிவை நெருங்கினார்.
அப்போது திரண்டிருந்த சீடர் அனைவரும் தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும்
உரத்தக் குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்:


38 "ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக!
விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!"


என்றனர். [3]


39 அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி,
"போதகரே, உம் சீடர்களைக் கடிந்து கொள்ளும்" என்றனர்.
40 அதற்கு அவர் மறுமொழியாக,
"இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். [4]


41 இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்.
42 "இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா?
ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.
43 ஒரு காலம் வரும். அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி,
உன்னை முற்றுகையிடுவார்கள்; [5]
44 உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும்
எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரை மட்டமாக்குவார்கள்;
மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள்.
ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை" என்றார்.

இயேசு கோவிலைத் தூய்மையாக்குதல்[தொகு]

(மத் 21:12-17; மாற் 11:15-19; யோவா 2:13-22)


45 இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை
வெளியே துரத்தத் தொடங்கினார்.
46 அவர்களிடம்,


'என் இல்லம் இறைவேண்டலின் வீடு'


என்று மறைநூலில் எழுதியுள்ளதே;
ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்" என்று கூறினார். [6]
47 இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார்.
தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும்
அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள். [7]
48 ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.
ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு
அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.


குறிப்புகள்

[1] 19:13 - "மினா" என்பது நூறு திராக்மா மதிப்புள்ள நாணயம்.
ஒரு "திராக்மா" ஒரு தொழிலாளியின் ஒரு நாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம்.
[2] 19:26 = மத் 13:12; மாற் 4:25; லூக் 8:18.
[3] 19:38 = திபா 118:26.
[4] 19:39,40 = மத் 21:14-16.
[5] 19:43 = எசா 29:3.
[6] 19:46 = எசா 56:7; எரே 7:41.
[7] 19:47 = லூக் 21:37.


அதிகாரம் 20[தொகு]

இயேசுவின் அதிகாரத்திற்குச் சவால்[தொகு]

(மத் 21:23-27; மாற் 11:27-33)


1 ஒருநாள் இயேசு கோவிலில் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தார்.
அவர் நற்செய்தியை அறிவித்துக்கொண்டு இருந்தபோது
தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மூப்பர்களும் அங்கு வந்தார்கள்.
2 அவர்கள் அவரை நோக்கி,
"எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?
இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? எங்களுக்குச் சொல்லும்" என்றார்கள்.
3 அவர் அவர்களுக்கு மறுமொழியாக,
"நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள்.
4 திருமுழுக்குக் கொடுக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா,
அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?" என்று கேட்டார்.
5 அவர்கள் "'விண்ணகத்திலிருந்து வந்தது' என்போமானால்,
'ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை?' எனக் கேட்பார்;
6 'மனிதரிடமிருந்து வந்தது' என்போமானால் மக்கள் அனைவரும் நம்மீது கல் எறிவர்" என்று
தங்களிடையே சொல்லிக் கொண்டார்கள்.
ஏனெனில் மக்கள் யோவானை இறைவாக்கினர் என்று உறுதியாய் நம்பியிருந்தனர்.
7 எனவே அவர்கள், "எங்கிருந்து வந்தது எனத் தெரியாது" என்று பதிலுரைத்தார்கள்.
8 இயேசுவும் அவர்களிடம், "எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என
நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்" என்றார்.

கொடிய குத்தகைக்காரர் உவமை[தொகு]

(மத் 21:33-46; மாற் 12:1-12)


9 பின்பு இயேசு மக்களை நோக்கி இந்த உவமையைச் சொல்லத் தொடங்கினார்:
"ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு
தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டு விட்டு
நீண்ட காலம் நெடும் பயணம் மேற்கொண்டார். [1]
10 பருவகாலம் வந்ததும் ஒரு பணியாளரை அவர் அனுப்பினார்.
ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் அவரை நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.
11 மீண்டும் அவர் வேறு ஒரு பணியாளரை அனுப்பி வைத்தார்.
அவர்கள் அவரையும் நையப்புடைத்து அவமதித்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.
12 மூன்றாம் முறையாக அவர் ஒருவரை அனுப்பினார்.
அவரையும் அவர்கள் காயப்படுத்தி வெளியே தள்ளினர்.
13 பின்பு திராட்சைத் தோட்ட உரிமையாளர்,
'நான் என்ன செய்வேன்? என் அன்பு மகனை அனுப்புவேன்.
ஒருவேளை அவனை அவர்கள் மதிப்பார்கள்' என்று சொல்லிக்கொண்டார்.
14 தோட்டத் தொழிலாளர்கள் அவருடைய மகனைக் கண்டதும்,
'இவன்தான் சொத்துக்கு உரியவன்; நாம் இவனைக் கொன்றுபோடுவோம்.
அப்போது சொத்து நம்முடையதாகும்' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
15 எனவே அவர்கள் அவரைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக்
கொன்று போட்டார்கள்.
அப்படியானால் திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவர்களை என்ன செய்வார்?
16 அவர் வந்து அந்தத் தொழிலாளர்களை ஒழித்து விட்டு,
திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் குத்தகைக்கு விடுவார்."


அப்போது அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள்,
"ஐயோ! அப்படி நடக்கக் கூடாது" என்றார்கள்.
17 ஆனால், இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி,


'கட்டுவோர் புறக்கணித்த கல்லே
கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று'


என்று மறைநூலில் எழுதியிருப்பதன் பொருள் என்ன? [2]
18 அந்தக் கல்லின் மேல் விழுகிற எவரும் நொறுங்கிப் போவார்;
அது யார்மேல் விழுமோ அவரும் நசுங்கிப்போவார்" என்றார்.
19 மறைநூல் அறிஞர்களும் தலைமைக் குருக்களும்
தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை உணர்ந்து கொண்டு,
அந்நேரமே இயேசுவைப் பிடிக்க வழிதேடினார்கள்;
ஆனால் மக்களுக்கு அஞ்சினார்கள்.

சீசருக்கு வரி செலுத்துதல்[தொகு]

(மத் 22:15-22; மாற் 12:13-17)


20 ஆகவே அவர்கள் இயேசுவைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார்கள்;
நேர்மையாளர் போன்று நடித்து, அவரது பேச்சில் குற்றம் காண
ஒற்றர்களை அனுப்பி வைத்தார்கள்;
அவரை ஆளுநரின் ஆட்சி அதிகாரத்திற்கு ஒப்புவிப்பதே அவர்கள் நோக்கமாய் இருந்தது.
21 ஒற்றர்கள் அவரிடம்,
"போதகரே, நீர் சொல்வதும் கற்பிப்பதும் சரியே.
நீர் ஆள் பார்த்துச் செயல்படாதவர்;
கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும்.
22 சீசருக்கு நாம் கப்பம் கட்டுவது முறையா இல்லையா?" என்று கேட்டார்கள்;
23 அவர்களுடைய சூழ்ச்சியை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டு அவர்களிடம்,
24 "ஒரு தெனாரியத்தை [3] எனக்குக் காட்டுங்கள்;
இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?" என்று கேட்டார்.
அவர்கள், "சீசருடையவை" என்றார்கள்.
25 அவர் அவர்களை நோக்கி,
"அப்படியானால், சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும்,
கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்று சொன்னார்.
26 மக்கள் முன்னிலையில் இயேசுவின் பேச்சில் அவர்களால் குற்றம் காண இயலவில்லை;
அவருடைய மறுமொழியைக் கண்டு அவர்கள் வியப்புற்றுப் பேசாதிருந்தார்கள்.

உயிர்த்தெழுதல் பற்றிய கேள்வி[தொகு]

(மத் 22:23-33; மாற் 12:18-27)


27 உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, [4]
28 "போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால்
அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு
தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். [5]
29 இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர்.
மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார்.
30 இரண்டாம்,
31 மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர்.
இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்;
32 கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.
33 அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்?
ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?" என்று கேட்டனர்.
34 அதற்கு இயேசு அவர்களிடம்,
"இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.
35 ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும்
இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை.
36 இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள்.
உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.
37 இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே
முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை,


'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள்,
யாக்கோபின் கடவுள்'


என்று கூறியிருக்கிறார். [6]
38 அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள்.
ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே" என்றார்.
39 மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து,
"போதகரே, நன்றாகச் சொன்னீர்" என்றனர்.
40 அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

தாவீதின் மகன் பற்றிய விளக்கம்[தொகு]

(மத் 22:41-46; மாற் 12:35-37)


41 அப்போது இயேசு அவர்களை நோக்கி,
"மெசியா தாவீதின் மகன் என்று கூறுவது எப்படி?
42 ஏனென்றால் திருப்பாடல்கள் நூலில்,


'ஆண்டவர், என் தலைவரிடம்,


43 "நான் உம் பகைவரை உமக்குக் கால் மணையாக்கும்வரை


நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்றுரைத்தார்'


எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா? [7]
44 எனவே தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால்
அவர் அவருக்கே மகனாய் இருப்பது எப்படி?" என்று கேட்டார்.

மறைநூல் அறிஞரைக் குறித்து எச்சரிக்கை[தொகு]

(மத் 23:1-36; மாற் 12:38-40; லூக் 11:37-54)


45 மக்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தபோது இயேசு தம் சீடர்களிடம்,
46 "மறைநூல் அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.
ஏனென்றால் அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதை விரும்புகிறார்கள்;
சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதை விரும்புகிறார்கள்;
தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும்
விருந்துகளில் முதன்மையான இடங்களையும் விரும்புகிறார்கள்; [8]
47 கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்;
நீண்டநேரம் இறைவனிடம் வேண்டுவதுபோல நடிக்கிறார்கள்.
கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் அவர்களே" என்றார்.


குறிப்புகள்

[1] 20:9 = எசா 5:1.
[2] 20:17 = திபா 118:22
[3] 20:24 - 'தெனாரியம்' என்பது ஒரு தொழிலாளரின் ஒரு நாள் கூலிக்கு
இணையான உரோமை நாணயம்.
[4] 20:27 = திப 23:8.
[5] 20:28 = இச 25:5.
[6] 20:37 = விப 3:6.
[7] 20:42,43 = திபா 110:1.
[8] 20:46 = லூக் 11:43.


(தொடர்ச்சி): லூக்கா நற்செய்தி: அதிகாரங்கள் 21 முதல் 22 வரை