தில்லைப் பெருங்கோயில் வரலாறு/தில்லைப் பெருங்கோயிலின்

விக்கிமூலம் இலிருந்து
6. தில்லைப் பெருங்கோயிலின் நாள் வழிபாடும் திருவிழாக்களும்

தில்லைப் பெருங்கோயில் நாள்தோறும் காலை ஆறு மணிக்குத் திறக்கப்பெறும். பள்ளியறையிலிருந்து இறைவன் திருவடிக்குப் பால் பழம் முதலியன நிவேதனஞ்செய்து, திருவடியைச் சிவிகைமீதமர்த்திச் சிற்றம்பலத்திற்கொண்டு சேர்த்தல் மரபு. விடியற்காலையில் நிகழும் இவ்வழிபாடு பால் நைவேத்தியம் என வழங்கப்படும். இதன் பின்னர், பகலில் மூன்று கால பூசையும் இரவில் மூன்றுகால பூசையும் ஆக ஆறுகால வழிபாடுகள் நடைபெறும். இவ் ஆறுகாலங்களிலும் சந்திரமௌலீசுவரராகிய, படிகலிங்கத்திற்குக் கனகசபையில் அபிடேகம் ஆராதனை நிகழ்ந்த பின்னே கூத்தப் பெருமானுக்கும் சிவகாமியம்மைக்கும் தீபாராதனை நிகழும். காலை ஒன்பது மணிக்குக் காலை சந்தியும் பதினொரு மணியளவில் இரண்டாங் காலமும் பன்னிரண்டு மணியளவில் உச்சிக்கால வழிபாடும் நிகழும். காலை இரண்டாங்கால பூசையில் பத்துமணியளவில் படிகலிங்கத்துக்கு அபிடேகம் செய்த பின்னர் மாணிக்கக் கூத்தராகிய இரத்தின சபாபதிக்கும் அபிடேகம் செய்து அத்திருவுருவத்தின் முன்னும் பின்னும் கற்பூர ஆரத்திகாட்டுவர். அப்பொழுது மாணிக்கக் கூத்தராகிய இரத்தின சபாபதியின் திருவுருவைக் கண்டு அன்பர் பலரும் தரிசித்து மகிழவர். உச்சிக்காலம். பகல் பன்னிரண்டுமணியளவில் நிகழும்.

மாலை ஐந்து மணியளவில் திருக்கோயில் கதவு திறக்கப் பெறும். படிகலிங்க அபிடேகம் முடிந்த பின்னர் ஆறு மணிக்குச் சாயரட்சை பூசை நடைபெறும். ஏழுமணியளவில் படிகலிங்க அபிடேகம் ஏழரைமணியளவில் சிதம்பர ரகசிய பூசையும் நடை பெற்ற பின்னர், எட்டு மணிக்கு இரண்டாங்கால பூசை நிகழும். இரவு ஒன்பதரை மணிக்குப் படிகலிங்க அபிடேகம் நிகழ்ந்த பின்னர்ப் பத்துமணிக்கு அர்த்தயாம பூசை நடை பெறும். எல்லாத் திருக்கோயில்களிலும் - எழுந்தருளியுள்ள இறைவனது திருவருட் கலைகள் அனைத்தும் தில்லை மன்றுள் ஆடல் புரியும் அம்பலக் கூத்தன் பால் வந்து ஒடுங்குகின்றன என்பது அப்பரருளிய புக்க திருத் தாண்டகத்தாற் புலனாகும். ஆகவே தில்லைப் பெருங்கோயிலில் அர்த்த யாம வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். அர்த்த யாமத்தில் தில்லைக் கூத்தப்பெருமானுக்குத் தீபாராதனை நிகழ்ந்த பின், சிற்சபையிலுள்ள பெருமான் திருவடி சிவிகையிலமர்த்தப்பெற்று வலமாகப் பள்ளியறையில் வைக்கப்பெற்றுத் தீபாராதனை செய்யப்பெறும். அதன் பின்னர் சண்டேசுரர்க்கும் பயிரவர்க்கும் தீபாராதனை நிகழும். பின்னர் அர்த்தசாம அழகர் தீபாராதனையுடன் அர்த்தசாம வழிபாடு நிறைவு பெறும். இல்வாறு நாள்தோறும் இக்கோயிலில் நிகழ்த்தப் பெறும் வழிபாடு எந்த அதிகாரியையும் எதிர் பாராமல் குறித்த காலத்தில் நிகழ்த்தப் பெற்று வருகின்றது. நடராசப் பெருமானுக்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவோணத்திலும் ஆனித்திருவுத்தர நாளிலும், ஆவணி வளர்பிறைச் சதுர்த்தசியிலும் புரட்டாசி வளர்பிறைச் சதுர்த்தசியிலும் மார்கழித்திருவாதிரையிலும் மாசிவளர் பிறைச் சதுர்த்தசியிலும் ஆக ஆறு அபிடேகங்கள் நடைபெற்று வருகின்றன.

இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் பல நிகழ்ந்து வருகின்றன. அவற்றுள் கூத்தப்பெருமானுக்கு நிகழும் பெரிய திருவிழாக்கள் ஆனித்திருமஞ்சனமும் மார்கழித்திருவாதிரையும் என இரண்டாகும். இத்திருவிழாக்களில் கொடியேற்றம் முதல் எட்டாந் திருவிழா முடிய விநாயகர், கப்பிரமணியர், சோமாஸ்கந்தர், அம்பாள், சண்டேசர் ஆகிய பஞ்சமூர்த்திகள் காலை மாலை இரு பொழுதிலும் திருவீதிக்கு எழுந்தருளுவர். ஒன்பதாந் திருநாள் விடியற்காலை கூத்தப் பெருமானும் சிவகாமியம்மையும் சிற்றம்பலத்தினின்றும் எழுந்தருளித் தேர்மேலமர்ந்து விநாயகர் முருகன் சண்டேசருடன் திரு வீதியில் உலா வந்தருள்வர். மாலை தேரினின்றும் இறங்கி ஆயிரக்கால் மண்டபத்திற்கு எழுந்தருளி மறுநாள் விடியற்காலை பலரும் கண்டு மகிழத் திருமஞ்சனம் கொண்டருளி, நண்பகல் ஆயிரக்கால் மண்டபத்தினின்றும் புறப்பட்டு அன்பர்கட்கு நடனக் காட்சியருளிச் சிற்றம்பலத்திற்கு எழுந்தருள்வர். கூத்தப்பெருமான் சிலகாமியம்மை காண நடனமாடிக் கொண்டு வரும் இவ்வழகிய தெய்வக் காட்சியே தெரிசனம் எனச் சிறப்பித்துப் போற்றப் பெறுகின்றது.

இங்குக் கூறப்பெற்ற ஆனித்திருமஞ்சனப் பெருவிழாவும் மார்கழித்திருவாதிரைத் திருவிழாவும் கங்கை கொண்டசோழன் ஆட்சிக் காலத்திற்குமுன், தேவார ஆசிரியர் காலத்திலிருந்தே தில்லையில் நடைபெற்று வரும் தொன்மை வாய்ந்த திரு விழாக்களாகும். இச்செய்தி முதல் இராசேந்திர சோழதேவராகிய கங்கை கொண்ட சோழனது இருபத்து நான்காவது ஆட்சி யாண்டில் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர் அணுக்கி நக்கன் பாவை என்பாள் திருவானித் திருநாளில் திருச்சிற்றம்பல முடையாராகிய கூத்தப்பெருமான் எழுந்தருளும் நாளில் வேண்டும் செலவுக்கும் அமுதுபடிக்கும் அப்பொழுது மாகேஸ் வரர் ஆயிரவர்க்கு சட்டிச்சோறு கொடுத்தற்கும், மார்கழித்திருவாதிரைத் திருநாளுக்கு வேண்டும் செலவுகட்கும் திருமாசித் திருநாளில் திருத் தொண்டத் தொகை விண்ணப்பஞ் செய்தற்கும் ஆக நிலமளித்த செய்தி சிதம்பரம் கல்வெட்டிற் குறிக்கப் பெற்றுள்ளது. (தெ. இ. க. தொகுதி IV எண் 223}

தில்லைப் பெருங் கோயிலில் சிவகாமியம்மைக்கு ஆண்டு தோறும் ஐப்பசிப் பூரவிழா சோழமன்னர் காலமுதல் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. திருப்பாலி வளத்திருநாள் எனக் கலவெட்டுக்களிற் குறிக்கப்படும் திருநாள் இப்பூர விழாவை ஒட்டியதே. சீரங்கராயர் II -சிவகாம சுந்தரி ஐப்பசிப் பூரவிழா கொண்டருளும்படி, புறப்பேட்டை என்ற ஊரைத் தேவதானமாகக் கொடுத்துள்ளார். பதினெட்டாம் பெருக்கன்று தில்லை இறைவன் கொள்ளிடத்துக்கு எழுந்தருளித் தீர்த்தங் கொடுத்தல் உண்டு. தீர்த்தங் கொடுத்தற்கெனக் கொள்ளிடத்தின் வடகரையில் இவர் ஒரு மண்டபம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மாசி மகத்தில் தில்லைப் பெருமான் கடலிற்கு எழுந்தருளித் தீர்த்தங்கொடுக்கும் விழாவும் விக்கிரமசோழன் காலம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இவ்விழாவில் இறைவன் கடலுக்கு எழுந்தருளுதற்கு இருபக்கமும் தென்னை வளர்க்கப் பட்ட பெருவழி அமைக்கப் பெற்றது. சிதம்பரத்திலிருந்து கிள்ளைக்குச் செல்லும்வழி விக்கிரம சோழன் தெங்குத் திருவீதி எனக் கல்வெட்டுக்களிற் குறிக்கப்பெற்றுள்ளது. வசந்தத் திருநாளில் தில்லைப் பெருமான் குலோத்துங்க சோழன் திருத் தோப்புக்கு எழுந்தருளுவான், (தெ. இ. க, தொ IV எண் 43} திருக்கண் சாத்தும் திருநாளும், எதிரிலி சோழன் சிவபாத சேகரன் சித்தத்துணைப் பெருமாள் விழாவும் தைப்பூசத்துப் பாவாடையீட்டுப் பெரிய விழாவும் தில்லைப் பெருங் கோயிலில் நிகழ்ந்தனவாகக் கல்வெட்டுக்களிற் குறிக்கப்பெற்றுள்ளன.

திருமூலட்டானப் பெருமானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நாள் தோறும் எட்டுக்காலப் பூசைகள் நடைபெற்றன. (தெ. இ க. தொ. XII எண் 51.) தில்லையில் திருநீற்றுச் சோழர் பஞ்ச மூர்த்திகளுடனும் சமயாசிரியர் நால்வருடனும் திருவீதியில் உலாப் போந்தமை தில்லையுலா வாற்புலனாகும்.

தில்லைப் பெருங்கோயிற் பூசனை மகுடாகம விதிப்படி முற்காலத்தில் நடைபெற்றதென்பது, இரட்டையர் பாடிய தில்லைக் கலம்பகத்தாலும் கி.பி. 1684- 1686 ஆம் ஆண்டுகளில் மராட்டிய மன்னர் சாம்போசி நிகழ்த்திய தில்லைச் சிற்றம்பலவர் கோயிற் கும்பாபிசேகம் உயர் ஆகமப்படி நடைபெற்றதாகச் செப்பேட்டிற் குறிக்கப் பெற்றிருத்தவாலும் அறியப்படும். பதஞ்சலி முனிவர் செய்த நூலின் விதிப்படி தில்லைக் கோயிலில் நாட் பூசனையும் திருவிழாவும் நடத்தப் பெற்றன எனக் கோயிற் புராணம் கூறும். பதஞ்சலிமுனிவர் இயற்றியதாகக் கூறப்படும் பதஞ்சலி பூஜா விதிப்படியே தில்லையிற் கூத்தப்பெருமானுக்குப் பூசை நடத்தப் பெறுகின்றது. சிவாகம நெறியினைக் கடைப்பிடித் தொழுகிய வியாக்கிரபாதரைச் சைவமுனி எனவும் வைதிக நெறியினைப் பின்பற்றியொழுகிய பதஞ்சலி முனிவரை வைதிக முனி எனவும் கூறுவதுண்டு. அம்முறைப்படி தில்லைக் கூத்தப்பெருமானுக்கு நிகழ்த்தப் பெற்றுவரும் பூசனையானது ஆகம நெறிக்கும் வேதநெறிக்கும் ஒத்தபொதுநெறியில் நடைபெற்று வருகின்றது எனக்கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.