தும்பைப்பூ-நாவல்/அத்தியாயம் 4

விக்கிமூலம் இலிருந்து

4

தானந்தம் பிள்ளை மேல் உத்தரீயத்தை எடுத்து ஸ்டாண்டில் மாட்டியவாறே, “திலகம்! சாபி கொண்டு வரச் சொல்லு, எங்கள் இரண்டு பேருக்கும். சிற்றுண்டி ஏதேனும் செய்திருக்கிறதா? இருந்தால்.....” என்று தம் மனைவியை நோக்கிக் கேட்டார்.

திலகவதி, “இல்லை; இன்றைக்கு அஸ்வாரஸ்யமாய் இருந்துவிட்டோம்..... இதோ ஒரு நொடியில் செய்து கொண்டு வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டே உள்ளே போனாள்.

கனவான், ஒன்றும் வேண்டாம், அண்ணா வீட்டை விட்டுப் புறப்படும்போது தான் சாப்பிட்டு விட்டு வந்தேன். காபி வேண்டுமானால் கொடுக்கச் சொல்லுங்கள்...” என்று கூறினார்.

சதானந்தம் பிள்ளை சட்டையைக் கழற்றிக் கொண்டே, “நீங்கள் உட்காருங்கள், முதலியார்வாள்! உங்களுக்குத் தெரியாதா? வீட்டுக்கு வந்துவிட்டோமானால், நம் விருப்பம், தேவை, அதிகாரம் எல்லாம் ஒன்றும் எடுபடாது என்று, வீட்டு ராணிகள் வைத்தது தான் சட்டம், அதை மீறினோமானால் சாப்பாடு கூடக் கிடைக்காது. வெளியிலேதான் நம்முடைய அமர்த்தல் ஆட்சி எல்லாம் நடக்கும். இங்கே நமது தேவைகளைச் சொல்ல வேண்டும், அவர்கள் கொடுப்பதை மறுபேச்சுச் சொல்லாமல் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்...” என்று புன்சிரிப்புடன் சொன்னார்.

மாசிலாமணி முதலியார் கல கலவெனச் சிரித்தவாறு “அது என்னமோ வாஸ்தவம்தான், அண்ணா” என்றார்.

உள்ளே அடியெடுத்து வைத்த திலகவதி தன் கணவன் பேச்சைக் கேட்டு நின்று, “நாங்கள் என்ன அவ்வளவு பொல்லாதவர்களா.....?” என்று மெல்லச் சொன்னாள்.

இதற்குள் மங்கையர்க்கரசி ஒரு தட்டில் ஓமப்பொடி பிஸ்கெட், மலைவாழைப்பழம், சாற்றுக்கொடி ஆகியவைகளை வைத்துக் கொண்டு வந்து திலகவதியிடம் கொடுத்தாள். இவளுடைய சமயோசிதப் புத்தியைக் கண்டு திலகவதி வியப்புற்றாள். அடுத்து இரண்டு டம்ளர்களில் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, “இதோ ஒரு நிமிஷத்தில் காபி கொண்டு வருகிறேன், அக்கா!” என்று கூறிவிட்டுப் போனாள் மங்கையர்க்கரசி.

திலகவதி இவற்றைக் கொண்டு வந்து வட்ட மேஜை மீது வைத்தாள்.

“கையைக் கழுவிக் கொள்ள பேஸின் கொண்டு வரச் சொல்லு, திலகம்”” என்று கூறிய சதானந்தம் பிள்ளை, "நீங்க சாப்பிடுங்கள் முதலியார்வாள்! நான் இதோ ஒரு நொடியில் முகத்தை அலம்பிக் கொண்டு வந்து விடுகிறேன்" என்று கூறிக் கொண்டு உள்ளே போகலானார்.

"அவசர மொன்றுமில்லை, அண்ணா ! நீங்களும் வாருங்கள்" என்று சொன்னார் மாசிலாமணி முதலியார்.

சதானந்தம் பிள்ளை மாலைக் கடன்களை முறையாக முடித்துக் கொண்டு வந்து உட்காருவதற்குள் மங்கையர்க்கரசி கோகிலாவிடம் காபியைக் கொடுத்து அனுப்பினாள்.

இருவரும் சிற்றுண்டியைச் சாப்பிட்டுக் கொண்டே பேசலாயினர்.

"என்ன அண்ணா, நீங்க சொல்வது உண்மைதானா? கோவிந்தசாமி கோனாரா இவ்விதம் கட்சி கட்டுகிறார்? தான் முதல் அமைச்சராக வரவா சட்டசபை அங்கத்தினர்களுக்கு ஆசை வார்த்தை பல கூறுகிறார்? ஆச்சரியமாயிருக் கிறதே ......"

"அப்படியானால் நான் பொய்யா சொல்கிறேன் என்கிறீர்கள்? கோனார்தான் இவ்வளவும் செய்கிறார் இந்த குலமால்களுக் கெல்லாம் அந்த ஐயன் தூண்டுகோல்", என்று பதிலளிக்கத் தொடங்கிய சதானந்தம் பிள்ளை "நான் ஒன்று பார்த்து விட்டேன் முதலியார்வாள்! என் அனுபவத்திலே. எப்பேர்ப்பட்ட மனுஷனையும் சந்தர்ப்பம் வந்தால் தான் சரியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொருத்தலும் ஒவ்வொரு விஷயத்திலே பலவீன மாய்த்தான் இருக்கிறான். எந்தப் புற்றிலே எத்தப் பாம்பு இருக்கிறதோ! யார் கண்டார்கள்?" என்று தெரியாமலா சொன்னார்கள் நம்ம பெரியோர்கள்..." என்று ஆழ்ந்த சிந்தனையோடு கூறினார்.

மாசிலாமணி முதலியார், "தங்களுடைய அனுபவத்திலே கண்டதை, கேட்டதை, தாங்களே அனுபவித்ததைத் தானே, ஆப்த வாக்கியங்களாக, பழமொழிகளாக, நீதி நூல்களாசக, தரும் சாஸ்திரங்களாகச் சொல்லி வைத்தார்கள்

நம்ம மூதாதையர்! வாழ்க்கையில் இல்லாததை ஒன்றும் சொல்லவில்லையே? மேலே நீறு பூத்திருக்கிறது என்று எண்ணிக்கையை வைத்து விடாதே, தம்பி! உள்ளே நெருப்பு கனன்று கொண்டிருக்கிறது என்று அவர்கள் எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். உலக விஷயங்கள், பொருள்கள், ஒவ்வொன்றையும் ஊடுருவிப் பார்க்க வேண்டும்; பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் உபதேசித்திருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், மனிதர்கள்கூட நீறு பூத்த நெருப்புப் போன்றவர்கள்தாம்......"

சதானந்தம் பிள்ளை: "அதில் சந்தேகம் என்ன!"

மாசிலாமணி முதலியார், "ஆனால் பஞ்சசீலத்தில் தங்களைப் புடம் போட்டு மாற்றில்லாத பஈம் பொன் போன்று பக்குலமாக்கிக் கொண்ட புனிதர்கள் இப் பூவுலகில் இல்லாமல் இல்லை, நல்லொழுக்கம் என்னும் நீரால் நெருப்புப் போன்ற தீக்குணங்களையும் செயல்களையும் அவித்துக்கொண்டு முழு நீராக விளங்கும் செம்மல்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்."

சதானந்தம் - பிள்ளை; "லட்சத்தில் ஒருவர்-இல்லை; கோடியில் ஒருவர்-இருப்பார்களா என்று எனக்கு ஐயமாயிருக்கிறது."

மா : "இன்றைய நிலையை மனதில் கொண்டு அவ்விதம் எண்ணுகிறீர்கள், அண்ணா! நல்லவர்கள் நாலு பேராயினும் இருப்பதால்தான், நாடு - இல்லை; - உலகம் நிலைத்திருக்கிறது. இல்லையானால்..."

ச; "உலகம் என்றால் நல்லதும் கெட்டதும் விரவித்தானிருக்கும் என்று எனக்குத் தெரியாமலில்லை. நல்லவற்றைவிட தீயவைகளே அதிகம் என்பதையும் நான் நன்கு அறிவேன். ஆனால் இன்று உலகம் போகும். போக்கைப் பார்த்தால்-அதிலும் நம் நாடு இருக்கும் நிலைமையைப் பார்த்தால், நூற்றுக்குஒருவர் இல்லை; ஆயிரத்துக்கு ஒருவர் நல்லவரென்று சொல்லக்கூடிய விதமாக இருப்பார்களோ என்று சந்தேகிக்கிறேன் மற்றத் தேசங்களைவிட நம் நாடு ஞானத்திலே, பரமோனத்திலே பேர் போனது என்றும் பாரத புண்ணிய பூமியென்றும் பாராட்டிச் சொல்லிக் கொள்கிறோம். அப்பேர்ப்பட்ட நாட்டில்தான்..."

மா; "எனக்குக்கூட அதை நினைத்தால்தான் வருத்தமாயிருக்கிறது, அண்ணா ! மிலேச்ச நாகரிகம் மிதந்த மேனாடுகளிலே - கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று லோகாயதக் கொள்கையை மேற்கொண்டு கூத்தடிக்கும் மற்றத் தேசங்களிலே மக்கள் எப்படி நடந்தாலும் ஒழுக்கம் எப்படி இருந்தாலும் அதைப்பற்றி நமக்கு அக்கரையில்லை. ஒழுக்கத்துக்கு உயர்வு கொடுத்தது நம் நாட்டிலே, நல்லொழுக்கமும் மான மும் உயிரைவிட மேலானவை என்று கருதிக் கடைப்பிடித்துவந்த நம் நாட்டிலே, அன்பே கடவுள், அறிவே கடவுள் என்ற அறைந்த நாட்டிலே - அறிவு அருகிவிட்டது, ஒழுக்கம் ஒழிந்துவிட்டது, அன்பு வம்பாகி விட்டது என்றால், காலத்தின் அலங்கோலம் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்..."

ச: "எல்லாம் அந்த மேனாட்டு மிருக நாகரிக உறவின் விளைவு தான். வேறென்ன?..."

மா; "அந்த ஐரோப்பியர்களின் அநாசாரத்தை - ஏகாதிபத்திய எதேச்சாதிகாரத்தை... அறவே ஒழித்துக் கட்டடவே தானே காந்தி அடிகள் கிளம்பினார்! அயோக்கியத்தனத்துக்கும் அட்டூழியங்களுக்குமே இருப்பிடமான அரசியலிலே அவர் அஹிமஸா தத்துவத்தையும் சத்தியத்தையும் புகுத்திப் புனிதப் படுத்தினார்; ஆயுத பலத்தைக் கொண்ட ஆங்கிலேயர்களை ஆத்ம பலத்தால், அஹிம்ஸை என்னும் ஆயுதத்தால் விரட்டியடித்தார்; பிற நாடுகளைப் போல, இரத்தப் புரட்சியின்றி அறப் புரட்சியாலேயே மிக எளிதாகச் சுதந்திரம் வாங்கித் தந்தார். இதுவரை மற்ற மகான்கள் சாதித்காத - மகாஞானிகளால் செய்ய - முடியாத மகத்தான காரியங்களை மகாத்மா காந்தி சாதித்ததைப் பார்த்தபோது, இவரால் பொய்யிலும், புரட்டிலும், கொடுமையிலும் உழன்று வரும் உலகமே விமோசனமடையும்; சண்டையும் சச்சரவும் தீர்ந்து சமாதானமும் சாந்தியும் நிலவும்; பழையபடி மிருகமாக மாறிவரும் மனிதர்கள் மனிதர்களாகவே மாறுவார்கள்; மனித குலமே நன்மையும் நல்வாழ்வும் பெறும் என்று நம்பிளுேம். அதற்குள்......"

"அந்தத் துர்ப்பாக்கிய சம்பவத்தை இப்போது நினைவுபடுத்தாதீர்கள்" என்று இடைமறித்துப் பேசத் தொடங்கிய சதானந்தம் பிள்ளை, மனித சமுதாயத்தை வாழ்விக்க வந்த மகான் திடீரென மறைந்து விட்டதனால்தான், இவ்வளவு அக்கிரமங்கள் நம் நாட்டில் நடக்கின்றனவோ என்றுகூட நான் எண்ணுகிறேன். ஒரு வேளை அவர் இருந்தும் இப்படி காங்கிரஸிலே அடங்காப் பிடாரிகளும் அக்கிரமக்காரர்களும் அதிகரித்துவிட்டதைக் கண்டிப்பாரானால் கட்டாயம் உண்ணாவிரதமிருந்து உயிரையே மாய்த்துக்கொண்டிருப்பார். அந்த மட்டும் இந்த அவல நிலையைக் காணாமல் போய்விட்டாரே...... !’ என்றார்.

மாசிலாமணி முதலியார் மெளனமாக அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். சதானந்தம் இப்படி யெல்லாம் ஆகுமென்று தெரிந்துதான் போலும் அவர் அரசியல் சுதந்திரம் கிடைத்ததும், காங்கிரஸ் ஸ்தாபனத் தைக் கலைத்துவிடச் சொன்னா lர். மற்றத் தலைவர்கள். அவருடைய யோசனையைக் கேட்டு நடக்காமல் போனதால்தான் இந்த அலங்கோல நிலை ஏற்பட்டிருக்கிறது. அயோக்கியர்களெல்லாம் பதவிகளுக்காக அடைக்கல மடைவதால் தான் காங்கிரஸ் என்றால் கால் காசுக்கும் நம்புவாரில்லாமல் போய் விட்டது. காங்கிரஸ் என்ற பெயரையும் சொல்லிக் கொண்டு கள்ள வாணிபஞ் செய்கிறார்கள் கயவர்கள். சிறிது காலத்துக்கு முன் வரை, காங்கிரஸ் தொண்டன் என்றால், கடவுளுக்குச் சமமாக நினைத்தார்கள்; ஒழுக்கத்துக்கு உறைவிட மானவர்கள்; தன்னலமில்லாத தயாபரர்கள்; பிறருக்குச் சேவை புரிவதையே பேறாகக் கொண்ட புண்ணியவான்கள் என்று மக்கள் மகிழ்ந்தார்கள். கிராமங்களுக்குப் போனால், அடடா, காங்கிரஸ்காரர்களுக்கு எவ்வளவு மரியாதை? என்ன?.....' அத்தான் சொல்வது அவ்வளவும் நிசம், அக்கா! எங்க ஊர்ப் பக்கம் காங்கிரஸ்காரர்கள் வந்துவிட்டால் பார்க்க வேண்டுமே! அவர்கள் கூட்டங்களில் பேசி விட்டுப் போகும் வரை ராஜோபசாரம்தான். அவர்கள், கள் குடிக்காதீர்கள் என்று சொல்லி எத்தனையோ பேர் குடிப்பழக்கத்தை விட்டு விட்டார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டு ராட்டை சுற்ருத பெண்கள்கிடையாது. இப்போதோ அந்தவெட்கக்கேட்டைச் சொல்லவே முடியாது. காங்கிரஸ் அரசாங்கம் வந்து கள்ளுக் கடையை மூடிவிட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் ஊர்களில் ஒரு கடைக்கு ஒன்பது கடையாய்விட்டது. பெண் ஆண் எல்லாம் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள். பதனீர் இறக்குவதாகச் சொல்லிக் கள் இறக்கிப் பகிரங்கமாக விற்கிறார்கள். இந்த வேலையைச் செய்பவர்கள் யாருமில்லை. இன்று புதிதாகக் காங்கிரஸில் சேர்ந்திருப்பவர்களே! இப்போது காங்கிரஸ்காரர் என்று சொல்லிக் கிராமத்துப் பக்கம் யாரும் போகமுடியாது. மக்களுக்கு அவ்வளவு வெறுப்பு அவர்கள் மீது......' என்று அடுத்த அறைப்பக்கம் இருந்த மங்கையர்க்கரசி திலகவதியிடம் சொன்னாள். மாசிலாமணி முதலியாருடன் ஆழ்ந்து பேசிக் கொண்ருந்த சதானந்தம் பிள்ளையின் செவிகளில் மங்கையர்க்கரசியின் இனிய குரல் நுழையவே, அவர் தாம் பேசுவதை நிறுத்திவிட்டு அவளுடைய பேச்சை உன்னிப்பாகக் கேட்கலானார்.

சதானந்தம் பிள்ளை திடீரென மெளனமாய் விட்டது மாசிலாமணி முதலியாருக்கு வியப்பூட்டியது. அவர் காரணமறியாமல், என்ன அண்ணா இருந்தாற் போலிருந்த யோசனையில் ஆழ்ந்து விட்டீர்கள்....?' என்று கேட்டார். மங்கையர்க்கரசியின் பேச்சில் மனதை முற்றும் பறி கொடுத்திருந்த சதானந்தம் பிள்ளை, உறக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்துப் பார்ப்பவர் போல், ஒன்றுமில்லை அண்ணா ! ஏதோ சொல்ல நினைத்தேன். இதற்குள்..... .” என்று இழுப்புடன் சொல்லி நிறுத்தினார்.

உள்ளே திலகவதி, அட, அத்தானை மிஞ்சிவிடுவாய் போலிருக்கே மங்கை, நீ? ஏது, ஒன்றும் தெரியாதவள் போல் உம்மென்று இருக்கிறாய். வாயைத் திறந்தால் தானே தெரிகிறது, நீ நன்றாக எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறாய் என்று ...”

"போங்க, அக்கா, பரிகாசம் பண்ணுகிறீர்கள். அதற்குத் தான் நான். ..."

அதற்குத்தான் நீ வாயைத் திறக்கிறதில்லை என்கிறாயா?. ... அது போகட்டும்; மங்கை! நீ எது வரை படித்திருக்கிறாய்?......”

"நான் படித்த படிப்பைச் சொல்லு அக்கா! எட்டாவது படித்து விட்டு ஒன்பதாவது வகுப்புக்குப் போனேன். அதற்குள்...... என்று கூறி மங்கை நாணம் முகத்தில் தெரியத் தலை குனிந்து கொண்டாள்.

"கிராமங்களில் அது ஒரு தொல்லை. வயது வந்து விட்டால் வெளியே படிக்கப் போகக் கூடாதொன்று பெண்களுக்கு கட்டுப்பாடு. காய்கறித் தோட்டத்துக்குப் போகலாம்; மாந்தோப்புக்குப் போகலாம்; தண்ணீர் முகந்துவர, ஆறு குளங்களுக்கு ஐங்காத தூரம் கூடப் போகலாம். ஆனால், பள்ளிக்கூடம் மட்டும் படிக்கப் போகக் கூடாது பருவமான பெண்கள். நன்றாயிருக்கிறதில்லையா நியாயம்?......'

மங்கை மெளனமாயிருந்தாள். திலகவதி. இது உனக்கு நியாயமாகத் தோன்றுகிறதா? மங்கை பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப் போனால்தான பெண்கள் கெட்டு விடுவார்கள்? தோப்பு துறைக்குப் போனால் கெட்டுவிட மாட்டார்களா? அங்கெல்லாம் அவர்களை ஆண் பிள்ளைகள் பார்க்கமாட்டார்கள் போலும்!"

"பெரியவர்கள் ஏதோ காரணத்தை உத்தேசித்துத் தான் இவ்விதம் கட்டுப்பாடு செய்திருப்பார்கள்..."

"பெரியவர்களுமாச்சு; சின்னவர்களுமாச்சு. முட்டாள் தனமாகக் கட்டுப்பாடுகள் செய்தவர்கள் யாராயிருந்தால் என்ன? இந்தக் கட்டுப்பெட்டிகளெல்லாம் இந்தக் காலத்தில் இருக்க லாயக்கில்லாதவர்கள்......" என்று திலகவதி உணர்ச்சியோடு பேசினாள்.

இவைகள யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சதானந்தம் பிள்ளை புன்சிரிப்பு செய்தவாறே எழுந்து கையைக் மூவிக்கொண்டு, "அந்தப்புரத்துப் பெண்கள் பேசத் தொடங்கிவிட்டால், நமக்குப் பேச விஷயம் ஏது?..." என்று கூறினார்.

உள்ளே பெண்கள் பேசுவதை இதுவரையும் சுவனியாத மாசிலாமணி முதலியார், "என்ன அண்ணா, சொல்கிறீர்கள்? என்னமோ சிரிக்கிறீர்களே! நான் ஏதேனும் அசட்டுத்தனமாகப் பேசி விட்டேனா......?" என்று கேட்டார்.

"அசட்டுத் தனமாகப் பேசுவதற்கு நீங்கள் மகாசபை அங்கததினர் இல்லையே!" என்று சதானந்தம் பிள்ளை கூறி மேலும் சிரித்தார்.

விஷயத்தைச் - சரியாகப் புரிந்து கொள்ளாமலே மாசிலாமணி முதலியாரும் அவருடன் சேர்ந்து நகைக்கலானார்.