தென்னாட்டு காந்தி/அணு ஆயுத வல்லரசுகளுக்கு வழி காட்டுகிறது பாரதம்!

விக்கிமூலம் இலிருந்து


◯ அறவழிப்பண்
◯ பினை வழிபடும்
◯ பாரம்பரியம்
◯ கொண்டது
◯ நம் பாரதம்
◯ சமாதானப் புறாவென
◯ வருணிக்கப்பட்ட
◯ நேருஜி அணு
◯ ஆயுத எதிர்ப்பு
◯ மாநாட்டில்
◯ அன்று கூறிய
◯ உரைகள்
◯ உலகப் புகழ் பெற்றன:


அணு ஆயுத
வல்லரசுகளுக்கு
வழிகாட்டுகிறது பாரதம்!

அணு ஆயுத வல்லரசுகளுக்கு
வழிகாட்டுகிறது பாரதம்!

இந்தியத் துணைக் கண்டத்தின் தலை நகரில் ‘அணு ஆயுத எதிர்ப்பு மாநாடு’ ஒன்று அண்மையில் நடந்தேறியது. அணுப் படைக் கலங்களைத் தடுத்து நிறுத்தித் தடைசெய்ய வேண்டியதற்கான அவசியச் சூழல்களைப்பற்றி ஆராய்ந்தது இம் மாநாடு.

அப்பொழுது, நேருஜி இவ்வாறு குறிப்பிட்டார்:

“...முழு படைக் குறைப்பு என்கிற முதல் லட்சியப் புள்ளியை அடைவதற்கான முதலாவது அவசியமான நடவடிக்கையாக, பயங்கரமானதும் ஒதுக்கத் தக்கதுமான இந்த அணு ஆயுதச் சோதனைகளை, அணு ஆயுத வல்லரசுகள் ஒருதலைப் பட்சமாகவேனும் நிறுத்த வேண்டும். காலமோ குறைவு; அணுக்குண்டுச் சோதனைகளுக்கு விரைவில் ஒரு தீர்க்கமான முற்றுப் புள்ளி. வைக்காவிட்டால், பிறகு எந்த நாட்டினாலும், என், எந்த மனித குலத்தினாலும் நிறுத்த முடியாத அளவிற்கு ஆபத்துக்கள் தலைக்குமேல் போய்விடக்கூடும். இந்தக் குறுகிய காலக்கட்டத்திலே, மனித குலத்தின் நல்லறிவுக்கும் புதுப்பயத்துக்கும் இடையே நடை பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு போட்டியாகவே, இவ்விதமான அச்சுறுத்தும் சோதனை அமைந்துள்ளது. ஒருசில அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்திவிட்டால் மட்டும், இத்தகைய பயங்கரமான நெருக்கடிக்குத் தீர்வுகண்டுவிட முடியாது. உண்மைதான். ஆனால், அதைவிட மேலான, ஒன்றினால், அதாவது, மனிதாபிமானம், மனப்பக்குவம், நெறியுணர்வு போன்ற குணநலக் குறிப்புக்கள் பக்குவம் பெற்று உயர்ந்த நிலைக்கு வந்தால்தான், இம்மாதிரியான அச்சம் மட்டும் சிக்கல்களும், பயங்காட்டும் நெருக்கடிகளும் தீர முடியும்! எனவே, உறுதி படைத்த நம்பிக்கையினாலும் வலிமையினாலும் இக்குறிக்கோளை மனிதகுலம் அடைந்தே தீரும். ஒரு சார்பாகப் படைக் குறைப்புக்கு வழி செய்வதைக் காட்டிலும், ஒருசார்பாக, அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்துவதுதான் எளிதான செய்லாகும்!”.

அண்ணன் காட்டிய வழி நடக்கும் நேருஜியின் (பேச்சில், காந்தியத்தின் அறநெறிப் பண்பும், பஞ்சசீலக் கொள்கையின் நேர்மை கொண்ட மனிதாபிமான உணர்வும் பின்னிப் பிணைந்து, அவ்விணைப்பின் விளை பலனாக, உயர்ந்த தத்துவ போதனைக் கருத்துக்கள் பல நிறைந்து விட்டிருக்கின்றன. அழிவிலிருந்து மனித குலத்தைக் காப்பாற்றும் பொது நலப் பண்புடன் நேருஜி பேசியுள்ள பேச்சுக்கள், அணு ஆயுத வல்லரசுச் - சக்திகளின் முழுக் கவனத்தையும் கவரவேண்டுமென்பதே இந்தியத் துணைக்கண்டத்தின் கவலையும் கடமையுமாகும்.

இவ்வகையில், எத்தகைய உடன்பாட்டிற்காகவும் காத்திருக்காமல், பாரதம் தன்னளவிலே, படைக்கலத் தவிர்ப்பினைக் செயற்படுத்துவதன் மூலம், உலக நாடுகளுக்கே முதல் வழிகாட்டியாகவும் அமைய வேண்டுமென்று டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் விரும்பிக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இந்த அணுகுண்டு உற்பத்திப் போட்டியைத் தடுக்காவிட்டால், ஏற்படக் கூடிய விளைவுகளையும் பிரசாத் அவர்கள் வெகு அழுத்தமான குரலில் எடுத்துரைத்திருக்கின்றார்:

அவையாவன:

1. அணு குண்டு யுத்தம் ஏற்பட்டு, உலகில் உள்ள மக்கள் அனைவரும் மடிந்து மண்ணாகி, மனித நாகரிகம் அழிந்து, இவ்வுலகமே அணு விஷச் சாம்பல் நிறைந்து பாலைவனமாகிவிடலாம்.

2. அல்லது, வெளி கிரகங்களுக்குச் செல்வதில் போட்டா போட்டி ஏற்பட்டு, அந்தக் கிரகங்களில் அணு குண்டுகளை வெடிப்பதால், இந்த வானவெளியில் கிரங்களின் போக்கு, பாதிக்கப்பட்டு, உலகுக்கு அபாயம் ஏற்படலாம்.

3. அல்லது, அணு குண்டுகளை உற்பத்தி செய்வதில் பெரும் பணத்தைச் செலவிடுவதால், அதில் ஈடுபட்ட நாடுகள் திவாலாகி, உலகமே பெரும் சேரியாக மாறிவிடும். மக்கள் பீதி நிறைந்த கிறுக்கர்களாகி விடவும் கூடும்.

உலகத்தின் பொதுப்படையான அமைதியைச் சீரழிக்கவல்ல அணு குண்டு உற்பத்தியையும் சோதனைகளையும் ஐ. நா. மூலம் தடை செய்ய வேண்டுமென்றும், அத்தகைய வரம்புக் கொள்கையை ஏற்க மறுக்கும் நாடுகளை ஐ. நா. விலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென்றும் முன்னாள், கவர்னர் ஜெனரல் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

ஆக, பலதரப்பட்ட சிந்தனையாளர்களின் கருத்துரைகள் வகுத்துக் காட்டும் பொது நல நோக்கை உலக நாடுகள் அனைத்தும் நன்கு உணர்ந்து, முனைப்புடன் செயற்பட்டால், இதன் நற்பலனாக, அணு ஆயுத வல்லரசுகள் மனம் திருந்தி நடக்க வாய்ப்பு ஏற்படாமல் தப்ப முடியாதல்லவா? இப்படிப்பட்ட விடிவு நிலை உதயமாகும் பொழுது, வல்லரசுகட்கு இடையே ஊடாடும் அவ நம்பிக்கை, ஆதிக்க வெறி, ஐயம், அச்சம் போன்ற பயங்கரத் தன்மைகளும் மறைந்து, சுமுகமான உறவு தழைக்கவும், தார்மீகப் பண்பு செழிக்கவும் வழி பிறந்து விடும். ஆகவே பாரதத்தின் நல்லெண்ணக் கருத்துக்களைச் சிந்தையில் இருத்திச் செயற்பட வேண்டியது அணு ஆயுத வல்லரசுகளின் முதற் கடனாகும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதே நேரத்தில் மகாத்மா காந்தியடிகளின் அகிம்சைத் தத்துவப் பொன் மொழிகள் சிலவற்றையும் மேற்படி வல்லரசுகளின் கவனத்துக்குக் கொண்டுவர விழைகின்றோம்.

“அகிம்சை என்பது ஓர் ஆக்கசக்தி, அதுவே பலவான்களின் ஆயுதம், ஆண்மைக்கு அழகு அகிம்சை.... அகிம்சை என்பதே ஒரு விஞ்ஞானம்!....”