நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்/குறிக்கோள்

விக்கிமூலம் இலிருந்து

15. குறிக்கோள்

பேச்சு முடிகிறது. நான் இரயிலுக்குச் செல்ல இருக்கிறேன். நீங்களும் எழுந்து போகப் போகிறீர்கள். விளைந்த பலன் என்ன? நாயகம் அவர்களுடைய விழாவைக் கொண்டாடியதன் மூலம் என்ன பலனைப் பெற்றோம்? ஏதேனும் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டாமா? செயலை முன்னே வைத்துத்தான் பேச்சு இருக்க வேண்டும். செயல் செய்ய விரும்பாதவர்கள், செயல் திறம் இல்லாதவர்கள், பேச்சைப் பேசிப் பயனில்லை; கேட்டும் பயனில்லை.

அவர்களின் விழாவைக் கொண்டாடுகிற காலத்திலே நீங்கள் எல்லாம் செய்யவேண்டியது ஒன்று உண்டு. தங்கள் ஊரில் உள்ள இளம் பையன்கள், பெண்கள் படிக்கக்கூடிய மதரசா ஒன்று வைத்து நடத்தி, மார்க்கக் கல்வியை வளர்க்க வேண்டும். ஏற்கனவே ஒன்றிருந்தால், அதை விரிவு படுத்திப் பெரிய அளவில் நடத்தியாக வேண்டும். இது நமது இன்றைய விழாவின் குறிக்கோளாக இருக்கவேண்டும்.

ஏனெனில், நாயகம் அவர்கள் கல்வியைப் பற்றியும் மூன்று கட்டளையிட்டு இருக்கிறார்கள். 'கல்வி ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவை என்பது ஒன்று; சிறந்த கல்வி சீனாவில் இருந்தாலும் அங்கேயும் போய்க் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது இரண்டு; படியுங்கள், படித்துக் கொடுங்கள், அல்லது படிக்கிறவர்களுக்கும் படித்துக் கொடுக்கிறவர்களுக்கும் உதவி செய்யுங்கள் என்பது மூன்றாவது கட்டளை. இம் மூன்று கட்டளைகளையும் நாயகம் அவர்களின் விழாக் கொண்டாடுகிற இந்து நல்ல நாளிலே உள்ளத்தே வைத்து மதரசா வைத்து வளர்க்கும் பணிகளில் ஈடுபடவேண்டும்.

ஜவுளிக்கடை வைத்திருப்பவர்கள் இந்தப் பிள்ளைகளுக்குத் துணி வழங்கியும், தென்னந்தோப்பு வைத்திருப்பவர்கள் கீற்றுகளை வழங்கியும், செங்கல் காளவாய் வைத்திருப்பவர்கள் செங்கற்களை வழங்கியும், நிலம் வைத்திருப்பவர்கள் நெல் வழங்கியும், செல்வம் படைத்தவர்கள் பொருள் வழங்கியும், மதரசாவை வளர்ப்பது நல்லது. நாயகம் அவர்களின் இந்த மூன்று கல்விக் கட்டளைகளை இந்த நல்ல நாளில் தங்களுக்கு நினைப்பூட்டுவதோடு, என் சொற்பொழிவை நிறுத்திக் கொள்கிறேன். அப்பொழுதுதான் இந்த விழாவை நடத்தியதில் ஒரு குறிக்கோள் இருக்கும். நான் மனமார இந்தப் பிள்ளைகளை வாழ்த்துகிறேன். அவர்கள் வெற்றி பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். அம்மாதிரியான நல்ல பணிகள் இங்கு மட்டுமல்லாமல், சுற்றியுள்ள ஊர்களிலும் நடை பெற வேண்டுமென்று பெருமக்களாகிய நீங்களும் ஆசைப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.