நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்/கடைசி ஹஜ்

விக்கிமூலம் இலிருந்து

14. கடைசி ஹஜ்

நம் நாயகம் அவர்கள் ஒருமுறை ஹஜ்ஜை நிறைவேற்றிய பொழுது, மக்கா நகரை நோக்கியோ அல்லது அந்த அரேபியா நாட்டை நோக்கியோ ஆசியாவை நோக்கியோ சொல்லாமல், உலக மக்களை நோக்கி, மூன்று சொற்றொடர்களைச் சொன்னார்கள். நாயகம் அவர்களுடைய பிறந்த நாள் விழாவிலே அதை நினைக்காமல் விழாவை முடிக்கக் கூடாது. முதற் கட்டளை, அன்னியனுடைய உடைமைக்கு ஆசைப் படாதே என்பது. இதைச் சாட்டையடி மாதிரி கொடுத்தார்கள். அன்னியனுடைய உடைமை என்று சொல்லும் பொழுது, அது மண்ணையும் குறிக்கிறது. பொன்னையும் குறிக்கிறது. பெண்ணையும் குறிக்கிறது. இவை மூன்றும் அன்னியனுடைய உடைமைகளாக இருப்பின், அவற்றின் மீது ஆசை கொள்ளாதே என்பதே முதற் கட்டளை.

உனது நடத்தை பிறருக்கு முன் மாதிரியாக இருக்கட்டும். நீ, அவர்களை, இவர்களைப் பார்த்து நடை போடாதே. உன்னைப் பார்த்து மற்றவர்கள் நடக்க வேண்டும். அதற்கு முன் மாதிரியாக நட என்பது இரண்டாவது கட்டளை.

ஓ! பணக்காரனே! உன்னிடத்தில் இருக்கின்ற பணம்! ஓ! பலசாலியே உன்னிடத்தில் இருக்கின்ற வலிமை! இவ்விரண்டும் உன்னை, உன் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்ற மட்டும் அல்ல. இல்லாத ஏழை மக்களைக் காப்பாற்றவே உன்னிடத்தில் ஆண்டவனால் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என நினை என்பதுது மூன்றாவது கட்டளை. இக்கட்டளைகள் எவ்வளவு அருமையானவை என எண்ணிப் பாருங்கள். இவை இஸ்லாமிய மக்களை மட்டும் நோக்கிச் சொன்ன சொற்களா? இந்தியாவை மட்டும் நோக்கிச் சொன்ன சொற்களா? உலகம் முழுவதுமுள்ள எல்லாச் சமயத்தினரையும் சேர்ந்த 500 கோடி மக்களும் பின்பற்ற வேண்டிய அருமையான கட்டளைகள்,